புதன், 23 ஜூலை, 2014

பூப்படையாத சிறுமிகளை 
மஞ்சத்துக்கு அனுப்புவதா?
-------------------------------------------  

( குழந்தைத் திருமணம்-இந்தியாவுக்கு  ஆறாவது இடம்--
   UNICEF  அறிக்கை--மோடிக்கு நடைபெற்ற 
    குழந்தைத் திருமணம்--இன்ன பிற  )
--------------------------------------------------------------------------------  
ஐநா சபையின் உறுப்பு அமைப்பான  யுனிசெப்
( UNICEF) உலகம் முழுவதும் நடைபெறும் 
குழந்தைத் திருமணங்களை  ஆய்வு செய்து அறிக்கை 
வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கையின்படி,  
குழந்தைத் திருமணம் அதிகம் நடக்கும் 
நாடுகளில், இந்தியா ஆறாவது இடத்தில் உள்ளது.
மேலும் உலகில் நடைபெறும் குழந்தைத் திருமணங்களில் 
மூன்றில் ஒன்று இந்தியாவில் நடைபெறுகிறது.

நமது பிரதமர் நரேந்திர மோடிக்கு நடைபெற்ற 
திருமணம் குழந்தைத் திருமணமே. அத்திருமணம் 
நடைபெற்ற போது, மோடிக்கு வயது 18; அவரது மனைவி 
யசோதா பென்னுக்கு வயது 13.    

பிரிட்டிஷ் இந்தியாவில் குழந்தைத் திருமணங்கள் 
அதிக அளவில் நடைபெற்றன. ஒன்றிரண்டைத் தவிர 
நடந்த  எல்லாத் திருமணங்களும் குழந்தைத் 
திருமணங்களாகவே இருந்தன. ராஜாராம் மோகன்ராய் 
என்னும் சீர்திருத்தப் போராளி குழந்தைத் திருமணம், 
சதி என்னும் உடன்கட்டை ஏறுதல் போன்ற சமூகத் 
தீங்குகளுக்கு எதிராகப் போராடினார். இதன் விளைவாக,
1929இல் பிரிட்டிஷ் ஆட்சி  குழந்தைத் திருமணத் தடுப்புச் 
சட்டத்தைக் கொண்டு வந்தது.( CHILD MARRIAGE RESTRAINT 
ACT 1929).

சுதந்திர இந்தியாவில், குழந்தைத் திருமணத் தடைச் 
சட்டம் 2006இல் கொண்டு வரப்பட்டது ( THE PROHIBITION 
OF CHILD MARRIAGES ACT 2006).இச்சட்டப்படி, ஆணுக்கு 
21 என்றும் பெண்ணுக்கு 18 என்றும் திருமண வயது 
வரையறுக்கப் பட்டது. ஆண் பெண் இருவரில், எவர் 
ஒருவருக்கேனும் நிர்ணயிக்கப் பட்ட வயதை விடக 
குறைந்த வயது இருக்குமேயானால், அத்திருமணம் 
குழந்தைத் திருமணம் என்று இச்சட்டம் வரையறுக்கிறது.
இத் திருமணம் சட்டப்படி செல்லத் தக்கது அல்ல.
குழந்தைத் திருமணம் புரிந்த எவர் ஒருவரேனும் 
நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தால், அத்திருமணம் 
செல்லாது ( NULL AND VOID ) என்று அறிவிக்கப் படும்.     

எனினும் இந்தச் சட்டம் இந்து, கிறித்துவ,ஜைன,
பௌத்த மதத்தினருக்கு மட்டுமே பொருந்தும்.
முஸ்லிம்களுக்குப் பொருந்தாது.இந்தியாவில் 
பொது சிவில் சட்டம் இல்லாததால், இசுலாமியப் 
பெருமக்கள் ஷரியத் சட்டத்தைப் பின்பற்றி 
வருகிறார்கள்.ஷரியத் சட்டங்களும் சரி, முஸ்லிம் 
தனிநபர் சட்டங்களும் சரி, திருமண வயதை 
நிர்ணயிப்பதற்கு  காலவயதை (CHRONOLOGICAL AGE)
கணக்கில் கொள்வதில்லை.உடல் ரீதியாக ஏற்படும் 
வளர்ச்சியின் அடிப்படையில் திருமணத்திற்கான தகுதி 
வந்து விடுவதாகக் கருதுகிறார்கள்.எனவே, பெண் 
18 வயதை அடையும் வரை காத்திருப்பது என்பது 
தேவையற்றது என்பது அவர்கள் மனநிலை.

அறிவியல் ரீதியாகப் பார்த்தால், 18 மற்றும் 
21 வயதுகளில் மனித உடல் முழுவளர்ச்சி அடைந்து 
விடுவதில்லை. வளர்ச்சி இந்த வயதுகளைத் 
தாண்டியும் நீடிக்கிறது.எனவேதான்,சட்டப்படி 
ஏற்கத்தக்க 18 வயதைத் தாண்டி 21 வயதில் பெண் 
திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று அரசாங்கம் 
பரிந்துரைக்கிறது.

குழந்தைத் திருமணங்கள் உடல்நலக் கேடுகளை 
உருவாக்கும்.தாய்   சேய் இருவரின் உடல் நலமும் 
கெடும். பல்வேறு நோய்கள் பற்றிக் கொள்ளும்.
டீன் ஏஜ் திருமணங்கள் (TEEN AGE MARRIAGES)
கண்டிப்பாகத் தவிர்க்கப் பட வேண்டும். அறிவியல் 
ரீதியாக மட்டுமின்றி, பொருளாதார மற்றும் சமூக 
ரீதியாகவும் டீன் ஏஜ் திருமணங்கள்  நம் நாட்டுக்குப் 
பொருத்தமற்றவை;தேவையற்றவை.

தமிழ்நாட்டையே சோகத்தில் ஆழ்த்திய தருமபுரி 
இளவரசனின் காதலும் திருமணமும் தோல்வி 
அடைந்ததற்கான காரணம் அத்திருமணம் ஒரு 
குழந்தைத் திருமணம் என்பதுதான். திருமணத்தின்போது 
இளவரசனின் வயது 18 மட்டுமே என்பது,அத்திருமண 
முறிவுக்கும்  இளவரசனின் துயர மரணத்துக்கும் 
காரணமாக அமைந்தது. 18 வயது என்பது 
வெறும் டீன் ஏஜ் மட்டுமே! முதிராப் பருவம்;
சவால்கள் நிறைந்த வாழ்க்கையை எதிர்கொள்ளும் 
ஆற்றலும் பக்குவமும் பொறுமையும் இன்னமும்
தேவையான அளவுக்கு வளராத பருவம் 
டீன் ஏஜ் பருவம். டீன் எஜ்களில் ஏற்படும் உணர்வு 
காதல் அல்ல. அது வெறும் வயசுக் கோளாறு 
(. INFATUATION ).

எனவேதான் உலகெங்கும் அரசுகள் குழந்தைத் 
திருமணங்களைத் தடை செய்கின்றன. அரசின் 
இத்தகைய முயற்சிகளை வரவேற்பது பொறுப்புள்ள 
குடிமக்களின் கடமை.

***************************************************     



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக