வியாழன், 24 ஜூலை, 2014

பகுத்தறிவுக்கு எதிரான பாதையில்
மோடி அரசு!
------------------------------------------------------- 
மதச்சின்னங்களை அணிந்து விளையாட
அனுமதி மறுப்பு-- ஆசியக் கோப்பை கூடைப்பந்து--
----------------------------------------------------------------------------------------------------------------------- 

ஆசியக்கோப்பை கூடைப்பந்து   விளையாட்டுபோட்டி 
அண்மையில் ( ஜூலை 2014 இரண்டாம் மூன்றாம் 
வாரங்களில் ) சீனாவில் உஹான் நகரில் நடைபெற்றது.
இப்போட்டியில் பங்கேற்ற இந்திய அணியில் 
இரண்டு சீக்கியவீரர்கள் இடம்பெற்றிருந்தனர்.
அம்ரித்பால்சிங், அம்ஜ்யோத்சிங் ஆகிய இருவரே அவர்கள்.

ஜூலை 12 அன்று ஜப்பானுக்கு எதிரான போட்டியில் 
விளையாட இவ்விரு வீரர்களும் ஆடுகளத்துக்குச் 
சென்றனர்.தங்கள் மத வழக்கப்படி தலைப்பாகை 
அணிந்து சென்ற இவர்களை,உலகக் கூடைப்பந்து
சம்மேளன ( FIBA ) அதிகாரிகள் அனுமதிக்கவில்லை.
 தலைப்பாகையைக் கழற்றினால்தான் அனுமதிக்க 
முடியும்  என்றனர். வீரர்களும் அதை ஏறறுத் 
தலைப்பாகையைக் கழற்றி விட்டுப் போட்டியில் பங்கு 
கொண்டனர். தொடரில் மீதமிருந்த ஆறு ஆட்டங்களிலும் 
தலைப்பாகையைக் கழற்றி வைத்து விட்டுத் தான் ஆடினர்.

நாடு திரும்பியதும் சீனாவில் தங்களுக்கு நேர்ந்த 
அவமதிப்பு(!!!) குறித்துப் புகார் கூறினர். மோடி அரசின் 
விளையாட்டுத் துறை அமைச்சர் சர்வானந்த  சோன்வால்
FIBA அதிகாரிகளுக்குக் கடுமையான கண்டனத்தைத் 
தெரிவித்துள்ளார்.

விளையாட்டுகளில் மதத்தைக் கலக்கும்அமைச்சரின் 
செயல் பிற்போக்குத் தனமானது. தலைப்பாகை அணிந்து 
விளையாட சீக்கியர்களை அனுமதித்தால், நாளை 
அலகு குத்திக்கொண்டு விளையாட அனுமதி கேட்டு 
தமிழ்நாட்டில் இருந்து ஒரு விளையட்டு வீரன் 
(அனேகமாக ஒரு முருகபக்தன் ) புறப்படலாம்.
இதற்கும் அமைச்சர் சர்வானந்த சோன்வால்
வக்காலத்து வாங்க நேரிடும். பின்னர் இது INFINITY  
வரை போகும். அமைச்சர் சர்வ  ஆனந்தத்தையும் 
இழக்க நேரிடும்.

சீக்கிய மதத்தின் மீது தமிழ் மக்கள் பெருமதிப்பு 
வைத்துள்ளனர். மாவீரன் பகத் சிங் நாத்திகர் என்ற 
போதிலும் சீக்கிய மதத்தில் பிறந்தவர்.நீண்ட தலைமுடியைக் 
கத்தரித்து விட்டுக்கொண்டு முகச்சவரம் செய்த 
தோற்றத்துடன் தான் பகத்சிங் சாகும்வரை காட்சி அளித்தவர்.
ஏனெனில் அவர் மெய்யான புரட்சியாளர்.

மறைந்த மார்க்சியக் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் 
ஹரிகிஷன்சிங் சுர்ஜித் ஒரு சீக்கியர்.தலைப்பாகை 
உள்ளிட்ட அனைத்து சீக்கிய மதப் பழமைகளையும் 
தீவிரமாகக் கடைப்பிடித்தவர். இதில் ஒன்றும் தவறு இல்லை.
ஏனெனில் சுர்ஜித் ஒரு புரட்சியாளர் அல்ல.எனவே 
பகத்சிங்கைப் போன்று அவர் ஒழுக வேண்டியது இல்லை.

சீக்கிய மதம் சடங்குகளுக்கு எதிரான மதம்தான்.
கிபி 15ஆம் நூற்றாண்டில் இந்தியாவில் பஞ்சாப்பில் 
தோன்றிய மதம் அது.தோற்றுவித்தவர் குருநானக்.
தோன்றிய காலம்தொட்டு தொடர்ந்து வளர்ந்து 
கொண்டு இருந்த சீக்கிய மதம் ஔரங்கசீப் காலத்தில் 
கடுமையாக ஒடுக்கப் பட்டது.1675இல் சீக்கிய மத குரு 
தேஜ் பஹதூர் ஔரங்கசீப்பால் படுகொலை செய்யப்பட்டார்.

88 வயது வரை  வாழ்ந்த ஔரங்கசீப் (1618-1707)
அரை நூற்றாண்டுக் காலம் ( 1658-1707) இந்தியாவை 
ஆண்டார்.முஸ்லிம்கள் அல்லாத தமது பேரரசின் 
மற்றக் குடிமக்கள் மீது ஜெசியா ( JIZYAH ) வரியை விதித்தார்.
இந்துக்கள் மீது ஜெசியா வரி விதிக்கப் பட்டது.
இந்துவாக இருப்பதற்காகச் செலுத்தப்பட்ட வரி அது.
அரசின் கருவூலத்தைப் பெருக்குவதற்காக விதிக்கப்பட்ட 
வரி அல்ல அது. மாறாக மத மேலாதிக்கத்தை உறுதி 
செய்வதற்காக விதிக்கப் பட்ட வரி இது.

மதவெறி கொலைத்தாண்டவம் ஆடிய ஔரங்கசீப் 
காலத்தில் இந்துக்களும் சீக்கியர்களும் ஒன்று கூடி 
ஓரணியில் திரண்டு,  வாழ்வதற்காகப் போராடினர்.
அந்த ஒற்றுமை இன்றும் நீடிக்கிறது.

வீரத்துக்கும் தியாகத்துக்கும் பெயர் பெற்ற 
சீக்கியப் பெருமக்கள் காலமாற்றத்துக்கு ஏற்ப 
பகுத்தறிவுடன் நடந்து கொள்ள வேண்டும்.
உலக நாடுகள் அனைத்தும் பங்கு கொள்ளும் 
பொதுவான ஒரு விளையாட்டில், தங்கள் மதத்தின் 
அடிப்படையில் தனிச்சலுகை கோருவது அவர்களின் 
வீரத்துக்கு  இழுக்கு ஆகும். விளையாட்டின் 
அடிநாதமான சமத்துவத்துக்கு எதிரானதாகும்.

    சீக்கிய வீரர்கள் வாழ்க!
    கூடைப்பந்து வாழ்க!!
    கூடவே பகுத்தறிவும் வாழ்க!!!

*************************************************************  
  
                

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக