வெள்ளி, 26 ஜனவரி, 2018

நாட்காட்டியின் கதை
---------------------------------------------------------
பி இளங்கோ சுப்பிரமணியன்
---------------------------------------------------------
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, உலகம்
முழுவதற்கும் பொதுவான ஒரு காலப்பகுப்பு
(calendar) கிடையாது. உலகின் பல நாட்டு மக்களும்
தமக்கு இசைவான தாமறிந்த காலப்பகுப்பைப்
பின்பற்றி வந்தனர். இதன் விளைவாக நாடுகள்
தமக்கிடையே தொடர்பு கொள்ளும்போது பெரும்
இடர்ப்பாடுகள் ஏற்பட்டன. உலகம் முழுவதற்கும்
பொதுவானதும் அனைத்து நாட்டு மக்களும்
ஏற்கத் தக்கதுமான ஒரு காலப்பகுப்பின் தேவை
உணரப்பட்டது. இன்று அந்தத் தேவை நிறைவு
அடைந்துள்ளது.

காலண்டர் என்பது நாள், வாரம், மாதம், ஆண்டு,
நேரம் என அனைத்து விதமான காலப் பகுப்புகளையும்
கணித்துக் கூறும் அமைப்பாகும்.உலகில்
நூற்றுக்கணக்கான காலண்டர்கள்
இருந்தன; இன்றும் இருந்து வருகின்றன.
பல்வேறு தேசங்களைச் சார்ந்த மக்கள், தங்களின்
கலாச்சாரத்திற்கும் வானியல் அறிவுக்கும் ஏற்றவாறு
தங்களின் காலண்டர்களை உருவாக்கிக் கொண்டனர்.

இவற்றுள் சில சூரியச் சுழற்சியை  அடிப்படையாகக்
கொண்டவை. சில சந்திரச் சுழற்சியை அடிப்படையாகக் கொண்டவை.உதாரணமாக இஸ்லாமிய காலண்டர்கள்
சந்திரக் காலண்டர்கள் ஆகும். சூரியன் சந்திரன்
இரண்டின் சுழற்சியையும் அடிப்படையாகக் கொண்ட
காலண்டர்களும் (lunisolar) உண்டு.

மத பீடங்களின் ஆதிக்கத்தில் இருந்த காலப்பகுப்பு
(calendar) தற்போது, கடந்த நூற்றாண்டின் பிற்பகுதியிலேயே முற்றிலுமாக அறிவியலின்
பிடிக்குள் வந்து விட்டது. இதன் மூலம் காலக் கணிப்பில்
நூறு சதம் துல்லியத்தை அடைய முடிந்துள்ளது.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, 2016ஆம் ஆண்டில்
ஒரு வினாடி கூடுதலாகச் சேர்க்கப் பட்டிருந்தது.
1972 முதல் இவ்வாறு சிற்சில ஆண்டுகளில் ஒரு வினாடி
கூடுதலாகச் சேர்க்கப்பட்டு வருகிறது. அடுத்து எப்போது
சேர்க்கப்படும் என்று  தெரியாது. ஏனெனில் அறிவியல்
அறிஞர்கள் அதை இன்னும் தீர்மானிக்கவில்லை.

பூமி சூரியனைச் சுற்றும்போது, சில சமயங்களில்
குறைவான வேகத்தில் சுற்றுகிறது. இதனால் சுற்றி
முடிக்க அதிக நேரம் (வினாடிகளில்) எடுத்துக்
கொள்கிறது. பூமி சுற்றுவதற்கு ஏற்ப நமது
கடிகாரத்தைத் திருத்திக் கொள்ள வேண்டும்.
நமது கடிகாரத்திற்கு ஏற்றவாறு பூமி சுற்றாது.
இதனால்தான் லீப் வினாடிகளைச் சேர்க்க வேண்டிய
தேவை ஏற்படுகிறது. பூமி குறைவான வேகத்தில்
சுற்றுவது இயற்கையாகவும் நிகழும்; மனித
முயற்சியாலும் நிகழும்.

பூமி சுற்றும் வேகத்தைக் குறைத்த சீனா!
----------------------------------------------------------------------
சீனா ஒரு பிரம்மாண்டமான அணையைக் கட்டி
இருக்கிறது. இது உலகிலேயே மிகப்பெரிய அணை.
முப்பள்ளத்தாக்கு அணை (Three Gorges Dam) என்று
இதற்குப் பெயர். 2012ல் செயல்படத் தொடங்கிய
இந்த அணையைக்கட்டியதன் மூலம், பூமி
தன்னைத்தானே சுற்றிக் கொள்ளும் வேகத்தைக்
குறைத்து விட்டது சீனா.

சீனாவின் முப்பள்ளத்தாக்கு அணையின்
பிரம்மாண்டங்களில் பின்வரும்
விஷயங்களில் இயற்பியல் அக்கறை கொள்கிறது.
அ) அணையின் ரிசர்வாயர் (reservoir) கடல் மட்டத்திற்கு மேல்
175 மீட்டர் (அதாவது 575 அடி) உயரம் உடையது.
ஆ) நீரின் கொள்ளளவு= 39.3 கன கிலோ மீட்டர்
இ) அணையில் உள்ள நீரின் நிறை (mass)=39 ட்ரில்லியன்
கிலோகிராம். 1 trillion = 10^12. அதாவது 1 டிரில்லியன் என்பது
1 லட்சம் கோடி ஆகும். எனவே நீரின் நிறை
39.3 லட்சம் கோடி கிலோகிராம் ஆகும்.

இந்த அணை சீனாவில் உள்ளது. அதாவது
பூமியில் உள்ளது. 575 அடி உயரத்தில் உள்ள
39 ட்ரில்லியன் கிலோகிராம் நிறையை ஓரிடத்தில்
குவித்து வைத்துக்கொண்டு பூமி தன்னைத்தானே
சுற்ற வேண்டும்.

பூமி தன்னைத்தானே சுற்றும் வேகம் பூமத்திய
ரேகைப் பகுதியில் மணிக்கு 1670 கி,மீ  சீனாவின் இந்த
அணையையும் சுமந்து கொண்டு பூமி தன்னைத்
தானே சுற்றும்போது, குறிப்பிட்ட இடத்தில்,
சடத்துவ உந்தம் (moment of inertia)
அதிகமாகி விடுகிறது. இதனால் சுற்றுவதன் வேகம் சிறிது
குறைகிறது. வேகம் குறைவதால், நேரம் அதிகமாகிறது..
இதனால் ஒரு நாள் என்பது 24 மணி நேரத்தையும்
விட அதிகமாகிறது. எவ்வளவு அதிகமாகி உள்ளது
என்று நாசா கணக்கிட்டுள்ளது. அதன்படி 0.06 மைக்ரோ
செகண்ட் நேரம் அதிகமாகி உள்ளது.

காலப்பகுப்பில் இந்த அளவு துல்லியத்தை மட்டுமின்றி
இதற்கு மேலும் துல்லியத்தையும் அறிவியல்
உறுதி செய்கிறது. தொடர்ந்து காலண்டரானது
புதுப்பிக்கப்பட்டுக் கொண்டே இருக்கிறது (constantly updated).
இதன் மூலம் புவிச்சுழற்சியின் மெய்யான
பிரதிபலிப்பாக நவீன காலண்டர் அமைந்துள்ளது.

ஜூலியஸ் சீசரின் காலண்டர்!
-------------------------------------------------------
உலக அளவில் இன்று நாம் பயன்படுத்தும் காலண்டர்
பல்வேறு காலக்கட்டங்களில் நிகழ்ந்த பல்வேறு
மாற்றங்களை உள்ளடக்கியது. இதற்கு
அடிப்படையாக ஜூலியஸ் சீசர் திருத்தி வடிவமைத்த
காலண்டரைக் கூறலாம். ஜூலியஸ் சீசரின் காலண்டர்
(Julian calendar) கிமு 46ல் சீசரால் அறிமுகம்
செய்யப்பட்டு, அடுத்த ஆண்டு முதல், அதாவது,
கிமு 45 முதல் செயல்பாட்டுக்கு வந்து விட்டது.

அ) ஓராண்டுக்கு 365.25 நாட்கள் ஆ)12 மாதங்கள்
ஜனவரி முதல் டிசம்பர் வரை; மாதங்களின் அளவு
31,28,31,30,31,30,31,31,30,31,30,31 நாட்கள்
இ) ஆண்டின் முதல் தேதியாக ஜனவரி 1
ஈ) 4 ஆண்டுக்கு ஒரு முறை லீப் ஆண்டு, அதாவது
பிப்ரவரியில் 29 நாட்கள் ஆகிய தற்கால காலண்டரின்
அனைத்து அம்சங்களையுமே ஜூலியன் காலண்டர்
கொண்டிருந்தது..ஜூலியன் காலண்டருக்கு முந்திய
ரோமானிய காலண்டரிலும் ஜனவரி முதல் நாளே
ஆண்டின் தொடக்கமாக இருந்தது. அதற்கு முந்திய
புராதன ரோமானிய காலண்டரில்தான் மார்ச் மாதம்
ஆண்டின் தொடக்கமாக இருந்தது.

ஜூலியன் காலண்டர் செயல்பாட்டுக்கு வந்த
கிமு 45ல் இயேசு கிறிஸ்து பிறந்திருக்கவே இல்லை.
எனவே கிமு கிபி என்னும் குறிப்பு அப்போது இல்லை.
அப்படியானால், ஜூலியன் காலண்டரில்
ஆண்டுகளைக் கணக்கிட எந்தக் குறிப்பைப்
பயன்படுத்தினர்? (what was the REFERENCE point then?)

அப்போது பயன்படுத்திய குறிப்பு (reference point)
ரோம் நகரம்  உருவான தேதி ஆகும். அதாவது
ரோ.மு, ரோ.பி என்ற கணக்கிடும் முறை இருந்தது.
ரோமு = ரோமாபுரி நகரம் நிறுவுவதற்கு முன்னால்,
ரோபி = ரோமாபுரி நகரம் நிறுவிய பின்னால்
எனினும் இம்முறை பரவலாக மக்களால்
பின்பற்றப் படவில்லை. ரோமானிய வரலாற்று
ஆசிரியர்கள் மட்டுமே இதைப் பின்பற்றினர்.

முதலில் கிறிஸ்துவத்தை ஏற்றுக்
கொள்ளாமல், இயேசுவைச் சிலுவையில் அறைந்த
ரோமாபுரி பின்னர் கான்ஸ்டன்டைன் காலத்தில்,
கிபி 4ஆம் நூற்றாண்டில், கிறிஸ்துவத்தை ஏற்கத்
தொடங்கியது. இதன் விளைவாக ரோமு ரோபி என்பன
கிமு கிபி என்று பின்னாளில் மாறுவதற்கு உகந்த
சூழநிலை உருவானது..

கிபி 525ல் டயோனிசியஸ் எக்சிகஸ் (Dionysius Exiguus)
என்னும் ரோமானியத் துறவி (இவர் ஒரு கணித
நிபுணரும்கூட) முதன் முதலில் கிறிஸ்து பிறப்பை
அடிப்படையாகக் கொண்டு கிமு, கிபி என்ற
ஆண்டுகளைக் குறிப்பிடும் முறையை அறிமுகம் செய்தார்.
என்றாலும் கிபி 800ல்தான் இப்பழக்கம் பரவலானது.
ஆக, கிமு 45ல் செயல்பாட்டுக்கு வந்த ஜூலியன்
காலண்டரில், கிமு கிபி என்னும் குறிப்புகள்
850 ஆண்டுகள் கழிந்த பின்னரே பரவலான
நடைமுறைக்கு வந்தன..

கிரெகோரி செய்த திருத்தம்!
----------------------------------------------------
கிபி 1582 அக்டோபரில் போப்பாண்டவர் பதின்மூன்றாம்
கிரெகோரி என்பவர் ஜூலியன் காலண்டரில் லீப் ஆண்டு
குறித்த ஒரு திருத்தத்தைச் செய்தார். 4ஆல் வகுபடும்
நூற்றாண்டு மட்டுமே லீப் ஆண்டு ஆகும் என்பது
அவரின் திருத்தம்.(Centuries are not leap years unless divisible by 4 )

இதன்படி, 16ஆம் நூற்றாண்டில் உள்ள 16 நான்கால்
மீதியின்றி வகுபடுவதால், 1600 என்பது லீப் ஆண்டாகும்.
ஆனால் 1700 என்பதில் உள்ள 17 நான்கால்
வகுபடாது என்பதால் 1700 என்பது லீப் ஆண்டு ஆகாது.

அதாவது நூற்றாண்டுகள் (2000,2100,2200......)
லீப் ஆண்டாக  இருக்க வேண்டுமெனில்
4ஆல்  வகுபட்டால் மட்டும் போதாது; 400ஆலும்
வகுபட வேண்டும்

இந்த ஒரே ஒரு திருத்தத்தை மட்டுமே அவர்
செய்தார். அவருக்கு முன்பே, ஜூலியஸ் சீசரால்
பெருமளவு திருத்தங்கள் செய்யப்பட்டு இன்றைய
காலண்டரின் வடிவம் அன்றே கொண்டுவரப்
பட்டு விட்டது. என்றாலும் கடைசியாகத் திருத்தம்
செய்தவர் என்ற  அடிப்படையில் இக்காலண்டர்
கிரெகோரி காலண்டர் என்று அழைக்கப் பட்டு வந்தது.

கிரெகோரி காலண்டரின் ஆண்டு கணக்கிடும் முறை  கத்தோலிக்கச் சார்புடையது என்று கூறி பிற மதத்தவர்
அதை ஏற்க மறுத்தனர். குறிப்பாக, பிராட்டஸ்டண்டுகள்,
யூதர்கள், இஸ்லாமியர் ஆகியோர் கிறிஸ்து சகாப்தம்
என்ற பெயரை ஏற்கவில்லை. எனவே மதச்சார்பற்ற
ஒரு பெயரை உருவாக்க வேண்டிய தேவை
ஏற்பட்டது.

பொது சகாப்தம் தோன்றியது!
------------------------------------------------------
எனவே கிறிஸ்து சகாப்தம் என்ற பெயர்
கைவிடப் பட்டது. அதற்குப் பதிலாக, பொது சகாப்தம்
(Common Era) என்ற  புதிய பெயர் சூட்டப்பட்டது.
வானியல் அறிஞர் ஜோஹன்னஸ் கெப்ளர் 1615இல்
எழுதிய ஒரு புத்தகத்தில் இருந்து பொது சகாப்தம்
(common era) என்ற சொல் எடுக்கப் பட்டது.

இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இருந்து
பொது சகாப்தம் நடைமுறைக்கு வந்து விட்டது.
இதன்படி, கிமு, கிபி (BC,AD) ஆகியவை கைவிடப் பட்டு,
அவற்றுக்குப் பதிலாக முறையே BCE, CE என்னும்
பெயர்கள் சூட்டப் பட்டன.
CE = Common Era பொது சகாப்தம்.
BCE = Before Common Era பொது சகாப்தத்திற்கு முன்.

இவ்வாறு கிபி 525ல் டயோனிசியஸ் எக்சிகஸ்
(Dionysius Exiguus) என்னும் ரோமானியத் துறவி முன்மொழிந்த
கிறிஸ்து சகாப்தம் என்ற பெயர் 1980களில் முடிவுக்கு வந்து
பொது சகாப்தம்  (Common Era) என்ற பெயர்
நடைமுறைக்கு வந்துள்ளது. ஆண்டைக் கணக்கிடும்
முறை இரண்டிலும்  ஒன்றுதான். மீதி அனைத்தும்
கிரெகோரி காலண்டரேதான்.
நடப்பாண்டான 2018ஐ பொது சகாப்தத்தில்
எப்படிக் குறிப்பிடுவது? CE 2018. தமிழில் பொ.ச 2018.

தற்போது காலண்டரில் திருத்தம் செய்யும்
அதிகாரம் அறிவியல் அறிஞர்களுக்கு மட்டுமே
உள்ளது.அறிவியலின் அதிகாரத்தின்கீழ் காலண்டர்
வந்ததும் காலண்டரின்  துல்லியம் உறுதி செய்யப்பட்டது. அறிவியலுக்கு மதமில்லை. எனவே மதச்சார்பற்ற
காலண்டராக, உலகின் அனைத்துப் பகுதி மக்களும்
விரும்பி ஏற்கும் காலண்டராக நவீன உலகின்
பொது சகாப்த காலண்டர் உள்ளது. இது உலகப்
பொதுமையை உறுதி செய்கிறது.

உலகம் முழுவதும் கிமு கிபி என்னும் பதங்கள்
தவிர்க்கப்பட்டு, பொமு, பொயு (பொது  யுகத்திற்கு முன்,
பொதுயுகம்) ஆகிய பதங்களே பயன்பாட்டில் உள்ளன.
கிரெகோரி காலண்டர் என்ற பெயர் கைவிடப்பட்டு
அறிவியல் காலண்டர் என்ற பெயர் ஏற்கப்பட்டுள்ளது.

உலகப் பொது நேரம்!
---------------------------------------
நேரம் என்பதைப் பொறுத்தமட்டில், உலகம் முழுதும்
ஏற்கப்பட்ட நேரமாக UTC நேரம் உள்ளது
(UTC= Universal Coordinated Time). இதுவே அறிவியல் உலகம்
வரையறுத்துள்ள தரப்படுத்தப்பட்ட நேரம் ஆகும்.
இது உலகப் பொது நேரம் ஆகும்.
1967 முதல் உலகளாவிய பயன்பாட்டுக்கு வந்துள்ள
இந்நேரத்தில், குறித்த இடைவெளிகளில் லீப் வினாடிகள்
சேர்க்கப் பட்டு வருகின்றன.வானிலை ஆய்வு
மையங்கள் வெளியிடும் புயல் எச்சரிக்கைகள்,
ஏவுகணைகள் விண்ணில் செலுத்தப்படும் நேரம்
போன்றவற்றில் எல்லா நாடுகளாலும் UTC நேரமே
கடைப்பிடிக்கப் படுகிறது. இந்தியத் திட்ட
நேரத்துக்கும் UTC நேரத்துக்குமான வேறுபாடு
ஐந்தரை மணி நேரம் அதிகம் (5.5 hours ahead) என்பதாகும்.
ஆம், இது GMT எனப்படும் கிரீன்விச் நேரமே ஆகும்.

சம இரவு நாட்களும்  கதிர்த் திருப்பமும்!
----------------------------------------------------------------------
ஒவ்வோராண்டும் வானியலில் நான்கு நாட்கள்
முக்கியமானவை. அவை சம இரவு நாள் (equinox)
இரண்டும் கதிர்த்திருப்ப நாள் (solstice) இரண்டுமே
அவை. உலகம் முழுவதும் சம இரவு நாட்களில்
இரவும் பகலும் சமமாக இருக்கும். மார்ச் 20,
செப்டம்பர் 23 ஆகிய நாட்களே சம இரவு
நாட்கள் ஆகும். எனினும் இந்தத் தேதிகள்
அவ்வப்போது சிறிது மாறுவதும் உண்டு.

சூரியன் வடதிசையின் ஓரத்திற்கோ
அல்லது தென்திசையின் ஓரத்திற்கோ சென்று
திரும்புவது போலத் தோன்றும் நிகழ்வே
கதிர்த்திருப்பம் ஆகும். ஆண்டுதோறும் ஜூன் 21
மற்றும் செப்டம்பர் 21 ஆகிய நாட்களில் இது நிகழும்.

சம இரவு நாட்கள் மற்றும் கதிர்த்திருப்ப
நாட்களை  ஒட்டியே  பருவ காலங்கள் தொடங்குகின்றன.
எனவே இந்த நான்கு நாட்களைத் துல்லியமாகக்
கணக்கிடுவதன் மூலமே பண்டைக்கால மனிதர்களால் வேளாண்மை வேலைகளைத் தொடங்க முடியும்.
மேலும் பண்டிகைகள் புத்தாண்டு ஆகியவை இந்த
நாட்களை அடிப்படையாகக் கொண்டே ஆதி
மனிதர்களால் உருவாக்கப் பட்டன. இன்றுள்ளது
போல் கடிகாரம், நாட்காட்டி ஆகிய எவையும் இல்லாத
பண்டைக் காலத்தில் காலத்தைக் கணிக்க
உறுதுணையாக இருந்தவை இந்த நான்கு நாட்களே.

அண்மைக்காலம் வரை, ஒரு காலண்டரின்
சரித்தன்மையை நிரூபிக்கும் அம்சமாக இருந்தது
இந்த நான்கு நாட்களைத் துல்லியமாகக் கணிக்கும்
திறனே ஆகும். இன்றைய நவீன அறிவியலில்
சீசியம்-133 என்னும் அணுவைக் கொண்டு அணுக்கடிகாரம்
அமைக்கப்பட்டுள்ளது. இதன் வளர்ச்சியில் தற்போது
பாதரச அயனிகளைக் கொண்டு இயங்கும்
அதிதுல்லிய (ultra precise)கடிகாரங்கள் ஆழ்வெளியில்
(deep space) வைக்கப்பட்டு நேரம் காட்டுகின்றன. இவ்வாறு
இந்த இரண்டாயிரம் ஆண்டு கால காலண்டரின்
வரலாறு மானுடம் அறிவியலில் அடைந்த முன்னேற்றத்தின்
வரலாறாகவே உள்ளது.
********************************************************************





.  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக