வியாழன், 31 ஜூலை, 2014

பொய்யும் பொய் சார்ந்த பொழுதும் 
---------------------------------------------------------- 

வீரை பி இளஞ்சேட்சென்னி 
----------------------------------------------------
  
இத்தகைய விழாக்களில் 
உண்மை பேசப்படுவதில்லை 
எப்போதும் எவராலும்
மரபு பேணி 

உண்மை வெப்பம் நிறைந்தது  
அசவுகரியமானது  
சூழலை கனம்  செய்வது  என்பதாலும்.   

மாற்றாக மாயப்பொய்கள் 
வாரி இறைக்கப் படுகின்றன 
சூழலை நெகிழ்வித்து விடும் என்பதால் 
புரைதீர்ந்த நன்மை 
பயக்கவும் கூடும் ஆதலால்.

பணி  நீத்தவருக்கு
விடை கொடுக்கும் விழாவில் 
தத்துவமும் சித்தாந்தமும் 
தேவையற்றவை என்கிறார்கள் 
குட்டி முதலாளித்துவ 
இடதுசாரித் தலைவர்கள்.

சந்தனம் சவ்வாது  சால்வை பரிசு 
கூடவே சரிகை வேய்ந்த பொய்கள் 
போதுமே என்கிறார்கள்.

விழா முடிந்து 
வீட்டு வாசலில் கார் நிற்க 
விடைபெற்றுக்  கொண்டு 
பணி நீத்தவர் 
உள்ளே நுழையும் 
அந்த பிரும்ம முகூர்த்தத்தில்    
அவரை வரவேற்கும் உண்மையை 
அவர் எதிர்கொள்ள வேண்டியவர் ஆகிறார்.

************************************************************************

புதன், 30 ஜூலை, 2014

மோகம் முப்பது யுகம்
----------------------------------- ---------------------------------------------- 
வீரை பி இளஞ்சேட்சென்னி 
-------------------------------------------------------------------------------------  

ஈராண்டு டெல்லி வாசம் முடிந்து
ஊர் திரும்பியதும்
உன்னைத்தான் முதலில் விசாரித்தேன்
பைத்தியம் முற்றிப் போய் 
விடுதியில் சேர்க்கப்பட்டு இருக்கிறாய் என்று 
அதிர்ச்சி தந்தனர் நண்பர்கள் ஒருமித்து.

நகரின் மனநல விடுதிகளில் 
எங்கு தேடியும் கண்டிலன் உன்னை
பின்னர் அறிந்தேன்
நீ முகநூலில் 
மூழ்ழ்ழ்கிப் போனாய் என்று.

*******************************************************************     

செவ்வாய், 29 ஜூலை, 2014

முகநூல் நட்பு பகையானது!
வீடுகள் தீ வைத்துக் கொளுத்தப் பட்டன!!
---------------------------------------------------------------- 
அவன் ஒரு சிறுவன்! 17 வயது!! டீன் ஏஜ் சிறுவன்!!!
அவன் முகநூலில் ஒரு படத்தைப் பதிவு செய்தான்.
( posted a picture ). வந்தது வினை!

எப்படி? அவனுடைய நண்பன் ஒருவன்! 
அவன் வயது ஒத்தவன்!!அந்தச் சிறுவன் 
பதிவு செய்த படத்தை இந்தச் சிறுவன்
பார்த்தான்.இவனுக்கு அந்தப்படம் பிடிக்கவில்லை.
ஆத்திரம் கொண்டான். பெரியவர்களிடம் சொன்னான்.
அவர்கள் ஆவேசம்  அடைந்தனர்.
படத்தைப் பதிவு செய்த சிறுவன் வாழும் வீடு, 
அவன் தெருவில் உள்ள வீடுகள் என  எல்லா 
வீடுகளுக்கும் தீ வைத்தனர்.   

இந்தச் சம்பவம் நடந்தது பாக்கிஸ்தானில், லாகூரில்.
ஜூலை 27, 2014 ஞாயிறு அன்று.
(பார்க்க:  the hindu 29 july 2014 page:1)
முகநூலில்  படத்தைப் பதிவு செய்த சிறுவன் 
ஆகிப் சலீம் (AQIB SALIM ) என்னும் 17 வயதுச் சிறுவன்.
இவன் பதிவு செய்த படம் பாலியல்  சார்ந்ததோ 
போர்நோகிராபி  சார்ந்ததோ அல்ல. ஆனால் மத நிந்தனை 
( BLASPHEMY ) செய்யும் படம் என்று வன்முறையாளர்கள் 
கூறுகின்றனர். இச்சிறுவன் "அகமதியா" என்னும் 
இஸ்லாமியப் பிரிவைச் சேர்ந்தவன். பாக்கிஸ்தானில் 
அகமதியா பிரிவினர் மனிதர்களாகவே 
நடத்தப் படுவதில்லை.

முதல் சிறுவன் பதிவு செய்த படத்தைப் பார்த்து ஆததிரம் 
அடைந்தானே  அந்த இரண்டாவது சிறுவன், அவனின் 
நண்பன் (!!), அதாவது முகநூல் நண்பன், அவன் பெயர் 
சதாம் ஹுசேன்.

ஆகிப் சலீம், சதாம் ஹுசேன் என்கிற இரண்டு 
சிறுவர்களுக்கு இடையிலான தகராறு ஐந்து வீடுகள் 
தீ வைத்துக் கொளுத்தப் படுவதில் போய்  முடிந்தது.

மற்ற நாடுகளில் பெரியவர்கள் (adults) நினைத்தால்தான் 
கலவரமும் வன்முறையும் வெடிக்கும். பாக்கிஸ்தானில் 
சிறுவர்களால் கூட வன்முறையை உண்டாக்கி 
விட முடியும்  என்கிற நிலை இருப்பது 
ஆரோக்கியமானது அல்ல.  

ஒரு டீன் ஏஜ் சிறுவன் தவறு செய்திருக்கலாம்; 
தான் வெளியிட்ட படம் மதநிந்தனை என்று 
குற்றம் சாட்டப் படலாம் என்பதைப் பற்றி 
அறியாமலோ ( அல்லது அறிந்தோ) 
அப்படத்தை வெளியிட்டு இருக்கலாம். 
அச்சிறுவன் செய்தது தவறு என்றால், அவனைக் 
கண்டித்துத் திருத்தி இருக்க வேண்டும். சிறுவன் செய்த 
"தவறு"க்காக அவன் வீட்டையும் மற்ற வீடுகளையும் 
தீ வைத்துக் கொளுத்துவது என்ன நியாயம்?          

மத நிந்தனை ( blasphemy)  என்பதற்கான வரையறை 
கறாரும்  கண்டிப்புமானதும் அல்ல பாக்கிஸ்தானில்.
எந்தக் கருத்தை வேண்டுமானாலும் மதநிந்தனை 
என்ற சட்டத்துக்குள் அடைக்க முடியும் அங்கு.
கடவுள் இல்லை என்று பிரச்சாரம் செய்வதற்கான 
உரிமை பாக்கிஸ்தானில் கிடையாது. பாக்கிஸ்தான் 
மதச் சார்பற்ற நாடு அல்ல.

முகநூல் பக்கங்களில் மெலிதான மேம்போக்கான 
ஆழமற்ற நாத்திகக் கருத்துக்களை அவ்வப்போது 
பார்க்கிறேன்; படிக்கிறேன். இதே கருத்துக்கள் 
பாக்கிஸ்தானில் சொல்லப் படுமே ஆனால்,
சொன்னவர்கள் இருண்ட சிறையில் களி  தின்பது உறுதி.

அகமதியா பிரிவு  என்பது முஸ்லிம்களில் ஒரு பிரிவினர் 
பின்பற்றும் மதம். முஹம்மது நபி அவர்களே கடைசி 
இறைத்தூதர் என்பதை இப்பிரிவினர் ஏற்றுக்கொள்வது 
இல்லை. எனவே சன்னி பிரிவு முஸ்லிம்கள் இவர்களைப் 
பகைவர்களாகக் கருதுகின்றனர். மேலும், ஷியா பிரிவு 
முஸ்லிம்கள்கூட பாக்கிஸ்தானில் சம உரிமையுடன் 
நடத்தப் படுவதில்லை.

'சுல்பிகர் அலி புட்டோ' வை உங்களுக்கு நினைவு வருகிறதா?
பாக்கிஸ்தானின் முன்னாள் பிரதமர். அவர் தூக்கில் இடப்பட்டார்.
புட்டோ ஷியா பிரிவு முஸ்லிம். 
(அதனால்தான் அவர் தூக்கில் இடப்பட்டார்). 
அவரைத் தூக்கில் இட்ட ஜியா உல் ஹக் சன்னி முஸ்லிம்.

மதம் மனிதர்களை ஒன்று படுத்துவது இல்லை.
மாறாக பிளவு படுத்துகிறது. இதற்கு விதிவிலக்கே கிடையாது.
எல்லா மதங்களும் அப்படித்தான்.

மதம், கடவுள் என்ற இரண்டு நுகத்தடிகளும் 
மானுட குலத்தை  அடிமைப் படுத்துகின்றன.
இந்த விலங்குகளை உடைத்து எறியும்போதுதான்
மானுடம் விடுதலை பெறும்.

இந்து கிறித்துவ இசுலாமிய சீக்கிய பௌத்த இன்ன பிற 
மதங்களின் இரும்புப் பிடியில் இருந்து பரந்துபட்ட 
மக்களை விடுவிப்போம். கடவுள் இல்லை என்ற 
உண்மையை மக்களிடம் பரப்புவோம்.

மானுட குலத்தின் இனிமையான மகிழ்ச்சியான 
அமைதியான வாழ்க்கைக்கு மதமும் தேவை இல்லை.
கடவுளும் தேவை இல்லை. 
ஒரு ரோமமும் தேவை இல்லை.

*********************************************************************************               
     
      

        
தகிப்பு
-----------  
அபூர்வ வானியல் நிகழ்வுகள் போல
கவனிப்புக்கு உரியவை 
நம் சந்திப்புகள்.

வாழ்தலின் உந்துதலை 
உன்னிடமிருந்து பெறும் 
அத தேவ தருணங்களில் 
நான் உயிர்த்தெழுகிறேன்.

ஓரங்குலமே மீந்த நெருக்கத்தில் 
கிட்டும் உன் அண்மை
என் வனாந்திரத்தில் 
பருவமழையைப் பொழிவிக்கிறது 
கரடு தட்டிப்போன 
என் நிலத்து மண்ணைக் குழைவிக்கிறது 
என் தோட்டத்தின் 
கத்தரிப் பூக்கள் 
சூல் கொள்கின்றன.

நான் காயகல்பம் அருந்திய 
கிறக்கம் கொள்கிறேன்.

என்றாலும் 
பேசப்பட வேண்டிய விஷயம் 
பேசப்படாமலேயே 
நம் சந்திப்பு முடிந்து விடுகிறது.

நீ விடைபெற்றுச் சென்றபின் 
வெறுமையின் பெருவெளியில் 
சிறைப்படுகிறேன். 

பிரியமானவளே,
ஒரு ஒற்றை மழைததுளிக்காய்
உயிர் உருகக் காத்திருக்கும் 
சாதகப் பறவையைப் போல 
உன் இதழ் உதிர்க்கும் 
ஒரு ஒற்றைச் சொல்லுக்காக 
ஏக்கத்துடன் காத்திருக்கிறேன் 
அடுத்த சந்திப்பை நோக்கி.

....... வீரை பி இளஞ்சேட்சென்னி........
****************************************************          
  

ஞாயிறு, 27 ஜூலை, 2014

அழியாச் சித்திரம் 
--------------------------------------------------------------  
வீரை பி இளஞ்சேட்சென்னி 
-------------------------------------------------------------- 
எந்த சைத்ரிகனும் 
இதுவரை வரைந்திராத 
கடவுளின் தூரிகை கூடத் 
தீட்டியிராத 
உயிரின் நிறங்களைக்
குழைத்துப் பூசிய 
யுகயுகாந்திரங்களின் 
காதலை சுவீகரித்துக் கொண்ட 
அதியற்புதமான ஒரு சித்திரம் 
என் நெஞ்சில் துலங்குகிறது

கன்னிமை  மாறாமல்  
பச்சைப் பசுமையாய்.

காலம் தன ஆற்றல் முழுவதும் செலவிட்டும் 
இருளின் ஒரு துகளைக் கூட 
அச்சித்திரத்துள் 
செலுத்த முடியவில்லை.

கொந்தளிப்புகள் சூறாவளிகள் 
புதைச் சுழல்களின் உள்ளிழுப்புகள் 
மனக்குழப்பத்தின் புகை மண்டுதல்கள் 
முடிவற்ற சோகத்தின் உப்பங்காற்று வீச்சு 
யாவும் முயன்று தோற்க
உலர்த்தவோ  நனைக்கவோ 
எரிக்கவோ விடாமல் 
அச்சித்திரத்தை 
நான் காத்து வருகிறேன்.

திசைகளின் திரண்ட துயர்கள் 
என்னுள் இடியாய் இறங்க 
வதைகளும் ரணங்களும் 
வலி பொறுக்காத அலறல்களும் 
விசும்பல்களும் தேம்பல்களும் 
என்னை மேவ 
மரணப் பள்ளத்தாக்கின் 
இருள் முற்றத்தில் 
 மூர்ச்சித்துக் கிடக்கும் 
என் ஜீவனைத் தேற்றி 
அமிழ்து புகட்டி 
உயிர் துளிர்க்கச் செய்கிறது 
அச் சித்திரம்.

சைனியங்களின் அரசர்கள் 
வெஞ்சினத்துடன் எறியும் அஸ்திரங்கள்
என் மேனியெங்கும் துளைத்து 
வெங்குருதி புனலாய்ப் பொங்க 
மண் வீழ்ந்து மடிந்தாலும் 
யார் எவராலும் 
என்னிடமிருந்து பறிக்க முடியாத 
அந்த அழியாச் சித்திரம் 
பிரியமானவளே ,
உன் முகம்தான்.

*****************************************     

சனி, 26 ஜூலை, 2014

வேண்டாத பொண்டாட்டி 
கைபட்டால் குத்தம்; கால்பட்டால் குத்தம்!
--------------------------------------------------------------------- 

     மதம் அபின் போன்றது; அது மக்களுக்கு
     வெறி ஊட்டுவது .
          ​​​    ------- காரல் மார்க்ஸ் ----- 


ஒரே நாளில் நாடு முழுவதும் பிரபலம் ஆகி விட்டார்,
ஆனால் எதிர்மறையாக, சிவசேனைக்  கட்சியின் நாடாளுமன்ற 
உறுப்பினர்   தோழர் விச்சாரே! (தா பாண்டியனுக்கே 
தோழர் அடைமொழி கொடுக்கும்போது, விச்சாரேக்கு
ஏன் கொடுக்கக் கூடாது?)

   மகாராஷ்டிரா பவனில் உள்ள உணவகத்தில் 
வழங்கப்பட்ட சப்பாத்தி தரமாக இல்லை என்பதால் 
கோபம் கொண்ட விச்சாரே, மோசமான அந்தச் சப்பாத்தியை 
உணவக ஊழியரின் வாயில் திணிக்க முயன்றார்.
அந்த ஊழியரோ ஒரு முஸ்லிம்; மேலும் அவர் ரமழான் 
நோன்பு மேற்கொண்டு இருந்தார்.தம் செய்கையால் 
ஒரு இசுலாமியரின் நோன்புக்குப் பங்கம் விளைவிக்க 
முயன்றார் என்பது தோழர் விச்சாரே மீதான குற்றச்சாட்டு.

தாம் கோபித்துக் கொண்டது  உண்மைதான் என்றும் 
ஆனால் அந்த ஊழியர்   முஸ்லிம் என்றோ நோன்பு 
இருக்கிறார் என்றோ தமக்குத் தெரியாது என்று விளக்கம் 
அளித்த தோழர் விச்சாரே தம் செய்கைக்காக 
மன்னிப்புக் கோரினார்.

இந்தியாவைக் குலுக்கிய இந்நிகழ்வை ஊடகங்கள்
எவ்வாறு சித்தரித்தன? "உண்மையைக் கிடப்பில் 
போடு; TRP (TELEVISION RATING POINT) ஏறுகிறதா பார்"
என்ற அறத்தைப் பேணி  நின்றன ஊடகங்கள். 

பணத்திமிரும் அதிகாரத் திமிரும் கொண்ட ஒரு எம்.பி 
ஒரு கீழ்நிலை ஊழியரைத் துன்புறுத்திய இந்நிகழ்வு 
வர்க்க முரண்பாட்டின் ஒரு வெளிப்பாடு. பாட்டாளி 
வர்க்கத்துக்கும் பணக்கார வர்க்கத்துக்கும் இடையிலான 
இம்முரண்பாடு தெளிவானதொரு வர்க்க முரண்பாடு 
(  CLASS CONTRADICTION ). இதை முக்காடு  போட்டு 
 மறைத்து விட்டு,  பிரச்சினைக்கு மதச்சாயம் பூசி 
இந்து-முஸ்லிம் பிரச்சினையாகச் சித்தரித்தன    
ஊடகங்கள்.

உச்சந் தலையில் இருந்து உள்ளங்கால் வரை 
அடையாள அரசியல் ஆதிக்கம் செலுத்தும் 
இந்தியாவில் வர்க்க அரசியல் ஒருநாளும் 
எடுபடாமல்  போய்விடுமோ என்று 
அஞ்ச வைக்கிறது இந்நிகழ்வு.

ஒரு ஊழியர் ரமழான் நோன்பு இருப்பது அவரது 
சொந்த விஷயம். அது எவ்விதத்திலும் அவருடைய 
அலுவலகக் கடமையைச் செய்வதில் குறுக்கே 
வரக்கூடாது. குறுக்கே வர அவர் அனுமதிக்கவும் கூடாது.
இதுதான் ஊழியரின் அறம்; உழைப்பாளியின் அறம்.
கோபத்தோடு புகார் கூறும் வாடிக்கையாளர்களை
இன்முகத்துடன் எதிர்கொண்டு, பொறுமை இழக்காமல் 
தக்க சமாதானம் சொல்லி அனுப்புவதுதான் ஊழியரின் கடமை.
அந்தக் கடமையைச் செய்யத் தவறி விட்டு நோன்பில் 
 புகலிடம் தேடுவது நியாயமற்றது .நோன்பு இருப்பது என்பது 
கடமையைச் செய்யாமல் இருப்பதற்கான கவசம் அல்ல.
( THE EMPLOYEE DOES NOT ENJOY ANY IMMUNITY FROM 
DISCHARGING HIS DUTY IN THE NAME OF "FASTING".)

உண்மையில், அந்த ஊழியரைப் பொறுத்த மட்டில்,
அவர் LACK OF DEVOTION TO DUTY என்ற குற்றச்சாட்டுக்கு 
இலக்காகி நிற்கிறார் என்பதே உண்மை. ஒரு 
வாடிக்கையாளரிடம் ஒரு  ஊழியர் எவ்வாறு நடந்து 
கொள்ள வேண்டும் என்று மகாத்மா காந்தி  நாட்டுக்கே 
அறிவுரை கூறி உள்ளார்.

"A CUSTOMER IS AN IMPORTANT VISITOR IN OUR PREMISES;"
என்று தொடங்கும் மகாத்மா காந்தியின் அறிவுரைகள் 
எல்லா அரசு அலுவலகங்களிலும் சட்டம் போட்டுத் 
தொங்க விடப்பட்டு இருக்கும். நோன்பு இருக்கும்  
ஊழியருக்கும் அது பொருந்தும்.

முறைகேடாகவும் முரட்டுத் தனமாகவும் நடந்து 
கொள்ளும் வாடிக்கையாளர்கள் மீது மேலதிகாரியிடம் 
புகார் செய்ய வேண்டும்.தொழிற்சங்கத்திடம் 
சொல்ல வேண்டும்.இதுதான் முறை.இதை விட்டு விட்டு 
மதத்திடம் புகலிடம் தேடக்கூடாது.

நோன்பு என்பது அனேகமாக எல்லா மதங்களிலும் 
கூறப்பட்டுள்ளது.இறைவனின் அருளைப் பெற 
உடலை வருந்தச் செய்தல்  அவசியம் என்பதுதான் 
இதன் தத்துவம். ரமழான் நோன்பு போன்று, இந்து 
ஊழியர்கள் அமாவாசை நோன்பு இருக்கலாம்;
பெருமாள் பக்தர்கள் புரட்டாசி மாதம் நோன்பு இருந்து 
இறையருளைப் பெற முயலலாம். ஒரு ஆஞ்சநேய  
பக்தர் மௌன விரதம் இருக்கலாம். மக்கள் பிரதிநிதியான 
ஒரு நாடாளுமன்ற உறுப்பினர், மௌன விரதம் இருக்கும் 
ஆஞ்சநேய பக்தரான ஊழியரிடம் கேள்வி கேட்பாரேயானால் 
பதில் சொல்லுவதுதான் ஊழியரின் கடமையே தவிர,
மௌன விரதத்தைப் பேணுவது அல்ல.

அடையாள அரசியல் புகுந்ததால் உழைப்பாளர்களின் 
வேலைப் பண்பாடு (  WORK CULTURE  )    எந்த அளவு  
சீரழிந்து விட்டது என்பதற்கு இந்நிகழ்வு ஒரு உதாரணம்.

மனிதர்களுக்கு இடையே நிலவும் சமூக உறவுகள் 
சீர்குலைந்து வருகின்றன என்பதன் அடையாளம்தான் 
இந்நிகழ்வு. சகஊழியர்களுக்கு இடையிலான உறவு, 
ஊழியர்-மேலதிகாரி உறவு இவ்வாறான சமூக உறவுகள் 
அடையாள அரசியலால் நஞ்சூட்டப்பட்டு நீளம் பாரித்துக் 
கிடக்கின்றன.சமூக உறவுகள் சீர்கேடும்போது என்ன 
நடக்கும்? இணக்கம் இல்லாத இரு சமூகத்தினர் இடையே 
" வேண்டாத பொண்டாட்டி கைபட்டால் குத்தம்;
கால் பட்டால் குத்தம் " என்ற நிலைதான் ஏற்படும்.
அற்ப நிகழ்ச்சிகள் கூட ஈரைப் பேனாக்கி  பேனைப் 
பெருமாள் ஆக்கி என்பதுபோல் ராட்சசத் தன்மை     
அடைந்து விடும்.

எனவே அடையாள அரசியலை முறியடிப்போம்!
வர்க்க அரசியலைப் பேணுவோம்!
ஆணவமும் திமிரும் பிடித்த விச்சாரே 
போன்ற அரசியல்வாதிகளை முறியடிப்போம்!

*******************************************************      

      

   
  
     

வெள்ளி, 25 ஜூலை, 2014

நான் சமஸ்கிருதத்தை ஆதரிக்கிறேன்!
சம்ஸ்கிருத வாரம் கொண்டாடுவேன்!!
-------------------------------------------------------------- 
THE KING IS DEAD! LONG LIVE THE KING!!
என்று ஒரு ஆங்கிலப் பழமொழி உண்டு.
இன்று சமஸ்கிருதத்துக்குச் செய்யப்படும்
மாலை மரியாதை விழாக்கள் எல்லாமும்
மேற்கண்ட பழமொழியை நினைவு படுத்துகின்றன.

சம்ஸ்கிருத வாரம் குறித்த்தெல்லாம் யாரும்
பெரிதாக அலட்டிக் கொள்ள வேண்டியது இல்லை.
செத்துப் போனவர்களுக்கு வருஷா வருஷம்
திதி கொடுப்பது போன்று ,செத்துப்போன
சமஸ்கிருதத்துக்கு "வாரம்" நடத்தப் படுகிறது.

சம்ஸ்கிருத வாரம் என்பது ஒரு நீத்தார் நினைவுச்
சடங்கு.ஒரு நினைவாஞ்சலிக் கூட்டம். இதனால்
என்ன கேடு விளைந்து விடப்போகிறது? செத்துப்போன
சமஸ்கிருதம்  உயிர் பெற்று வந்து விடப் போகிறதா?

ஆண்டாண்டு கோடி அழுது புரண்டாலும்
மாண்டவர் மீள்வரோ என்பதைப்  போல
எத்தனை "வாரம்" கொண்டாடி அழுது புரண்டாலும்
சமஸ்கிருதம் உயிர் பெற்று மீண்டு வரப் போவதில்லை.

ஏன் சம்ஸ்கிருத வாரத்துடன் நிறுத்திக் கொள்ள
வேண்டும்? சம்ஸ்கிருத மாதம், சம்ஸ்கிருத வருஷம்,
சம்ஸ்கிருத யுகம் என்று இந்த யுகம் முடியும் வரை
சமஸ்கிருதத்துக்காக மாரடித்து அழுதாலும்
செத்துப்போன சமஸ்கிருதம் மீண்டு வரப் போவதில்லை.

இதுபோன்ற வாரம் கொண்டாடுவதால், சமஸ்கிருதம்
வளர்ந்து விடும் என்று யாரேனும் அஞ்சுகிறீர்களா?
அஞ்சத் தேவையில்லை. ஏனெனில் வளர்ச்சிக்கான
முன்நிபந்தனை உயிரோடு இருத்தல் ஆகும்.
உயிருடன் உள்ள எந்த ஒன்றும்தான், தாவரமோ
உயிரினமோ புழு பூச்சிகளோ, வளர முடியும்.
செத்துப்போனது எதுவும் வளர முடியாது.
எனவே சமஸ்கிருதம் ஒருநாளும் வளர முடியாது.

பல்லுலகும் பலவுயிரும் படைத்தழித்துத் துடைக்கினுமோர்
எல்லையறு பரம்பொருள்முன் இருந்தபடி இருப்பதுபோல்
கன்னடமும் களிதெலுங்கும் கவின்மலையாளமும்  துளுவும்
உன்உதரத்தே உதித்தெழுந்து ஒன்றுபல ஆயிடினும்
ஆரியம்போல் உலகவழக்கு அழிந்தொழிந்து சிதையாநின்
சீரிளமைத் திறம்வியந்து செயல்மறந்து வாழ்த்துதுமே

என்ற புகழ்மிக்க பாடலில் சமஸ்கிருதத்தின் மரணம்
அறிவிக்கப் படுகிறது.புளியமரம் முருங்கைமரம் என்று 
மரங்கள்தோறும் வாசம் செய்து கொண்டு ஆவியாய்த்
திரியும் சமஸ்கிருதம் உயிர் பெற்று வந்து விடுமா என்ன?

சமஸ்கிருதத்தின் வரலாற்றைச் சிறிதே தெரிந்து
கொள்வோம்.ஆரியர்கள் இந்தியாவுக்கு வந்தபோது 
அவர்களின் மொழியான சமஸ்கிருதமும் கூடவே வந்தது.
அப்போது சமஸ்கிருதம் வெறும் பேச்சுமொழி மட்டுமே.
எழுத்து கிடையாது  வரிவடிவம் (லிபி) கிடையாது.
அதனால்தான் நால்வகை வேதங்களும் 
வாய்மொழியாகவே கற்றுத் தரப்பட்டன.

அதே நேரத்தில் இந்தியாவில் சிந்து சமவெளி நாகரிகம் 
செழித்தோங்கி இருந்தது.இது திராவிட நாகரிகம் ஆகும்.
அங்கு வழக்கில் இருந்த மொழிகள்  திராவிட மொழிகள்  
ஆகும்.திராவிட மூல மொழி தமிழ் ஆகும். பேச்சு எழுத்து 
வரி வடிவம் ஆகிய அனைத்தும் பெற்று மிகவும் வளர்ச்சி 
அடைந்த நிலையில் திராவிட மொழிகளும் அவற்றின் 
மூல மொழியான தமிழும் செழித்து இருந்த அந்தக் 
காலத்தில், சமஸ்கிருதம் வெறும் பேச்சு வழக்கை 
மட்டுமே கொண்டிருந்த காட்டு மிராண்டி நிலையில் 
இருந்தது. மேற்கூறியவை அனைத்தும் என் சொந்தக் 
கருத்துக்கள் அல்ல. உலக மொழியியல் அறிஞர்கள்
அனைவராலும் அட்டியின்றி ஏற்றுக்கொள்ளப் பட்ட 
உண்மைகள்.

எழுத்து மொழியாக வளர வேண்டும் என்று 
சமஸ்கிருதம் மிகவும் ஏங்கியது. அதற்காக 
பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டது.
புத்தரின் போதனைகளை சமஸ்கிருதத்தில் 
எழுத அனுமதிக்க வேண்டும் என்று புத்தரிடம் 
கோரிக்கை விடுத்தனர் சம்ஸ்கிருத பண்டிதர்கள்.
ஆனால் புத்தர் அதை ஏற்கவில்லை; மாறாக 
அக்கால மக்கள் மொழியான பாலி  மொழியில்
தமது போதனைகளை எழுத ஆணையிட்டார்.

புத்தரின் காலம் கிமு 5ஆம் நூற்றாண்டு.
இதற்கு ஆயிரம்  கழித்து காளிதாசரின் காலம் 
(கிபி 5ஆம் நூற்றாண்டு) வருகிறது.இந்த ஆயிரம் 
ஆண்டுகளில் சமஸ்கிருதம் திக்கித் திணறி 
வரி வடிவத்தைப் பெற்றது.ஆனாலும் 
மொழியானது வளரவில்லை. மக்களால் 
பேசப்படவில்லை. 

சமஸ்கிருதம் மிகவும் புகழ் பெற்றிருந்த 
காளிதாசரின் காலத்தில் கூட, மூன்று சதம் 
மக்கள் மட்டுமே அதை அறிந்து இருந்தனர்.
வரலாற்றின்  எந்த ஒரு கட்டத்திலும் சமஸ்கிருதம் 
பரந்துபட்ட மக்களின் பேச்சு மொழியாக 
இருந்ததில்லை.காளிதாசரின் நாடகங்களில் கூட 
ஒருசில பாத்திரங்கள் மட்டுமே சமஸ்கிருதம் 
பேசுபவை.அரசன், மதகுரு, ஒரு சில அமைச்சர்கள் 
என்று வெகுசிலர் மட்டுமே சமஸ்கிருதம் பேசுவர்.
அரசி உட்பட மீதி அனைவரும் 'மகாராஸ்திரி"
போன்ற மொழிகளையே பேசுவர்.
...பார்க்க: (பாரதி சுகதங்கர்--மிரர் ஆங்கில எடு 1980) 

"SANSKRIT, AT ANY GIVEN PERIOD IN HISTORY, HAD
ALWAYS BEEN THE LANUAGE OF THE PRIVILEGED FEW.
NOT MORE THAN THREE PERCENT OF THE POPULATION 
SPOKE SANSKRIT. IN KALIDASA'S PLAYS, ONLY THE KING, 
THE PRIEST AND A FEW OTHERS SPOKE SANSKRIT.
EVERYONE ELSE, INCLUDING THE QUEEN SPO0KE
ONE FORM OR THE OTHER OF PRAKRITS, GENERALLY
A HIGHLY EVOLVED FORM CALLED MAHARASHTRI." 
 ---- BHARATI SUKHATANKAR-----

பாரதி சுகதங்கர் ஒரு புகழ்பெற்ற பெண் அறிஞர்.     
சுவாமி சின்மயா மிஷன் என்னும் அமைப்பின் 
சார்பாக வெளியிடப்பட்ட ஏடுகளின் ஆசிரியராக 
இருந்தவர்.பிராமண குலத்தவர்.மேற்கூறிய 
கட்டுரையில் அவர் சமஸ்கிருதத்தைத் தோலுரித்துக் 
காட்டுகிறார்.

ஆக என்றுமே மக்கள் மொழியாக இருந்திராத 
சமஸ்கிருதம், யாரோ சிலர் சேர்ந்து கொண்டு 
'வாரம்' கொண்டாடுவதால் உயிர் பெற்று  விடுமா?
ஒன்று கேட்கிறேன்.சம்ஸ்கிருத வாரம் 
கொண்டாடுவதற்குத் தொடை தட்டிக்கொண்டு 
நிற்கும் கூட்டத்தில் எத்தனை பேருக்கு 
சமஸ்கிருதம் தெரியும்? அனேகமாக ஒரு 
பயலுக்கும் தெரியாது.

தமிழ்நாட்டில் சமஸ்கிருதம் அறிந்தவர்கள் 
தமிழ் அறிஞர்கள் மட்டுமே. மறைமலை அடிகளை 
மிஞ்சிய சம்ஸ்கிருத அறிஞர் எவரும் கிடையாது.
காளிதாசனின் சாகுந்தலம் நாடகத்தைத் தமிழில் 
மொழிபெயர்த்தவர் மறைமலை அடிகள். சமஸ்கிருதப் 
புகழ் பாடும் பலருக்கும் சமஸ்கிருதத்தில் புலமை 
கிடையாது.

எனக்கு சமஸ்கிருதம் தெரியும். ஆதி சங்கரரின் 
பஜகோவிந்தம் முதல் சௌந்தர்யா லஹரி வரை...
காளிதாசனின் மேகதூதம் ...ஐநா பிறவற்றைப் 
படித்துத் தொலைத்திருக்கிறேன்.என்ன பயன்?
யாருடன் பேச முடியும்? எனவே SOLILOQUY தான்.

ஒரு மிக எளிய சம்ஸ்கிருத சுலோகத்துடன் 
இக்கட்டுரையை நிறைவு செய்கிறேன். அதன்   
பொருள் எத்தனை வாசகர்களுக்குப் புரிகிறது 
என்பது சமூகத்துக்குத் தெரிந்தால் நல்லது.

     புஷ்பேஷு ஜாதி 
     புருஷேஷு விஷ்ணு 
     நகரேஷு காஞ்சி 
     நாரீஷு ரம்பா.

********************************************************************   
                             

வியாழன், 24 ஜூலை, 2014

சிகண்டியின் அம்புகளும் 
கட்ஜுவின் கணைகளும்!
----------------------------------------   
கட்ஜு! மார்க்கண்டேய கட்ஜு!!
கணைகளை வீசுகிறார்! யார் மீது?
செத்துப்போன ஒருவர் மீது!

தமிழ்நாட்டைச் சேர்ந்த நீதிபதி அசோக்குமார் 
ஊழல் புகாரில் சிக்கியவர்.  ஊழல் கறை  படிந்த 
அவரை உயர்நீதிமன்ற நீதிபதி ஆக்குவதற்கு 
மத்திய காங்கிரஸ் அரசுக்கு  திமுக நிர்ப்பந்தம்
கொடுத்தது என்பதுதான் கட்ஜுவின் குற்றச்சாட்டு.

நல்லது கட்ஜு அவர்களே!திரு அசோக்குமார் 
ஆந்திர உயர்நீதிமன்றத்தின் நீதிபதியாக 
நியமிக்கப் பட்டது பெப்ரவரி 2007இல்.
அவர் பணி  ஒய்வு பெற்றது  ஜூலை 2009இல்.
இறந்து போனது அக்டோபர் 2009இல்.
தாங்கள் புகார் கூறுவது ஜூலை 2014இல்.

செத்துப்போன ஒருவர் மீது, செத்து ஐந்து 
ஆண்டுகள் கழித்து இப்போது புகார் கூறும் 
தாங்கள் ஒரு நபும்சகன்! ஒரு பேடி!
ஒரு சிகண்டி!!!

தன்தரப்பு நியாயத்தை எடுத்துச் சொல்லமுடியாமல் 
செத்துப்போன ஒருவர் மீது புகார் கூறுவது 
என்ன வகை நேர்மை?

மறைந்திருந்து வாலியைக் கொன்ற ராமன் 
காலம் முழுதும் பழி சுமந்து நிற்கிறான். 

     வெவ்விய புளிஞர் என்ன விலங்கியே
    மறைந்து வில்லால் எவ்வியது என்னை?

என்று வாலி கேட்பதாக கம்பன் எழுதுவான்.
ராமனிடம் பதில் இல்லை.ராமனைத் தெய்வமாக 
வணங்கும் கம்பனால் ராமன் வாலியை மறைந்து 
கொன்ற சிழிசெயலை நியாப் படுத்த முடியாது. 

 அதுபோல் 
கட்ஜு அவர்களே, தாங்கள்  செத்த பிறகும் 
இந்தப் பழி நீங்காது. . 

திரு அசோக்குமார் நேர்மையானவர் என்று 
வாதிடுவது நமது நோக்கம் இல்லை.உச்சந் 
தலையில் இருந்து உள்ளங்கால் வரை 
ஊழல் மலிந்து கிடக்கும் ஒரு நாட்டில் 
எந்த ஒரு நிறுவனமும் நேர்மையானதாக 
இருந்து விட முடியாது, நீதித் துறை உள்பட.

ஒடுக்கப்பட்ட தீண்டாமைக் கொடுமைக்கு 
உள்ளாக்கப் பட்ட ஒரு சமூகத்தில் இருந்து 
வந்த ஒருவரை உயர்நீதிமன்ற நீதிபதியாக 
உயர்த்துவது என்பது பகீரத் முயற்சி.
சமூகநீதியைச் செயலாக்குவது என்பதில் 
பிற காரணிகளைக் கருத்தில் கொள்ள 
முடியாது தகுதி, திறமை, நேர்மை என்பன 
எல்லாம் விரும்பத் தக்கவையே தவிர 
கட்டாயமானவை அல்ல.நீதிபதியாக 
உயர்த்தப் பட்டவர் அடிமட்ட சமூகத்தைச் 
சேர்ந்தவரா என்பது மட்டும்தான் தீர்மானிக்கிற 
அம்சம்.

சோழியன் குடுமி சும்மா ஆடாது என்பதைப் போல,
பாஜக ஆட்சிக்கு வந்த நேரம் பார்த்து 
கட்ஜு இவ்வாறு கணைகளை வீசுவது 
அவரின் உள்நோக்கத்தை வெளிப்படுத்தி 
விடுகிறது.வரும் பெப்ரவரி 2015இல் முடியப் போகும் 
 தமது பத்திரிக்கை கவுன்சில் தலைவர் பதவி 
நீட்டிக்கப் படாதா என்ற நப்பாசைதான் 
கட்ஜுவின் செயல்களுக்குக் காரணம்.

2002 குஜராத் படுகொலைகளில் நரேந்திர 
மோடிக்குப் பங்கு இருக்கிறது நரேந்திர மோடி 
ஒரு கொலைகாரன் என்று கூவினார் கட்ஜு.
இவ்வாறு எலும்புத் துண்டு வீசிய காங்கிரசுக்கு 
வாலாட்டினார் கட்ஜு.இப்போது ஆட்சி மாறி 
விட்டதனால் பாஜகவைப் பார்த்து வாலாட்டுகிறது 
கட்ஜு.

ஆனால் இவர் நினைப்பது போல,மோடி
அவ்வளவு சுலபத்தில் ஏமாறுகிறவர் அல்ல.
கட்ஜுவைப் பற்றிய தெளிவான கணிப்பு 
மோடிக்கு உண்டு.பாஜகவிலும் ஆர்.எஸ்.எஸ்சிலும் 
உள்ள பார்ப்பன அதிகார மையங்களைத் தகர்த்துத்தான் 
மோடி பிரதமர் ஆகி உள்ளார். தனக்கு நம்பகமான 
அமித் ஷாவை பாஜக தலைவராக்கி உள்ளார்.
இன்னும் சொல்லப் போனால், தந்தை பெரியார் 
நடத்திய பார்ப்பன எதிர்ப்புப் போராட்டத்தை 
பாஜகவில் நடத்திக் கொண்டு இருக்கிறார் மோடி.

எனவே கட்ஜுவுக்கு எலும்பு கிடைக்க வாய்ப்பு இல்லை.

***************************************************************    
பகுத்தறிவுக்கு எதிரான பாதையில்
மோடி அரசு!
------------------------------------------------------- 
மதச்சின்னங்களை அணிந்து விளையாட
அனுமதி மறுப்பு-- ஆசியக் கோப்பை கூடைப்பந்து--
----------------------------------------------------------------------------------------------------------------------- 

ஆசியக்கோப்பை கூடைப்பந்து   விளையாட்டுபோட்டி 
அண்மையில் ( ஜூலை 2014 இரண்டாம் மூன்றாம் 
வாரங்களில் ) சீனாவில் உஹான் நகரில் நடைபெற்றது.
இப்போட்டியில் பங்கேற்ற இந்திய அணியில் 
இரண்டு சீக்கியவீரர்கள் இடம்பெற்றிருந்தனர்.
அம்ரித்பால்சிங், அம்ஜ்யோத்சிங் ஆகிய இருவரே அவர்கள்.

ஜூலை 12 அன்று ஜப்பானுக்கு எதிரான போட்டியில் 
விளையாட இவ்விரு வீரர்களும் ஆடுகளத்துக்குச் 
சென்றனர்.தங்கள் மத வழக்கப்படி தலைப்பாகை 
அணிந்து சென்ற இவர்களை,உலகக் கூடைப்பந்து
சம்மேளன ( FIBA ) அதிகாரிகள் அனுமதிக்கவில்லை.
 தலைப்பாகையைக் கழற்றினால்தான் அனுமதிக்க 
முடியும்  என்றனர். வீரர்களும் அதை ஏறறுத் 
தலைப்பாகையைக் கழற்றி விட்டுப் போட்டியில் பங்கு 
கொண்டனர். தொடரில் மீதமிருந்த ஆறு ஆட்டங்களிலும் 
தலைப்பாகையைக் கழற்றி வைத்து விட்டுத் தான் ஆடினர்.

நாடு திரும்பியதும் சீனாவில் தங்களுக்கு நேர்ந்த 
அவமதிப்பு(!!!) குறித்துப் புகார் கூறினர். மோடி அரசின் 
விளையாட்டுத் துறை அமைச்சர் சர்வானந்த  சோன்வால்
FIBA அதிகாரிகளுக்குக் கடுமையான கண்டனத்தைத் 
தெரிவித்துள்ளார்.

விளையாட்டுகளில் மதத்தைக் கலக்கும்அமைச்சரின் 
செயல் பிற்போக்குத் தனமானது. தலைப்பாகை அணிந்து 
விளையாட சீக்கியர்களை அனுமதித்தால், நாளை 
அலகு குத்திக்கொண்டு விளையாட அனுமதி கேட்டு 
தமிழ்நாட்டில் இருந்து ஒரு விளையட்டு வீரன் 
(அனேகமாக ஒரு முருகபக்தன் ) புறப்படலாம்.
இதற்கும் அமைச்சர் சர்வானந்த சோன்வால்
வக்காலத்து வாங்க நேரிடும். பின்னர் இது INFINITY  
வரை போகும். அமைச்சர் சர்வ  ஆனந்தத்தையும் 
இழக்க நேரிடும்.

சீக்கிய மதத்தின் மீது தமிழ் மக்கள் பெருமதிப்பு 
வைத்துள்ளனர். மாவீரன் பகத் சிங் நாத்திகர் என்ற 
போதிலும் சீக்கிய மதத்தில் பிறந்தவர்.நீண்ட தலைமுடியைக் 
கத்தரித்து விட்டுக்கொண்டு முகச்சவரம் செய்த 
தோற்றத்துடன் தான் பகத்சிங் சாகும்வரை காட்சி அளித்தவர்.
ஏனெனில் அவர் மெய்யான புரட்சியாளர்.

மறைந்த மார்க்சியக் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் 
ஹரிகிஷன்சிங் சுர்ஜித் ஒரு சீக்கியர்.தலைப்பாகை 
உள்ளிட்ட அனைத்து சீக்கிய மதப் பழமைகளையும் 
தீவிரமாகக் கடைப்பிடித்தவர். இதில் ஒன்றும் தவறு இல்லை.
ஏனெனில் சுர்ஜித் ஒரு புரட்சியாளர் அல்ல.எனவே 
பகத்சிங்கைப் போன்று அவர் ஒழுக வேண்டியது இல்லை.

சீக்கிய மதம் சடங்குகளுக்கு எதிரான மதம்தான்.
கிபி 15ஆம் நூற்றாண்டில் இந்தியாவில் பஞ்சாப்பில் 
தோன்றிய மதம் அது.தோற்றுவித்தவர் குருநானக்.
தோன்றிய காலம்தொட்டு தொடர்ந்து வளர்ந்து 
கொண்டு இருந்த சீக்கிய மதம் ஔரங்கசீப் காலத்தில் 
கடுமையாக ஒடுக்கப் பட்டது.1675இல் சீக்கிய மத குரு 
தேஜ் பஹதூர் ஔரங்கசீப்பால் படுகொலை செய்யப்பட்டார்.

88 வயது வரை  வாழ்ந்த ஔரங்கசீப் (1618-1707)
அரை நூற்றாண்டுக் காலம் ( 1658-1707) இந்தியாவை 
ஆண்டார்.முஸ்லிம்கள் அல்லாத தமது பேரரசின் 
மற்றக் குடிமக்கள் மீது ஜெசியா ( JIZYAH ) வரியை விதித்தார்.
இந்துக்கள் மீது ஜெசியா வரி விதிக்கப் பட்டது.
இந்துவாக இருப்பதற்காகச் செலுத்தப்பட்ட வரி அது.
அரசின் கருவூலத்தைப் பெருக்குவதற்காக விதிக்கப்பட்ட 
வரி அல்ல அது. மாறாக மத மேலாதிக்கத்தை உறுதி 
செய்வதற்காக விதிக்கப் பட்ட வரி இது.

மதவெறி கொலைத்தாண்டவம் ஆடிய ஔரங்கசீப் 
காலத்தில் இந்துக்களும் சீக்கியர்களும் ஒன்று கூடி 
ஓரணியில் திரண்டு,  வாழ்வதற்காகப் போராடினர்.
அந்த ஒற்றுமை இன்றும் நீடிக்கிறது.

வீரத்துக்கும் தியாகத்துக்கும் பெயர் பெற்ற 
சீக்கியப் பெருமக்கள் காலமாற்றத்துக்கு ஏற்ப 
பகுத்தறிவுடன் நடந்து கொள்ள வேண்டும்.
உலக நாடுகள் அனைத்தும் பங்கு கொள்ளும் 
பொதுவான ஒரு விளையாட்டில், தங்கள் மதத்தின் 
அடிப்படையில் தனிச்சலுகை கோருவது அவர்களின் 
வீரத்துக்கு  இழுக்கு ஆகும். விளையாட்டின் 
அடிநாதமான சமத்துவத்துக்கு எதிரானதாகும்.

    சீக்கிய வீரர்கள் வாழ்க!
    கூடைப்பந்து வாழ்க!!
    கூடவே பகுத்தறிவும் வாழ்க!!!

*************************************************************  
  
                

புதன், 23 ஜூலை, 2014

பூப்படையாத சிறுமிகளை 
மஞ்சத்துக்கு அனுப்புவதா?
-------------------------------------------  

( குழந்தைத் திருமணம்-இந்தியாவுக்கு  ஆறாவது இடம்--
   UNICEF  அறிக்கை--மோடிக்கு நடைபெற்ற 
    குழந்தைத் திருமணம்--இன்ன பிற  )
--------------------------------------------------------------------------------  
ஐநா சபையின் உறுப்பு அமைப்பான  யுனிசெப்
( UNICEF) உலகம் முழுவதும் நடைபெறும் 
குழந்தைத் திருமணங்களை  ஆய்வு செய்து அறிக்கை 
வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கையின்படி,  
குழந்தைத் திருமணம் அதிகம் நடக்கும் 
நாடுகளில், இந்தியா ஆறாவது இடத்தில் உள்ளது.
மேலும் உலகில் நடைபெறும் குழந்தைத் திருமணங்களில் 
மூன்றில் ஒன்று இந்தியாவில் நடைபெறுகிறது.

நமது பிரதமர் நரேந்திர மோடிக்கு நடைபெற்ற 
திருமணம் குழந்தைத் திருமணமே. அத்திருமணம் 
நடைபெற்ற போது, மோடிக்கு வயது 18; அவரது மனைவி 
யசோதா பென்னுக்கு வயது 13.    

பிரிட்டிஷ் இந்தியாவில் குழந்தைத் திருமணங்கள் 
அதிக அளவில் நடைபெற்றன. ஒன்றிரண்டைத் தவிர 
நடந்த  எல்லாத் திருமணங்களும் குழந்தைத் 
திருமணங்களாகவே இருந்தன. ராஜாராம் மோகன்ராய் 
என்னும் சீர்திருத்தப் போராளி குழந்தைத் திருமணம், 
சதி என்னும் உடன்கட்டை ஏறுதல் போன்ற சமூகத் 
தீங்குகளுக்கு எதிராகப் போராடினார். இதன் விளைவாக,
1929இல் பிரிட்டிஷ் ஆட்சி  குழந்தைத் திருமணத் தடுப்புச் 
சட்டத்தைக் கொண்டு வந்தது.( CHILD MARRIAGE RESTRAINT 
ACT 1929).

சுதந்திர இந்தியாவில், குழந்தைத் திருமணத் தடைச் 
சட்டம் 2006இல் கொண்டு வரப்பட்டது ( THE PROHIBITION 
OF CHILD MARRIAGES ACT 2006).இச்சட்டப்படி, ஆணுக்கு 
21 என்றும் பெண்ணுக்கு 18 என்றும் திருமண வயது 
வரையறுக்கப் பட்டது. ஆண் பெண் இருவரில், எவர் 
ஒருவருக்கேனும் நிர்ணயிக்கப் பட்ட வயதை விடக 
குறைந்த வயது இருக்குமேயானால், அத்திருமணம் 
குழந்தைத் திருமணம் என்று இச்சட்டம் வரையறுக்கிறது.
இத் திருமணம் சட்டப்படி செல்லத் தக்கது அல்ல.
குழந்தைத் திருமணம் புரிந்த எவர் ஒருவரேனும் 
நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தால், அத்திருமணம் 
செல்லாது ( NULL AND VOID ) என்று அறிவிக்கப் படும்.     

எனினும் இந்தச் சட்டம் இந்து, கிறித்துவ,ஜைன,
பௌத்த மதத்தினருக்கு மட்டுமே பொருந்தும்.
முஸ்லிம்களுக்குப் பொருந்தாது.இந்தியாவில் 
பொது சிவில் சட்டம் இல்லாததால், இசுலாமியப் 
பெருமக்கள் ஷரியத் சட்டத்தைப் பின்பற்றி 
வருகிறார்கள்.ஷரியத் சட்டங்களும் சரி, முஸ்லிம் 
தனிநபர் சட்டங்களும் சரி, திருமண வயதை 
நிர்ணயிப்பதற்கு  காலவயதை (CHRONOLOGICAL AGE)
கணக்கில் கொள்வதில்லை.உடல் ரீதியாக ஏற்படும் 
வளர்ச்சியின் அடிப்படையில் திருமணத்திற்கான தகுதி 
வந்து விடுவதாகக் கருதுகிறார்கள்.எனவே, பெண் 
18 வயதை அடையும் வரை காத்திருப்பது என்பது 
தேவையற்றது என்பது அவர்கள் மனநிலை.

அறிவியல் ரீதியாகப் பார்த்தால், 18 மற்றும் 
21 வயதுகளில் மனித உடல் முழுவளர்ச்சி அடைந்து 
விடுவதில்லை. வளர்ச்சி இந்த வயதுகளைத் 
தாண்டியும் நீடிக்கிறது.எனவேதான்,சட்டப்படி 
ஏற்கத்தக்க 18 வயதைத் தாண்டி 21 வயதில் பெண் 
திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று அரசாங்கம் 
பரிந்துரைக்கிறது.

குழந்தைத் திருமணங்கள் உடல்நலக் கேடுகளை 
உருவாக்கும்.தாய்   சேய் இருவரின் உடல் நலமும் 
கெடும். பல்வேறு நோய்கள் பற்றிக் கொள்ளும்.
டீன் ஏஜ் திருமணங்கள் (TEEN AGE MARRIAGES)
கண்டிப்பாகத் தவிர்க்கப் பட வேண்டும். அறிவியல் 
ரீதியாக மட்டுமின்றி, பொருளாதார மற்றும் சமூக 
ரீதியாகவும் டீன் ஏஜ் திருமணங்கள்  நம் நாட்டுக்குப் 
பொருத்தமற்றவை;தேவையற்றவை.

தமிழ்நாட்டையே சோகத்தில் ஆழ்த்திய தருமபுரி 
இளவரசனின் காதலும் திருமணமும் தோல்வி 
அடைந்ததற்கான காரணம் அத்திருமணம் ஒரு 
குழந்தைத் திருமணம் என்பதுதான். திருமணத்தின்போது 
இளவரசனின் வயது 18 மட்டுமே என்பது,அத்திருமண 
முறிவுக்கும்  இளவரசனின் துயர மரணத்துக்கும் 
காரணமாக அமைந்தது. 18 வயது என்பது 
வெறும் டீன் ஏஜ் மட்டுமே! முதிராப் பருவம்;
சவால்கள் நிறைந்த வாழ்க்கையை எதிர்கொள்ளும் 
ஆற்றலும் பக்குவமும் பொறுமையும் இன்னமும்
தேவையான அளவுக்கு வளராத பருவம் 
டீன் ஏஜ் பருவம். டீன் எஜ்களில் ஏற்படும் உணர்வு 
காதல் அல்ல. அது வெறும் வயசுக் கோளாறு 
(. INFATUATION ).

எனவேதான் உலகெங்கும் அரசுகள் குழந்தைத் 
திருமணங்களைத் தடை செய்கின்றன. அரசின் 
இத்தகைய முயற்சிகளை வரவேற்பது பொறுப்புள்ள 
குடிமக்களின் கடமை.

***************************************************     



செவ்வாய், 22 ஜூலை, 2014

தன வினை தன்னைச் சுடும்!
---------------------------------------------- 
இன்றைய நாளின் ( ஜூலை 22, 2014) ஏடுகளில்
வந்த ஒரு செய்திநெஞ்சில் ஈட்டியாகப் பாய்ந்தது.
( TIMES OF INDIA, CHENNAI , PAGE_3)

இணையதளம், மின்னஞ்சல் இன்ன பிற நவீன 
அறிவியலின் வாய்ப்புகளைத் தீயநோக்கத்துடன் 
பயன்படுத்தி காவல்துறையால் சிறைப்படுத்தப் பட்டு,  
சென்னை புழல் சிறையில் கம்பி எண்ணும்   
ஒரு இளைஞனைக் குறித்த செய்திதான் அது.

முஹம்மது அசார் ஷெரிப் என்ற 28 வயது இளைஞன்
திருவல்லிக்கேணியைச் சேர்ந்தவன். உடன் பணியாற்றிய
பெண்ணிடம் தனது காதலைத தெரிவித்தான். 
அந்தப் பெண் அவன் காதலை ஏற்கவில்லை.

எங்கிருந்தாலும் வாழ்க என்று அந்தப் பெண்ணை 
வாழ்த்தி விட்டு, வேறொரு பெண்ணைக் காதலிக்கத் 
தொடங்கி இருக்க வேண்டும் அந்த இளைஞன்.
ஆனால் அவன் அதைச் செய்யவில்லை. காதலிக்க 
மறுத்த பெண்ணைப் பழிவாங்க விரும்பினான்.

முகநூல்கள், மின்னஞ்சல்கள் மூலம் கிடைத்த 
அப்பெண்ணின் புகைப்படத்தை எடுத்துக்கொண்டு 
அதில் ஒட்டு,வெட்டு வேலைகள் செய்து
( morphed ) ஆபாசப் படமாக மாற்றி, பலருக்கும் 
மின்னஞ்சலில் அனுப்பி வைத்தான்.
மாட்டிக் கொண்டான். சிறையில் கம்பி எண்ணுகிறான்.

வக்கிர சிந்தனையும் நோய் மனமும் கொண்ட 
இந்த இளைஞன் ஓர்  எதிர்மறை உதாரணம். 
எப்படி வாழக் கூடாது  என்பதற்கான உதாரணம்.

உப்பைத் தின்றவன் தண்ணீர் குடிப்பான் 
என்பது போல இத்தகைய தீச்செயலில் 
ஈடுபடுகிறவர்கள் பிடிபடுவது திண்ணம்;
தண்டிக்கப் படுவதும் திண்ணம். 
சமூகம் இதிலிருந்து படிப்பினை பெற வேண்டும்.

   தீயவை செய்தார் கெடுதல் நிழல்தன்னை
   வீயாது அடியுறைந் தற்று.  .    

*******************************************************************************

புதன், 16 ஜூலை, 2014

வேலையற்ற மாமியார்களும்
சிந்தனைக் குள்ளர்களும்!
----------------------------------------------------------------------------------------
(மோடி அரசின் முதல் பட்ஜெட்-அருண் ஜெட்லி- திறனாய்வு)
----------------------------------------------------------- -----------------------------
பி இளங்கோ சுப்பிரமணியன்
-------------------------------------------------------------- ----------------------------
எனது முந்திய கட்டுரை குறித்து வாசகர்கள் சில
கருத்துக்களைத் தெரிவித்து இருந்தனர்.
"புஷ்பராகம் பதித்த மூக்குத்தியும் அந்தாதித் தொடையும்"
என்ற கட்டுரையைத் தான் குறிப்பிடுகிறேன்.
அக்கட்டுரை அ) பட்ஜெட்டை மேலெழுந்தவாரியாக
அணுகுகிறது; ஆ)பாஜக மீது கூர்மையான விமர்சனம்
இல்லை ஆகிய கருத்துக்கள் தெரிவிக்கப் பட்டன. இவை
குறித்த எனது எதிர்வினையே இக்கட்டுரை.

பட்ஜெட் என்பது எல்லையற்றது அல்ல; வரம்புக்கு உட்பட்டது.
அதுபோலவே பட்ஜெட் மீதான விமர்சனமும் எல்லையற்றது
அல்ல; வரம்புக்கு உட்பட்டது.ஒரு பட்ஜெட்டின் வாழ்நாள்
365 நாட்கள் மட்டுமே.சிதம்பரம் சமர்ப்பித்த இடைக்கால
பட்ஜெட்டின் தொடர்ச்சியான ஜேட்லியின் பட்ஜெட்டின்
வாழ்நாள் 365 நாட்களுக்கும் குறைவு. விரலுக்கு ஏற்ற வீக்கம்
என்பது போல விமர்சனத்தின் தன்மையும் அந்த அளவே
இருக்கும்.

இந்திய அரசமைப்புச் சட்டத்தை விமர்சிப்பது போல
பட்ஜெட்டை விமர்சிக்க வேண்டிய அவசியம் இல்லை.
அரசமைப்புச் சட்டம் என்றும் நின்று நிலவுவது;
பட்ஜெட் 365 நாட்களுடன் முடிந்த போவது.ஒரு
ஒர்க் ஷாப்பில், எந்திரத்தை பாகம் பாகமாகக் கழற்றிப்
போட்டு, பின் அவை அனைத்தையும் ஒன்று சேர்ப்பது
போல இந்த பட்ஜெட்டின் உள்ளும் புறமும் புகுந்து
புறப்பட்டு, பின் வெளிவந்து விஷேசங்களை வெளிப்படுத்த
( REVELATION ) வேண்டிய தேவை இல்லை.

போலி கம்யூனிஸ்ட்கள், போலி மார்க்சிஸ்ட்கள்,
போலி   லெனினிஸ்ட்கள் ...இன்ன பிற
சிந்தனைக் குள்ளர்களுக்கு அத்தகைய தேவை
இருக்கலாம்.  அந்த வேலையற்ற மாமியார்கள்
அருண் ஜேட்லியின் கழுதையைச் சிங்காரித்துக்
கொண்டு இருக்கட்டும். 

சுருங்கச் சொல்லல் விளங்க வைத்தல் என்ற உத்தியைக்
கையாண்டு அக்கட்டுரை எழுதப் பட்டு இருந்தது.
      " பலசொல்லக் காமுறுவர் மன்ற மாசற்ற
        சிலசொல்லல் தேற்றா தவர் "
என்ற வள்ளுவரின் கண்டனத்தை பெற யான் விரும்பவில்லை.

புள்ளி வைத்தவர் அவர்!
கோலம் போட்டவர் இவர்!!
---------------------------------------
ஒரு புள்ளி விவரத்தைப் பார்ப்போம்:
சிதம்பரத்தின் இடைக்கால பட்ஜெட்டிலும்
அருண் ஜேட்லியின் புதிய பட்ஜெட்டிலும்
அரசின் பல்வேறு துறைகளுக்கு எவ்வளவு நிதி
ஒதுக்கப் பட்டு உள்ளது என்று பார்ப்போம்.

துறை         சிதம்பரத்தின் பட்ஜெட்     ஜேட்லியின் பட்ஜெட்
                                           ( கோடி ரூபாய்கள் )
--------------------------------------------------------------------------------
வேளாண்மை                21951.75                                  22651.75
கிராமப்புற வளர்ச்சி    78408.80                                  79999.80
உணவு (PDS )                   115656.84                                115656.84
நகர்ப்புறவளர்ச்சி         19143.46                                   19989.46
சிறுபான்மை நலம்      3724.01                                      3724.01
சமூகநீதி                          6204.49                                       6204.49
சுற்றுலா                           1356.71                                      1948.71

குறிப்பு::
----------
உணவு ( PDS ), சிறுபான்மை நலம், சமூகநீதி ஆகிய
மூன்று துறைகளிலும் சிதம்பரம் ஒதுக்கிய அதே
தொகையைத்தான் அப்படியே ஒதுக்கி உள்ளார் ஜேட்லி.

ஆதாரம்:  THE HINDU's  CALCULATIONS;
                      HINDU  ஆங்கில ஏடு , ஜூலை 12, 2014  

ஆக அவரேதான் இவர்! இவரேதான் அவர்!!
சிதம்பரத்தின் பட்ஜெட்டில் சிறிது பூச்சு வேலை
( TINKERING WORK ) செய்துள்ளார்.அவ்வளவே!

இடைக்கால பட்ஜெட்டின் தொடர்ச்சியாக
ஜேட்லியின் பட்ஜெட் அமைந்தபடியால்,
முழு சுதந்திரத்துடன் ஜெட்லி இந்த பட்ஜெட்டைத்
தயாரிக்கவில்லை என்பதே  உண்மை! ஒன்றுமே
எழுதப்படாத சிலேட்டில் ஜேட்லி எழுதவில்லை.
மாறாக சிதம்பரத்தின் எழுத்துக்கள் உள்ள சிலேட்டில்
ஜேட்லி எழுதி உள்ளார் ( OVER WRITING ) என்பதே
யதார்த்தம். சிதம்பரத்தின் பட்ஜெட்டுகள் முழுக்க
நனைந்தவை! அவை  எப்படி இருக்கும் என்பது
குறைந்தபட்ச பொருளாதார அறிவு உடைய
எவருக்கும்  தெரிந்ததுதான்.

எனவே  சிதம்பரம்- ஜேட்லி
கூட்டுத் தயாரிப்பான  இந்த பட்ஜெட் குறித்து
அகல்விரிவானதும் ஆழமானதுமான பகுப்பாய்வு
தேவையற்றது என்பது எனது நிலை.
WHY THE HELL SHOULD I BEAT ABOUT THE BUSH? 

நிற்க. சிதம்பரம் பொருளாதார நிபுணராக அறியப் 
பட்டவர். ஜேட்லி சட்ட நிபுணராக அறியப் பட்டவர்.
ஆனால், ஆளும் கலை ( ART  OF GOVERNANCE )
என்பதில் ஜேட்லி சிதம்பரத்தை விடச் சிறந்து 
விளங்குகிறார் என்பதற்கு இந்த பட்ஜெட் ஒரு 
சிறந்த உதாரணம். கடந்த பத்தாண்டுகளின் 
பட்ஜெட்டுகளில்,  ஜேட்லியைப் போல் 
எந்த நிதி அமைச்சரும் இந்த அளவுக்கு வரிக்குறைப்பு 
செய்ததில்லை. வரிகுறைப்பு மாமன்னராக 
ஜேட்லி திகழ்கிறார் இந்த பட்ஜெட்டின் மூலம்.
தங்களுக்கு வாக்களித்த நடுத்தர வர்க்கத்துக்கு 
எதிர்பார்த்ததை விட அதிகமாகவே செய்துள்ளார் ஜெட்லி.
இந்த அம்சத்தில் சிதம்பரத்தை அவர் வெகுவாக 
முறியடித்து உள்ளார்.

தீவிர வலதுசாரிக் கொள்கைகளைச் சொல்லிக் 
கொண்டிருந்த பாஜக இந்த பட்ஜெட்டில் 
அவற்றுக்கான பிள்ளையார் சுழியைப் போடவில்லை.
இந்திய அரசின் பொருளாதாரக் கொள்கைகளில் 
ஒரு அடிப்படை மாற்றம் (PARADIGM SHIFT ) வருமா,
வலதுசாரிச் சாய்வு வருமா என்பன போன்ற 
கேள்விகளுக்கு இந்த பட்ஜெட்டில் விடை இல்லை.
விரைவில் தெரிய வரும்.

ஆக, ஜேட்லியின் பட்ஜெட் குறித்துச் 
சொல்வதற்கு இதற்கு மேல் ஒன்றும் இல்லை.   
இதில் நிறைவு அடையாதவர்கள்,
முன்பத்திகளில் குறிப்பிட்ட வேலையற்ற 
மாமியார்களை அணுகவும்.

இறுதியாக ஒன்று!கம்யூனிஸ்ட் சீனாவில் 
தலைவர்   மாவோ, "மாபெரும் முன்னோக்கிய 
பாய்ச்சல்"  (GREAT LEAP FORWARD) என்ற ஒரு 
திட்டத்தை 1958-1961 காலக் கட்டத்தில் 
செயல்படுத்தினார். சீனப் பொருளாதாரத்தை 
வெகுவாக உயர்த்தவும் , சீனத்தில் தொழில் 
வளர்ச்சியை உச்சத்துக்குக் கொண்டு செல்லவும் 
இந்த மாபெரும் பாய்ச்சல் உதவும் என்று கருதி 
இதை வெகு  தீவிரமாகச் செயல்படுத்தினார் மாவோ.
ஆனால், விளைவு தலைகீழானது.முட்டாள்தனமான 
இந்த மாபெரும் பாய்ச்சல் திட்டம் சீனாவில் 
மாபெரும் பஞ்சத்தை உண்டாக்கி விட்டது.இந்தப் 
பஞ்சத்தில் ஐந்து   கோடி சீன மக்கள் இறந்து 
போனார்கள் என்பது வரலாறு.

அருண்  ஜெட்லியின் பட்ஜெட்  மகா மோசமான 
பட்ஜெட்டாக இருந்து விட்டுப் போகட்டும்!
ஆனால் ஐந்து கோடி மக்களை பஞ்சத்தில் 
சாகடித்த மாவோவின் பட்ஜெட் போல 
இது நிச்சயம் இருக்காது என்பது உறுதி!

**************************************************************     






                     

வெள்ளி, 11 ஜூலை, 2014

புஷ்பராகம் பதித்த மூக்குத்தியும்
அந்தாதித்தொடையும்!
----------------------------------------------------------------------

பி. இளங்கோ சுப்பிரமணியன்
----------------------------------------------------------------------

(நிதியமைச்சர் அருண் ஜேட்லி சமர்ப்பித்த
மோடி அரசின் முதல் பட்ஜெட் 2014-2015:
ஒரு திறனாய்வு!)
-----------------------------------------------------------------------
எங்கே சொதப்பி விடுவாரோ என்ற அச்சம் சிலருக்கு.
கசப்பு மருந்து நிறைய இருந்து  தொலைத்து விடுமோ
என்ற கவலை சிலருக்கு. வெறும் வாயை மென்று
கொண்டு இருப்பவர்களுக்கு அவல் கொடுத்து
விடுவாரோ என்ற அரிச்சல் சிலருக்கு.

ஆனால் அனைவரின் பதற்றங்களும் அர்த்தமற்றுப்
போக, அருண் ஜெட்லி வெற்றிகரமாக உயரம்
தாண்டி விட்டார். REAL HIGH JUMP!

கசப்பு மருந்து இல்லை!
மக்களைப் பாதிக்கும் வரி விதிப்பு இல்லை!
மானியக் குறைப்பு இல்லை!
ஜேட்லியின் பட்ஜெட்டில் STUFF இருக்கிறதோ
இல்லையோ CRAFT இருக்கிறது!
வரிசையில் நிற்கும் எல்லோருக்கும் ஏதாவது
கிடைக்கிறது.சிலருக்கு வெண்பொங்கல்,
சிலருக்கு மிளகுவடை, சிலருக்கு சுண்டல்,
சிலருக்கு கல்கண்டு.வெறுங்கையுடன் யாரும்
போகவில்லை.

வைரம், வைடூரியம், முத்து, பவழம், மரகதம்,
மாணிக்கம், கோமேதகம், புஷ்பராகம், நீலம்
ஆகிய இவை நவரத்தினங்கள். எண்ணிப்
பாருங்கள், ஒன்பது வரும். நவரத்தினங்களின்
மீதான இறக்குமதிக்கான சுங்க வரியை
அருண் ஜெட்லி குறைத்து விட்டார்.அதனால்
கொற்கைப் பட்டினத்து முத்துக்களும் கோமேதகக்
கற்களும் விலை மலிகின்றன.

இனி குடிசை மாற்று வாரிய வீடுகளில் குடித்தனம்
நடத்தும் குப்பம்மா, முனியம்மா, மூக்கம்மா
ஆகிய எல்லோரும் புஷ்பராகக் கல் பதித்த
மூக்குத்திக்கு ஆசைப் படலாம்.

19 அங்குலத்துக்குக் குறைவான LCD, LED  டிவிகளின்
மீதான வரியைக் குறைத்தார் ஜேட்லி. கடைக்காரன்
விலையைக் குறைக்கிறான்.இனி தங்கள் வீடுகளில்
நல்ல நிலையில் ஓடிக்கொண்டிருக்கும், ரூ 37000
மதிப்புள்ள CRT   டிவிகளை  எக்சேஞசு மேளாவில்
கொடுத்து, பதிலாக ரூ 1000 பெற்றுக்கொண்டு,
ரூ 53000 விலையில் LED  டிவிகளை வாங்கச் சொல்லி
மனைவிமார்கள் கணவன்மார்களை நச்சரிக்கத்
தொடங்கி விடுவார்கள்.அந்தஸ்தின் அடையாளம்
( STATUS SYMBOL ) அல்லவா LCD டிவி!

LOW TECH டிவியான CRT டிவி என்ன பாவம் செய்தது
என்று நினைத்தார் போலும் ஜெட்லி! அதற்கும்
வரியைக் குறைத்து விட்டார்.

தாய்மார்களின் விருப்பப்படி,வரிக்குறைப்பு மூலம்
பின்வரும் வீட்டு உபயோகப் பொருட்களின்
விலையைக்  குறைத்துள்ளார் ஜெட்லி.

அ ) மேசைக்கணினி, மடிக்கணினி, டாப்லெட் கணினி
ஆ) மொபைல்   பேசிகள்
இ) பிரிட்ஜ் (குளிர் சாதனப் பெட்டி)
ஈ) வாஷிங்  மெஷின்
உ) தண்ணீர் சுத்திகரிப்பான் (ஆர்.ஓ)
ஊ) மைக்ரோவேவ் ஓவன்
எ) சோப்பு
ஏ) செருப்பு
ஐ) தீப்பெட்டி

இவ்வாறு கண்ணில் பட்டதை எல்லாம்
வரிக்குறைப்புச் செய்துகொண்டே வந்த ஜேட்லி
சிகரெட்டின் மீது மட்டும் இரக்கம் காட்ட   மறுத்து 
விடுகிறார். ஆனாலும் என்ன? பீடியை விட்டு விட்டார். 
சிகரெட்டுவிலை கட்டுப்படி ஆகாதவன் 
பீடிக்கு மாறி விடலாமே!

தாழ்த்தப்பட்டோர் நலனுக்கு ரூ 50548 கோடி!
பழங்குடியினர் நலனுக்கு ரூ 32387 கோடி!
மதரசாக்களை நவீனப் படுத்த ரூ 100 கோடி!
சூரிய மின்சக்திக்கு ரூ 1000 கோடி!
சொல்லிக்கொண்டே போகிறார் ஜெட்லி.
பொறுக்க முடியவில்லை சோனியாவுக்கு.
ஆற்றாமையுடன் புழுங்குகிறார்.

சிவகங்கையில் ஒரு ஆசிரமம் அமைத்து
அருள்வாக்குச் சொல்லலாமா என்று  எஞ்சிய
வாழ்க்கையைப் பற்றிய சிந்தனையில் இருக்கும்
ப.சிதம்பரம் இருக்கையை விட்டு எம்பிக்
குதிக்கிறார்.இது ஜேட்லியின் பட்ஜெட் அல்ல ;
என் பட்ஜெட்தான் என்கிறார்.பாருங்கள் அதில்
காங்கிரஸ் முத்திரை தெரியும் என்கிறார்.

உண்மையிலேயே, ஜேட்லியின் பட்ஜெட்
பாஜகவின் பட்ஜெட் அல்ல அது காங்கிரசின்
இடைக்கால பட்ஜெட்டின் தொடர்ச்சிதான்.
சிதம்பரம் முடித்த இடத்தில் இருந்து
ஜேட்லி தொடங்குகிறார். இதில் ஒரு அந்தாதித்
தொடையை நாம் காண முடியும்..   

செய்யுளில் ஓர் அடி எந்தச் சொல்லில் முடிகிறதோ
அதே சொல்லைக் கொண்டு அடுத்த அடியை
அமைப்பதுதான் அந்தாதி. ( உரைநடையில் வரி
எனப்படுவது செய்யுளில் அடி எனப்படும்;)
இதைப் புரிந்து கொள்ள, கண்ணதாசனின்
சினிமாப் பாட்டில் இருந்து ஒரு எளிய உதாரணம்
தருகிறேன்.  
   
 "தலையணையில் முகம் புதைத்து
      சரசமிடும் புதுக்கலைகள்:
 புதுக்கலைகள் தெரிவதற்கு
      பூமாலை மணவினைகள்;
 மணவினைகள் யாருடனோ "

இதுதான் அந்தாதி! சிதம்பரம்-ஜேட்லி பட்ஜெட்களில்
 பயின்று வருவதும் இதுதான்!

சிதம்பரத்தின் பட்ஜெட் ஒரு CENTRIST பட்ஜெட்!
அதன் தொடர்ச்சியான ஜேட்லியின்   பட்ஜெட்டும்
ஒரு CENTRIST  பட்ஜெட்தான்!

அரசியல் ரீதியாக, பட்ஜெட்டுகளை
மூன்று வகையாகப் பிரிக்கலாம்.
1) வலதுசாரி பட்ஜெட் (RIGHTIST BUDJET )
2) இடதுசாரி பட்ஜெட் (LEFTIST BUDJET )
3)  நடுச்சாரி பட்ஜெட் (CENTRIST BUDJET )

இவற்றுள், இடதுசாரி பட்ஜெட் உலகில்
யாங்கணும் இல்லை. அது மனிதனின் சுகமான
கற்பனையில் மட்டுமே தோன்றுகிற
கற்பனாவாத பட்ஜெட் (UTOPIAN). காங்கிரசின்
பட்ஜெட்கள் எப்போதுமே CENTRIST ஆனவை.
ஜவஹர்லால் நேரு காலம் தொட்டு
சிதம்பரம் காலம் வரை அப்படித்தான்.

பாஜக வலதுசாரிப் பொருளாதாரக் கொள்கைகளைச்
சொல்லிக் கொண்டிருந்த கட்சி.ஆனால் பட்ஜெட்டில்
அக்கொள்கை பிரதிபலிக்கவில்லை.பாஜகவின் முதல்
பட்ஜெட் எவ்விதத்திலும் ஒரு வலதுசாரி பட்ஜெட் அல்ல.
பாதுகாப்பு இன்சூரன்ஸ் துறைகளில் FDI ஐ
74 சதம் உயர்த்தி இருந்தால், பாஜகவின் பட்ஜெட்
வலதுசாரி பட்ஜெட் என்று துணிந்து கூறலாம்.
 குறைந்த பட்சம் 51 சதம் என்று கூட உயர்த்தி விடாமல்
கயிற்றின் மீது நடந்து காட்டினார் ஜெட்லி.

ஒருவேளை தீவிர வலதுசாரிப் பொருளாதார
அறிஞரான அருண் ஷோரியை  பாஜக
நிதியமைச்சராக்கி இருக்குமேயானால்
அவர் துணிந்து செயல்பட்டு இருக்கக் கூடும்.

ஆக ஒரு விஷயம் தெளிவாகத் தெரிகிறது.
மோடி அரசின் பொருளாதாரத் திசைவழியை
(ORIENTATION) அறிவிக்கும் பட்ஜெட் இதுவல்ல.
அடுத்த பட்ஜெட்டில், பாஜக வலதுசாரியா
நடுச்சாரியா என்பது புலப்பட்டுவிடும்.

பட்ஜெட் மீதான விமர்சனம் என்ற பெயரில் 
புளிப்பேறிப்போன கருத்துக்களைக் 
கடைவிரிக்கிறார்கள் நாடாளுமன்ற 
"இடதுசாரி" நண்பர்கள்.புறச் சூழ்நிலை 
குறித்த எந்தவிதமான பருண்மையான ஆய்வையும் 
மேற்கொள்ளாமல், தங்களின் அகநிலையில் இருந்து 
தேங்கிப்போய் பாசிபிடித்துக் கிடக்கும் கசடுகளை 
கருத்துக்கள் என்ற பெயரில் கடைவிரித்து 
சூழலை மாசு படுத்துகிறார்கள் இவர்கள்.

யார் பட்ஜெட் போட்டாலும்,
லெனினே வந்து பட்ஜெட் போட்டாலும் 
பின்வரும் நான்கு வாக்கியங்களைக் 
கிளிப்பிள்ளைப் பாடமாகச் சொல்லுபவர்கள் இவர்கள்.

1) இது தனியார்மயத்தை ஊக்குவிக்கிறது.
2) இது பெரு  முதலாளிகளுக்குச் சாதகமானது.
3) இது அந்நிய முதலீட்டை நம்பி உள்ளது.
4) இது மக்கள் விரோத பட்ஜெட்.
கி.பி 3014ல் ஒரு பட்ஜெட் போட்டாலும் இவர்கள் 
கிளிப்பிள்ளை போல் இதைத்தான் சொல்லிக் 
கொண்டு இருப்பார்கள். 

மகத்தான நவம்பர்  சோஷலிசப் புரட்சிக்குப் 
பின்னால், புரட்சி நடந்த மறுநாளே,
அதாவது, நவம்பர் 8, 1917 அன்று 
ரஷ்யாவில் நிலம் முழுவதும் அரசுடைமை 
ஆக்கப் பட்டது. 1920இல் விவசாய உற்பத்தி 
குறைந்தது.உபரி தானியம் முழுவதையும் அரசு 
கட்டாயக் கொள்முதல் செய்ததால், விவசாயிகள் 
ஊக்கம் இழந்தார்கள். தொழில்துறையும் 
இதுபோல் பாதிக்கப் பட்டது.  

இதற்குத் தீர்வாக லெனின் "புதிய பொருளாதாரக் 
கொள்கை"யை வகுத்தார்.தானியங்களின் கட்டாயக் 
கொள்முதல் கைவிடப்பட்டது.தொழில்துறையில் 
தனியுடைமை அனுமதிக்கப் பட்டது. நடுத்தர  
மற்றும் பெரிய தொழில்களில் வெளிநாட்டு 
மூலதனம் அனுமதிக்கப் பட்டது. 

லெனின் வகுத்துச் செயல்படுத்திய புதிய 
பொருளாதாரக் கொள்கை அன்று ரஷ்யாவின்  
(சோவியத் ஒன்றியத்தில்) சிக்கல்களுக்குத் 
தீர்வாக அமைந்தது.   

FDI  என்றவுடனே, தீயை மிதித்தவன் போல் 
அலறுவதை விட்டு விட்டு , லெனின் 
எந்தச் சூழ்நிலையில் அனுமதித்தார் 
என்று ஆராய்ந்து தெளிவதே இன்றைய தேவை.

பின்குறிப்பு:
---------------- 
1) ஜெட்லியின்  பட்ஜெட், ஒரு முதலாளித்துவ 
அரசாங்கம் போடுகிற, ஒரு முதலாளித்துவ 
பட்ஜெட். அதை சோஷலிச அளவுகோல்களைக் 
கொண்டு அளக்க முற்படுவது சரியன்று.
2) லெனின் வகுத்த புதிய பொருளாதாரக் கொள்கை 
குறித்த தெளிவு இடதுசாரிகளுக்கு அவசியம்.

*****************************************************