வெள்ளி, 11 ஜூலை, 2014

புஷ்பராகம் பதித்த மூக்குத்தியும்
அந்தாதித்தொடையும்!
----------------------------------------------------------------------

பி. இளங்கோ சுப்பிரமணியன்
----------------------------------------------------------------------

(நிதியமைச்சர் அருண் ஜேட்லி சமர்ப்பித்த
மோடி அரசின் முதல் பட்ஜெட் 2014-2015:
ஒரு திறனாய்வு!)
-----------------------------------------------------------------------
எங்கே சொதப்பி விடுவாரோ என்ற அச்சம் சிலருக்கு.
கசப்பு மருந்து நிறைய இருந்து  தொலைத்து விடுமோ
என்ற கவலை சிலருக்கு. வெறும் வாயை மென்று
கொண்டு இருப்பவர்களுக்கு அவல் கொடுத்து
விடுவாரோ என்ற அரிச்சல் சிலருக்கு.

ஆனால் அனைவரின் பதற்றங்களும் அர்த்தமற்றுப்
போக, அருண் ஜெட்லி வெற்றிகரமாக உயரம்
தாண்டி விட்டார். REAL HIGH JUMP!

கசப்பு மருந்து இல்லை!
மக்களைப் பாதிக்கும் வரி விதிப்பு இல்லை!
மானியக் குறைப்பு இல்லை!
ஜேட்லியின் பட்ஜெட்டில் STUFF இருக்கிறதோ
இல்லையோ CRAFT இருக்கிறது!
வரிசையில் நிற்கும் எல்லோருக்கும் ஏதாவது
கிடைக்கிறது.சிலருக்கு வெண்பொங்கல்,
சிலருக்கு மிளகுவடை, சிலருக்கு சுண்டல்,
சிலருக்கு கல்கண்டு.வெறுங்கையுடன் யாரும்
போகவில்லை.

வைரம், வைடூரியம், முத்து, பவழம், மரகதம்,
மாணிக்கம், கோமேதகம், புஷ்பராகம், நீலம்
ஆகிய இவை நவரத்தினங்கள். எண்ணிப்
பாருங்கள், ஒன்பது வரும். நவரத்தினங்களின்
மீதான இறக்குமதிக்கான சுங்க வரியை
அருண் ஜெட்லி குறைத்து விட்டார்.அதனால்
கொற்கைப் பட்டினத்து முத்துக்களும் கோமேதகக்
கற்களும் விலை மலிகின்றன.

இனி குடிசை மாற்று வாரிய வீடுகளில் குடித்தனம்
நடத்தும் குப்பம்மா, முனியம்மா, மூக்கம்மா
ஆகிய எல்லோரும் புஷ்பராகக் கல் பதித்த
மூக்குத்திக்கு ஆசைப் படலாம்.

19 அங்குலத்துக்குக் குறைவான LCD, LED  டிவிகளின்
மீதான வரியைக் குறைத்தார் ஜேட்லி. கடைக்காரன்
விலையைக் குறைக்கிறான்.இனி தங்கள் வீடுகளில்
நல்ல நிலையில் ஓடிக்கொண்டிருக்கும், ரூ 37000
மதிப்புள்ள CRT   டிவிகளை  எக்சேஞசு மேளாவில்
கொடுத்து, பதிலாக ரூ 1000 பெற்றுக்கொண்டு,
ரூ 53000 விலையில் LED  டிவிகளை வாங்கச் சொல்லி
மனைவிமார்கள் கணவன்மார்களை நச்சரிக்கத்
தொடங்கி விடுவார்கள்.அந்தஸ்தின் அடையாளம்
( STATUS SYMBOL ) அல்லவா LCD டிவி!

LOW TECH டிவியான CRT டிவி என்ன பாவம் செய்தது
என்று நினைத்தார் போலும் ஜெட்லி! அதற்கும்
வரியைக் குறைத்து விட்டார்.

தாய்மார்களின் விருப்பப்படி,வரிக்குறைப்பு மூலம்
பின்வரும் வீட்டு உபயோகப் பொருட்களின்
விலையைக்  குறைத்துள்ளார் ஜெட்லி.

அ ) மேசைக்கணினி, மடிக்கணினி, டாப்லெட் கணினி
ஆ) மொபைல்   பேசிகள்
இ) பிரிட்ஜ் (குளிர் சாதனப் பெட்டி)
ஈ) வாஷிங்  மெஷின்
உ) தண்ணீர் சுத்திகரிப்பான் (ஆர்.ஓ)
ஊ) மைக்ரோவேவ் ஓவன்
எ) சோப்பு
ஏ) செருப்பு
ஐ) தீப்பெட்டி

இவ்வாறு கண்ணில் பட்டதை எல்லாம்
வரிக்குறைப்புச் செய்துகொண்டே வந்த ஜேட்லி
சிகரெட்டின் மீது மட்டும் இரக்கம் காட்ட   மறுத்து 
விடுகிறார். ஆனாலும் என்ன? பீடியை விட்டு விட்டார். 
சிகரெட்டுவிலை கட்டுப்படி ஆகாதவன் 
பீடிக்கு மாறி விடலாமே!

தாழ்த்தப்பட்டோர் நலனுக்கு ரூ 50548 கோடி!
பழங்குடியினர் நலனுக்கு ரூ 32387 கோடி!
மதரசாக்களை நவீனப் படுத்த ரூ 100 கோடி!
சூரிய மின்சக்திக்கு ரூ 1000 கோடி!
சொல்லிக்கொண்டே போகிறார் ஜெட்லி.
பொறுக்க முடியவில்லை சோனியாவுக்கு.
ஆற்றாமையுடன் புழுங்குகிறார்.

சிவகங்கையில் ஒரு ஆசிரமம் அமைத்து
அருள்வாக்குச் சொல்லலாமா என்று  எஞ்சிய
வாழ்க்கையைப் பற்றிய சிந்தனையில் இருக்கும்
ப.சிதம்பரம் இருக்கையை விட்டு எம்பிக்
குதிக்கிறார்.இது ஜேட்லியின் பட்ஜெட் அல்ல ;
என் பட்ஜெட்தான் என்கிறார்.பாருங்கள் அதில்
காங்கிரஸ் முத்திரை தெரியும் என்கிறார்.

உண்மையிலேயே, ஜேட்லியின் பட்ஜெட்
பாஜகவின் பட்ஜெட் அல்ல அது காங்கிரசின்
இடைக்கால பட்ஜெட்டின் தொடர்ச்சிதான்.
சிதம்பரம் முடித்த இடத்தில் இருந்து
ஜேட்லி தொடங்குகிறார். இதில் ஒரு அந்தாதித்
தொடையை நாம் காண முடியும்..   

செய்யுளில் ஓர் அடி எந்தச் சொல்லில் முடிகிறதோ
அதே சொல்லைக் கொண்டு அடுத்த அடியை
அமைப்பதுதான் அந்தாதி. ( உரைநடையில் வரி
எனப்படுவது செய்யுளில் அடி எனப்படும்;)
இதைப் புரிந்து கொள்ள, கண்ணதாசனின்
சினிமாப் பாட்டில் இருந்து ஒரு எளிய உதாரணம்
தருகிறேன்.  
   
 "தலையணையில் முகம் புதைத்து
      சரசமிடும் புதுக்கலைகள்:
 புதுக்கலைகள் தெரிவதற்கு
      பூமாலை மணவினைகள்;
 மணவினைகள் யாருடனோ "

இதுதான் அந்தாதி! சிதம்பரம்-ஜேட்லி பட்ஜெட்களில்
 பயின்று வருவதும் இதுதான்!

சிதம்பரத்தின் பட்ஜெட் ஒரு CENTRIST பட்ஜெட்!
அதன் தொடர்ச்சியான ஜேட்லியின்   பட்ஜெட்டும்
ஒரு CENTRIST  பட்ஜெட்தான்!

அரசியல் ரீதியாக, பட்ஜெட்டுகளை
மூன்று வகையாகப் பிரிக்கலாம்.
1) வலதுசாரி பட்ஜெட் (RIGHTIST BUDJET )
2) இடதுசாரி பட்ஜெட் (LEFTIST BUDJET )
3)  நடுச்சாரி பட்ஜெட் (CENTRIST BUDJET )

இவற்றுள், இடதுசாரி பட்ஜெட் உலகில்
யாங்கணும் இல்லை. அது மனிதனின் சுகமான
கற்பனையில் மட்டுமே தோன்றுகிற
கற்பனாவாத பட்ஜெட் (UTOPIAN). காங்கிரசின்
பட்ஜெட்கள் எப்போதுமே CENTRIST ஆனவை.
ஜவஹர்லால் நேரு காலம் தொட்டு
சிதம்பரம் காலம் வரை அப்படித்தான்.

பாஜக வலதுசாரிப் பொருளாதாரக் கொள்கைகளைச்
சொல்லிக் கொண்டிருந்த கட்சி.ஆனால் பட்ஜெட்டில்
அக்கொள்கை பிரதிபலிக்கவில்லை.பாஜகவின் முதல்
பட்ஜெட் எவ்விதத்திலும் ஒரு வலதுசாரி பட்ஜெட் அல்ல.
பாதுகாப்பு இன்சூரன்ஸ் துறைகளில் FDI ஐ
74 சதம் உயர்த்தி இருந்தால், பாஜகவின் பட்ஜெட்
வலதுசாரி பட்ஜெட் என்று துணிந்து கூறலாம்.
 குறைந்த பட்சம் 51 சதம் என்று கூட உயர்த்தி விடாமல்
கயிற்றின் மீது நடந்து காட்டினார் ஜெட்லி.

ஒருவேளை தீவிர வலதுசாரிப் பொருளாதார
அறிஞரான அருண் ஷோரியை  பாஜக
நிதியமைச்சராக்கி இருக்குமேயானால்
அவர் துணிந்து செயல்பட்டு இருக்கக் கூடும்.

ஆக ஒரு விஷயம் தெளிவாகத் தெரிகிறது.
மோடி அரசின் பொருளாதாரத் திசைவழியை
(ORIENTATION) அறிவிக்கும் பட்ஜெட் இதுவல்ல.
அடுத்த பட்ஜெட்டில், பாஜக வலதுசாரியா
நடுச்சாரியா என்பது புலப்பட்டுவிடும்.

பட்ஜெட் மீதான விமர்சனம் என்ற பெயரில் 
புளிப்பேறிப்போன கருத்துக்களைக் 
கடைவிரிக்கிறார்கள் நாடாளுமன்ற 
"இடதுசாரி" நண்பர்கள்.புறச் சூழ்நிலை 
குறித்த எந்தவிதமான பருண்மையான ஆய்வையும் 
மேற்கொள்ளாமல், தங்களின் அகநிலையில் இருந்து 
தேங்கிப்போய் பாசிபிடித்துக் கிடக்கும் கசடுகளை 
கருத்துக்கள் என்ற பெயரில் கடைவிரித்து 
சூழலை மாசு படுத்துகிறார்கள் இவர்கள்.

யார் பட்ஜெட் போட்டாலும்,
லெனினே வந்து பட்ஜெட் போட்டாலும் 
பின்வரும் நான்கு வாக்கியங்களைக் 
கிளிப்பிள்ளைப் பாடமாகச் சொல்லுபவர்கள் இவர்கள்.

1) இது தனியார்மயத்தை ஊக்குவிக்கிறது.
2) இது பெரு  முதலாளிகளுக்குச் சாதகமானது.
3) இது அந்நிய முதலீட்டை நம்பி உள்ளது.
4) இது மக்கள் விரோத பட்ஜெட்.
கி.பி 3014ல் ஒரு பட்ஜெட் போட்டாலும் இவர்கள் 
கிளிப்பிள்ளை போல் இதைத்தான் சொல்லிக் 
கொண்டு இருப்பார்கள். 

மகத்தான நவம்பர்  சோஷலிசப் புரட்சிக்குப் 
பின்னால், புரட்சி நடந்த மறுநாளே,
அதாவது, நவம்பர் 8, 1917 அன்று 
ரஷ்யாவில் நிலம் முழுவதும் அரசுடைமை 
ஆக்கப் பட்டது. 1920இல் விவசாய உற்பத்தி 
குறைந்தது.உபரி தானியம் முழுவதையும் அரசு 
கட்டாயக் கொள்முதல் செய்ததால், விவசாயிகள் 
ஊக்கம் இழந்தார்கள். தொழில்துறையும் 
இதுபோல் பாதிக்கப் பட்டது.  

இதற்குத் தீர்வாக லெனின் "புதிய பொருளாதாரக் 
கொள்கை"யை வகுத்தார்.தானியங்களின் கட்டாயக் 
கொள்முதல் கைவிடப்பட்டது.தொழில்துறையில் 
தனியுடைமை அனுமதிக்கப் பட்டது. நடுத்தர  
மற்றும் பெரிய தொழில்களில் வெளிநாட்டு 
மூலதனம் அனுமதிக்கப் பட்டது. 

லெனின் வகுத்துச் செயல்படுத்திய புதிய 
பொருளாதாரக் கொள்கை அன்று ரஷ்யாவின்  
(சோவியத் ஒன்றியத்தில்) சிக்கல்களுக்குத் 
தீர்வாக அமைந்தது.   

FDI  என்றவுடனே, தீயை மிதித்தவன் போல் 
அலறுவதை விட்டு விட்டு , லெனின் 
எந்தச் சூழ்நிலையில் அனுமதித்தார் 
என்று ஆராய்ந்து தெளிவதே இன்றைய தேவை.

பின்குறிப்பு:
---------------- 
1) ஜெட்லியின்  பட்ஜெட், ஒரு முதலாளித்துவ 
அரசாங்கம் போடுகிற, ஒரு முதலாளித்துவ 
பட்ஜெட். அதை சோஷலிச அளவுகோல்களைக் 
கொண்டு அளக்க முற்படுவது சரியன்று.
2) லெனின் வகுத்த புதிய பொருளாதாரக் கொள்கை 
குறித்த தெளிவு இடதுசாரிகளுக்கு அவசியம்.

***************************************************** 
   




    

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக