வெள்ளி, 29 செப்டம்பர், 2023

வேளாண் விஞ்ஞானி எம் எஸ் சுவாமிநாதன் மறைவு!
----------------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம் 
--------------------------------------------------------------------------
மானுட வரலாறு என்பது மகான்களின் வரலாறு அல்ல.
சமூகத்தில் வெவ்வேறு காலங்களில் நிலவிய 
வெவ்வேறு உற்பத்தியின் வரலாறே மானுட வரலாறு.
வரலாற்றைப் பற்றிய இந்தப் பார்வைதான் 
மார்க்சியம் கூறும் வரலாற்றியல் பொருள்முதல்வாதம் 
ஆகும். 

1960களின் பிற்பகுதியில் இந்தியாவில் உணவு தானியப் 
பற்றாக்குறை தீவிரமாக இருந்தது. எனவே உற்பத்தியைப் 
பெருக்க வேண்டும் என்ற உடனடிக் கட்டாயம் 
இருந்தது.

அப்போதைய பிரதமர் லால் பகதூர் சாஸ்திரியும் 
அன்றைய வேளாண்மை அமைச்சர் சி சுப்பிரமணியமும் 
சேர்ந்து உணவு தானிய உற்பத்தியைப் பெருக்கும்
பெரும் பொறுப்பை இந்திய வேளாண் விஞ்ஞானி 
டாக்டர் எம் எஸ் சுவாமிநாதனிடம் ஒப்படைத்தனர்.
அப்பொறுப்பை ஏற்றுக்கொண்ட சுவாமிநாதன் 
உணவுதானிய உற்பத்தியை பலமடங்கு உயர்த்திக் 
காட்டினார். இதுதான் பின்னாளில் பசுமைப் 
புரட்சி என்று பெயர் பெற்றது.

இதன் விளைவாக உணவு தானிய உற்பத்தியில் 
இந்தியா தன்னிறைவு அடைந்தது. பஞ்சம், பட்டினிச் 
சாவு என்ற அபாயம் நீங்கியது. இன்று 
தன்னிறைவு என்பதையும் தாண்டி உபரி 
உற்பத்தி என்ற நிலையை இந்தியா அடைந்துள்ளது.
இதற்கு வித்திட்டவர் சுவாமிநாதன். பற்றாக்குறையில்
இருந்த நாட்டை உபரிக்கு உயர்த்தியவர் அவரே.

சமூகத்தின் பொருள் உற்பத்திக்குப் பங்களித்தவர்களே 
வரலாற்றை உருவாக்குகிறார்கள். அவர்களை 
மரியாதையுடன் பார்க்கிறது மார்க்சியம்.

ஆனால் இந்தியாவிலேயே அடையாள அரசியல் 
உச்சத்தில் இருக்கும் தமிழ்நாட்டில், சமூகத்தின்
பொருளுற்பத்திக்குப் பங்களித்தவர்கள் உரிய 
கெளரவத்தைப் பெறுவதில்லை. 

எனவேதான் உணவு உற்பத்தியைப் பெருக்கிய 
சுவாமிநாதன் இங்கு தற்குறிகளின் கண்டனத்துக்கு 
இலக்காகிறார். இது கடைந்தெடுத்த பிற்போக்குத்தனமும் 
அறியாமையும் ஆகும். 

மறைந்த தமிழார்வலரும் மரபார்ந்த வேளாண்மைப் 
பிரச்சாரகருமான நம்மாழ்வாரை சுவாமிநாதனுடன் 
ஒப்பிடும் கோமாளித்தனமும் இங்குதான் கொடிகட்டிப் 
பறக்கிறது. நம்மாழ்வார் நல்லவர்; பொது வாழ்வில் 
ஊழல் எதுவும் இன்றி நெருப்பாக வாழ்ந்து காட்டியவர்.
அந்த வகையில் அவர் வணக்கத்துக்கு உரியவர்.

ஆனால் நம்மாழ்வாரால் உற்பத்தியைப் பெருக்க 
ஒருபோதும் இயலவில்லை. அவர் ஆதரித்த 
organic farming மொத்த சமூகத்தின் உணவுத் 
தேவையில் 10 சதவீதத்தைக்கூட நிறைவேற்றப் 
போதாது. சமூகத்தின் பொருளுற்பத்திக்கு
அவரால் பங்களிக்க இயலாது. 
       
பொருளுற்பத்தி என்பது சகல அடையாளங்களுக்கும்
அப்பாற்பட்டது. அப்படிப்பட்ட பொருளுற்பத்தியிலேயே 
அடையாள அரசியலைப் புகுத்தியவர் நம்மாழ்வார்.

ரசாயன உரங்களுக்குப் பதில் சாணி உரம் என்பது 
பாராட்டக்கூடிய விஷயமே! ஆனால் நாடு முழுவதும் 
உள்ள லட்சக் கணக்கான ஏக்கர் நிலங்களில் 
நெல் சாகுபடிக்கு எவ்வளவு சாணி உரம் வேண்டும்?
மலை மலையாக வண்டி வண்டியாகத் தேவைப்படுமே!
அவ்வளவு மாடுகள் நாட்டில் இருக்கின்றனவா?
இல்லையே!

முதலாளிய சமூகத்திற்கு வந்து விட்ட பின்னர் 
மீண்டும் நிலவுடைமைச் சமூகத்திற்குத் திரும்பிச் 
செல்ல இயலாது. வரலாற்றின் சக்கரங்களைப் 
பின்னோக்கித் திருப்ப முயன்றார் நம்மாழ்வார்.  .
எனவே ரசாயன உரங்களற்ற organic farming என்பது 
நாட்டின் உணவுத் தேவையை பூர்த்தி செய்யப் 
போதுமானதல்ல. இது ஒரு கற்பனாவாதத் தீர்வு! நிற்க.

உணவு தானிய உற்பத்தியோடு இரண்டறக் கலந்து 
நின்ற வேளாண் விஞ்ஞானி டாக்டர் எம் எஸ் 
சுவாமிநாதன் மறைவுக்கு நியூட்டன் அறிவியல் 
மன்றம் அஞ்சலி செலுத்துகிறது.
**********************************************     

இந்தக் கட்டுரையைப் புரிந்து கொள்ளவோ,
இக்கட்டுரையின் பேசுபொருளைப் புரிந்து 
கொள்ளவோ வலுவான அறிவியல் பின்னணி
தேவைப்படுகிறது.

ஒருவர் தன்னை ஒரு மார்க்சிஸ்ட்டாக கருதிக்  
கொள்வதனாலேயே அவர் உலகில் உள்ள 
எல்லா விஷயங்களை பற்றியும் கருத்துக் 
கூற அருகதை உடையவர் ஆகி விடுவதில்லை.  

அரங்கின்றி வட்டாடி யற்றே நிரம்பிய 
நூலின்றிக் கோட்டி கொளல்
என்கிறார் வள்ளுவர்.


முன்குறிப்பு:
அறிவியல் பின்னணி அற்றவர்கள் அருள்கூர்ந்து 
இக்கட்டுரையைப் படிக்காமல் இருந்து 
ஒத்துழைப்புத் தரும்படி பணிவுடன் வேண்டுகிறோம்.
பிறழ்புரிதல் ஏற்படாமல் தடுக்கவே இந்த ஏற்பாடு.




 
  
பெறுநர்:
ஆசிரியர் அவர்கள்,
தினமணி, சென்னை.

மதிப்புக்குரிய ஐயா,
எம் எஸ் சுவாமிநாதன் நினைவாக எழுதியுள்ள 
கட்டுரையை இத்துடன் இணைத்துள்ளேன்.
அதை தினமணி ஏட்டில் பிரசுரிக்குமாறு 
அன்புடன் வேண்டுகிறேன்.

தங்கள் உண்மையுள்ள,
பி இளங்கோ சுப்பிரமணியன்.
தலைவர்: நியூட்டன் அறிவியல் மன்றம்.
சுபிக்சா அடுக்ககம், 
5/5, ஆறாவது தெரு, 
சௌராஷ்டிரா நகர், சூளைமேடு,
சென்னை 600 094.

மொபைல்: 94442 30176.
மின்னஞ்சல்: ilangophysics@gmail.com   
----------------------------------------------------------------

 
இந்திய வேளாண்மையில் 
வேளாண் விஞ்ஞானி சுவாமிநாதனின் பாத்திரம்!
------------------------------------------------------------------------------
பி இளங்கோ சுப்பிரமணியன் 
நியூட்டன் அறிவியல் மன்றம் 
------------------------------------------------------------------------------
எனக்கு நான்றாக ஞாபகம் இருக்கிறது. அப்போது 
நான் ஏழாவது வகுப்பில் படித்துக் கொண்டிருந்த 
சிறுவன். ஆண்டு 1965! லால் பகதூர் சாஸ்திரி 
இந்தியப் பிரதமராக இருந்த நேரம்.

அவர் நாட்டு மக்களுக்கு ஒரு வேண்டுகோள் விடுத்து 
இருந்தார். நாட்டில் கடும் உணவுப் பற்றாக்குறை 
நிலவுவதால், மக்கள் அனைவரும் வாரத்தில் ஒரு நாள் 
ஒரு வேளை உணவு உண்ணாமல் பட்டினி இருக்க 
வேண்டும்  என்பதுதான் சாஸ்திரியின் வேண்டுகோள்.

எங்கள் பள்ளித் தலைமையாசிரியர் ஊர் மக்களை 
வரவழைத்து, பள்ளியில் ஒரு கூட்டத்தைக் கூட்டினார். 
பிரதமரின் வேண்டுகோளைத் தாம் ஏற்பதாகவும் 
வாரந்தோறும் செவ்வாய் இரவு உணவைக் 
கைவிடுவதாகவும் அறிவித்தார். ஊராரில் பலரும் 
தலைமையாசிரியரைப் பின்பற்றி ஒரு வேளை 
உணவைக் கைவிட்டனர். எங்கள் பள்ளித் 
தலைமையாசிரியர் காங்கிரஸ்காரர் அல்லர்.
பிரதமரின் வேண்டுகோளுக்கு மதிப்பளிக்கும் 
ஒரு கலாச்சாரம் அப்போது நாட்டில் இருந்தது.   
பல உணவகங்கள் அப்போது வாரத்தில் ஒரு 
நாள் இரவு உணவு நேரத்தில் மூடப்பட்டிருந்தன.
 

நாட்டு மக்கள் அனைவரும் ஒருவேளை பட்டினி 
கிடக்க வேண்டும் என்று பிரதமர் சாஸ்திரி 
வேண்டுகோள் விடுக்க வேண்டிய அவலநிலை 
1965ல் ஏன் ஏற்பட்டது?

அ) 1962ல் நேரு காலத்தில் இந்திய சீனப்போர் 
ஏற்பட்டது. போரில் இந்தியா தோற்றது. இப்போரின் 
விளைவாக தீவிரமான பொருளாதார நெருக்கடியும் 
கடுமையான உணவுப் பற்றாக்குறையம் ஏற்பட்டன.

ஆ) தொடர்ந்து 1965ல் இந்திய பாகிஸ்தான் போர் 
ஏற்பட்டது. இப்போர் உணவுப் பஞ்சத்தின் விளிம்புக்கு 
இந்தியாவைக் கொண்டு சென்றது.

இ) அக்காலத்தில் உணவு தானிய உற்பத்தியில் 
இந்தியா தன்னிறைவு அடைந்திருக்கவில்லை.
பெரிதும் இறக்குமதியை நம்பியே இருந்தது.
பிஎல் 480 (Public Law 480) என்னும் திட்டத்தின் கீழ் 
மக்காச்சோளம், கோதுமை, பால்பவுடர் ஆகியவை 
அமெரிக்காவின் உதவியாக இந்தியாவுக்கு 
வந்துகொண்டு இருந்தன.

ஈ) இந்திய பாகிஸ்தான் போரின்போது (1965)
லிண்டன் பி ஜான்சன் அமெரிக்க அதிபராக 
இருந்தார். இந்தியா போரை நிறுத்தாவிட்டால் 
உணவு தானியங்களை இந்தியாவுக்கு அமெரிக்கா 
வழங்காது என்று மிரட்டினார் லிண்டன் ஜான்சன்.

உ) 1967 தேர்தலில் காங்கிரஸ் ஏன் தமிழ்நாட்டில் 
மோசமாகத் தோற்றது? அரிசிப் பஞ்சம்தானே 
காரணம்! அப்போதெல்லாம் ரேஷன் கடைகளில் 
காணப்படும் மிக நீண்ட கியூவரிசைகளில் மக்கள் 
தங்கள் நேரத்தைத் தொலைப்பார்கள். அரிசித் 
தட்டுப்பாடு தீவிரமாக இருந்த காரணத்தால்தான் 
திமுக தலைவர் அண்ணாத்துரையால் ரூபாய்க்கு 
மூன்று படி அரிசி என்ற வாக்குறுதியைக் 
கொடுத்து பாமர மக்களின் வாக்குகளை அறுவடை
செய்ய முடிந்தது!    

ஊ) சுருங்கக் கூறின் 1960களில் தொடங்கிய உணவு 
தானியப் பற்றாக்குறை நாளும் அதிகரித்துக் கொண்டே 
சென்று பஞ்சத்திற்கும் பட்டினிச்சாவுகளுக்கும்
நாட்டை இட்டுச் செல்லும் என்ற நிலை சுவரில் 
எழுத்தாக வெளிப்பட்டது.    

இந்த அவலநிலையில் இருந்து நாட்டை விடுவிக்க 
பிரதமர் சாஸ்திரி முடிவு செய்தார். அப்போது, 1965ல் 
இந்தியாவின் மக்கள்தொகை 50 கோடியாக இருந்தது.
சாஸ்திரியிடம் தமிழரான சி சுப்பிரமணியம் 
வேளாண்துறை அமைச்சராக இருந்தார். இருவரும் 
சேர்ந்து, நாட்டின் தலைசிறந்த வேளாண் 
விஞ்ஞானியாக இருந்த தமிழரான எம் எஸ் 
சுவாமிநாதனை அழைத்து வந்து நாட்டில் உணவுப் 
பஞ்சம் ஏற்படாமல் தடுக்கும் மாபெரும் பொறுப்பை 
அவரிடம் ஒப்படைத்தனர். இக்காலத்தில்தான் 
ஜெய் ஜவான், ஜெய் கிசான் என்ற முழக்கங்களை 
சாஸ்திரி உருவாக்கினார்.

யார் இந்த சுவாமிநாதன்? தமிழ்நாட்டில் கும்பகோணத்தில் 
பிறந்தவர் எம் எஸ் சுவாமிநாதன். இந்தியப் பல்கலைக் 
கழகங்களில் பட்டம் பெற்ற பின்னர் நெதர்லாந்தில் 
மரபணுவியல் கற்ற இவர் கேம்பிரிட்ஜ்  பல்கலையில் 
டாக்டர் பட்டம் பெற்றார். பின்னர் இந்திய வேளாண் 
ஆய்வுக் கழகத்தில் விஞ்ஞானியாகப் பணியாற்றி வந்தார்.   

1966 ஜனவரியில் லால் பகதூர் சாஸ்திரி மறைந்து 
விட்டார். அடுத்த பிரதமராகப் பொறுப்பேற்ற 
இந்திரா காந்தி எம் எஸ் சுவாமிநாதனுக்குத் 
தமது அரசின் ஆதரவை தொடர்ந்து அளித்தார்.

தானிய உற்பத்தி போன்று 1970ல் நாட்டின் பால் உற்பத்தியைப் 
பெருக்கும்பொருட்டு, "பெருகும் வெள்ளம்" (Operation Flood)
என்னும் நடவடிக்கை இந்திரா காந்தி அரசால் 
மேற்கொள்ளப் பட்டது. இதற்குப் பொறுப்பேற்றவர் 
டாக்டர் வர்கிஸ் குரியன் என்பது நமக்கு நினைவிருக்கும்.   

உணவு உற்பத்தியைப் பெருக்கும் சவால் நிறைந்த 
பணியை ஏற்றுக் கொண்ட சுவாமிநாதன், நார்மன் 
போர்லாக் என்னும் அமெரிக்க வேளாண் விஞ்ஞானியின் 
ஒத்துழைப்பை நாடினார். நார்மன் போர்லாக் உலக 
நாடுகள் பலவற்றிலும் உணவு தானிய உற்பத்தியை, 
குறிப்பாக கோதுமை உற்பத்தியைப் பெருக்கியவர். 
வீரிய ரக வித்துக்களை உருவாக்கியவர். பின்னாளில் இவர் 
1970ஆம் ஆண்டிற்கான உலக அமைதிக்கான 
நோபல் பரிசைப்பெற்றவர்.

சுவாமிநாதனின் வேண்டுகோளை ஏற்று இந்தியாவுக்கு 
வந்த நார்மன் போர்லாக் பஞ்சாப், ஹரியானா 
உள்ளிட்ட மாநிலங்களைச் சுற்றிப் பார்த்தார்.அப்போது 
அவர் ஒரு வீரிய ரகக் கோதுமை வித்தை உருவாக்கி 
இருந்தார். மெக்சிகோவில் அதைப் பயிரிட்டதில் பல 
மடங்கு மகசூல் கிடைத்தது. இந்தியாவிலும் அது 
வெற்றி பெறும் என்று நார்மன் போர்லாக் கணித்தார்.  

மெக்சிகோவில் வெற்றி பெற்ற அந்தக் குட்டைரக 
கோதுமையை இந்தியாவில் பயிரிட சுவாமிநாதன் 
விரும்பினார். எனவே அங்கிருந்து 18,000 டன் 
கோதுமை வித்துக்களை இறக்குமதி செய்தார்.
பஞ்சாப் ஹரியானா மாநிலங்களில் அந்த வீரிய 
ரகக் கோதுமை பயிரிடப் பட்டது.அது பல மடங்கு 
மகசூலைத் தந்தது. விவசாயிகளிடம் அந்த 
வீரிய வித்தைப் பயிர் செய்ய பெரும் ஆர்வம் 
நிலவியது. இந்த நேரத்தில் வீரிய வித்துக்களை 
கோணிப்பையில் அடைத்து பல ஊர்களின் 
விவசாயிகளுக்கும் அனுப்ப முயன்றார் 
சுவாமிநாதன். கோணிப்பைகளுக்கான தேவை 
அதிகரித்த நிலையில் சிறைக்கைதிகளை 
கோணிப்பை தயாரிக்கும் வேலையில் அரசு 
ஈடுபடுத்தியது.

இந்த வீரிய ரகக் கோதுமையைப் பயிரிட்டதில் 
பன்மடங்கு  உற்பத்தி அதிகரித்தது. 1965-66ல் 
1.91 மில்லியன் டன்னாக இருந்த கோதுமை 
மகசூல் அடுத்தடுத்த ஆண்டுகளில் 5.15 மில்லியன் 
டன்னாக உயர்ந்தது. கோதுமையைத் தொடர்ந்து 
நெல்லிலும் வீரிய வித்துக்களை உருவாக்கினார் 
சுவாமிநாதன். 

மேற்கூறிய உற்பத்திப் பெருக்கச் செயல்பாடுகள் 
பிற்காலத்தில் பசுமைப்புரட்சி என்று பெயர் பெற்றன.
பசுமைப் புரட்சி 1965ல் தொடங்கியதாகக் 
கொண்டால், பத்தே ஆண்டுகளில் இந்தியாவின் 
உணவு தானிய உற்பத்தி பன்மடங்கு அதிகரித்து 
இந்தியா தன்னிறைவு அடைந்தது. அமெரிக்காவின் 
இளக்காரத்துடன் கூடிய கருணையை நம்பி 
இருந்த அவலம் முடிவுக்கு வந்தது. தற்காலத்தில் 
உணவு தானிய உற்பத்தியில் தன்னிறைவு என்பதையும் 
தாண்டி உபரி உற்பத்தி என்ற உச்சத்தை இந்தியா 
அடைந்துள்ளது. இதற்கு காரணமான எம் எஸ் 
சுவாமிநாதனுக்கு இந்த நாடு கடன் பட்டுள்ளது.


ரசாயன உரங்களையும் பூச்சி கொல்லி மருந்துகளையும் 
பயன்படுத்தி விவசாயம் செய்யும் முறையை எம் எஸ் 
சுவாமிநாதன் அறிமுகப்படுத்தியதால் சுற்றுச்சூழல் 
மாசடைகிறது; நிலத்தின் மண்வளம் பறிபோகிறது
என்றெல்லாம் சுவாமிநாதன் மீது விமர்சனங்களும் 
எழுந்தன.

எனவே ரசாயன விவசாயத்தைக் கைவிட்டு 
இயற்கை விவசாயத்தை (organic farming)
மேற்கொள்ள வேண்டும் என்ற குரல்களும் 
சமகாலத்தில் உரத்தே ஒலிக்கின்றன. 1960கள் 
வரை இந்தியாவில் பாரம்பரிய விவசாயம்தான் 
மேற்கொள்ளப் பட்டது. மாட்டுச் சாணம்தான் 
உரமாகப் பயன்பட்டது.

ரசாயன உரங்களுக்குப் பதில் சாணி உரம் என்பது 
வரவேற்கத் தக்கதே. ஆனால் நாடு முழுவதும் உள்ள 
லட்சக்கணக்கான ஏக்கர் நிலங்களில் நெல் சாகுபடிக்கு 
எவ்வளவு சாணி உரம் தேவைப்படும்? வண்டி வண்டியாக 
மலை மலையாகத் தேவைப்படுமே! அதற்கு கோடிக்கணக்கான 
மாடுகள் வேண்டுமே! அவ்வளவு மாடுகள் நாட்டில் 
இருக்கின்றனவா? 

அரசுப் புள்ளிவிவரப்படி, இந்தியாவில்  சாகுபடிக்கேற்ற 
நிலத்தின் பரப்பு 160 மில்லியன் ஹெக்டேர் மட்டுமே. 
இன்றைய இந்திய மக்கள் தொகை 140 கோடி. இன்னும் 
10 ஆண்டுகளில் மக்கள்தொகை அதிகரித்து விடும். 
ஆனால் நிலத்தின் பரப்பளவு அதிகரிக்காது. மாறாக 
மக்கள்தொகைப் பெருக்கத்தின் விளைவாக விளைநிலங்கள் 
குடியிருப்புப் பகுதிகளாக மாற்றப்படும். ஒரு பக்கம் 
மக்கள்தொகைப் பெருக்கம்; மறுபக்கம் சாகுபடிக்கேற்ற 
நிலப்பரப்பின் சுருக்கம்! 

இந்நிலையில் ரசாயன உரங்களையும் வீரிய வித்துக்களையம் 
தவிர்க்க இயலுமா? அப்படித் தவிர்த்தால் தேவையான அளவு 
உணவு தானிய உற்பத்தியை எட்ட முடியுமா?  இன்று அரிசி
ஏற்றுமதியில் உலகிலேயே முதல் இடத்தில் இருப்பது 
இந்தியாதான்! இந்த அந்தஸ்தைத் தக்கவைக்க 
வேண்டுமெனில் சுவாமிநாதன் அறிமுகம் செய்த நவீன 
வேளாண்மையைத்தானே நாம் கடைப்பிடிக்க வேண்டும்!

இந்திய வேளாண்மையின் வரலாற்றில் சுவாமிநாதனின் 
பாத்திரம் முதன்மையானது. அது இந்திய வேளாண்மையின் 
திசைவழியைத் தீர்மானித்து உபரி உற்பத்தியைச்
சாத்தியமாக்கியது. உலக அரங்கில் இந்தியாவைத் 
தலைநிமிரச் செய்த மறைந்த எம் எஸ் சுவாமிநாதனுக்கு  
நமது அஞ்சலியைச் செலுத்துவோம்!
**********************************************

 

 

   
  

    

  


  
             

      


புதன், 27 செப்டம்பர், 2023

 மார்க்சியத்தால் மட்டுமே ஜாதியை ஒழிக்க முடியும் என்று தூய வர்க்க மார்க்சியர்கள் கருதுகின்றனர். மார்க்சியம், பெரியாரியம், அம்பேத்கரியம் இணைந்து செயல்பட்டால் ஜாதியை ஒழிக்க முடியும் என்று பலர் கருதுகின்றனர். இம்மூன்றும் ஜாதி ஒழிப்பில் பெரிய பங்களிப்பு செய்யவில்லை என்பதை எதார்த்தத்தில் காண முடிகிறது.
வாழ்நிலை தான் சிந்தனையைத் தீர்மானிக்கிறது என்று காரல் மார்க்ஸ் கூறுகிறார். இதன் அடிப்படையில் காரல் மார்க்ஸ் தனது எழுத்துக்களில் நாத்திகப் பிரச்சாரம் முக்கியமானது என்று எங்கும் கூறவில்லை; கூறவும் முடியாது. இது சரியானது தான். ஆனால் சிந்தனை மாற்றத்திற்கு தீர்வாக தனிச்சொத்துடைமை ஒழிப்பை முதன்மையாக வைக்கிறார். இதுதான் தவறானது.
நிலப்பிரபுத்துவ உற்பத்தி முறை தோன்றும் போது ஜாதி தோன்றுகிறது. அது மறையும் போது ஜாதி மறையும் என்கிறது மார்க்சியம். ஆனால் நடைமுறையில் நிலப்பிரபுத்துவம் மறைந்து முதலாளித்துவம் வளர்ந்து வருகிற அளவிற்கு ஜாதி ஒழியவில்லை. மாறாக அரசியல் தளத்தில் ஜாதி கெட்டிப்படுத்தப்பட்டு சமூகத்தில் அதன் தாக்கம் எதிரொலிக்கிறது.
மார்க்சியம் ஜாதி ஒழிப்பிற்கு முற்றிலும் பயன்படவில்லை என்பது மட்டுமல்ல, மாறாக ஜாதியை கெட்டிப்படுத்தவே பயன்படுகிறது. தனிச் சொத்துடைமை ஒழிப்பை மார்க்சியம் முதன்மையாக வைப்பதால், ஜனநாயகபூர்வமான அரசோ, அதை அடைவதற்கான கட்சியோ அதனிடத்தில் இல்லை; இருக்கவும் முடியாது. கொள்கை முடிவை தனிநபரோ, சிறு குழுவோ தீர்மானித்து விட்டால் அங்கு ஜனநாயகம் இருக்காது. அதாவது, கொள்கை முடிவெடுப்பதில் மக்களுக்கோ, அவர்களின் பிரதிநிதிகளுக்கோ உரிமை இருக்காது. மேலும் மக்களின் பிரதிநிதிகளோ, கட்சியின் பிரதிநிதிகளோ, மக்களோ கொள்கை முடிவு எடுக்கும் நிறுவன வடிவமும் உருவாகாது. இதன் மூலம் மக்கள் தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் பிரதிநிதிகளை வைத்துக் கொண்டு கொள்கை முடிவு எடுப்பதையோ, நேரடியாக கொள்கை முடிவு எடுப்பதையோ மார்க்சியம் தடுக்கிறது. மேலும், தனிச்சொத்துடமை ஒழிப்பை மார்க்சியம் முதன்மையாக பேசியதால் நடைமுறையில் அரசியலையே தனிச்சொத்துடைமையாக்கி விட்டது.
ஜனநாயகம் என்றாலே, அது பிரதிநிதித்துவ தேர்வாக இருந்தாலும் சரி, மக்கள் நேரடியாக கொள்கை முடிவு எடுத்தாலும் சரி முரண்பாடு தீர்த்து தான் எடுக்கப்படும். இந்த முரண்பாடு தீர்க்கும் போராட்டம் வளர்ச்சிக்குரியதாகும். (வர்க்க, ஜாதி, மத, இன முரண்பாடுகளை முதன்மையாக வைத்து தீர்க்கும் போராட்டம் எதேச்சதிகார அரசியலாகத்தான் செயல்படும் அல்லது பாசிசமாக செயல்படும்). கொள்கையின் அடிப்படையில் எதேச்சதிகாரமாக கட்டப்பட்ட கட்சிகளால் இந்திய நாடாளுமன்ற ஜனநாயகம் வீழ்ச்சியடைந்து வருவது கண்கூடாகத் தெரியும் உண்மை. மேலும் தனி நபரோ, சிறு குழுவோ கொள்கை முடிவு எடுத்து மக்களை வழிநடத்தும் போது மந்தை கலாச்சாரம், கும்பல் கலாச்சாரம் செயல்பாட்டுக்கு வந்து விடுகிறது.
உழைப்பில் ஈடுபடும் மக்கள் நிறுவனமாக ஒன்று கூடி தங்களின் பிரச்சனைகளை தீர்த்துக் கொள்வது கட்டாயமாகிறது. இந்த நிறுவனமாக ஒன்று கூடும் இடத்தில் தான் மார்க்சியம் உள்ளே புகுந்து, உழைக்கும் மக்களுக்கு வர்க்க உணர்வு இல்லை, சமூக வளர்ச்சியின் புறநிலை விதி தெரியாது. ஆகவே அவர்களுக்கு வால் பிடிக்க முடியாது என்று கூறி, அறிவு ஜீவிகள் கொள்கை முடிவு எடுத்து மக்களை வழிநடத்த (அடிமையாக நடத்த) வேண்டும் என்கிறது. (மார்க்சியம் கூறும் அறிவு ஜீவிகள் யார் என்று பார்த்தால், வெட்டியாக, மனநலம் பாதிக்கப்பட்டவர்களாக, கோமாளிகளாக, திருட்டு சிந்தனை உள்ளவர்களாக இருப்பதை எதார்த்தத்தில் காண முடிகிறது).
அரசியல் கட்சிகள் அனைத்தும் மார்க்சிய அடிப்படையில் கொள்கையின் பெயரால் எதேச்சதிகாரமாக கட்டப்பட்டு செயல்படுவதால், மக்களைப் பொருத்தவரை அந்த எதேச்சதிகாரமாக செயல்படுபவர்கள் தங்களது சாதிக்காரராகவோ, மதத்துக்காரராகவோ, இனத்துக்காரராகவோ இருந்தால் தங்களுக்கு பலன் இருக்கும் என்று எண்ணுகின்றனர். இதில் மக்கள் மீது குற்றம் சுமத்த முடியாது. ஜாதி, மதத்திற்கு அப்பாற்பட்ட கட்சி என்று சொல்லிக் கொள்கின்ற கட்சிகளில் கூட ஒன்றிய, வட்ட, மாவட்ட, மாநில, தேசிய அளவில் சாதிய அடிப்படையில் தான் நிர்வாகிகள் நியமிக்கப்படுகின்றனர்.
கட்சிப் பிரதிநிதிகளை, மக்கள் பிரதிநிதிகளை, அரசின் பிரதிநிதிகளை ஊழியர்களாக மாற்றும் போது தான் ஜாதி, மத, இன முரண்பாடுகள் வலுவிழக்கும். பிரதிநிதிகள் இந்த முரண்பாடுகளை கூர் தீட்ட மாட்டார்கள்; கூர் தீட்டவும் முடியாது.
தற்போதைய மார்க்சிய அடிப்படையிலான (கொள்கை அடிப்படையிலான) கட்சிகள் ஆண்டை - அடிமை என்ற வடிவத்தில் கட்டப்பட்டு செயல்படுகிறது. இதனால் அரசியல் தளத்தில் ஜாதி வலுப்பெற்று அது சமூக தளத்தில் எதிரொலிக்கிறது. சமூகம் முன்னேற விரும்பினாலும் அதற்கு மார்க்சிய அரசியல் தடையாக இருக்கிறது.
வாழ்நிலை தான் சிந்தனையை தீர்மானிக்கிறது என்ற மார்க்சியம் சரியாக இருந்தும், அது எதேச்சதிகாரத்தை அல்லது பாசிசத்தை அரசியலில் கடைபிடிப்பதால் சமூகத்தின் சிந்தனை முன்னோக்கி செல்ல முடியவில்லை.
முதலில் அரசியலில் சமத்துவம் வர வேண்டும், அதன் மூலம் பொருளாதாரத்தில் ஏற்றத்தாழ்வு முடிவுக்கு கொண்டுவரப்பட்டு, பண்பாட்டுத்தளத்தில் சமத்துவ சிந்தனை வெளிப்படும். மக்களின் ஜாதிய சிந்தனை ஒழிய வேண்டும் என்றால் அரசியலில் சமத்துவம் முதன்மையாக வந்தாக வேண்டும். மார்க்சியம் கூறுவது போல் தனிச் சொத்துடைமை ஒழிப்பு முதன்மையானது அல்ல.
தனிநபரோ, சிறு குழுவோ கொள்கையைத் தீர்மானித்து கட்சிகள் கட்டப்பட்டு இயங்கும் வரை அரசியலிலும் சமத்துவம் வராது; சமூகத்திலும் சமத்துவம் வராது; சாதியும் ஒழியாது.
அரசியலில் சமத்துவம் என்றால் கட்சி, அரசு ஆகிய இரண்டிலும் பிரதிநிதிகளை மக்கள் நேரடியாக தேர்வு செய்வது, பிரதிநிதிகளை மாற்றிக் கொள்வது, அனைவரின் கருத்துக்களையும் பொதுவெளியில் வைப்பது, தங்களின் கருத்துக்களை பெரும்பான்மைபடுத்த விரும்புகிறவர்களை பெரும்பான்மை படுத்த அனுமதி ப்பது, இறுதியில் ஜனநாயகத்திற்கு கட்டுப்படுவது என்று பொருள் கொள்ள வேண்டும்.
மனதிற்குள் ஒன்று வைத்துக் கொண்டு அறைக்குள் (கட்சிக்குள்) ஒன்று பேசிவிட்டு பொதுமக்களிடம் ஒன்று பேசுவது என்ற மார்க்சிய அரசியல் சமத்துவத்திற்கு எதிரானது. அரசுக்கு வரி செலுத்தும் மக் களிடமிருந்து, கட்சிக்கு நிதி கொடுக்கும் (நேரடியாக, மறைமுகமாக) மக்களிடமிருந்து கட்சி நடவடிக்கைகளை ரகசியமாக வைப்பது சமூகவிரோத செயலாகும். இந்த சமூக விரோத செயலையே மார்க்சியம் தனது அடிப்படையாகக் கொண்டுள்ளது.
தனிநபரோ, சிறு குழுவோ ஜாதி இருக்க வேண்டும் என்று பிரச்சாரம் செய்வதாலோ, எழுதி வைப்பதாலோ ஜாதி நிலை பெறுவதில்லை. (மனுதர்மம் உட்பட). இன்று நாம் ஜாதி வேண்டாம் என்று சொன்னாலும், எழுதி வைத்தாலும், பிரச்சாரம் செய்தாலும் ஜாதி உடனடியாக அழிந்து விடுவதும் இல்லை.
சமூகத்தில் முதலில் ஒரு பகுதியினரிடம் அதிகாரம் குவியும் போது ஏற்றத்தாழ்வு தொடங்குகிறது. ஒரு பகுதியினரிடம் அதிகாரம் குவிகிறது என்றால் அவர்கள் வாழும் பகுதி வேளாண்மைக்கு ஏற்ற பகுதியாக இருந்திருக்க வாய்ப்பு உண்டு. மற்ற பகுதி வேளாண்மையை சரிவர செய்ய முடியாத பகுதியாக இருந்திருக்கவும் வாய்ப்பு உண்டு. வேளாண்மை சரிவர செய்ய முடியாத சூழலில் வாழ்ந்தவர்கள் வேளாண் சார்ந்த பகுதியினரின் கீழ் பணி புரியும் போது ஏற்றத்தாழ்வு உருவாகிறது. ஒரு கட்டத்தில் அசுத்தமான பகுதியை சுத்தப்படுத்துபவர்கள் இழிவாக கருதப்படுவார்கள். குறைந்த ஊதியத்தையும் பெறுவார்கள். இது படிநிலையையும், தீண்டாமையையும் ஏற்படுத்துகிறது. இது ஜாதிய படிநிலையாக வடிவம் எடுக்கிறது. இவை மட்டுமே ஜாதியத்தை முழுமை படுத்தியதாக கருத முடியாது. பெண் கொடுத்து பெண் எடுப்பதற்கு குறிப்பிட்ட அளவு மக்கள் தொகையும் அந்தந்த ஜாதிகளில் தேவைப்படுகிறது. இரண்டு தரப்பிலும் மக்கள் தொகை குறைவாக இருந்தால் ஜாதி கெட்டி பட முடியாது. ஐரோப்பிய நாடுகளில் ஜாதி கெட்டுப்படாமல் இருந்ததற்கு முக்கிய காரணம், அங்கு போதிய அளவு (ஜாதியை நிலை நிறுத்துவதற்கு உரிய) மக்கள் தொகை இல்லை. இந்தியாவில் ஜாதி கெட்டிபடுவதற்கு போதிய அளவு அனைத்து ஜாதியிலும் மக்கள் தொகை இருந்திருக்கிறது.
ஒரு உதாரணத்திற்கு எடுத்துக்கொண்டால் இந்தியாவிலேயே பஞ்சாபில் தான் அதிக ஜாதி மறுப்பு திருமணங்கள் நடைபெறுகின்றன. 100 ஆண்களுக்கு 80 பெண்கள் மட்டுமே பஞ்சாபில் இருக்கின்றனர். 100க்கு 20 பேர் வேறு சாதியில் திருமணம் செய்ய வேண்டிய நிர்ப்பந்தம் இருக்கிறது. சாதி கெட்டிப்பட்டு போவதையும், தளர்வதையும் புறச் சூழலில் இருந்தே பார்க்க வேண்டும்.
அரசியலில் எதேச்சதிகாரம் இருக்கும் போது பிற்போக்கு கருத்துக்கள் வலுப்பெறுகிறது. இங்கு மனு உட்பட பலர் எழுதி வைத்துள்ள பிற்போக்கு கருத்துக்களை முதன்மை எதிரியாக பார்க்கக் கூடாது. அதை மக்களிடம் கொண்டு சென்று நிலைநிறுத்துவதற்காக கொள்கையின் பெயரால் எதேச்சதிகாரமாக கட்டப்படும் கட்சிகளைத்தான் முதன்மையான எதிரியாக பார்க்க வேண்டும். கொள்கையின் அடிப்படையில் கட்சி கட்டப்பட்டு பொதுவெளியில் ஜாதி ஒழிப்பிற்காக நாங்கள் கட்சி கட்டி இருக்கிறோம் என்று கூறுகிறவர்களும் உள்ளுக்குள் ஜாதிய அணி திரட்டலை உருவாக்கிக் கொண்டுதான் இருப்பார்கள்.
பெரியாரும், அம்பேத்கரும் பண்பாட்டுத்தளத்தில் இயங்கியவர்கள். அரசியலில் விடுதலை பெற்றாலும் சமூகம் திருந்தினால் தான் பிரச்சினைகள் தீரும் என்று நம்பியவர்கள்; அதற்காக பிரச்சாரம் செய்தவர்கள்.
பெரியாரைப் பொருத்தவரை ஜாதி, மதம், கடவுள் நம்பிக்கையை ஒழிக்க பிரச்சாரம் செய்தவர்.
அம்பேத்கரை பொருத்தவரைக்கும் தீண்டாமை ஒழிய வேண்டும், அதைப் பாதுகாக்கும் ஜாதி ஒழிய வேண்டும், அகமண திருமண முறை ஒழிய வேண்டும் என்று எண்ணியதோடு மதம் மனிதனுக்கு கட்டாயம் தேவை என்றவர்.
ஜாதி, மத, இன மறுப்பு திருமணம் சரியானதுதான். ஆனால் இதில் முக்கிய சிக்கல் இருக்கிறது. அகமண திருமண முறை என்பது கோட்பாடு ரீதியானது. இது இந்து மதத்தில் உள்ள அனைத்து ஜாதிக்கும் பொருத்தும். யார், யாரை திருமணம் செய்து கொள்ள வேண்டும்? யாரை திருமணம் செய்து கொள்ளக் கூடாது? என்பது பற்றி ஒவ்வொரு ஜாதியிலும் கோட்பாடு இருக்கிறது. இதில் ஒவ்வொரு ஜாதிக்கும் சிறிய வேறுபாடும் இருக்கிறது.
இஸ்லாமியர்கள் பெரியம்மா மகளை, சின்னம்மா மகளை திருமணம் செய்யும் வழக்கம் உள்ளவர்கள். அத்தை மகளை திருமணம் செய்ய மாட்டார்கள். இப்படி ஒவ்வொரு சாதிக்கும், மதத்துக்கும் அகமண திருமண முறையில் வேறுபாடு இருக்கிறது. இந்த திருமணங்கள் கோத்திரம், கிளை, பட்ட பெயர் உள்ளிட்ட பல்வேறு வடிவங்களில் தீர்மானிக்கப்படுகின்றன.
இங்கு ஜாதி மறுப்பு திருமணம் செய்தவர்களை மட்டும் சமூகம் ஒதுக்குவதில்லை. சாதிக்குள் உள்ள அகமண திருமண முறை கோட்பாட்டை யார் மீறினாலும் சமூகம் அவர்களை ஒதுக்கத்தான் செய்யும்; எதிர்க்கத்தான் செய்யும்; அருவருப்பாக பார்க்கத்தான் செய்யும்.
இது இந்து மதத்தில் உள்ள அனைத்து ஜாதியினருக்கும் பொருந்தும். பிற மதத்தினருக்கும் பொருந்தும்.
அகமண திருமண முறை ஜாதியை கெட்டிப்படுத்தும் என்று சொல்கிறவர்கள் யாரும் புறமண திருமண முறைக்கான கோட்பாட்டை உருவாக்கவில்லை; உருவாக்கவும் முடியாது என்றே தெரிகிறது. (யாரும் யாரோடும் என்ற கோட்பாட்டாளர்களை தவிர்த்து) ஒருவேளை உலகம் முழுவதும் நடைபெறும் திருமண முறைகள் அனைத்தையும் அங்கீகரித்து தொகுத்து வழங்கினால் அது யாரும் யாரோடும் என்ற எல்லை நோக்கி செல்லும்.
அதே நேரத்தில் ஜாதி, மத, இன மறுப்பு திருமணம் செய்து கொள்பவர்களிடமோ, அதை ஆதரிப்பவர்களிடமோ கோட்பாடு கேட்டு நிர்பந்திப்பதும் தவறானது.
ஏனென்றால் அகமண திருமண முறை அனைத்தும் அறிவியல் பூர்வமானது அல்ல. அறிவியலுக்கு புறம்பாகவும் இருக்கிறது. இந்து மதத்தில் அக்காள் மகளை திருமணம் செய்வது, நெருங்கிய உறவுகளுக்குள்ளேயே தொடர்ச்சியாக திருமணம் செய்வது உள்ளிட்டவற்றால் ஊனமுற்ற அல்லது குறைபாடான குழந்தைகள் பிறக்கின்றன என்று அனுபவ அறிவு காட்டுகின்றது.
அகமண திருமண கோட்பாடு யாரும் யாரோடும் என்பதாக இல்லை. இதற்குக் காரணம் குடும்பத்திற்குள்ளேயே திருமணம் செய்வதால் குழந்தைகள் குறைபாடாக அல்லது ஊனமாக பிறக்கின்றன என்ற அனுபவம் ஏற்பட்டிருக்க வேண்டும். இந்த அனுபவத்தின் மூலமே அந்தந்த குழுக்களில் அவரவர்களுக்கு புரிந்த வடிவத்தில் தாய் வழியையோ, தந்தை வழியையோ அடிப்படையாக வைத்து அகமண திருமண கோட்பாட்டை உருவாக்கி இருக்கக்கூடும்.
தற்போதைய சூழ்நிலையில் மேல் தட்டு வர்க்கத்தில் உள்ளவர்களுக்கு பொருளாதார நெருக்கடி இல்லை என்பதால் ஜாதி, மத, இன மறுப்பு திருமணம் செய்தால் அவர்கள் நெருக்கடிக்கு ஆளாவது இல்லை. அவர்களுக்கு புறமண திருமண முறைக்கான கோட்பாடும் தேவையற்றதாகி விடுகிறது.
அதே நேரத்தில் கீழ்த்தட்டு வர்க்கத்தில் இருப்பவர்கள் ஜாதி, மத, இன மறுப்பு திருமணம் செய்து விட்டால் அவர்களின் பிள்ளைகளுக்கு பெண் பார்ப்பதிலோ, மாப்பிள்ளை பார்ப்பதிலோ நெருக்கடி ஏற்பட்டு விடுகிறது. இவர்களுக்கான வட்டம் மிகச் சிறியதாக இருப்பதும், புறமண திருமண முறைக்கான கோட்பாடு இல்லாமல் இருப்பதும் இதற்குக் காரணமாக இருக்கிறது. பொருளாதாரத்தில் இவர்களை விட பின்தங்கியவர்களிடம் திருமணம் செய்ய இவர்களுக்கு வாய்ப்பு இருந்தும், வாழ்நிலையில் நெருக்கடி ஏற்படும் என்பதை உணர்ந்து, கணவன் சார்ந்த சாதிக்குள்ளோ, மனைவி சார்ந்த சாதிக்குள்ளோ மீண்டும் நுழையும் முயற்சியில் பெரும்பாலானோர் ஈடுபடுகின்றனர்.
தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு ஒன்றியம், புதூர் ஊராட்சியில் கள்ளர் சாதியைச் சார்ந்த பல்லவராயர் பட்ட பெயர் கொண்டவர்கள் பெரும்பான்மையாக வாழ்கின்றனர். அதே போல் புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி ஒன்றியம், பிலாவிடுதி ஊராட்சியில் கள்ளர் சாதியைச் சார்ந்த பல்லவராயர் பட்ட பெயர் கொண்டவர்கள் பெரும்பான்மையாக வாழ்கின்றனர். இவர்கள் இருவரும் பங்காளி உறவு முறையாகும். அதாவது திருமணம் செய்து கொள்ளக் கூடாத ஒரே பிரிவை சேர்ந்தவர்கள் ஆவர். ஆனால் நடைமுறையில் இந்த இரண்டு பல்லவராயர்களுக்கும் சில நூற்றாண்டுகளாக எந்தத் தொடர்பும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதுபோன்று பல சாதிகளிலும் இருக்க வாய்ப்பு உண்டு.
இதிலிருந்து நாம் தெரிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால் பண்பாட்டு பிரச்சனையை முதன்மையாக வைத்து போராடக்கூடாது என்பதுதான். அதற்காக பண்பாட்டு போராட்டம் நடத்தக் கூடாது என்று பொருள் புரிந்து கொள்ளக்கூடாது. பண்பாட்டுப் போராட்டம் சமூகத்தில் தாக்கம் செலுத்த முடியும். தீர்மானகரமான பங்காற்ற முடியாது. பண்பாட்டுப் போராட்டம் நடத்துவதற்கே அரசியலில் ஜனநாயகம் தேவை. ஆப்கானிஸ்தான், ஈரான் போன்ற நாடுகளில் பண்பாட்டுப் போராட்டம் நடத்தினால் மரண தண்டனை விதிக்கப்படுகிறது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். இந்தியாவிலும் அரசியலில் ஜனநாயகம் சுருங்கி வருவதால் பண்பாட்டுப் போராட்டம் நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. பண்பாட்டுப் போராட்டம் நடத்துபவர்களை கொலை செய்வதும் நடைபெறுகிறது.
தமிழ்நாட்டில் இஸ்லாமிய மூடநம்பிக்கைகளுக்கு எதிராக சாதிக் சமத் என்பவர் முகநூலில் எழுதி வந்தார். இஸ்லாமிய அடிப்படை வாதிகள் அரசுக்கு நெருக்கடி கொடுத்ததால் திமுக அரசால் அவர் கைது செய்யப்பட்டார். தற்போது சட்ட நெருக்கடியின் மூலம் அவர் முடக்கி வைக்கப்பட்டுள்ளார். கோவையில் மத அடிப்படைவாதிகளால் நாத்திகம் பேசிய இஸ்லாமிய இளைஞர் பாரூக் கொல்லப்பட்ட நிகழ்வும் நடைபெற்றது.
தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி சமீபத்தில் சனாதனத்தை ஒழிப்போம் என்று பேசினார். பிரதமர், பாஜகவினர், இந்துத்துவ அடிப்படை வாதிகள் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்; தலைக்கு விலையும் வைத்தனர். மத அடிப்படைவாதிகள் போட்ட வழக்கின் அடிப்படையில் உச்ச நீதிமன்றம் உதயநிதியிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதனால் இனி பண்பாட்டு விவகாரம் குறித்து உதயநிதி அதிகம் பேச மாட்டார் என்றே தெரிகிறது.
அரசியலில் ஜனநாயகம் இல்லாத போது பண்பாட்டுப் போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் சட்டத்தின் மூலமோ, அடிப்படைவாதிகளின் மூலமோ ஒடுக்கப்படுகின்றனர். பண்பாட்டுப் போராட்டத்தில் ஈடுபடுகிறவர்கள் ஒரு விஷயத்தை உணர வேண்டும், பண்பாடு என்பது உணர்வு ரீதியானது. பண்பாட்டை அராஜகமாக மாற்ற முயன்றால் அது கொலை வரை செல்லும். அது மதத்தின் மீதான விமர்சனமாக இருந்தாலும் சரி, ஜாதி மறுப்பு திருமணமாக இருந்தாலும் சரி.
பண்பாட்டிற்கு அடித்தளம் உண்டு. அடித்தளத்தை தகர்க்காமல் பண்பாட்டை அராஜகமாக மாற்ற முயற்சிக்கக் கூடாது. மார்க்சியம் பொருளாதாரத்தை அடித்தளமாக பார்க்கிறது. இது தவறானது. பண்பாட்டு மாற்றத்திற்கு ஜனநாயகப்பூர்வமான அரசியல் மாற்றம்தான் முதன்மையானது. இந்த ஜனநாயகப்பூர்வமான அரசு வடிவத்தில் பொருளாதாரத்தில் ஏற்றத்தாழ்வு முடிவுக்கு வருவதோடு, பொருளாதார உற்பத்தியிலும் தன்னிறவு ஏற்படும்.
அரசியலில் ஜனநாயகம் இல்லாத நாட்டில் அரசியல் ஜனநாயகத்திற்காகத்தான் முதலில் போராட வேண்டும். அரசியலில் ஜனநாயகம் இருக்கும்போது அந்த அரசு இயந்திரத்தின் மூலம் பண்பாட்டு போராளிகள் பாதுகாக்கப்படுவார்கள்.
தற்போது இந்தியாவில் எந்த அரசியல் கட்சியிலும் ஜனநாயகம் இல்லை. கட்சித் தலைமைக்கோ தலைவருக்கோ கட்டுப்பட்டு தான் கட்சி உறுப்பினர்கள், நிர்வாகிகள் அரசியல், பண்பாட்டுக் கருத்துக்களை பொதுவெளியில் பேச முடியும். இதில் ஒரு கட்சி அரசியல் அதிகாரத்திற்கு வரும்போது, மற்ற கட்சிகளிடமிருந்தும், பொதுமக்களிடமிருந்தும் கருத்துரிமையை பறிக்கின்றது. எதிர்க்கட்சியினர் ஜனநாயகம் குறித்து கூப்பாடு போடுவது தாங்கள் அரசு அதிகாரத்திற்கு செல்ல வேண்டும் என்பதற்காகத்தான்; ஜனநாயகத்தை நிலை நிறுத்துவதற்காக அல்ல. தற்போது அரசியல் கட்சிகளிடையே கொள்கையின் பெயரில் நடைபெறும் சண்டையை திருடர்களுக்கு இடையில் நடைபெறும் சண்டையாகவே பார்க்க வேண்டும்.
ஜனநாயக போராட்டத்தில் முதன்மையானது, எந்த மக்களுக்காக கட்சி கட்டப்படுகிறதோ, அந்த மக்கள் அனைவருக்கும் நேரடியான பிரதிநிதித்துவ தேர்வில், கொள்கை முடிவு எடுப்பதில் சம உரிமை இருக்க வேண்டும். இதை வெளிப்படையான கட்சி வடிவத்தில் மட்டும் தான் முழுமையாக சாத்தியப்படுத்த முடியும். இரண்டாவது அம்சமாகத்தான் அரசிடம், ஆளுங்கட்சியிடம் ஜனநாயக உரிமை கேட்பதற்கான போராட்டமாக இருக்க வேண்டும். தனிநபரோ, சிறு குழுவே வேட்பாளரை தீர்மானித்து தேர்தல் நடைபெறும் நாடு முழுமையான ஜனநாயக வட்டத்திற்குள் வராது.
அரசியல் ஜனநாயகத்திற்கு இன்று உலகம் முழுவதும் முதன்மை எதிரியாக இருப்பது மார்க்சியம் என்பதையும், இந்தியாவை பொருத்த வரை அனைத்து அரசியல் கட்சிகளும் மார்க்சிய அடிப்படையில் கட்டப்பட்டு இருக்கின்றன என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும். கட்சிகளிடையே கொள்கையில்தான் வேறுபாடு இருக்கும். மக்களை அடிமையாக நடத்துவதில் அனைத்து கட்சிகளும் ஒரே புள்ளியில் தான் செயல்படுகின்றன.
அரசியலில் முழுமையான சுதந்திரம் இருந்தால் தான் பொருளாதாரத்தில் சுதந்திரம் இருக்கும். உற்பத்தியில் தன்னிறைவு ஏற்படும். பொருளாதாரத்தில் சுதந்திரம் இருக்கும் போது பண்பாட்டிலும் சுதந்திரம் இருக்கும். இந்தப் பண்பாட்டு சுதந்திரத்தில் தான் சுதந்திரமான திருமண முறை இருக்க முடியும். அந்தச் சூழலில் புறமண திருமண முறைக்கு யாரும் கோட்பாடு கேட்க மாட்டார்கள்.
பெரியாரியவாதிகள், அம்பேத்கரியவாதிகள் பண்பாட்டுப் போராட்டத்தோடு நிறுத்திக் கொண்டால் அது சமூகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும். அந்தப் பண்பாட்டு போராட்டத்திற்கு கூட அரசியலில் ஜனநாயகம் இருக்க வேண்டும் என்ற புரிதல் வேண்டும். இதைத் தாண்டி அரசியல் அதிகாரத்தின் மூலம் அராஜகமாக பண்பாட்டை மாற்ற முயற்சித்தால் மக்கள் சாதியாக, மதமாக, இனமாக அணி திரள்வார்கள் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
நான் முகநூலில் எழுதிய முந்தைய பதிவுகளில் பலர் அநாகரிகமான வார்த்தைகளில் கமெண்ட் செய்துள்ளனர். இந்த நபர்களின் அநாகரிக வார்த்தைகளைப் பார்த்து, கோபப்பட்டு அவர்களிடத்தில் நான் வாக்குவாதத்தில் ஈடுபடவில்லை. இந்த அநாகரிகப் பண்பாடு மார்க்சிய அடிப்படையில் கட்சி கட்டப்பட்டதன் வெளிப்பாடாகும். தனி நபர்களின் அநாகரிகமான பண்பாட்டை மாற்றுவதற்கான போராட்டத்தை முதன்மையாக நடத்தக் கூடாது. மார்க்சிய தத்துவ அரசியலை ஒழிப்பதன் மூலம் தான் சரியான பண்பாட்டு சூழலுக்கு அனைவரும் வர முடியும், ஒழுங்கீனமற்ற முறையில் பேசும் நபர்கள் அச்சூழலில் இருக்க மாட்டார்கள் என்ற புரிதலோடு செயல்பட வேண்டும்.
மார்க்சியம், குரான், சனாதன தர்மம், பைபிள், குரு கிரந்த் சாகிப், பெரியாரியம், அம்பேத்கரியம் என எந்த தத்துவமும் மக்களை வழிநடத்தக் கூடாது. மக்கள்தான் அரசிலும், கட்சியிலும் தங்களது பிரதிநிதிகளை வழிநடத்த வேண்டும்; கொள்கை முடிவு எடுக்க வேண்டும். அச்சூழலில் மக்களை வழிநடத்த (அடிமையாக நடத்த) உருவாக்கப்பட்ட அனைத்து தத்துவங்களும் அருங்காட்சியகத்தில் தான் இருக்க முடியும். மார்க்ஸ், அம்பேத்கர், பெரியார் போன்ற தனி நபர்களின் மீது ப Murugesa Jayaraman
 குவாண்டம் கணினி!
----------------------------------
சாதாரணக் கணினியில் 1 bit ஒரு நேரத்தில் 
1 நிலையில்தான் (state) இருக்கும். 
ON என்பது ஒரு state.
OFF என்பது ஒரு state.
1 bit ஒரு நேரத்தில் ON அல்லது OFF என்னும் 
2 நிலைகளில் ஏதாவது ஒன்றில் இருக்கும்.  

குவாண்டம் 
கணினியில் 1 qubit ஒரு நேரத்தில் இரண்டு நிலைகளின் 
ஒன்றிப்பாக இருக்கும்.  ஒன்றிப்பு என்பது 
SUPERPOSITION ஆகும்.

அதாவது 1 qubit ஒரு நேரத்தில் ON, OFF என்னும் 
இரண்டு நிலைகளின் சேர்க்கையாக இருக்கும்.
இது QUANTUM SUPERPOSITION ஆகும்.

இதன் பொருள் என்ன?  
1 qubit ஒரு நேரத்தில் ON ஆகவும் இருக்கும்;
OFF ஆகவும் இருக்கும்.

இதுதான் குவாண்டம் கணினி!

n கூறுகளைக்கொண்ட ஒரு சாதாரண கணினியின் 
அனைத்து நிலைகளையும் வர்ணிக்க  n பிட்டுகள் போதும்.

ஆனால் குவாண்டம் கணினியில் n நிலைகளை 
வர்ணிக்க 2^n complex numbers தேவைப்படும்.
அதாவது n = 5 என்றால், 2^5 = 32 ஆகும்.
**********************************************
    

செவ்வாய், 26 செப்டம்பர், 2023

 கடவுளின் மரணம்!
------------------------------
குளோனிங் எனப்படும் நகலாக்கம் பற்றித் தெரியுமா?
அப்படி நகலாக்க முறையில் உருவாக்கப்பட்ட 
டாலி என்னும் செம்மறி ஆட்டுக் குட்டியை 
உங்களுக்கு நினைவு இருக்கிறதா?

அதை உருவாக்கிய கடவுள் யார் தெரியுமா?
அவர்தான் அயன் வில்மட் (Ian Wilmut).
அவர் அண்மையில் இறந்து போனார்.

கடந்த மாதம் செப்டம்பர் 10ஆம் தேதியன்று 
(10.09.2023) டாலியை படைத்து, காத்து, அழித்து 
முத்தொழிலையும் புரிந்த கடவுள் அயன் 
வில்மட் இறந்து போனார். 

இது குறித்து மேலும் அறிய வேண்டுமா?
அறிவியல் ஒளி அக்டோபர் இதழில் 
நான் எழுதியுள்ள 
நகலாக்க முறையில் பிறந்த டாலி 
என்னும் கட்டுரையைப் படியுங்கள்.
இதழ் அக்டோபர் 15 தேதியன்று வெளியாகும். 

மனித குளோனிங் சாத்தியமா?
மகாத்மா காந்தியை மீண்டும் 
உருவாக்க இயலுமா?
அப்படியானால் ஹிட்லரையும் 
மீண்டும் உருவாக்கலாம் அல்லவா?

விடை தெரிய வேண்டுமா?
படியுங்கள் என் கட்டுரையை!
-----------------------------------------------
 

திங்கள், 25 செப்டம்பர், 2023

நகலாக்க முறையில் பிறந்த டாலி!
------------------------------------------------------ 
பி இளங்கோ சுப்பிரமணியன் 
நியூட்டன் அறிவியல் மன்றம் 
----------------------------------------------------- 
"நான் படைப்பதனால் என் பேர் இறைவன்" என்றார் கவிஞர் 
கண்ணதாசன். உயிரியல் ரீதியாகப் பார்த்தால் கவிதை 
உயிரற்றது. ஒரு உயிரற்ற கவிதையைப் படைத்தவரே 
கடவுள் ஆகிறார் என்றால், உயிருள்ள ஒரு ஆட்டுக்குட்டியை 
செயற்கையான முறையில் படைத்தவரும் கடவுள் 
ஆவார் அல்லவா! அப்படித்தான் கடவுள் ஆகி விட்டார் 
பேராசிரியர் அயன் வில்மட் (Ian Wilmut 1944-2023). பிரிட்டிஷ் 
கருவியல் விஞ்ஞானியான (embryologist)  இவர் எடின்பர்க் 
பல்கலையில் துறைத்தலைவராக இருந்தவர்.

1996 ஜூலையில்  அயன் வில்மட் உலகப்புகழ் பெற்றார்.
ஸ்காட்லாந்தில் உள்ள ரோஸ்லின் ஆய்வகத்தில் 
(Roslin institute)  அவர் தலைமையிலான கருவியல் 
விஞ்ஞானிகள் குழுவினர் நகலாக்கம் (cloning) என்னும் 
முற்றிலும் செயற்கையான முறையில் ஒரு செம்மறி 
ஆட்டுக்குட்டியை உருவாக்கினர். இந்த நகலாக்கத்தில் 
கெய்த் காம்பெல் (Keith Campbell 1954-2012) என்னும் ரோஸ்லின்  
ஆய்வகத்தின் கருவியல் விஞ்ஞானி அயன் வில்மட்டுடன் 
இணைந்து நகலாக்கத்தில் முக்கியப் பங்கு வகித்தார்.

டாலி என்னும் செம்மறி!
--------------------------------------
ரோஸ்லின் ஆய்வகக் குழுவினர் நகலாக்கம் செய்தது 
பெட்டைச் செம்மறி ஆகும். அதற்கு டாலி (Dolly) என்று 
பெயரிட்டனர். உலகில் நகலாக்கம் செய்யப்பட்ட 
முதல் விலங்கு டாலிதான். டாலி பிறந்த தேதி: 1996 ஜூலை 5.
உலக அறிவியல் வரலாற்றில் இந்த நாள் இடம் பெற்று விட்டது.   

செம்மறி ஆடு பாலூட்டி இனத்தைச் சேர்ந்தது. ஒரு  
பாலூட்டியின் உடலில் பல்லாயிரக்கணக்கான செல்கள் 
உள்ளன. அவை வெவ்வேறு வகைப்பட்டவை. அவற்றுள் 
இனப்பெருக்க செல்களையும் விந்தணு-கருமுட்டை 
கொண்ட உயிரணு செல்களையும் தவிர்த்த ஏனைய 
செல்கள் உடலியல் செல்கள் (somatic cells) எனப்படும். 
ஒரு விலங்கின் உடலியல் செல்களில் இருந்து, ஒரு 
செல்லைப் போன்ற இன்னொரு செல்லையோ அல்லது 
மொத்த உயிரினத்தையோ உருவாக்குவதுதான் 
நகலாக்கம் ஆகும். பல்லாயிரக் கணக்கான செல்களை 
உடைய ஒரு பாலூட்டி இனத்து விலங்கை உருவாக்க 
கொஞ்சம் செல்கள் இருந்தால் போதும். 

நன்கு வளர்ச்சி அடைந்த ஒரு பெட்டைச் செம்மறியின் 
பால் சுரக்கும் மடுவில் உள்ள செல்களில் இருந்து   
டாலியை நகலாக்கம் செய்தனர். அக்காலத்தில்  
டாலி பார்ட்டன் (Dolly Parton, பிறப்பு 1946)  என்னும் 
புகழ்பெற்ற அமெரிக்க நடிகை இருந்தார். அவர் 
மார்பகங்கள் பெருத்தவர். எனவே அவரின் பெயரையே 
பால் சுரக்கும் மடுவில் இருந்து உருவான டாலிக்குச் 
சூட்டினர் ரோஸ்லின் ஆய்வக விஞ்ஞானிகள். 

நகலாக்கம் எப்படிச் செய்யப்படுகிறது?
--------------------------------------------------------------
டாலியின் நகலாக்கம் மறு உற்பத்திக்கான நகலாக்கம் 
(reproductive cloning) எனப்படுகிறது.  இதற்குப் பயன்பட்ட முறை 
SCNT (Somatic Cell Nuclear Transfer) ஆகும். உடலியல் செல்லின் 
உட்கரு இடமாற்றம் என்று இதற்குப் பொருள்.

டாலியின் நகலாக்கம் பின்வருமாறு செய்யப்பட்டது.

1) முழு வளர்ச்சி அடைந்த நல்ல உடல்நலம் உடைய 
ஒரு பெண் செம்மறியின் பால் சுரக்கும் மடுவில் இருந்து 
ஒரு உடலியல் செல் (somatic cell) எடுத்துக் கொள்ளப்
பட்டது.

2) அந்த செல்லில் இருந்து அதன் உட்கரு (nucleus) தனியாகப் 
பிரிக்கப் பட்டது.

3) அதே இனத்தைச் சேர்ந்த இன்னொரு செம்மறியின் 
உடலில் இருந்து ஒரு கருமுட்டை செல்  (egg cell) 
எடுக்கப் பட்டது.

4) அதன் உட்கரு தனியாகப் பிரிக்கப்பட்டு அப்புறப் 
படுத்தப் பட்டது. இப்போது உட்கரு நீக்கப்பட்ட 
கருமுட்டை செல் மட்டும் உள்ளது. 

5) அடுத்து, பால் சுரக்கும் மடியில் இருந்து பெற்ற 
உட்கரு (nucleus of the somatic cell) கருமுட்டை 
செல்லுக்குள் (egg cell) வைக்கப் பட்டது.

6) இந்த அமைப்பினுள் மிக மெலிதான மின்சாரம்
செலுத்தப்பட்டதும் செல் பிரிவினை (cell division) நிகழ்ந்தது.   
இப்போது மூல உயிரினத்தின் (செம்மறி) அச்சு அசல் 
போன்ற நகல் கரு (copy of the original embryo) கிடைத்து விட்டது.
இவ்வாறுதான் மேற்கூறிய SCNT முறை செயல்பட்டது. 

7)  இப்போது ஒரு செம்மறி ஆட்டை வாடகைத் தாயாகக் 
கொண்டு (surrogate mother) அதன் கர்ப்பப் பைக்குள் 
(uterus)  நகல் கரு செலுத்தப் பட்டது.. கரு வளர்ந்து 
தாய்ச் செம்மறி டாலியை ஈன்றது. இதுதான் டாலி 
பிறந்த கதை.   

ரோஸ்லின் ஆய்வகத்தில் அயன் வில்மட்டின் குழுவினர் 
தங்களின் முதல் முயற்சியிலேயே டாலியைப் 
படைக்கவில்லை. 277ஆவது முயற்சியில்தான் டாலி 
பிறந்தது. டாலியின் வெற்றிக்கு முன்பு 276 முயற்சிகள் 
மேற்கொள்ளப்பட்டு அவை தோல்வியில் முடிந்தன.  


ஆறரை ஆண்டு வாழ்க்கை!
------------------------------------------
டாலியின் பிறப்பும் வளர்ப்பும் வாழ்க்கை 
முழுவதும் ரோஸ்லின் ஆய்வகத்திலேயே  நிகழ்ந்தது.
நகலாக்கம் செய்யப்பட்ட பிராணிதான் டாலி என்றபோதிலும் 
மற்றப் பிராணிகளுக்கும் அதற்கும் வேறுபாடு 
காணப்படவில்லை. டாலியின் பிறந்த தேதி 1996 ஜூலை 5. 
என்றாலும் அதன் பிறப்பு ஏழு மாதம் கழித்து 
1997 பெப்ரவரியில்தான் உலகிற்கு அறிவிக்கப் பட்டது.

பருவம் அடைந்ததும் "வெல்ஷ் மலை ஆடு" 
(Welsh mountain sheep)  இனத்தைச் சேர்ந்த ஒரு 
ஆண் செம்மறியுடன் டாலி உறவு கொண்டது.
கர்ப்பம் தரித்தது. ஏப்ரல் 1998ல் தன் முதல் 
பிரசவத்தில் டாலி ஒரு குட்டியை ஈன்றது.  
1999ல் தன் இரண்டாவது பிரசவத்தில் இரண்டு 
குட்டிகளை ஈன்றது. 2000ல் நடைபெற்ற தன் 
மூன்றாவது பிரசவத்தில் மூன்று குட்டிகளை ஈன்றது.
ஆக மொத்தம் ஆறு குட்டிகளை ஈன்றது டாலி.

2001ன் இறுதியில் டாலிக்கு வாத நோய் (arthritis)
வந்தது. 2003ல் அதற்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்பட்டது.
எனவே பெப்ரவரி 14, 2003ல் டாலி கருணைக்கொலை 
செய்யப்பட்டது. டாலியின் இனத்தைச் சேர்ந்த 
செம்மறிகள் பொதுவாக 10 முதல் 12 ஆண்டுகள் வரை 
வாழ்வன. ஆனால் டாலி ஆறரை ஆண்டுகளே 
வாழ்ந்தது. எனினும் அதன் இறப்புக்கு அதன் 
நகலாக்கப் பிறப்பு காரணமல்ல என்று ஆய்வுகளின் 
பின் ரோஸ்லின் ஆய்வக விஞ்ஞானிகள் அறிவித்தனர்.     

நகலாக்க வரலாறு!
-----------------------------
டாலிக்கு முன்னரும் நகலாக்க முயற்சிகள் நடைபெற்றன.
அதற்கு ஒரு நெடிய வரலாறு உள்ளது. இருபதாம் 
நூற்றாண்டின் தொடக்கத்திலேயே ஜெர்மனியைச் 
சேர்ந்த உயிரியலாளர் ஹான்ஸ் பெமான் 
(Hans Spemann, embryologist, 1869-1941) கருவியல் ஆய்வுகளில் 
தீவிரமாக ஈடுபட்டார். 1935ஆம் ஆண்டிற்கான மருந்தியல் 
நோபெல் பரிசு இவருக்கு வழங்கப்பட்டது. இவர் தவளை இனத்தைச் 
சேர்ந்த ஒரு பிராணியை நகலாக்கம் செய்திருந்தார்.
இவர் கையாண்ட முறை உட்கரு இடமாற்ற (nuclear transfer)
முறை அல்ல. அது கரு பிரிதல் (embryo splitting) முறை ஆகும்.

தற்காலத்திலும் நகலாக்கம் தன் செல்வாக்கை இழக்கவில்லை.
அண்மையில் 2012ஆம் ஆண்டிற்கான மருந்தியல் நோபல் பரிசைப் 
பகிர்ந்து கொண்டவர் ஜான் பெர்ட்ரண்ட் கர்டான் 
(John B Gurdon born 1933) என்னும் பிரிட்டிஷ் விஞ்ஞானி.
இவர் 1958ஆம் ஆண்டிலேயே ஒரு வகை ஆப்பிரிக்கத் 
தவளையின் செல்களில் இருந்த DNAவைப் பயன்படுத்தி 
உட்கரு இடமாற்றம் செய்தவர். உட்கரு இடமாற்ற முறையின் 
முன்னோடி இவரே!

நகலாக்கம் செய்யப்பட்ட விலங்குகள்!
----------------------------------------------------------
டாலியின் நகலாக்கத்தைத் தொடர்ந்து பல்வேறு 
விலங்குகள் நகலாக்கத்திற்கு உள்ளாயின.
பன்றி, வெள்ளாடு, எலி, நாய், பூனை, குரங்கு, குதிரை, 
கோவேறுகழுதை, ஒட்டகம் ஆகிய விலங்குகள் 
நகலாக்கம் செய்யப்பட்டன.

ஒட்டகம் மிகப்பெரிய விலங்கு. ஒரு சராசரி ஒட்டகம் 
300 கிகி முதல் 1000 கிகி வரை எடை இருக்கும்.
என்றாலும் இவ்வளவு பெரிய விலங்கு 2009ல் 
துபாய் ஆய்வகத்தில் முதன் முதலாக நகலாக்கம் 
செய்யப்பட்டது. 2009 ஏப்ரலில் பிறந்த இந்த ஒட்டகம் 
2020 ஜனவரியில் இறந்தது. முன்னதாக 2015 நவம்பரில் 
இந்த நகலாக்க ஒட்டகம் இயற்கையான முறையில் 
கருத்தரித்து ஒரு குட்டியை ஈன்றது. இதனால் நகலாக்க 
விலங்குகளும் மற்ற விலங்குகளைப் போல் 
இயற்கையாகக் கருத்தரிக்கும் என்பது நிரூபிக்கப்பட்டது.  

  
மனித நகலாக்கம் நிகழுமா?
--------------------------------------------
தவளை, எலி முதலிய சிறிய பிராணிகளில் தொடங்கி 
குதிரை, ஒட்டகம் என்னும் பெரும் விலங்குகள் வரை 
தொடர்ந்த நகலாக்கம் எங்கு போய் முடியும்?
மனித நகலாக்கத்தில்தான் போய் முடியும். அப்படித்தான் 
முடிந்தது!

மனித நகலாக்கம் என்ற கருத்தை முதன் முதலில் 
முன்மொழிந்தவர் ஜே பி எஸ் ஹால்டேன் (J B S Haldane 1892-1964)
என்னும் உயிரியல் விஞ்ஞானிதான். இவர் பிரிட்டனில் பிறந்து 
ஆக்ஸ்போர்டில் கல்வி கற்று இந்தியாவில் வாழ்ந்தவர். 
ஒடிஷா மாநிலம் புவனேஸ்வரில் 1964ல் மறைந்தார். 
1963ல் ஒரு கருத்தரங்கில் பேசும்போது மனித நகலாக்கம் 
சாத்தியம் என்ற கருத்தை அவர் முன்மொழிந்தார். அதுவரை 
வேளாண்மையில் மட்டும்தான் நகலாக்கம் என்ற பதம் 
புழக்கத்தில் இருந்தது.


பின்னர் 1998ல் அமெரிக்காவின் மாசச்சூசெட்சில உள்ள 
"அட்வான்ஸடு செல் டெக்னாலஜி" என்னும் ஆய்வகத்தைச் 
சேர்ந்த சில விஞ்ஞானிகள் மனித நகலாக்கத்தில் 
தாங்கள் வெற்றி அடைந்து விட்டதாக அறிவித்தனர்.  

ஒரு மனிதனின் காலில் உள்ள செல்லை எடுத்து, அதன் 
உட்கருவைப் பிரித்ததெடுத்து, அதை உட்கரு நீக்கப்பட்ட 
ஒரு பசுவின் முட்டை செல்லுக்குள் (egg cell) செலுத்தி,
உட்கரு இடமாற்ற முறை (SCNT) மூலம் மனிதக் கருவை 
உருவாக்கி விட்டதாகவும் அறிவித்தனர். அப்படி 
நகலாக்கம் செய்யப்பட்ட மனிதக்கரு 12 நாட்கள் 
கழித்து அழிக்கப் பட்டு விட்டதாகவும் அவர்கள் 
அறிவித்தனர். மானுடம் அதிர்ந்து நின்றது.   

நகலாக்கம் அறமற்றது!
-----------------------------------
மனித நகலாக்கம் அறத்தின்பாற்பட்டது அல்ல என்ற 
குரல்கள் உலகெங்கும் ஓங்கி ஒலித்தன. அநேக நாடுகள் 
மனித நகலாக்கத்திற்குத் தடை விதித்தன. 2018ஆம் 
ஆண்டு நிலவரப்படி, இதற்கு 70 நாடுகள் தடை 
விதித்துள்ளதாக ஒரு புள்ளி விவரம் கூறுகிறது. 

இச்சூழலில் 2005ல் ஐநா சபை ஒரு பிரகடனத்தை வெளியிட்டது.
மனிதர்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாகவும் மனித 
மாண்புக்கு எதிராகவும் இருக்கும் மனித நகலாக்கத்தைத் 
தடை செய்யுமாறு உறுப்பு நாடுகளை ஐநா சபை
கேட்டுக் கொண்டது. எனினும் இந்தப் பிரகடனத்தை 
ஐநாவின் பல உறுப்பு நாடுகள் பின்பற்றவில்லை.
இது கட்டுப்படுத்தக்கூடிய பிரகடனமும் அல்ல 
(Nonbinding declaration). 

உலக நாடுகள் தங்களுக்கிடையே ஒப்பந்தங்களைச் 
செய்து கொண்டு நகலாக்கச் செயல்பாடுகளை 
முறைப்படுத்த (regulatory measures) முன்வர வேண்டும். 
 
(நகலாக்கத்தின் கடவுள் அயன் வில்மட் கடந்த 
செப்டம்பர் 10, 2023ல், தமது 79ஆவது வயதில்  மறைந்தார்.
அவருக்கு இக்கட்டுரை மூலம் அஞ்சலி செலுத்துவோம்! 
அவரின் புகழ் நிலைக்கட்டும்!
**************************************************    



  

   

     
     

    

         

சனி, 23 செப்டம்பர், 2023

நீட் முதுகலைத் தேர்வும் (NEET PG)
வாடிக்கையாகிப்போன Cut off மதிப்பெண் குறைப்பும்! 
-----------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம் 
--------------------------------------------------------------------
2016 ஜூலை ஆகஸ்டில் நாடாளுமன்றத்தின் இரு 
அவைகளிலும் நீட் தேர்வைச் சட்டபூர்வமாக்கும் 
மசோதா நிறைவேறியது. அதற்கு முன்னரே 
நீட் UG, நீட் PG தேர்வுகள் நடந்து கொண்டிருந்தன.

மோடி அரசு தான் ஆட்சிக்கு வந்த 2014 மே முதல் 
இன்று வரை மருத்துவப் படிப்புக்கான இடங்களை 
வெறித்தனமாக அதிகரித்துக் கொண்டே இருக்கிறது..

மன்மோகன்சிங் ஆட்சியில் இருந்த MBBS இடங்களும் 
முதுகலைப் படிப்பான MS, MD இடங்களும் மோடியின் 
ஆட்சியில் இரண்டு மடங்கு ஆகி விட்டன. தற்போது 
2023ல் MBBS இடங்கள் மட்டுமே 104,333 உள்ளன.
இது மன்மோகன் காலத்திய இடங்களை விட 
இரண்டு மடங்கிற்கும் மேல் அதிகம். அது போலவே 
PG இடங்களும் இரண்டு மடங்கு ஆகிவிட்டன.

MBBS அட்மிஷன் என்பது எப்போதும் கொதிநிலையில் 
இருந்து கொண்டிருக்கும் ஒரு நிகழ்வு. ஆனால் 
PG அட்மிஷன் அப்படியல்ல. அது மட்டுப்படுத்தப்பட்ட 
(moderate) நிகழ்வாகவே ஒவ்வோராண்டும் இருந்து 
வருகிறது.

PG அட்மிஷனில் அறிவிக்கப்பட்ட இடங்கள் 
நிரம்பாமல் இருப்பது 2017 முதலே ஒரு பிரச்சினையாக 
உள்ளது. இப்பிரச்சினை ஆண்டுதோறும் தீவிரம்
அடைந்து வருகிறது. சென்ற ஆண்டில் 4000
இடங்கள் காலியாக இருந்தன. இந்த ஆண்டில் 
இன்னும் அதிகம். 

குறிப்பாக  Non clinical பிரிவுகளில் உள்ள இடங்கள் 
நிரம்புவதில்லை. Anatomy, Physiology, Biochemistry 
முதலிய படிப்புகள் Non clinical ஆகும். இவற்றைப் 
படிப்பவர்கள்தான் மருத்துவக் கல்லூரிகளில் 
பேராசிரியர்களாக ஆக முடியும். ஆனால் 
இந்த இடங்கள் நிரம்பாமல் இருப்பதால் 
மருத்துவக் கல்லூரிகளில் தகுதி வாய்ந்த 
பேராசிரியர்கள் கிடைப்பது கடினமாகி விடுகிறது.

நிலவுகிற சூழலைக் கருத்தில் கொண்டு, காலியாக
உள்ள இடங்களை நிரப்ப ஏதுவாக NEET PG Cut off 
Percentileஐக் குறைக்க வேண்டும் என்ற கோரிக்கை 
மருத்துவ உலகில் இருந்து எழுந்தது. பல்வேறு 
டாக்டர்கள் சங்கங்கள் இந்தக் கோரிக்கையை 
வலுவாக எழுப்பின. மருத்துவ மாணவர்களும் 
cut off percentileஐக் குறைக்கச் சொல்லிப் போராட்டம் 
நடத்தினார்கள்.

UDFA (United Doctors Front Association) எனப்படும் டாக்டர்கள் 
சங்கம் தேசிய மருத்துவ கவுன்சிலிடம்  2023ஆம் 
ஆண்டிற்கான NEET PG Cut off Percentileஐக் 
குறைக்கச் சொல்லி முறையிட்டது.

கடந்த காலத்தில் 2017 முதல் அநேகமாக 
ஒவ்வோராண்டும் NEET PG Cut off percentile
குறைக்கப்பட்டே வந்திருக்கிறது. பொதுப் 
பிரிவினருக்கான  Cut off என்பது 50th  percentile       
என்று இருந்தது. 2017ல் இது 42nd percentile
என்று குறைக்கப் பட்டது.

2018ல் இது 35th percentile என்று குறைக்கப் பட்டது.
2019ல் 44th percentile என்றும், 2020ல் 30th percentile    
என்றும், 2021ல் 35th percentile என்றும், 2022ல் 
மீண்டும் 35th percentile  என்றும் Cut off 
percentile  குறைக்கப் பட்டது. 2017 முதல் 
ஒவ்வோராண்டும் Cut off percentile குறைக்கப் 
பட்டே வந்திருக்கிறது. இதைத் தொடர்ந்து 
இந்த ஆண்டில், 2023ல் காலி இடங்கள் அதிகம் 
என்பதால் cut off percentile  zeroth percentile
என்பதாகக் குறைக்கப் பட்டுள்ளது.

இதன் பொருள் NEET PG தேர்வு எழுதிய அனைவரும் 
கலந்தாய்வில் பங்கு கொள்ளலாம் என்பதே. எனினும் 
Cutoff ஐ zeroth percentile என்று குறைத்திருப்பதால் 
பூஜ்யம் மதிப்பெண் எடுத்தவர்களுக்கு PG இடம் 
கிடைக்கும் என்று யாராவது நினைத்தால் அது 
அடிமுட்டாள்தனம் ஆகும்.

Zeroth percentile என்று குறைத்திருந்தாலும், 30 சதவீத 
மதிப்பெண்ணும் அதற்கு மேலும் பெற்றவர்களே 
ஒரு லட்சத்திற்கு மேல் இருக்கின்றனர். எனவே 
தகுதியற்றவர்களுக்கு இடம் கிடைக்கும் என்று 
கருதுவது தவறு.

இந்த zeroth percentile என்று குறைத்தது இந்த அட்மிஷனுக்கு 
மட்டும்தான். அதிலும் 2023 PG அட்மிஷனில் மூன்றாம் 
கலந்தாய்வுக்கு மட்டும்தான். அடுத்த ஆண்டு 
கலந்தாய்வுக்கு இது பொருந்தாது.

திராவிடக் கசடுகள் கூச்சல் போடுவதில் துளியளவும் 
உண்மை இல்லை. அவர்கள் தற்குறிகள். மருத்துவ 
PG அட்மிஷன் பற்றி ஒரு இழவும் தெரியாமல் 
தங்களின் இழிந்த அறியாமையை வெளிப்படுத்திக் 
கொள்கிறார்கள்.

எது எப்படி இருப்பினும், அடுத்து வரும் "NEXT" தேர்வு  
மருத்துவக் கல்வியை இன்னும் தரம் உடையதாக 
ஆக்கும்.

விஷயம் தெரியாதவர்கள் கூச்சல் போடலாம்.
அது மூடத்தனமானது.
*************************************************** 
  
  
             
    
   


  

வெள்ளி, 22 செப்டம்பர், 2023

 NEET PG 2023 தேர்வு பற்றி....
------------------------------------------ 
1) MBBS/BDS படித்துத் தேறியவர்கள் மட்டுமே 
நீட் (முதுகலை) தேர்வை எழுத முடியும்.

2) இது ஒரு ஆன்லைன் தேர்வு. NEET UG தேர்வு 
போன்று காகிதம்-பேனா தேர்வல்ல இது.  

3) தேர்வு எழுத அனுமதிக்கப்படும் நேரம் 
மூன்றரை மணி நேரம். 

4) NEET PG 2023 தேர்வு: மொத்தம் 200 கேள்விகள்.
மொத்த மதிப்பெண்கள் = 800. நெகட்டிவ் 
மதிப்பெண் முறை இத்தேர்வில் உண்டு.
தவறான விடை எழுதப்பட்ட கேள்விக்கு 
1 மதிப்பெண் குறைக்கப்படும்.

5) Pre-clinical, Para clinical, மற்றும் CLINICAL ஆகிய 
மூன்று பிரிவுகளில் இருந்து கேள்விகள் அமையும். 
--------------------------------------------------------   

 neet pg

1. மொத்தம் மருத்துவ மேற்படிப்பு இடங்கள் கிட்டத்தட்ட 70000.
2. இதற்கு விண்ணப்பம் செய்தது கிட்டத்தட்ட 2080000. (அதாவது மூன்றில் ஒருவருக்கு கட்டாயம் மருத்துவ மேற்படிப்பு நிச்சயம் கிடைக்கும்).
தேர்வு எழுதியது 200000 பேர்.
3. இதில் 0 மார்க் மற்றும் அதற்கு கீழ் வாங்கியவர்கள் வெறும் 13 பேர்.
0 to 99 வாங்கியவர்கள் 5885 பேர்
100 to 199 வாங்கியது 39000+ பேர்.
200 to 299 வாங்கியது 59000+ பேர்.
நம்ம சாதாரண பாஸ் மதிபெண்ணான 35 பெர்ஸன்ட் என்பது 800 கு 280.
இவங்க பாஷையில் சொல்லப்போனால்
கிட்டத்தட்ட 105000 பேர், அதாவது பாதிக்கு மேல் எழுதியவர்கள் பெயில் மார்க். இத்தமைக்கும் எழுதிய அனைவரும் MBBS படிப்பு முடித்தவர்கள்.
அப்டியானால் அந்த தேர்வு எவ்வளவு கடினமானது என்பது தெரிந்து கொள்ளட்டும்.
4. இந்த முதுகலை படிப்புக்ளை clinical non clinical என இருவகையாக பிரிக்கலாம்.
Clinical என்பது ஆஸ்பத்திரியில் சிகிட்சை தரும் படிப்பு சம்பந்த பட்டது.
Non clinical என்பது anatomy, biochemistry, சைக்காலஜி போன்ற படிப்புகள்.
இவற்றில் non. clinical படிப்புகளுக்கு அந்த அளவு போட்டி இல்லை. பண வசதி இருப்பவர்கள் கூட கட்.ஆப் குறைந்தது என்றால் ஒரு வருடம் கழித்து மீண்டும் தேர்வு எழுதி நல்ல மதிப்பெண்கள் பெற்று clinical துறைகளை தேர்ந்து எடுக்க முயல்வார்கள். இதில் அரசு கல்லுரிகிளில் கூட vacancy. வருகிறது..
இது மிக ஆபத்தான போக்கு. ஏன் என்றால் நாளடைவில் இந்த துறை.விற்பன்னர்களே இல்லாமல் போய்விட்டால்.
5. கடந்த மாதம் indian medical association மற்றும் federation of resident doctors association இரண்டும் மத்திய அரசையும் இந்திய மருத்துவ கழகத்தையும் 30 சத விகிதமாவது முதலில் குறிப்பிட்ட 291 மார்க்க பொது பிரிவினர், 257 பட்டியலின பிரிவு கட் ஆப் குறைக்க வலியுறுத்தினார்கள்.
இந்த குறைப்பிற்கு முன்னாள் கிட்டத்தட்ட 12 பெர்ஸன்ட் இடங்கள் காலியாக இருந்தன.
சென்ற வருடம் 3200 காலியிடங்கள் வீணாயின. இந்த வருடம் 8000 என்பது மிக அதிகம், மேலும் மருத்துவ கட்டமைப்பிற்கு இது பெரும் சவாலாக இருக்கும் என்பதால் தகுதி மதிப்பெண்களை குறைக்க முடிவு செய்யப்பட்டது.
6. இந்த குறைப்பு நடப்பு ஆண்டிற்கு மட்டுமே பொருந்தும்
7. பெரும்பாலான மருத்துவ வல்லுநர்கள் இந்த அரசின் முடிவை வரவேற்று உள்ளார்கள்.
.
நீட் தேர்வால் தற்கொலை என சொல்பவர்கள் நீட் பிஜி யால் ஏதாவது தற்கொலை நடந்தது என ஆதாரம் காட்டுவார்களா.
வெறும் 13 பேர் மட்டும் பூச்சியம் மதிப்பெண் பெற்ற்று உள்ளார்கள் என்கிற விஷயத்தை சொல்லாமல் பூச்சியம் வாங்கிய வர்கள் கூட மேற்படிப்பு படிக்கலாம் என்பதால் தரம் எங்கிற வாதம் அடிபட்டு போகுறது என்று சொல்கிறார்கள்.
ஒரு தேர்வில் பாதிக்கு மேல் 35 பெர்ஸன்ட் மார்க் கூட வாங்க முடியாது என்கிற நிலை உள்ளது என்பதையும் வசதியாக மறைத்து விடுகிறார்கள்.