திங்கள், 27 ஆகஸ்ட், 2018

மகத்தான மார்க்சிய லெனினியப் புரட்சியாளர்
தோழர் அன்வர் ஹோக்சா!
----------------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
--------------------------------------------------------------------------
வரலாறு இப்படி ஒரு மாமனிதரைப் படைத்திருக்கிறது.
அவர்தான் அன்வர் ஹோக்சா (Enver Hoxha 1908-1985)
மாபெரும் பாட்டாளி வர்க்கப் புரட்சியாளர்.

அல்பேனியா என்று ஒரு குட்டி நாடு. இதன் இன்றைய
மக்கள்தொகை 30 லட்சம். அதாவது திருநெல்வேலி
மாவட்டத்தின் மக்கள்தொகைக்குச் சமம். இந்த
நாடு தென்கிழக்கு ஐரோப்பாவில் உள்ளது.

அல்பேனியா நாட்டின் கம்யூனிஸ்ட் கட்சியின்
பொதுச் செயலாளராகவும், பிரதமராகவும்
இருந்தவர் தோழர் அன்வர் ஹோக்சா. நாற்பது
ஆண்டுகளுக்கும் மேலாக அல்பேனியா நாட்டை
ஆண்டு வந்தார். அல்பேனியாவின் கம்யூனிஸ்ட்
கட்சியின் பெயர் அல்பேனியத் தொழிலாளர்
கட்சி. (Labour party of Albenia).

1967ல் அல்பேனியாவை நாத்திக நாடாக
அறிவித்தார் அன்வர் ஹோக்சா. உலகின் முதல் 
நாத்திக நாடு என்ற பெயரை அல்பேனியா
பெற்றது. லெனினும் மாவோவும் தங்கள்
நாட்டை நாத்திக நாடு என்று அறிவிக்காதபோது
அன்வர் ஹோக்சா அல்பேனிய நாட்டை
நாத்திக நாடு என்று அறிவித்தது
பொருள்முதல்வாதத்தின் சிகரம் தோட்ட
செயலாகும்.

மிகவும் பின்தங்கிய அல்பேனிய நாட்டை தொழில்
வளர்ச்சி பெறச் செய்தார் ஹோக்சா. அந்நாட்டில்
இவர்தான் முதன் முதலாக ரயில் பாதை
போட்டார். இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சிக்
காலத்திலேயே டல்ஹௌசி கவர்னர் ஜெனரலாக
இருந்தபோது முதல் ரயில்பாதை போடப்பட்டது
என்பதை இந்த இடத்தில் ஒப்பு நோக்க வேண்டும்.

மதமாற்றம், மதப்பிரச்சாரம், பொதுஇடங்களில்
வழிபாடு, தொழுகை ஆகிய அனைத்தையும்
தடை செய்தார் ஹோக்ஸ்சா. அல்பேனியா
97 சதம் இஸ்லாமியர்களைக் கொண்ட ஒரு
இஸ்லாமிய நாடாகும்.

மதநிறுவனங்களின் சொத்துக்களைப் பறிமுதல்
செய்த ஹோக்சா, அவற்றை நிலமற்ற ஏழை
எளிய மக்களுக்குப் பகிர்ந்து கொடுத்தார்.
இவற்றுக்கு எதிர்ப்புத் தெரிவித்த மதவெறியர்கள்
தூக்கிலிடப் பட்டுக் கொல்லப்பட்டனர்.

ஸ்டாலின் காலத்தில் சோவியத் ஒன்றியத்துடன்
நல்லுறவில் இருந்த ஹோக்சா, குருச்சேவின்
திருத்தல்வாதத்தைக் கடுமையாக எதிர்த்தார்.

அக்காலத்தில் மாவோவுடன் நெருங்கிய நட்புக்
கொண்டிருந்தார். பின்னர் தத்துவார்த்தப்
பிரச்சினைகள் உட்பட பல்வேறு பிரச்சினைகளில்
அவருக்கும் மாவோவுக்கும் முரண்பாடு
ஏற்பட்டது. எனவே மாவோவையும் அவர்
விமர்சித்தார்.

இந்தியாவில் வசந்தத்தின் இடிமுழக்கமாக
நக்சல்பாரி இயக்கம் வெடித்துக் கிளம்பியபோது
சீனக்  கம்யூனிஸ்ட் கட்சியோடு முரண்பட்ட
ஹோக்சா, புதியதொரு மார்க்சிய லெனினிய
நிலைபாட்டை முன்வைத்தார். இது அல்பேனியா
நிலை (Albenia Line) எனப்பட்டது.

அன்வர் ஹோக்சா தமது நிலைப்பாட்டை
அறிவித்ததும் உலகின் பல்வேறு மார்க்சிய
லெனினியக் கட்சிகள் அவரை ஆதரித்தன.
அதுவரை மாவோவை ஆதரித்த கட்சிகள் அவை.

இந்தியாவிலும் அல்பேனியா நிலைக்கு ஓரளவு
செல்வாக்கு இருந்தது. 1970களின் பிற்பகுதியில்
மாலெ கட்சியில் இருந்த நாங்கள் அல்பேனியா
நிலை பற்றி அறிந்திருந்தோம். மார்க்சிஸ்ட்
கட்சியில் இருந்த சிலர் கூட, சாரு மஜூம்தாரை
ஏற்காத நிலையில், அல்பேனியா நிலையை
ஆதரித்தனர். மார்க்சிஸ்ட் கட்சியின் நெல்லை
மாவட்டச் செயலாளரும் மகத்தான மார்க்சியச்
சிந்தனையாளருமான தோழர் சு பாலவிநாயகம்
அவர்கள் அல்பேனியா நிலையை மேற்கொண்டு
இருந்தார் என்று அக்காலத்தில் நாங்கள்
கேள்விப் பட்டிருந்தோம். (இது எவ்வளவு தூரம்
துல்லியமானது என்று இக்கட்டுரையாளருக்குத்
தெரியாது)

தமிழ்நாட்டில் மாலெ இயக்கம் 1967 முதல், அது
பிறந்தது முதலே தலைமறைவாக இயங்கி
வந்தது. கட்சி பின்னர் பிளவுபட்டு பல்வேறு
குழுக்களாகச் சிதறியது. மாலெ இயக்கத்தின்
வரலாறும் களப்பணியும் எழுதப்படவில்லை.

நான் சு பாலவிநாயகம் அவர்கள் நடத்திய
மார்க்சிய வகுப்புகளில் பயின்றவன். நான்
சென்னைக்கு வந்து விட்டபடியால் அவரின்
அல்பேனிய நிலை பற்றி எனக்குத் தெரியாமல்
போனது. அவரைச் சந்திக்க முயன்றபோது,
இந்திரா காந்தி நெருக்கடி நிலையை அறிவித்து
இருந்தார். சு பாலவிநாயகம் அவர்கள் சிறையில்
இருந்தார்.

நெருக்கடி நிலை முடிந்து, ஒரு வாய்ப்பில் அவரைச்
சந்திக்க அவர் வீட்டுக்குச் சென்றிருந்தேன்.
அண்ணாச்சியை ஆசாரிப் பள்ளத்தில் சேர்த்து
இருக்கிறார்கள் என்று கேள்விப்பட்டு மனம்
நொந்தேன். ஆசாரிப்பள்ளம் என்பது கன்னியாகுமரி
மாவட்டத்தில் உள்ள எலும்புருக்கி நோய்க்கான
(TB Hospital).

கடைசியில், மகத்தான மார்க்சிய சிந்தனையாளரும்
என் மரியாதைக்கும்  அபிமானத்துக்கும் உரிய
தலைவருமான அண்ணாச்சி பாலவிநாயகம்
அவர்கள் காசநோயால் மறைந்து விட்டார்.

அல்பேனியா, திருநெல்வேலி, வீரவநல்லூர்
இம்மூன்று ஊர்களும் ஒரே நேர்கோட்டில்
அமையாத மூன்று புள்ளிகள் போலும்!
(These three points are non collinear).

(சென்னையில் 26.08.2018 ஞாயிறன்று நடைபெற்ற
"பொருள்முதல்வாத இயங்கியல்: ஹெக்கல் முதல்
மாவோ வரை" என்ற தலைப்பில் நடத்திய
வகுப்பில் பேசியதில் இருந்து ஒரு சிறு பகுதியே
இக்கட்டுரை ஆகும்).
*************************************************
     


        

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக