வியாழன், 31 ஆகஸ்ட், 2023

சூரியனை ஆராயும் ஆதித்யா!
----------------------------------------------
பி இளங்கோ சுப்பிரமணியன் 
-----------------------------------------------
சுட்டும் விழிச்சுடர்தான் கண்ணம்மா
சூரிய சந்திரரோ!
---- மகாகவி பாரதி-----   

சூரிய சந்திரர்களை இந்தியாவின் செயற்கைக் கோள்கள் 
ஆராய்வது நிகழும் விண்வெளி யுகத்தின் மீது இந்தியா 
தனது சுவடுகளைப் பதிப்பதாகும். கொஞ்சம் கொஞ்சமாக 
வானம் நமக்கு வசப்படத் தொடங்கி இருப்பதன் 
அடையாளம் ஆகும். 

சந்திரயான்-3 நிலவில் மென்மையாகத் தரையிறங்கி வரலாறு 
படைத்தது. இது இஸ்ரோவின் மணிமகுடத்தில் பதித்த 
மாணிக்கக் கல்லாக ஒளிர்கிறது. எனவேதான் சந்திரயான்-3ன் 
விக்ரம் லேண்டர் நிலவின் தென்துருவத்தில் தரையிறங்கிய 
அந்த ஆகஸ்டு 23ஆம் நாளை தேசிய விண்வெளி நாளாக  
அறிவித்து ஆண்டுதோறும் கொண்டாட வகை செய்தார் 
பிரதமர் மோடி.  

சந்திரயான்-3ன் வெற்றி அடுத்தடுத்த விண்வெளிப் 
பயணங்களை ஊக்குவிக்கும் மாபெரும் உந்துவிசையாகத்  
திகழ்கிறது. இதனால் நிலவில் தரையிறங்கிய ஆகஸ்டு 23ஐ 
அடுத்த பத்தே நாட்களில், செப்டம்பர் 2ஆம் நாளன்று 
( 02.09.2023) சூரியனை ஆராய ஆதித்யா எல்-1 
(Aditya L1 mission) என்னும் விண்கலத்தை விண்ணில் 
செலுத்தும் முயற்சிகளில் இஸ்ரோ மும்முரமாக உள்ளது.   

ஆதித்யா எல்-1 திட்டத்தின் திட்ட இயக்குனராக (Project Director) 
இஸ்ரோவின் திருமதி நிகர் ஷாஜி நியமிக்கப் பட்டுள்ளார். 
சந்திரயான்-3 மற்றும் ஆதித்யா எல்-1 ஆகிய 
திட்டங்களின்போது டாக்டர் சோம்நாத் இஸ்ரோவின் 
தலைவராக இருந்து வருகிறார்.      

சூரியனைச் சுற்றுவது எப்படி?
----------------------------------------------  
ஆதித்யா எல்-1 என்பது சற்று நெகிழ்ந்த பொருளில் 
ஒரு கோள்சுற்றியே (orbiter) ஆகும். என்றாலும்  
கறாரான பொருளில் அது ஒரு கூர்நோக்கி ஆராயும்
விண்கலனே (solar observatory mission) ஆகும்.  
சந்திரயான் சந்திரனைச் சுற்றுவது போன்றோ, மங்கள்யான் 
செவ்வாயைச் சுற்றி வந்தது போன்றோ ஆதித்யா 
சூரியனைச் சுற்றி வராது; சுற்றி வரவும் இயலாது.

சூரியனை எதுவும் அண்டி விடாமல் அதன் கொடிய 
வெப்பம் தடுக்கிறது. சூரியனின் மேற்பரப்பிலேயே 
5500 டிகிரி செல்சியஸ் வெப்பம் இருக்கிறது. சுள்ளென்று 
அடிக்கும் மே மாத வெயிலையே, வெறும் 36 டிகிரி செல்ஸியஸ் 
வெப்பத்தையே நம்மால் தாங்க முடியவில்லை. அப்படி 
இருக்கும்போது 5500 டிகிரி செல்ஸியசை நெருங்க இயலுமா?

கடினமான உலோகமான இரும்பு 1530 டிகிரி செல்சியஸ் 
வெப்பத்தில் உருகத் தொடங்கி 2860 டிகிரி செல்சியசில்
கொதித்து ஆவியாகி விடும் (Iron: Melting point 1530 degree C;
Boiling point 2860 degree C). உலோகங்களிலேயே உச்ச அளவு 
கொதிநிலை உடைய டங்ஸ்டன், (மின்சார பல்பில் 
ஒளிரும் அதே டங்ஸ்டன்தான்)  சூரியனின் மேற்பரப்பை 
நெருங்கினால் கொதித்து ஆவியாகிவிடும். ஏனெனில் 
சூரியனின் மேற்பரப்பில் உள்ள சூரிய ஒளிக்கோளத்தின்  
(photosphere of sun) சராசரி வெப்பம் 5500 டிகிரி செல்சியஸ். 
இதுதான் டங்ஸ்டனின் கொதிநிலை ஆகும்.     

சூரியனின் மையப்பகுதியின் (core) வெப்பம் 15 மில்லியன் 
(ஒன்றரை கோடி) டிகிரி செல்சியஸ் ஆகும். இவ்வளவு அதீத 
வெப்பத்தில் அணுக்கருச் சேர்க்கை (nuclear fusion)
எளிதாக நடைபெறுகிறது. இரண்டு ஹைட்ரஜன் அணுக்கள் 
ஒன்று சேர்ந்து ஒரு ஹீலியம் அணுவை உருவாக்குவது 
அணுக்கருச் சேர்க்கைக்குச் சிறந்த எடுத்துக் காட்டாகும்.      

இவ்வளவு அதீத வெப்பம் உடைய சூரியனைச் சுற்றி 
வருவது என்றால் சூரியனுக்கு வெகு தொலைவில் 
பாதுகாப்பான ஒரு இடத்தில் இருந்து கொண்டு 
சூரியனை ஆராய்வதாகும். அதற்குத்தான் சூரியன்-பூமி 
அமைப்பிலுள்ள லாக்ரேஞ்சு புள்ளிகள் 
(Lagrange points in Sun-Earth system) பயன்படுகின்றன. 

நான்கு மாதப் பயணம்!
-------------------------------------
நமது பூமிக்கும் சூரியனுக்கும் உள்ள தொலைவு 
15 கோடி கிமீ ஆகும். பூமிக்கும் L1 லாக்ரேஞ்சு 
புள்ளிக்கும் உள்ள தொலைவு 15 லட்சம் கிமீ ஆகும்.
15 கோடி கிமீ தொலைவில் உள்ள சூரியனை 15 லட்சம் 
கிமீ தொலைவில் உள்ள L1 புள்ளியில் இருந்து 
ஆராயப் போகிறது ஆதித்யா.    

L1 புள்ளியைச் சென்றடைந்த பின்னர், அங்கு 
தங்கிக்கொண்டு, ஹாலோ சுற்றுப்பாதை (Halo orbit) 
எனப்படும் L1க்கு அருகிலுள்ள சுற்றுப்பாதையில்   
ஆதித்யா விண்கலம் சூரியனைச் சுற்றி வரும். 

ஆதித்யா தனது இலக்கைச் சென்றடைவதற்கு 4 மாதங்கள்  
ஆகும் என்று கணக்கிடப் பட்டுள்ளது. இலக்கைச் 
சென்றடைவது என்பதன் பொருள் சூரியனை நெருங்குவது 
அல்ல. L1 என்னும் லாக்ரேஞ்சு புள்ளியைச் சென்றடைவதே 
ஆதித்யாவின் இலக்கு..பூமியில் இருந்து 15 லட்சம் கிமீ 
தொலைவில் உள்ள L1 புள்ளியைச் சென்றடைய 
ஆதித்யாவுக்கு நான்கு மாதங்கள் ஆகும். ஆதித்யா செல்லும் 
பாதையைப் பொறுத்தே (trajectory) பயணக்காலம்
அமையும்.  

ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து  2023 செப்டம்பர் 2 சனிக்கிழமை 
காலை 11:50 மணிக்கு (IST 11:50 hours) ஆதித்யா 
விண்ணில் செலுத்தப்படும். அது L1 புள்ளியைச் 
சென்றடையும்போது புத்தாண்டு 2024 பிறந்திருக்கும்.   

துருவ செலுத்து வாகனம்!
----------------------------------------
துருவ செலுத்து வாகனமான PSLV C 57 ஆதித்யாவை 
விண்ணில் செலுத்துகிறது. சந்திரயான்-1, மங்கள்யான் 
ஆகிய விண்கலன்களை துருவ செலுத்துவாகனம்தான் 
(PSLV = Polar Satellite Launch Vehicle) விண்ணில் செலுத்தியது 
என்பது வாசகர்களுக்கு நினைவிருக்கக் கூடும்.  
இதற்கு மாறாக சந்திரயான்-2 மற்றும் சந்திரயான்-3 
விண்கலன்களை புவி ஒத்திசைவு செலுத்து வாகனமான 
GSLV (Geo Synchronous Launch Vehicle) விண்ணில் செலுத்தியது.

எந்த செலுத்து வாகனத்தைத் தேர்ந்தெடுப்பது என்பதை 
எந்த அடிப்படையில்  இஸ்ரோ தீர்மானிக்கிறது?
தாங்குசுமையின் நிறையே (mass of the payload)
செலுத்து வாகனம் எது என்பதைத் தீர்மானிக்கிறது. 
துருவ செலுத்து வாகனமானது 1750 கிகி வரையிலான 
நிறையை உரிய சுற்றுப் பாதையில் செலுத்த வல்லது.

சந்திரயான்-2, சந்திரயான்-3 ஆகியவை ஒவ்வொன்றும் 
1750 கிகி நிறையை விட அதிக நிறை உடையவை.
சந்திரயான்-2வின் கோள்சுற்றி மட்டுமே 2379 கிகி 
நிறை கொண்டது. மேலும் விக்ரம் லேண்டரின் நிறை
1471 கிகி. அது போலவே சந்திரயான்-3ன் நிறை 
மொத்தத்தில் 3895 கிகி ஆகும். இவ்வளவு அதிகமான 
நிறையை துருவ செலுத்து வாகனம் (PSLV) கையாள 
இயலாது என்பதால் சந்திரயான்-2 மற்றும் 3 விண்கலன்கள் 
ஜி.எல்.எல்.வி செலுத்துவாகனத்தைத் தேர்ந்தெடுத்தன.

ஆதித்யா L1 விண்ணில் செலுத்தப்படும்போது 1475 கிகி 
நிறையை (Launch mass) மட்டுமே உடையது. இது துருவ செலுத்து 
வாகனமான பி.எஸ்.எல்.வியின் நிறை வரம்பான 
1750 கிகிக்கு உட்பட்டது என்பதால் இது பி.எஸ்.எல்.வி
மூலம் விண்ணில் செலுத்தப் படுகிறது.      

அறிவியல் கருவிகள்!
-------------------------------
ஆதித்யாவில் மொத்தம்  ஏழு அறிவியல் கருவிகள் 
வைக்கப் பட்டுள்ளன. இவற்றில் நான்கு கருவிகள் 
சூரியனை நேரடியாக ஆராயும். பிற மூன்று கருவிகள் 
அங்குள்ள துகள்கள் மற்றும் புலங்கள் (particles and fields)  
பற்றிய பரிசோதனைகளை தாம் இருக்கும் இடமான  
L1 புள்ளியில் இருந்து கொண்டே (in situ experiments) 
மேற்கொள்ளும். 

மொத்தத்தில் சூரியனின் வெளிப்புறம் சார்த்த 
அ) ஒளிக்கோளம் (photosphere)
ஆ) நிறக்கோளம் (chromosphere)
இ) புற அடுக்கு (corona) 
ஆகியவற்றைப் பற்றி ஆராய்ந்து தரவுகளைச் சேகரிப்பதே 
ஆதித்யாவின் குறிக்கோள் ஆகும்.   

சூரிய ஆய்வின் தேவை என்ன?
----------------------------------------------
சூரியனை ஆய்வு செய்வது பொழுதுபோக்கிற்காக அல்ல.
சூரிய ஆய்வு பல விதத்தில் அறிவியலின் நிரந்தரத் 
தேவையாக இருக்கிறது. அளப்பரிய ஆற்றலை 
சூரியன் வெளியிட்டுக் கொண்டே இருக்கிறது. ஆற்றலின் 
இந்த வெளியீடு சில நேரங்களில் தாறுமாறானதாக 
அமைந்து பூமியை நோக்கியதாக இருந்து விடக்கூடும். 
அப்போது நமது பூமி முழுவதுமாக சேதாரம் அடையும்.

நமது செயற்கைக் கோள்களும் தகவல் தொடர்பும்
முற்றிலுமாக செயலிழந்து விடக்கூடும். விண்ணில் 
சஞ்சரிக்கும் நமது விண்கலன்கள் பாதை தடுமாறி 
விழுந்து நொறுங்கக் கூடும். பூமியின் காலநிலையும் 
பருவ காலங்களும் ஒழுங்கை இழக்கக் கூடும்.
இவற்றையெல்லாம்  தவிர்க்க வேண்டுமெனில் 
சூரியனைப் பற்றிய போதிய அறிவைப் பெறுவது 
கட்டாயம் ஆகிறது. எனவே சூரிய ஆராய்ச்சி மனித 
குலத்திற்கு இன்றியமையாதது.

லாக்ரேஞ்சு புள்ளிகள் என்றால் என்ன?
-----------------------------------------------------------
நமது சூரியக் குடும்பத்தில் சூரியன் பூமியைப்
பொறுத்து மொத்தம் ஐந்து லாக்ரேஞ்சு புள்ளிகள் 
(Lagrange points) உள்ளன. இவை L1, L2, L 3, L4, L5 எனப் 
படுகின்றன.

18ஆம் நூற்றாண்டின் இத்தாலி-பிரெஞ்சு கணித மேதை 
ஜோசப் லூயி லாக்ரேஞ்சு (Joseph Louis Lagrange 1736-1813) என்பவர் 
தம் பெயரால் அமைந்த இப்புள்ளிகளைக் கண்டுபிடித்தார்.
புள்ளிகள் என்று பெயர் இருந்தாலும் உண்மையில் 
அவை புள்ளிகள் அல்ல. அவை விண்வெளியில் உள்ள 
இடங்கள.   

L1, L2, L3 ஆகிய மூன்று புள்ளிகளும் ஒரே நேர்கோட்டில் 
அமைந்தவை. ஆதித்யா சென்றடையப் போகும் L1 புள்ளி 
(சூரியன்-பூமி முதலாம் லாக்ரேஞ்சு புள்ளி) சூரியனுக்கும் 
பூமிக்கும் இடையில் உள்ள புள்ளி ஆகும்.         

L2 புள்ளியில்தான் கடந்த ஜனவரி 2022ல் அங்கு சென்றடைந்த 
ஜேம்ஸ்வெப் தொலைக்காட்சி தங்கி இருந்து தன் பணியைச் 
செய்து வருகிறது. அங்கேயே 20 ஆண்டுகள் அல்லது அதற்கும் 
மேலாக அத்தொலைக்காட்சி தங்கக் கூடும். லாக்ரேஞ்சு 
புள்ளிகளின் சிறப்பு என்னவெனில், அங்கு சென்ற பொருட்கள் 
தொடர்ந்து அங்கேயே தங்க முற்படும்; தங்கியும் விடும்.
இதனால் அவை இயங்கத் தேவையான எரிபொருள் 
மிகவும் குறைவாகவே தேவைப்படும்.      

L1 புள்ளியைச் சென்றடையப் போகும் ஆதித்யா அங்கேயே 
தங்கி ஆய்வுகளை மேற்கொள்ளும். L1ல் ஆதித்யா 
எப்போதுமே சூரியனை நோக்கியே இருக்கும். கிரகணம் 
உள்ளிட்ட எந்தத் தடங்கலும் இல்லாமல் ஆதித்யாவுக்கு 
தடையற்ற சூரிய ஒளி கிடைத்துக் கொண்டே இருக்கும்.  
இதனால் சிறிதளவும் இடையூறு இல்லாதவண்ணம் 
ஆதித்யா தனது ஆய்வுகளை மேற்கொள்ள முடியும்.

வாகன நிறுத்துமிடங்கள்!
---------------------------------------
லாக்ரேஞ்சு புள்ளி என்பது சூரியனைப் பார்க்க, 
கூர்நோக்கி ஆராய மிகவும் வாய்ப்பான புள்ளி ஆகும். 
ஆங்கிலத்தில்  இதை VANTAGE POINT  என்பர். காண வேண்டிய 
ஒரு காட்சியை தெளிவாகக் காண வசதியான இடமே 
லாக்ரேஞ்சு புள்ளி ஆகும். "குன்றேறி யானைப்போர் 
கண்டற்றால்" என்பார் வள்ளுவர். யானைகள் 
சண்டையிடுவதைத் தெளிவாகப் பார்க்க வேண்டுமெனில்,
அதற்கு வாகான இடமான ஒரு குன்றின் மேல் ஏறி 
நின்று பார்க்க வேண்டும். அதைப்போல  லாக்ரேஞ்சு        
புள்ளியானது சூரியனைப் பார்க்க உகந்த இடம் ஆகும்.

தற்போது சென்னை போன்ற நகரங்களில் வாகனங்களை 
நிறுத்துவது பெரும்பாடாக இருக்கிறது. போதிய 
அளவுக்கு வாகன நிறுத்துமிடங்கள் (vehicle parking spots) 
இல்லை. எங்கு பார்த்தாலும் நோ பார்க்கிங் அறிவிப்பு.
ஆனால் விண்வெளியில் இப்படிப்பட்ட வாகன 
நிறுத்துமிடப் பிரச்சினை எதுவும் இல்லை. ஸ்கூட்டர் 
காருக்குப் பதில் விண்வெளியில் விண்கலங்கள்  
இயங்குகின்றன. அவற்றை ஓரிடத்தில் நிறுத்த 
வேண்டுமெனில் அதற்கு உகந்த இடங்களாக 
இருப்பவை லாக்ரேஞ்சு புள்ளிகளே! இவ்வாறு 
விண்வெளியின் வாகன நிறுத்துமிடங்களாக 
(parking spots) லாக்ரேஞ்சு புள்ளிகள் பயன்படுகின்றன.    

முப்பொருள் சிக்கல் என்றால் என்ன?
--------------------------------------------------------
லாக்ரேஞ்சு புள்ளிகளைப் பற்றி அறிந்திட, வானியலில் 
உள்ள முப்பொருள் சிக்கல் (Three body problem) என்றால் என்ன 
என்று தெரிந்து கொள்ள வேண்டும். இங்கு கூறப்படும் 
முப்பொருட்களும் வானியல் பொருட்களே. சூரியன்,
பூமி, சந்திரன் இம்மூன்றும் இடம்பெற்ற ஒரு 
முப்பொருள் சிக்கலுக்குத் தீர்வு கண்டார் லாக்ரேஞ்சு. 
அவர் கண்ட தீர்வுதான் அவரின் பெயரால் அமைந்த 
லாக்ரேஞ்சு புள்ளிகள்.

முப்பொருட்கள் பின்வருமாறு அமையலாம்!
சூரியன், பூமி, செயற்கைக்கோள் ஆகிய மூன்றும் 
முப்பொருட்களே! பூமி, சந்திரன்,செயற்கைக்கோள் 
ஆகிய மூன்றும் முப்பொருட்களே!

இவை மட்டுமா? சூரியன், பூமி, ஆதித்யா ஆகிய மூன்றும் 
முப்பொருட்களே.இவற்றின் தீர்வு லாஃரேஞ்சு புள்ளியே. 

முப்பொருள் சிக்கல் என்பது இதுதான். இந்த மூன்று 
பொருட்களின் மீது, அவ்வவற்றின் பரஸ்பர ஈர்ப்பு விசை 
தவிர (mutual gravitation) வேறு எந்த விசையும் செயல்படாத 
நிலையில், அவற்றின் இயக்கத்தை எப்படித் 
தீர்மானிப்பது (determining their motion) என்பதுதான் 
முப்பொருள் சிக்கல்.

சூரியன்-பூமி-செயற்கைக்கோள்!
--------------------------------------------------
சூரியன், பூமி, ஏதேனும் ஒரு செயற்கைக்கோள் என்னும் 
முப்பொருட்களை எடுத்துக் கொள்ளுவோம். இம்மூன்றில் 
சூரியனும் பூமியும் நிறை அதிகமானவை. அவற்றோடு ஒப்புநோக்க செயற்கைக்கோளின் நிறை ஒரு பொருட்டே அல்ல. 

இப்போது என்ன நடக்கும்? செயற்கைக்கோளின் மீது  
சூரியன் தனது ஈர்ப்பைச் செலுத்தும். அது போலவே பூமியும் 
செயற்கைக்கோள் மீது தனது ஈர்ப்பைச் செலுத்தும். 
இரண்டின் ஈர்ப்புக்கும் ஆட்பட்ட செயற்கைக்கோள் 
அலைக்கழிப்புக்கு உள்ளாகும். சூரியனை நோக்கி 
அது இழுக்கப்படும். அதன் இயக்கம் சீர்குலையும்.

ஆனால் லாக்ரேஞ்சு புள்ளியில் இது நடக்காது. அது 
செயற்கைக்கோளின் சொர்க்கம். அற்ப நிறை கொண்ட 
ஒரு துளியூண்டு செயற்கைக்கோள்,  ராட்சசத்தனமான
நிறை கொண்ட கொழுத்த பொருட்களைத் தோற்கடிக்கும் 
இடமே லாக்ரேஞ்சு புள்ளி.

சூரியனின் ஈர்ப்பும் பூமியின் ஈர்ப்பும் இவ்விரண்டும் 
சேர்ந்து சின்னஞ்சிறிய செயற்கைக்கோளின் மீது 
செயல்படும்போது, செயற்கைக்கோளானது தனது 
மைய ஈர்ப்பு விசையால் (centripetal force) மேற்கூறிய 
பெரிய பொருட்களின் விசையைச் சமன் செய்து 
விடுகிறது. இதன் விளைவாக பெரிய பொருட்களோடு
சேர்ந்து செயற்கைக்கோளும் முன்னகர்கிறது.
(The Lagrange Points are positions where the 
gravitational pull of two large masses precisely equals 
the centripetal force required for a small object to 
move with them. ---- NASA March 27, 2018).

ஹாலோ சுற்றுப்பாதை!
------------------------------------
L1 புள்ளியை அடைந்ததும், ஆதித்யா ஒரு ஹாலோ 
சுற்றுப்பாதையில் (Halo orbit) சுற்றத் தொடங்கும்.
ஹாலோ சுற்றுப்பாதை என்பது பூமி சூரியனைச் 
சுற்றும் சுற்றுப்பாதை போல் பெரியதல்ல. இது 
லாக்ரேஞ்சு புள்ளிகள் L1, L2, L3 ஒவ்வொன்றிலும் 
இருக்கும். 

உலகில் இதுவரை வெகு சில நாடுகளே சூரியனை 
ஆய்வு செய்துள்ளன. சூரிய விண்கலங்களை 
அனுப்பியதில் நாசாதான் பெரும்பங்கு வகிக்கிறது.
ஜெர்மனி, ஐரோப்பிய விண்வெளிக் கழகம் (ESA)
ஆகியவையும் முயன்றுள்ளன. அந்த வரிசையில் 
தற்போது இந்தியா.  

லாக்ரேஞ்சு புள்ளிகள் காலத்தை வென்று நிற்கின்றன.
அவை கண்டுபிடிக்கப் பட்டிராவிட்டால் சூரிய 
ஆய்வுகள் சாத்தியமற்றுப் போய் இருக்கும். எனவே 
அவற்றைக் கண்டு பிடித்து மனித குலத்தின் அறிவியல் 
வளர்ச்சிக்குப் பங்களித்த கணித மேதை லாக்ரேஞ்சு 
வணக்கத்துக்கு உரியவர். அவரைப் போற்றுவோம்.  

லாக்ரேஞ்சு மகத்துவம் மிக்க ஆய்லரின் மாணவர்.
சரி, லாக்ரேஞ்சின் மாணவர் யார்?
பிரசித்தி பெற்ற ஃபூரியர்! 
பெருமைமிகு அறிவியல் பாரம்பரியம்!
*******************************************


    
 

 

  

 



 
 
 

    


   
       

  

     

    

  

    
    

          
  

புதன், 30 ஆகஸ்ட், 2023

 லாக்ரேஞ்சு புள்ளிகளா?

வாகனங்களை பார்க் செய்யும் இடங்களா?

------------------------------------------------------------ 

நியூட்டன் அறிவியல் மன்றம் 

-------------------------------------------------- 

தி நகரில் உள்ள சரவணா ஸ்டோர்சுக்கு

இன்று சென்றேன். ஸ்கூட்டரில்தான் போனேன்.

ரங்கநாதன் தெருவில் வாகனங்களை 

நிறுத்தும் இடம் இல்லை. எனவே வேறு 

இடத்தில் நிறுத்தினேன்.


விண்வெளியிலும் சில பார்க்கிங் ஸ்பாட்ஸ்

உண்டு. ஆழ்வெளியில் இந்த பார்க்கிங் ஸ்பாட்ஸ் 

உள்ளன. அங்கு விண்கலன்களை நிறுத்தலாம்.


விண்கலன்களை நிறுத்தக்கூடிய இந்த பார்க்கிங் 

ஸ்பாட்சை பிரெஞ்சு கணித நிபுணர் ஜோசப் லூயி 

லாக்ரேஞ்சு (Joseph Louis Lagrange 1736-1813) கண்டு 

பிடித்தார். இவை அவரின் பெயராலேயே 

லாக்ரேஞ்சு புள்ளிகள் (Lagrange points) என்று 

அழைக்கப் பட்டன.


புள்ளிகள் என்று பெயர் இருந்தாலும், அவை 

உண்மையில் புள்ளிகள் அல்ல. 8 லட்சம் 

கிலோமீட்டர் அகலமான ஒரு இடத்தை வசதிக்காக 

புள்ளி என்று சொல்கிறோம். புள்ளி 

என்பதற்கான கணித வரையறை யாது?


A point has a position but no dimension என்றார் 

யூக்ளிட்.கிரேக்கத்தில் பிறந்த உலகின் மாபெரும் 

கணித மேதையான யூக்ளிட் (Euclid) வழங்கிய 

ஆகச்சிறந்த வரையறை இது. ஒரு புள்ளியை 

இதை விடத் தெளிவாக, இதை விடத் துல்லியமாக 

வரையறுத்து விட முடியாது.

     

இங்கு லாக்ரேஞ்சு புள்ளிகள் என்றால் அவை 

யூக்ளிட் வரையறுத்த dimensionless புள்ளிகள் 

அல்ல. லாக்ரேஞ்சு புள்ளிகளுக்குப் பரிமாணம் 

உண்டு. எத்தனை பரிமாணம் கொண்டவை 

அப்புள்ளிகள்? வெளி-காலத்துக்கு (spacetime)

எத்தனை பரிமாணம் உண்டோ அத்தனை 

பரிமாணமும் கொண்டவையே லாக்ரேஞ்சு

புள்ளிகள். அவை வெளி-காலத்தில் உள்ளவை.

வெளி-காலத்தின் பிரிக்க முடியாத பகுதிகளே 

லாக்ரேஞ்சு புள்ளிகள்.


அண்டவெளிக்கு மூன்று பரிமாணம்தான் 

என்றார் நியூட்டன்.இது காலாவதியாகிப் 

போனது. நான்கு பரிமாணம் என்ற ஐன்ஸ்டைன்.

நான்காவது பரிமாணமாக காலத்தைச் சொன்னார்.         

String theory 10 பரிமாணம் என்கிறது,

M Theory 11 பரிமாணம் என்கிறது. காலப்போக்கில் 

எத்தனை பரிமாணங்கள் என்று இறுதி செய்யப்படும்.

அதுவரை அண்ட வெளிக்கு எத்தனை பரிமாணங்கள் 

உண்டோ, அத்தனை பரிமாணங்களும் லாக்ரேஞ்சு

புள்ளிகளுக்கு உண்டு.


லாக்ரேஞ்சு புள்ளிகள் விண்வெளியில், அதாவது 

ஆழ்வெளியில் (deep space) எத்தனை உள்ளன?

பதில்:: ஒன்றிரண்டு அல்ல, ஒட்டு மொத்த 

விண்வெளியில் நிறையவே இருக்கக் கூடும். 

அவற்றை ஆய்வு செய்த பின்னரே கண்டுபிடிக்க 

இயலும். இங்கு நமது சூரியக் குடும்பத்தைப் 

பொறுத்த மட்டில் உள்ள 5 லாக்ரேஞ்சு புள்ளிகளைப் 

பற்றி மட்டுமே நாம் பேசுகிறோம்.  .


லாக்ரேஞ்சு புள்ளிகளை பற்றி அறிந்திட, 

முப்பொருள் சிக்கல் என்றால் என்ன என்று 

முதலில் தெரிந்து கொள்ள வேண்டும்? முப்பொருள் 

சிக்கல் என்பதை ஆங்கிலத்தில் Three body problem

என்பர்.


மேலே சொன்ன THREE BODIES என்பவை யாவை?

அவை வானியல் பொருட்களே. அதாவது சூரியன்,

பூமி, செயற்கைக்கோள் என்னும் இம்மூன்றும் 

Three bodies எனப்படும் முப்பொருட்கள் ஆகும்.


இன்னொரு உதாரணத்தைப் பார்ப்போம்.

சூரியன்- செவ்வாய்-செயற்கைக்கோள் என்னும் 

மூன்றும் முப்பொருட்கள் ஆகும்.      

   


சரி, முப்பொருள் சிக்கல் என்றால் என்ன?

அ) இது ஒரு வானியல் சிக்கல் (astronomical problem).

ஆ) இதில் 3 வான்பொருட்கள் (celestial bodies)

சம்பந்தப் பட்டுள்ளன.

3) இந்த 3 பொருட்களின் மீது, அவ்வவற்றின் 

பரஸ்பர ஈர்ப்பு விசை தவிர (mutual gravitation)  

வேறு எந்த விசையும் செயல்படாத நிலையில், 

அவற்றின் இயக்கத்தை எப்படித் தீர்மானிப்பது 

(determining their motion) என்பதுதான் முப்பொருள் 

சிக்கல்.


சூரியன்-பூமி- செயற்கைக்கோள் 

சூரியன்-வியாழன்- செயற்கைக்கோள் 

பூமி- சந்திரன்-செயற்கைக்கோள்     

என்பனவும் முப்பொருள் சிக்கல்களின் 

உதாரணங்களே.


இச்சிக்கலுக்குத் தீர்வு கண்டார் கணித மேதை 

லாக்ரேஞ்சு. அத்தீர்வுதான் லாக்ரேஞ்சு புள்ளிகள்.

நமது சூரிய மண்டலத்தில்  5 லாக்ரேஞ்சு 

புள்ளிகள் உள்ளன. இவை L1,L2, L3, L4, L 5 என்று 

பெயர் பெற்றுள்ளன. 



இந்தப் புள்ளிகளில் என்ன நடக்கின்றன?

இவை எவ்வாறு பார்க்கிங் ஸ்பாட்ஸ் ஆகின்றன?


சூரியன், பூமி, செயற்கைக்கோள் என்னும் மூன்றை 

எடுத்துக் கொள்ளுவோம். இவற்றில் சூரியன்

என்ன செய்யும்? பூமியின் மீதும் செயற்கைக் 

கோளைத் தாங்கியிருக்கும் விண்கலனின் மீதும்

தனது ஈர்ப்பைச் செலுத்தும். 


பூமி என்ன செய்யும்? தனது ஈர்ப்பை விண்கலத்தின் 

மீது செலுத்தும்.


விண்கலன் என்ன செய்யும்? சூரியன் பூமி என்னும் 

இரண்டின் ஈர்ப்புக்கும் இலக்காகி அவற்றால் 

அலைக்கழிக்கப்பட்டு அவை விரும்பிய பாதையில் 

தன்னைச் செலுத்திக் கொண்டு அவற்றைச் சுற்றி 

வரும்.


ஆனால் லாக்ரேஞ்சு புள்ளிகளில் இது நடக்காது.

அங்கு என்ன நடக்கும்? அது விண்கலனின் 

சொர்க்கம். அற்ப நிறை கொண்ட ஒரு பொருள் 

ராட்சசத்தனமான நிறை கொண்ட சூரியனைத்  

தோற்கடிக்கும் இடம் அந்த லாஃரேஞ்சு புள்ளி.


சூரியனின் ஈர்ப்பும் பூமியின் ஈர்ப்பும் 

இரண்டும் சேர்ந்து விண்கலனின் மீது 

பாயும்போது,விண்கலன் தனது மைய விலக்கு 

விசையால்  அதைச் சமப்படுத்தி 

விடுகிறது. இதனால் அங்கு விண்கலனைப் 

பொறுத்து ஒரு equilibrium நிலை ஏற்பட்டு 

விடுகிறது.


இதனால் அந்த லாக்ரேஞ்சு புள்ளியில் 

அதை ஒரு பார்க்கிங் ஸ்பாட்டாக எடுத்துக் 

கொண்டு, விண்கலன் அங்கு தன்னை 

பார்க் செய்து கொள்கிறது. சூரியனாலும் 

பூமியாலும் அலைக்கழிக்கப்படுவதற்கு 

லாக்ரேஞ்சு புள்ளியில் முற்றுப்புள்ளி 

வைக்கப் படுகிறது.


இதனால் என்ன லாபம்? பிரபஞ்சத்தில் 

இருந்து, அங்குள்ள காலக்சிகளில் இருந்து 

வரும் ஒளியை uninterruptedஆக ஜேம்ஸ்வெப்

தொலைநோக்கி பெறும். அதற்கு இந்த 

லாக்ரேஞ்சு புள்ளியில்  ஜேம்ஸ்வெப் 

படுத்துக்கிடப்பது துணைபுரியும்.


ஆக லாக்ரேஞ்சு புள்ளிகளைக் கண்டறிந்த

விஞ்ஞானி லாக்ரேஞ்சைப் பாராட்டுவோம்.

இவர் ஆய்லரின் மாணவர்!

சரி, இவரின் மாணவர் யார்?

பிரசித்தி பெற்ற ஃபூரியர்!

***************************************

  

சனி, 26 ஆகஸ்ட், 2023

 பூமி-சந்திரன் தூரம் = 3,84,000 கிமீ.
சந்திரயான்-3ல் உள்ள விக்ரம் லேண்டர் 
மொத்தம் 61 லட்சம் கிமீ தூரம் பயணம் 
செய்துள்ளது (lift off to landing) 

The total distance travelled by the *Chandrayaan3 Vikram lander* from lift off on 14 Jul till it's landing on 23rd Aug is *6,117,490 km*.
Of this 3,943,372 is around The Earth, 2,173,373 around the Moon and 745 km after deboost. Hence the avg cost works out to around *₹0.10/km*


மங்கள்யான் செவ்வாயின் சுற்றுப் 
பாதையைச் சென்றடைய 10 மாதம் 
ஆனது (298 நாள்). 2013 நவம்பர் 5 முதல் 
2014 செப் 24 வரை.   


பூமி-சூரியன் தூரம் = 15 கோடி கிமீ.
பூமி-சந்திரன் தூரம் = 3,84,000 கிமீ.
பூமி-செவ்வாய் தூரம் = 23 கோடி கிமீ.

வெள்ளி, 25 ஆகஸ்ட், 2023

 நாலரை லட்சம் பேர் பார்த்துள்ளனர்.
இன்னும் தொடர்ந்து பார்க்கின்றனர்.
ஒருவேளை INFINITY வரை போகுமோ?
---------------------------------------------------------
22.08.2023 அன்று iTamil என்னும் சானலுக்கு 
நான் அளித்த நேர்காணலின் வீடியோவை 
இதுவரை நாலரை லட்சம் பேர் பார்த்துள்ளனர்.
தொடர்ந்து பார்க்கின்றனர்!

infinity வரை போகும் போல் இருக்கிறதே!
(***************************************** 
  

புதன், 23 ஆகஸ்ட், 2023

இரண்டே முக்கால் லட்சம் பேர் பார்த்த வீடியோ! 
(சந்திரயான் நிகழ்வுகள்!)
--------------------------------------
நேற்றும் இன்றும் (22.8.2023, 23.08.2023) சந்திரயான்-3
குறித்த பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்றேன்.

இன்று (23.08.2023) மதியம் 1.30 PM to 4.30 PM 
பள்ளிக்கு குழந்தைகளுக்கான ஒரு வெபினார்
நிகழ்வில் பங்கேற்று சந்திராயன்-3 குறித்துப் 
பேசினேன்.


லேண்டர் தரையிறங்கிய பின் 
சத்யம் டிவியில் சந்திராயன்-3
குறித்த பல கேள்விகளுக்குப்  பதிலளித்தேன்.  


நேற்று (22.08.2023) iTAMIL youtube சானலில் 
சந்திராயன்-3 குறித்து 33 நிமிடங்கள் 
நேர்காணல் அளித்தேன்.

இந்த வீடியோவை இரண்டே முக்கால் லட்சம் பேர் 
(275 k views) பார்த்துள்ளனர்.

சந்திராயன்-3 மகத்தான வெற்றி அடைந்துள்ளது.
இந்த வெற்றியில் இஸ்ரோவுடன் சேர்ந்து 
நியூட்டன் அறிவியல் மன்றம் பெருமிதம் 
அடைகிறது.
******************************************
 

செவ்வாய், 22 ஆகஸ்ட், 2023

நீட் தேர்வு: ஒரு சுருக்கமான வரலாறு!
---------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம் 
-----------------------------------------------------
டாக்டர் மன்மோகன்சிங் பிரதமராகவும் 
குலாம் நபி ஆசாத் சுகாதாரத்துறை அமைச்சராகவும் 
இருந்தபோது, மருத்துவப் படிப்புகளுக்கு 
நாடு தழுவிய ஒரு பொதுவான நுழைவுத் தேர்வு 
நடத்தப்பட வேண்டும் என்று மன்மோகன் அரசு 
தீர்மானித்தது. இது குறித்த ஒரு அறிவிப்பாணையை 
டிசம்பர் 2010ல் இந்திய மருத்துவ கவுன்சில் (MCI) 
வெளியிட்டது. அதன்படி 2013ல் முதன் முதலில் 
நீட் தேர்வு இந்தியாவில் கொண்டு வரப்பட்டது. 
முதல் நீட் தேர்வு 2013 மே மாதத்தில் நடைபெற்றது.

தனியார் மற்றும் சிறுபான்மை கல்வி நிறுவனங்கள் 
இத்தேர்வை எதிர்த்து வழக்குத் தொடர்ந்தன.
அப்போதைய இந்தியாவின் தலைமை நீதிபதி 
அல்டாமிஷ் கபீர் தலைமையிலான அமர்வு 
நீட் தேர்வு செல்லாது என்று மூன்றுக்கு இரண்டு 
என்ற பெரும்பான்மையில் தீர்ப்பளித்தது. 
அல்டாமிஷ் கபீர் பணி ஒய்வு பெற்ற அதே நாளில்
இத்தீர்ப்பு வழங்கப் பட்டது. 

இத்தீர்ப்பை எதிர்த்து 2013 அக்டோபரில் இந்திய 
மெடிக்கல் கவுன்சில் (MCI) மேல்முறையீடு செய்தது.
டாக்டர் மன்மோகன்சிங் அரசு நீட் தேர்வு 
வேண்டும் என்று உறுதியாக இருந்தது. 

மேல்முறையீட்டில் ஏப்ரல் 2016ல் அரசமைப்புச் 
சட்ட அமர்வு (CONSTITUTIONAL BENCH) 
நீட் தேர்வு செல்லும் என்று தீர்ப்பளித்தது.

இதைத் தொடர்ந்து நாடாளுமன்றத்தின் இரு 
அவைகளிலும் நீட் தேர்வு குறித்த மசோதா 
2016ல் சமர்ப்பிக்கப் பட்டது. மக்களவையில் 
2016 ஜுலை 18ல் நீட் மசோதா நிறைவேறியது.
மாநிலங்களவையில் ஆகஸ்ட் 1ல் நீட் மசோதா 
நிறைவேறியது. 

இதைத் தொடர்ந்து ஜனாதிபதி பிரணாப் 
முகர்ஜி நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட 
இரு மசோதாக்களிலும் 2016 ஆகஸ்டு 8ல் 
கையெழுத்திட்டார். அன்று முதல் நீட் தேர்வு 
இந்தியாவில் சட்டமானது. அதாவது நீட் தேர்வுக்கு 
அரசமைப்புச் சட்ட அந்தஸ்து வழங்கப் பட்டது.
***********************************************************
 

வியாழன், 17 ஆகஸ்ட், 2023

பூஜ்ய நிழல் நாள் (Zero Shadow Day) சென்னை 
நகரில் ஆகஸ்டு 18 தேதியில் வருகிறது. 
வரும் நேரம் 12:17 Hours IST. மதியம்
12 மணி 17 நிமிடம். காணுங்கள்.


--------------------------------------------------       யில்  வெள்ளி 
  POOJYA 

ஆகஸ்டு 18 வெள்ளியன்று மதியம் 12.17 மணி 
சென்னையில் பூஜ்ய நிழல் நாளை பார்த்து 
பூஜ்ய நிழலை சோதித்து அறிவேன் என்பவர்கள் 
கைதூக்கவும்.


பூஜ்ய நிழலை சோதித்து அறிவது எப்படி?
மிக எளிது. மிக மிக எளிது.
இதுகுறித்து முன்பு நான் அறிவியல் ஒளி ஏட்டில் 
எழுதிய பூமியின் சுற்றளவு பற்றிய கட்டுரையை 
எடுத்துப் படியுங்கள். 

இன்னொரு கட்டுரையிலும் எழுதி இருக்கிறேன்.
கட்டுரையின் பெயர் நினைவில் இல்லை.
அதையும் கண்டுபிடித்துப் படியுங்கள்.




இந்தியாவின் தலைநகர் டெல்லியில் பூஜ்ய நிழல் நாள் 
ஏற்படுமா? ஏற்படாது என்றால் என்ன காரணம்?
ஏற்படும் என்றால் என்ன தேதியில்? விடையளிப்பது 
கட்டாயம்.


பூஜ்ய நிழல் நாள் ஓராண்டில் எத்தனை முறை 
ஏற்படும்? அ) 1 முறை ஆ) 2 முறை இ) 30 முறை 
ஈ) 31 முறை. சரியான விடை என்ன?

     

  

எம்ஜியார் நடித்த ஆயிரத்தில் ஒருவன் படம் 
தமிழகத்தில் அடிமைமுறை இருந்ததற்குச் சான்றா?
-------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம் 
----------------------------------------------------------------
மானுட வரலாற்றில் ஐரோப்பாவில் நிலவிய அடிமைச் 
சமூகம் குறித்து மிகப் பெருமளவுக்கு ஆதாரங்கள் 
உள்ளன. எனினும் அடிமை முறையின் தோற்றம் 
(origin) எப்போது என்பதைப்பொறுத்த நினைவுகள்  
மானுட வரலாற்றில் இல்லை.

ஏதன்ஸ், ரோம் ஆகிய இடங்களில் பெருமளவு 
அடிமைகள் இருந்தமைக்கு சான்றுகள் 
அபரிமிதமாக உள்ளன.

அடிமை என்பவன் கண்டிப்பாக ஒரு எஜமானனுக்குச் 
சொந்தமாக இருக்க வேண்டும். ஒரு அடிமை என்பவன் 
ஒரு ஆண்டையின் உடைமை. ஸ்கூட்டர், கார் 
போன்றவை ஒருவருக்குச் சொந்தமாக இருப்பது போல 
அடிமையும் ஒருவரின் உடைமையாக இருக்க வேண்டும்.
எவர் ஒருவருக்கும் சொந்தமாக இல்லாமல் 
இருப்பவன் சுதந்திர மனிதன். ஆனால் அடிமை 
சுதந்திரம் அற்றவன்.அவன் எவருக்கேனும்
சொந்தமான ஒரு பொருளாக இருந்தே தீர வேண்டும்.   
இதுதான் அடிமையின் இலக்கணம்.   

ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் அடிமைகள் 
நிறைந்து இருந்தனர். கிமு முதல் நூற்றாண்டில்
ரோமாபுரியை எதிர்த்து அடிமைகள் பெருங்கலகத்தில் 
ஈடுபட்டனர். கிளாடியேட்டரான ஸ்பார்ட்டகஸ் என்பவர் 
அடிமைகளின் கிளர்ச்சிக்குத் தலைமை தாங்கினார் 
என்பதெல்லாம் ஐரோப்பாவின் ஏடறிந்த வரலாறு.

தமிழ்நாட்டில் அடிமைமுறை இருந்ததாகச் சிலர் 
சொல்லிக்கொண்டு திரிகிறார்கள். எம்ஜியார் 
நடித்த ஆயிரத்தில் ஒருவன் படத்தை மீண்டும் 
மீண்டும் பார்க்கும் பழக்கமுடைய இவர்கள், அதில் 
அடிமைகள் இருப்பது பற்றிய காட்சிகளைப்
பார்த்து விட்டு தமிழகத்தில் அடிமை முறை 
இருந்ததாக முடிவுக்கு வருகிறார்கள். மேலும்  
அதே எம்ஜிஆர் நடித்த அடிமைப்பெண் படத்தை
கூடுதல் சான்றாகக் காட்டுகிறார்கள்.

அவர்களைச் சொல்லிக் குற்றமில்லை. அவர்களால் 
அவர்களின் அறிவு வளர்ச்சிக்கு ஏற்றவாறுதான் 
சிந்திக்க இயலும். 

ஐரோப்பாவில் அடிமை முறை இருந்ததால் 
தமிழ்நாட்டிலும் அடிமை முறை இருந்திருக்க 
வேண்டும் என்று சொல்லும் இவர்கள்
ஐரோப்பாவில் ஸ்பார்ட்டகஸ் தலைமையில் 
அடிமைகள் கிளர்ச்சி செய்தார்களே, அது போல் 
தமிழகத்தில் யார் தலைமையில் அடிமைகள் 
கிளர்ச்சி செய்தனர் என்றும் சொல்ல வேண்டும் 
அல்லவா! சொல்ல மாட்டார்கள்! சொல்ல இயலாது!
காரணம் இங்கு அடிமைமுறை இல்லை. அடிமைமுறை 
ஒரு உற்பத்தி முறையாக இல்லை. இங்கு அடிமைச் 
சமூகம் இருந்திருக்கவில்லை.
*********************************************  
   



       

  

புதன், 16 ஆகஸ்ட், 2023

 முக்கியக் குறிப்பு!
------------------------------
இந்தக் கணக்கில், வசதிக்காகவும் 
புரிய வைப்பதற்காகவும் periselene 153 km 
என்றும் aposelene 163 km என்றும் எடுத்துக் 
கொண்டுள்ளோம். நிலவின் ஆரத்தைக் 
கணக்கில் கொள்ளவில்லை.
(நிலவின் ஆரம் = 1738 km). 

apogee, perigee எப்படிக் கணக்கிடுகிறோம்?
பூமியின் மையத்தில் இருந்து கணக்கிடுகிறோம்.
அதாவது farthest, closest points உடன் பூமியின் 
ஆரத்தைச் சேர்க்கிறோம்.

அது போலவே aposelene, periselene 
கணக்கிடும்போதும் நிலவின் மையத்தில் 
இருந்து கணக்கிட வேண்டும்.          
லல்லு பிரசாத்தின் மயிரைக் கூடப் 
பிடுங்க முடியாத சட்டமும் நீதியும்!
------------------------------------------------------
மாட்டுத் தீவன ஊழல் வழக்கு என்பது ஒரு 
ஒற்றை வழக்கு அல்ல. அது பல வழக்குகளைக் 
கொண்டது. இதில் லாலு பிரசாத் மீது மட்டும் 
ஐந்து வழக்குகள் தொடுக்கப் பட்டன. ஐந்திலும் 
தீர்ப்பு வந்து விட்டது.

இந்த ஐந்து வழக்குகளிலும் லல்லு பிரசாத் யாதவிற்கு
தண்டனை கிடைத்தது. ஒன்றில் கூட அவர் 
நிரபராதி என்று விடுவிக்கப் படவில்லை.   

ஊரு வழக்கில் அவருக்கு ஐந்தாண்டு சிறை தண்டனை 
கிடைத்தது. இன்னொரு வழக்கில் அவருக்கு 14 ஆண்டு 
சிறை தண்டனை கிடைத்தது. 

என்றாலும் இவ்வளவுக்கு அப்புறமும் லாலு பிரசாத் 
யாதவ் கடந்த சில ஆண்டுகளாக ஜாமீனில்தான் 
இருக்கிறார். ஜாலியாக இருக்கிறார். வெளிநாடு 
சென்று வந்தார்.

இந்தியாவின் சட்டமும் நீதியும் லாலு பிரசாத் 
யாதவின் மயிரைக் கூடப் பிடுங்க முடியாது 
என்பது அனுதினமும் நிரூபிக்கப் பட்டுக் கொண்டு 
இருக்கிறது.

இந்தியா குற்றவாளிகளின் சொர்க்கம்.
இந்தியா திருட்டுப் பயல்களின் சொர்க்கம்!
இந்தியா ஊழல் பெருச்சாளிகளின் சொர்க்கம்.

மோடியும் அமித்ஷாவும் என்ன செய்து கொண்டு 
இருக்கிறார்கள்? அவர்களால் லாலு பிரசாத்தின் 
மயிரைக் கூடப் பிடுங்க முடியவில்லை என்பதைப் 
பார்க்கிறோம்..
*************************************************


பிரசாத் யாதவைத் தொடக்கூட முடியவில்லை 


 

செவ்வாய், 15 ஆகஸ்ட், 2023

ஒளி குறித்த சில விவரங்கள்!
------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
--------------------------------------------- 
******************************
ஒளியின் பாதையும் பயணமும்!
-------------------------------------------------
ஒளியானது ஒரு ஊடகத்தினுள் செல்லும்போது 
எவ்வித பாதை விலகலும் (deviation) அடையாமல் 
நேர்கோட்டுப் பாதையில் செல்லும். இது 
ஒளியின் நேர்கோட்டுச் செல்கை 
(rectilinear propagation of light) எனப்படும்.
இது நியூட்டனின் முதல் விதிக்கு உட்பட்டது.

ஒளியின் பாதையில் வேறொரு ஊடகம் 
குறுக்கிடுமானால், ஒளியானது விலகல் 
அடையும். இது ஒளி விலகல் (refraction) 
எனப்படும். அதாவது ஒளியானது தான் 
அதுவரை சென்ற பாதையில் இருந்து 
விலகிச் செல்லும்.  

காற்று ஒரு ஊடகம். தண்ணீர் ஒரு ஊடகம்.
கண்ணாடி ஒரு ஊடகம். ஒவ்வொன்றும் 
வெவ்வேறு ஒளிவிலகல் எண்ணை உடையவை.
(refractive index).   

ஒளியானது ஆற்றலின் துகள் ஆகும்!
-------------------------------------------------------
துகள்கள் இரண்டு பெரும் பிரிவுகளில் 
அடங்குபவை.
ஒன்று: பொருள்சார் துகள்கள் (matter particles).
இன்னொன்று: ஆற்றல்சார் துகள்கள் (energy particles).

இதில் ஒளியானது ஆற்றல்சார் துகள் ஆகும்.
இது அணுவின் உட்கருவில் உண்டாவதில்லை. 
ஒளியை அழிக்க முடியாது. ஒளி என்பது 
ஆற்றல் ஆகும். ஆற்றலை அழிக்க இயலாது.
ஆற்றலின் அழியாமை விதி இருக்கிறது. 

Law of conservation of energy:
Energy can neither be created nor be destroyed 
but can be transformed from one form to another.    
(Light energy, heat energy, electrical energy போன்றவை 
ஆற்றலின் வெவ்வேறு வகைக்கு  உதாரணங்கள்).
******************************************** 
 

ஞாயிறு, 13 ஆகஸ்ட், 2023

அகச்சான்றும் இல்லை!
புறச்சான்றும் இல்லை! 
தமிழகத்தில் அடிமை முறை நிலவவில்லை!
----------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம் 
--------------------------------------------------------------  
உலகின் வேறெந்த மொழியையும் விட அதிகமான 
இலக்கியங்களைக் கொண்ட மொழி தமிழ்.
தமிழின் இலக்கியங்கள் அளவிடற்கு அரியவை.

சங்க இலக்கியங்களான பத்துப் பாட்டும் எட்டுத் 
தொகையும் சேர்த்து மொத்தம் 18 நூல்கள். இவை 
பதினெண் மேல்கணக்கு என வழங்கப் படுகின்றன.
இவற்றில் எட்டுத் தொகை நூல்கள் யாவும் 
தொகுக்கப்பெற்ற நூல்கள். சான்றாக புறநானூறு
என்பது ஒற்றை நூலாகக் கருதப் படினும், அது 
400 பாடல்களைக் மொண்ட நூலாகும். அது போன்றதே 
அகநானூறும்.

அதற்கடுத்து பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள்.
திருக்குறள் பதினெண் கீழ்க்கணக்கு நூலாகும்.
ஆக மேல் கணக்கு, கீழ்க்கணக்கு என்னும் 
இரண்டிலும்  சேர்த்து மொத்தம் 36 நூல்கள்.

இவை 1500 ஆண்டுகள் முதல் 2500 ஆண்டுகள் 
வரையிலான  தொன்மை வாய்ந்தவை. இவற்றில் 
தமிழகத்தில் அடிமை முறை நிலவியதற்கான 
எச்சான்றும் இல்லை.

சரி, 2000 ஆண்டுத் தொன்மை வாய்ந்த தொல்காப்பியம் 
என்னும் இலக்கண நூலில் அடிமை முறை பற்றி 
ஏதேனும் குறிப்பு உண்டா? இல்லை.

ஐம்பெருங்காப்பியங்களில் உண்டா/ இல்லை.
பக்தி இலக்கியங்களில் உண்டா? இல்லை.
சைவ இலக்கியமான பன்னிரு திருமுறையிலோ 
வைணவ இலக்கியமான நாலாயிரம் திவ்விய 
பிரபந்தத்திலோ அடிமைமுறை நிலவியதற்கான 
ஒரு அணுவளவு சான்றெனும் உண்டா?  இல்லை!

கல்வெட்டுகளில் உண்டா? செப்பேடுகளில் உண்டா?
இல்லை  இல்லை!! இல்லவே இல்லை!!!

ஆக தமிழகத்தில் அடிமை முறை நிலவியது 
என்பதற்கான அகச்சான்றும் இல்லை; புறச்
சான்றும் இல்லை. ஏனெனில் தமிழகத்தில் 
அடிமை முறை நிலவவில்லை.
----------------------------------------------   
    

தமிழகத்தில் அடிமைமுறை இல்லை!
தொல்காப்பியம் கூறுவது என்ன?
----------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம் 
--------------------------------------------------
அடியோர் பாங்கினும் வினைவலர் பாங்கினும்
கடிவரை இலபுறத்து என்மனார் புலவர்.
(தொல்காப்பியம்; அகத்திணையியல்-25)

மேற்கூறிய இரண்டு அடிகளைச் சுட்டிக்காட்டி
அடிமைமுறை தமிழகத்தில் இருந்ததாகக் 
கூறுகின்றனர் சிலர். இது நகைப்புக்கு உரியது.

மேற்கூறிய அடிகள் அகத்திணை இயலில் வருபவை.
அகம் என்பது காதல் வாழ்க்கை பற்றியது.
இது அடிமைமுறை பற்றியதே அல்ல.

அன்பின் ஐந்திணை பற்றித் தெரிந்திருக்கும் 
அன்பர்கள் மேற்கொண்டு படிக்கவும்.
ஐந்திணைக்குப் புறம்பாக, அதாவது ஐந்திணைக்கு 
வெளியே கைக்கிளை என்றும் பெருந்திணை 
என்றும் இரண்டு திணைகள் உண்டு. இவை 
பெருந்தாக் காமம் பற்றியவை.

மேற்கூறிய இரண்டு அடிகளும் கைக்கிளை 
பெருந்திணைக்கு உரிய மக்களைக் குறிப்பவை.
அடியவர் என்போர் கைக்கிளைக்கு உரியோர்.
ஒருதலைக்காதல் புரிவோர்.

பெருந்திணை என்பது பொருந்தாக்காமம்.
வயது முதிர்ந்த கிழவன் வயதில் இளைய 
பெண்ணை மணப்பது பெருந்திணை.
வினைவலர் என்போர் பெருந்திணைக்கு 
உரியோர். இவ்விரு சாராரும் அடிமைகள் அல்லர்.

எனவே தொல்காப்பியம் தமிழகத்தில் அடிமைமுறை 
இல்லை என்பதற்குச் சான்றாகத் திகழ்கிறது.
************************************************   

நமது பேசுபொருளைப் பொறுத்து, நாலடியார் 
காலத்தால் பிந்திய இலக்கியம். நாலடியாரில் 
உள்ள 400 பாக்களில் சொல்லப்பட்ட விஷயம் 
ஏன் திருக்குறளின் 1330 பாக்களில் இல்லை? 

திரு பாமரன் அவர்கள் கவனத்திற்கு!
அடிமை முறை ஒரு உற்பத்தி முறையாக 
தமிழ்நாட்டில் இருக்கவில்லை!
-------------------------------------------------------
நாலடியாரும் திருக்குறளும் பதினெண் 
கீழ்க்கணக்கு நூல்களே. நாலடியாரில் 
அடிமைமுறை பற்றி எதுவும் இல்லை. 
திருக்குறளிலும் இல்லை.  

அடிமை முறை இல்லை என்று சொல்வதன் 
பொருள்  அது ஒரு உற்பத்தி முறையாக 
(mode of production)  இருக்கவில்லை என்பதுதான்.

இந்த நவீன காலத்தில்கூட, கொத்தடிமைகளை
மாவட்ட கலெக்டர் மீட்டு வந்தார் என்ற செய்திகளை 
நாம் அறிவோம். இதை வைத்துக் கொண்டு 
தற்காலத்தில் அடிமை முறை உள்ளதாக 
அதாவது அடிமை முறை என்பது ஓர் உற்பத்தி 
முறையாக இருந்ததாகக் கூற இயலாது.

பக்தி இலக்கியங்கள் எழுதப்பட்ட காலம் 
நிலவுடைமைச் சமூக காலம் ஆகும். 
அக்காலத்தில் சிலர் அடிமைகளாக 
இருந்திருக்கக் கூடும். ஆனால் அடிமை முறை 
ஓர் உற்பத்திமுறையாக இருந்ததா என்றால் 
இல்லை என்பதே விடை. நிலவுடைமைச் சமூக 
அமைப்பு நிலவும்போது, நிலவுடைமை 
உற்பத்திமுறை நிலவும்போது அடிமை முறை 
எப்படி இருக்க இயலும்?

காலந்தோறும் அங்கும் இங்குமாக அடிமைகள் 
இருந்துள்ளனர். இதற்கு இன்றைய நவீன 
காலமும் விதிவிலக்கல்ல. கொத்தடிமை மீட்பு 
என்பது அவ்வப்போது நாம் கேள்விப்படும் 
செய்திதான். அதற்காக இன்றைய 
முதலாளித்துவ உற்பத்தி முறையை 
அடிமைமுறை  என்று கூற இயலாது.

தமிழகத்தில் மட்டுமல்ல, மொத்த இந்தியாவிலும் 
அடிமை முறை ஒரு உற்பத்திமுறையாக 
இருக்கவில்லை. இந்தியாவில் வருணங்கள் 
உருவாகின. அதைத் தொடர்ந்து சாதிகள் 
உருவாகின. அனால் இங்கு ஐரோப்பிய பாணி 
அடிமை முறை உருவாகவில்லை. வருணமோ 
சாதியோ ஐரோப்பிய அடிமை முறை அல்ல.

வருணமும் சாதியும் உருவான ஒரு சமூகத்தில்,
அடிமைமுறை ஒரு உற்பத்தி முறையாக எப்படி 
இருக்க இயலும்?

தமிழ்நாட்டில் அடிமைகளின் எஜமானர்கள்
யார் யார்? அவர்களின் பெயர்கள் என்ன? 
ஒவ்வொருவரும் எத்தனை அடிமைகளை 
வைத்திருந்தனர்? இது பற்றியெல்லாம் ஏதாவது 
ஒரு அணு அளவேனும் சான்று உண்டா?

அடிமைகளின் கிளர்ச்சி பற்றியோ அவர்கள் 
நடத்திய வர்க்கப் போராட்டம் பற்றியோ 
ஏதேனும் ஒரு குறிப்பு உண்டா? சமுதாய மாற்றம் 
என்பது போராட்டத்தின் மூலமோ அல்லது புரட்சியின்
மூலமாகத்தான் ஏற்பட இயலும் என்கிறது 
மார்க்சியம். அடிமைகள் நடத்திய வர்க்கப் 
போராட்டம் குறித்து ஏதேனும் சான்று உண்டா?
இல்லை. ஏனெனில் தமிழகத்தில் அடிமை முறை 
ஒரு உற்பத்தி முறையாக (mode of production) இல்லை.   
  


 


 
  
நாங்குநேரி: தலித் மாணவனை வீடு புகுந்து 
தாக்கிய வெறிச்செயல் சாதியக் கொடூரத்தின் உச்சம்!
ஒரு மூல வினையின் எதிர்வினையே இது!
-----------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம் 
-------------------------------------------------------------
நான் திருநெல்வேலிக்காரன்! வீரவநல்லூர்,
சேர்மாதேவி, களக்காடு, நாங்குநேரி ஆகியவை 
அருகருகே உள்ள ஊர்கள். நெல்லை மாவடடத்தின் 
தென் பகுதியில் அமைந்த ஊர்கள் இவை.
திருநெல்வேலி-நாகர்கோவில் ரயில் தடத்தில் 
உள்ள ஊர் நாங்குநேரி.

நாங்குனேரியில் சிறப்புப் பொருளாதார மண்டலம் 
(SEZ) உள்ளது. இது பாடல் பெற்ற வைணவத் தலம்
ஆகும். சிறப்பு மிக்க வானமாமலை பெருமாள் 
கோவில் இங்குள்ளது.  

இரண்டே முக்கால் லட்சம் வாக்காளர்களைக் 
கொண்ட சட்டமன்றத் தொகுதி நாங்குநேரி. இது 
திருநெல்வேலி நாடாளுமன்றத் தொகுதியில் 
அடங்கியது. நாடார்கள், தேவர்கள், தலித்துகள் 
ஆகியோர் இத்தொகுதியில் பிரதானமான
சாதியினர். தலித்துகள் மட்டுமே சுமார் 50,000
பேர் இத்தொகுதியில் வாழ்கின்றனர்.

தற்போது இத்தொகுதியின் எம் எல் ஏவாக 
காங்கிரசின் ரூபி மனோகரன் உள்ளார். 
சில தேர்தல்களுக்கு முன்பு, காங்கிரசின் 
மறைந்த வசந்தகுமார் இங்கு எம் எல் ஏவாக 
இருந்தார். 

 தேவர்- தேவேந்திரர் சாதிய மோதல்களுக்கு 
நெல்லை மாவட்டம் பெயர் பெற்றது. எனினும் 
அண்மைக் காலமாக இவ்விரு சாதியினருக்கு 
இடையிலான முரண்பாடு கணிசமாக மழுங்கடிக்கப் 
பட்டுள்ளது. 

இதற்குக் காரணம் டாக்டர் கிருஷ்ணசாமியின் 
பட்டியல் வெளியேற்றக் கோரிக்கையே ஆகும்.
மொத்த தேவேந்திர சமூகத்தினரும் பட்டியல் 
வெளியேற்றத்தைக் கோருவதால் சாதிய  
முரண்பாடுகளுக்கான சூழல் கூர்மழுங்கி வருகிறது.

அப்படி இருக்கையில் அண்மையில் நாங்குனேரியில் 
12ஆம் வகுப்பு பள்ளி மாணவன் சின்னத்துரையின் 
வயது 17) வீடு புகுந்து நடந்த தாக்குதல் எப்படி நிகழ்ந்தது?
பறையர் சமூகத்து மாணவன் சின்னத்துரையின் 
வீடு புகுந்து தாக்கியவர்கள் அவனுடன் பயிலும் 
தேவர் சமூக மாணவர்களே. இவர்கள் 18 வயதுக்கு 
உட்பட்ட மைனர் சிறுவர்கள்.

சிறுவர்கள் ஏன் பிஞ்சிலே பழுக்கின்றனர்? 
அதற்கான சமூகச் சூழல் என்ன என்பதை 
அறியாமல் இது போன்ற சாதிய மோதல்களைப்  
புரிந்து கொள்ளவோ முடிவுக்குக் கொண்டு வரவோ 
இயலாது.

எனவே நாங்குநேரி விவகாரத்தில் உண்மையை   
அறியும்பொருட்டு வீரவநல்லூர் சேர்மாதேவி ஊர்களில் 
இருந்து சமூக உணர்வு மிக்க சிலர் நாங்குனேரிக்குச் 
சென்றனர். அங்கே இரண்டு நாட்கள் தங்கி, 
தொடர்புடைய அனைவரையும் சந்தித்து 
உரையாடினர். தொடர்புடைய சாதியினரின் 
முறையீட்டையும் காத்து கொடுத்துக்கேட்டனர். 
அதன் பின், திரண்ட உண்மைகளுடன் 
ஊர் திரும்பினர். அவர்கள் ஆதாரங்களுடன் 
தெரிவித்த உண்மைகளையே இக்கட்டுரையில் நான் 
குறிப்பிடுகிறேன்.
       
நாங்குநேரி மாணவன் சின்னத்துரையின் வீடு புகுந்து 
அவனையும் அவன் தங்கை பத்து வயதுச் சிறுமியையும் 
அரிவாளால் வெட்டிய மாணவர்களின் செய்கை
பெருங்கொடூரமானது. எனினும் இது மூலவினை அல்ல
என்ற உண்மை அதிர்ச்சி தருகிறது. ஏற்கனவே நிகழ்ந்த 
ஒரு வினையின் எதிர்வினையாகவே இக்கொடூரம் 
நிகழ்ந்துள்ளது.

சின்னத்துரை தாக்கப்பட்டதற்கு முந்திய மாதம்,
அதாவது சூலை மாதத்தில், இதே நாங்குனேரியில் 
12ஆம் வகுப்பு படிக்கவும் கார்த்திக் (வயது 17) 
என்னும் தேவர் சாதி மாணவன் தாக்கப் பட்டான்.
இவனை பிளேடால் அறுத்துக் கொல்ல முயன்றவர்கள்
அதே பள்ளியில் 10ஆம் வகுப்பு படிக்கும் தலித் 
மாணவர்கள்.

பத்திரிகைகளில் செய்தி வந்தும், இக் கொடூர நிகழ்வு
சமூகத்தின் கவனத்தை ஈர்க்கவில்லை. தமிழகத்தின் 
போலி முற்போக்குகள், போலி நக்சல்பாரிகள் 
ஆகியோருக்கு இது ஒரு பொருட்டல்ல என்பதால் 
தேவர் சாதி மாணவனை தலித் சாதி மாணவர்கள் 
தாக்கியதும் கொல்ல முயன்றதும் சமூகத்தின் 
கவனத்திற்கு வராமலேயே போய்விட்டன.

சமூகமோ அரசோ தங்களின் உயிரைப் பாதுகாக்க 
எவ்வித உத்தரவாதமும் தராது என்ற நிலையில் 
தங்களின் உயிரைத் தாங்களேதான் பாதுகாத்துக்
கொள்ளவேண்டும் என்ற அவல நிலைக்குத்  
தள்ளப்பட்ட மாணவர்கள் வன்முறையைக் கையில் 
எடுக்கிறார்கள். மேலும் பாதிக்கப்பட்ட தேவர் சாதி 
மாணவர்களுக்கு திராவிட இயக்கக் கட்சிகள் 
உற்ற துணையாக இருக்கின்றன. அவர்கள் கொடுக்கும் 
தைரியம் தேவர் சாதி மாணவர்களை பின்விளைவுக்கு 
அஞ்சாமல்  துணிச்சலுடன் செயல்படத் தூண்டுகிறது.

நக்சல்பாரி இயக்கம் வலுவிழந்ததும், சீனிவாசராவின் 
வழிவந்த கம்யூனிஸ்டுகள் (CPI, CPM)  போலிகளாகச் 
சீரழிந்ததும் தமிழ்ச் சமூகத்தில் சாதிய முரண்கள் 
கூர்மையடைந்து வருவதற்கான காரணங்கள் ஆகும்.
***********************************************

கு 

வெள்ளி, 11 ஆகஸ்ட், 2023

சந்திரயான்-3 குறித்த கணக்கு!
REALTIME SUM! 
-----------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம் 
---------------------------------------------
தற்போது சந்திரயான்-3 நிலவை ஒரு நீள்வட்டப் 
பாதையில் சுற்றி வருகிறது. சுற்றுப்பாதையின் 
அண்மைப் புள்ளி 174 கிமீ; சேய்மைப்புள்ளி 1437கிமீ.
எனில் நீள்வட்டப் பாதையின் மையப் பிறழ்ச்சி
(eccentricity) என்ன?  

இந்தக் கணக்கைச் செய்ய வேண்டும்.
வாசகர்களே செய்யுங்கள்.
---------------------------------------------------------

குறிப்பு: பதிவுடன் இணைக்கப்பட்ட படம் 
இந்தக் கணக்கிற்குப் பொருத்தமான 
படம் அல்ல. ஒரு நீள்வட்டப் பாதையைக் 
காட்டும் படம் மட்டுமே.

வியாழன், 10 ஆகஸ்ட், 2023

ரஷ்யாவின் ராஸ்காஸ்மாசும் 
இந்தியாவின் இஸ்ரோவும்!
சந்திரயான்-3யும் லூனா 25ம்.
-------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம் 
----------------------------------------------
லூனா 25 என்னும் லேண்டரை ரஷ்யா 
நம்மைப் போன்றே நிலவின் தென்துருவத்திற்கு 
அனுப்புகிறது. இதே ஆகஸ்ட் மாதத்தில்.

என்றாலும் இந்தியாவின் விக்ரமும் 
ரஷ்யாவின் லூனாவும் நிலவின் வெவ்வேறு
இடங்களில் இறங்குகின்றன. இரண்டுக்கும் 
இடையில் கணிசமான இடைவெளி உள்ளது.
எனவே மோதல் (collision) என்பதற்கெல்லாம் 
இடமே இல்லை.

இரண்டின் landing sitesம் வெவ்வேறானவை.
எனவே எவ்விதக் குறுக்கீட்டுக்கும் 
வழி இல்லை.
-------------------------------------------------
    
  

திங்கள், 7 ஆகஸ்ட், 2023

ஒரு வாரம் விடுப்பு எடுத்தேன்!
விடுப்பு முடிந்து இன்று முகநூலில் இயங்குகிறேன்!
----------------------------------------------------------------------------
கடந்த ஜூலை 30 முதல் நேற்று வரை முகநூலில் 
இயங்கவில்லை. இன்டர்நெட் இணைப்பு பழுது, 
குடியிருப்பில் வெள்ளை அடித்தது ஆகிய 
காரணங்களால் இணையத் தொடர்பு துண்டிக்கப் 
பட்டிருந்தது. இதுவே முகநூல் தொடர்பில் 
இல்லாமைக்குக் காரணம்.

இந்நிலையில் கடந்த ஜனவரி 30அன்று என் பிறந்தநாள் 
வந்தது. பிறந்தநாள் என்பதும் மற்றொரு நாளே 
என்பதுதான் எனது நடைமுறையாக இருந்தது.
ஆனால் முகநூலானது ஒருவரின் பிறந்தநாளை 
அகிலத்திற்கே அறிவித்து விடுகிறது.

மிகுந்த அன்புடன் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த 
நண்பர்களுக்கு எனது நன்றியைக் கூற இயலவில்லை.
அதற்காக வருந்துகிறேன். வாழ்த்திய அனைவருக்கும்
எனது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் 
கொள்கிறேன்.

சந்திரயான்-3 குறித்த பல முக்கிய விவரங்களை 
என்னால் முகநூலில் எழுத இயலவில்லை. இனி 
இப்போது முதலே எழுதத் தொடங்குகிறேன்.
********************************************                      

கடந்த ஜூலை 30 அன்று நான் 70 வயதை நிறைவு 
செய்து வயது 71ல் வாழத் தொடங்குகிறேன். 
பிறந்த நாளை ஒரு சராசரி நாளாகத்தான் இதுவரை 
கருதி வருகிறேன். உள்ளார்ந்தஅன்போடும் 
அக்கறையோடும் எனக்கு வாழ்த்துத் தெரிவித்த 
அனைத்து அன்பு நெஞ்சங்களுக்கும் மீண்டும் 
எனது நன்றியை உரைக்கிறேன். நன்றி! வணக்கம்!
--------------------------------------------

தாய்மடி முருகானந்தம் 


ராம்குமார் த ரா 

பத்ம. சிவ அசோகன் 

கா சதாசிவம் 

கதிரவன் குமரேசன் 
 

தாமதமாகிப்போன நன்றி!
----------------------------------------
கடந்த ஜூலை 30 முதல் நேற்று வரை முகநூலில் 
இயங்கவில்லை. இன்டர்நெட் இணைப்பு பழுது, 
குடியிருப்பில் வெள்ளை அடித்தது ஆகிய 
காரணங்களால் இணையத் தொடர்பு துண்டிக்கப் 
பட்டிருந்தது.

இந்நிலையில் கடந்த ஜனவரி 30ல் வந்த என் 
பிறந்த நாளுக்கு வாழ்து கூறிய அன்பு 
நண்பர்களுக்கு உடனடியாக எனது நன்றியைத் 
தெரிவிக்க இயலவில்லை. அதற்காக 
வருந்துகிறேன். தாமதமாக இப்போது எனது 
நன்றியைத் தெரிவிக்கிறேன். அதை ஏற்றுக் 
கொள்ளுமாறு வேண்டுகிறேன்.
அன்புடன், இளங்கோ பிச்சாண்டி.  மிக்க நன்றி!

பேராசிரியர் அவர்களுக்கு,
நான் தங்களின் பதிவைப் பார்த்த அக்கணத்தில்,
யாரும் விடை சொல்லவில்லை என்பதால் நான் 
விடை கூறினேன். கடந்த 20 ஆண்டுகளாக 
எந்தப்போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை.
நடுவராக இருக்க வேண்டிய வயதில் 
போட்டியில் பங்கேற்பது தகாது என்ற 
எண்ணம் கொண்டுள்ளேன்.

வாசகர்களோடு உரையாடும் பதிவுகளை 
ஊக்குவிக்கும் பொருட்டே இங்கு 
விடையளித்தேன். இத்தகைய interactive 
பதிவுகளை நான் வரவேற்கிறேன்.


முக்கியமான ஒரு விஷயத்தை எழுதும்போது,
எல்லோரும் தெரிந்து கொள்ள வேண்டிய ஒரு 
விஷயத்தை எழுதும்போது தமிழில் எழுத 
வேண்டாமா? தமிழில் இன்னொரு பதிவை எழுதுங்கள்.


ஊழல் ரத்னா விருதை இன்னமும் 
உருவாக்காமல் இருக்கும் மோடி அரசைக்  
கண்டிப்போம்! தமிழகத்தை வஞ்சிக்கிறார் மோடி!