ஞாயிறு, 6 அக்டோபர், 2019

பட்நாகர் விருது பெற்ற வங்கத்து இளம்பெண்!
------------------------------------------------------------------------
பி இளங்கோ சுப்பிரமணியன்
நியூட்டன் அறிவியல் மன்றம்
-----------------------------------------------------------------------
அறிவியல் சாதனையாளர்களுக்கு நம் நாட்டில் பட்நாகர்
விருதுகள் வழங்கப் படுகின்றன. இந்தியாவின் அறிவியல் உலகில்
பெரும் கெளரவம் உடையவை இவ்விருதுகள். அண்மையில் 2019ஆம்
ஆண்டிற்கான பட்நாகர் விருதுக்கு மேற்கு வங்கத்தைச் சேர்ந்த
34 வயதே ஆன இளம் பெண் நீனா குப்தா (Dr Neena Guptha)
அறிவிக்கப் பட்டிருக்கிறார். இவர் கொல்கொத்தாவில் உள்ள
இந்தியப் புள்ளியியல் கழகத்தில் கணிதப் பேராசிரியராகப்
பணி புரிந்து வருகிறார்.

நீனா குப்தா கணிதப் பிரிவுக்கான பட்நாகர் விருது
பெறுகிறார். இந்தப் பிரிவுக்கான விருது இரண்டு
பேருக்கு வழங்கப் படுகிறது. நீனா குப்தாவுடன் இணைந்து
டாக்டர் திஷந்த் பஞ்சோலியும் (Dr Dishant Pancholi) இவ்விருதைப்
பெறுகிறார். இவர் சென்னையில் உள்ள கணித அறிவியல்
கழகத்தைச் சேர்ந்தவர் (Institute of Mathematical Sciences) என்பது
குறிப்பிடத் தக்கது. முதலில் பட்நாகர் விருதுகள் பற்றி
அறிந்து கொள்வோம்.

பட்நாகர் விருதுகள்!
------------------------------
1958 முதல் இந்தியாவில் பட்நாகர் விருதுகள் (Bhatnagar awards)
வழங்கப் படுகின்றன. ஆண்டுதோறும் வழங்கப்படும் இந்த
விருதுகள் அறிவியல் தொழில்நுட்பத்தில் சிறந்த
சாதனைகளுக்கான விருதுகளாகும்.

45 வயதுக்கு உட்பட்ட, இந்தியர்களான விஞ்ஞானிகளுக்கு மட்டுமே
இந்த விருதுகள் வழங்கப் படுகின்றன. இந்தியாவில்
கடந்த 5 ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு
முடிவுகள் அல்லது கண்டுபிடிப்புகளுக்கு மட்டுமே
பட்நாகர் விருதுகள் வழங்கப்படுகின்றன. ஆக முற்றிலும்
சுதேசித் தன்மை வாய்ந்தவை இந்த விருதுகள்.

விருதின் பரிசுத் தொகை ரூ ஐந்து லட்சம் மட்டும்தான்.
இந்த 5 லட்சமும்கூட சமீபத்திய உயர்வுதான். 2008 வரை
பரிசுத்தொகை ரூ 2 லட்சமாகத்தான் இருந்தது.
இது தவிர விருது பெற்றவர்களுக்கு அவர்களின்
65 வயது வரை மாதந்தோறும் ரூ 15,000 உதவித்
தொகையாக வழங்கப்படுகிறது.

1) உயிரியல் சார் அறிவியல் (Biological Sciences)
2) கணிதம் சார் அறிவியல் (Mathematical Sciences)
3) இயற்பியல் சார் அறிவியல் (Physical Sciences)
4) வேதியியல் சார் அறிவியல் (Chemical Sciences)
5) மருத்துவம் சார்  அறிவியல் (Medical Sciences)
6) பொறியியல் சார் அறிவியல் (Engineering Sciences)
7) புவி, வளிமண்டலம், பெருங்கடல், கோள்கள் பற்றிய அறிவியல்
ஆக மொத்தம் ஏழு துறைகளில் பட்நாகர் விருதுகள்
வழங்கப் படுகின்றன. ஒரு துறையில் அதிகபட்சமாக
இரண்டு பேருக்கு மட்டுமே விருதுகள் வழங்கப்படும்.

சாந்தி ஸ்வரூப் பட்நாகர் (Shanthi Swaroop Bhatnagar 1894-1955)
இயற்பியல் வேதியியல் இரண்டையும் கற்றவர். எனினும்
பிரதானமாக இவர் ஓர் வேதியியல் அறிஞர். பத்ம பூஷண் விருது
பெற்றவர்  இவர். இந்தியாவில் அறிவியல் ஆராய்ச்சிக்கும், அதற்குத்
தேவையான ஆய்வகங்களுக்கும் வித்திட்டவர் இவரே.  இவரை கெளரவிக்கும் விதமாக அறிவியல் தொழில்நுட்ப ஆராய்ச்சிக்கான விருதுகள் இவர் பெயரால் வழங்கப் படுகின்றன.
இவ்விருதுகளை CSIR நிறுவனம் (Council for Scientific and Industrial Research)
வழங்குகிறது. பட்நாகர் CSIRன் நிறுவனராகவும் தலைமை
இயக்குனராகவும் இருந்தவர். CSIR  நிறுவப்பட்ட செப்டம்பர் 26ஆம்
தேதியன்று (Foundation Day) இவ்விருதுகள் அறிவிக்கப்படும்.

இதுவரை (2019 உட்பட) 547 பேர் பட்நாகர் விருது பெற்றுள்ளனர்.
விருது பெற்றோர் பட்டியலை லேசாகப் புரட்டிப் பார்த்தால்
தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் குறைந்தது 25 பேர்
பட்நாகர் விருதுகளைப் பெற்றுள்ளனர் என்று தெரிய வருகிறது.

இளம் கணித மேதை நீனா குப்தா!
------------------------------------------------------
நீனா குப்தா தம் 34 வயதில் இந்த விருதைப்
பெறுகிறார். இதன் மூலம் மிக்க இளம் வயதில் இவ்விருதைப்
பெற்றவர் என்ற பெருமையை அடைகிறார். இதற்கு முன்பு
1973ல் டாட்டா ஆராய்ச்சிக் கழகத்தைச் சேர்ந்த (TIFR)
எம் எஸ் ரகுநாதன் 36 வயதில் இந்த விருதைப்  பெற்றதே
சாதனையாக இருந்தது. தற்போது நீனா அதை முறியடித்து
இருக்கிறார்.

கணித மேதை சகுந்தலா தேவிக்கு அடுத்து கணிதத்தில்
பெரும் மேதைமையை வெளிப்படுத்தியவர் நம் நாட்டில்
நீனா குப்தாவே. பட்நாகர் விருது பெற்றவர்களில் 2018 வரையிலான
காலத்தில் பெண்கள் 16 பேர் மட்டுமே. இவ்வளவு எதிர்மறையான
புறச்சூழலின் நடுவே, நீனா குப்தா உச்சிக்கு வந்துள்ளார்
என்பது அவரின் பேராற்றலைப் புலப்படுத்தும்.

பட்நாகர் விருதைப் பெறுவதற்கு முன்பே, கடந்த சில
ஆண்டுகளில் அவர் பல்வேறு விருதுகளைத் தொடர்ச்சியாகப்
பெற்றுக் கொண்டே வந்துள்ளார். அவை அனைத்தையும்
இங்கு பட்டியலிடப் போவதில்லை.

70 ஆண்டுகளாக நீடித்து வந்த ஒரு கணிதப் புதிருக்கு 2013ல்
இவர் தீர்வு கண்டார். இதற்காக இவருக்கு சரஸ்வதி கெளசிக் பதக்கத்தை (Saraswathi Cowsik Medal) TIFR Alumni Association வழங்கியது.
2014ல் சென்னைப் பல்கலை இவருக்கு ராமானுஜன் பரிசை
வழங்கியது. அதே ஆண்டில்  இந்திய தேசிய அறிவியல் அகாடமி
(INSA) இவருக்கு இளம் விஞ்ஞானி விருதை வழங்கியது.2017ல் கணிதத்திற்கான பி எம் பிர்லா அறிவியல் பரிசு இவருக்கு
வழங்கப் பட்டது.

நீனா குப்தா தீர்வு கண்ட கணிதப் புதிர் "ஜாரிஸ்கி ரத்து செய்தல்
சிக்கல்" (Zariski Cancellation Problem) எனப்படும். ஆஸ்கர் ஜாரிஸ்கி
(Oscar Zariski 1899-1986) என்னும் அமெரிக்கக் கணித அறிஞரின்
பெயரால் இது அமைந்துள்ளது. இது "இயற்கணித வடிவியல்"
 (algebraic geometry) என்னும் கணிதப் பிரிவு சார்ந்தது. இப்புதிருக்கு
இவர் அளித்த தீர்வு இவரின் கணித மேதைமைக்குச்
சான்றாகும்.

பின்னர் நடைபெறும் விருது வழங்கும் விழாவின்போது இந்தியப்
பிரதமர் விருதுகளை வழங்குவார் என்றும் அப்போதுதான் விருது
பெறுவோரின் சாதனைக் குறிப்பு (citation) வெளியாகும்
என்றும் CSIR கூறுகிறது.(At the ceremony a suitable citation on work of
the recipient of the prize is read out)

நோபல் பரிசுகள் அறிவிக்கப்பட்ட உடனேயே சாதனைக்
குறிப்புகளை ராயல் சுவீடிஷ் அகாடமி வெளியிட்டு விடுகிறது.
CSIR போன்ற பெரும் நிறுவனங்களும் விருதுகள்
அறிவிக்கப்பட்ட அன்றே சாதனைக் குறிப்புகளை
வெளியிடும் நடைமுறையைப் பின்பற்ற வேண்டும்.

நீனா குப்தாவுக்கு 130 கோடி இந்தியர்களின் வாழ்த்துக்கள்!
எட்டும் அறிவினில் ஆணுக்கு இங்கே பெண்
சற்றும் இளைப்பில்லை காண்......... (மகாகவி பாரதி).
**************************************************************          





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக