திங்கள், 8 மே, 2017

மனுஷ்ய புத்திரனுக்கு எதிராக 
மேட்டுக்குடிப் பெண்ணியவாதிகள் கூச்சல்!
தமிழில் அறிவியலுக்குப் பெரும்பங்காற்றிய
அறிவியல் எழுத்தாளர் சுஜாதா!

மே 8, 2017இல் எழுதியது.
---------------------------------------------------------------------------------

நியூட்டன் அறிவியல் மன்றம்
--------------------------------------------------------------------------------
புதுமைப்பித்தன், தி ஜானகிராமன், லா.ச.ரா,
மற்றும் இன்றைய எஸ்.ராமகிருஷ்ணன்,
ஜெயமோகன் வரிசையில் வருபவர் அல்ல
சுஜாதா. ஏனெனில் அவர் அறிவியலை எழுதினார்.
மற்றவர்களுக்கு அறிவியல் பொருட்டல்ல.

அறிவியலின்
வளர்ச்சியின் ஒரு கட்டத்தில்
அறிவியல் இலக்கியம் தோன்றியது.. 
அறிவியல் புனைவுகள் (science fiction) தோன்றின.

அறிவியல் அறிஞர் ஹெச் ஜி வெல்ஸ் "The Invisible Man"
என்ற அறிவியல் புனைவை எழுதிய காலத்தில்,
அதாவது 1897இல் அறிவியல் புனைவு (science fiction)

என்ற தொடரே உருவாகி  இருக்கவில்லை.
science romance என்றுதான் அவை குறிப்பிடப் பட்டன.  

1897இல் மேனாட்டில் அறிமுகமான அறிவியல் 
புனைவை தமிழில் அறிமுகம் செய்தவர் சுஜாதா.
தமிழில் அறிவியல் இலக்கியத்தை உருவாக்கிப்
பேணி வளர்த்து, அறிவியலுக்கும் இலக்கிய
அந்தஸ்தைப் பெற்றுக் கொடுத்தவர் சுஜாதா.

ஆனாலும், தம் படைப்புகளுக்கு நிகரான இலக்கிய
அந்தஸ்தை சுஜாதா பெறவில்லை. அறிவியல்
தற்குறித் தனமான தேசமான (scientifically illiterate)
தமிழ்நாட்டில் அதை அவர் பெற்றிருக்க முடியாது
என்பது நிதர்சனம்.

முகமும் முகவரியுமற்ற அநாதைகளும், அறிவியலோடு
எவ்விதத் தொடர்புமற்ற --ஸ்நானப் பிராப்தியற்ற--
தற்குறிஜந்துக்களும் சுஜாதா மீது கல்லெறிந்து
தங்களுக்கு ஓர் அறிமுகம் தேடிக் கொள்கின்றனர்.

போலிப் பெரியாரிஸ்டுகள், போலிப் பகுத்தறிவுவாதிகள்
அரைவேக்காடுகள், அசடுகள் இன்ன பிற சிந்தனைக்
குள்ள ஜந்துக்கள் சுஜாதாவை அவதூறு செய்து, எந்தக்
காரணமும் இல்லாமலேயே அவதூறு செய்து, தங்களின்
சிரங்கைச் சொறிந்து கொள்கின்றன.

சுஜாதா ஒரு வைணவராக ஸ்ரீரங்கம் கோவிலுக்குச்
சென்று வணங்கினார். ஆனால், "கடவுள் இருக்கிறாரா"
என்ற தமது நூலில் இறுதியில்,
"கடவுள் இருக்கிறாரா? இதற்கு என் பதில்: It depends"
என்று முடிப்பார். புரிகிறதா?

கடவுள் இருக்கிறார் என்று ஆணித்தரமாகச்
சொல்லவில்லை அவர். "It depends" என்றுதான்
சொல்கிறார். இதுதான் அவரின் நேர்மை.

"இருக்கிறார் என்பதே என் பதில்" என்று சொல்லி
அவர் அந்நூலை முடித்திருக்க முடியும். அப்படி
முடித்து இருந்தால் அவரை எவரும் கேள்வி கேட்கப்
போவதில்லை. ஆனால் it depends என்கிறார்.

இங்குதான் அறிவியலாளரான சுஜாதாவுக்கும்
வைணவரான சுஜாதாவுக்கும் இடையிலான
முரண்பாடு வெளிப்படுகிறது. அறிவியலாளரான
சுஜாதாவால் கடவுள் இருக்கிறார் என்று கூற
இயலவில்லை. ஏனெனில் அதற்கான ஆதாரங்கள்
அறிவியலில் இல்லை.

அதேநேரத்தில் ஒரு வைணவராக இருக்க விரும்பிய
சுஜாதா ஸ்ரீரங்கம் சென்றார். குவான்டம் தியரியில்
வருகிற superpositionதான் இது.

ஆகச்சிறந்த அறிவியல் பங்களிப்பிற்காக 
சுஜாதாவை நியூட்டன் அறிவியல் மன்றம் 
போற்றுதலுக்கு உரியவராக வரையறை செய்கிறது. 
அவரின் பங்களிப்பு அறிவியல் உலகில் 
என்றென்றும் நினைவு கூரப்படும்.
**************************************************************************

பின்குறிப்பு: இக்கட்டுரையைப் புரிந்து கொள்ள 
quantum superposition என்ற குவான்டம் விசையியலின் 
கோட்பாட்டில் பரிச்சயம் இருக்க வேண்டும் என்ற 
தேவை உள்ளது.
-----------------------------------------------------------------------------------------------
quantum superposition பற்றி ஓரிரு நாட்களுக்கு முன் 
நியூட்டன் அறிவியல் மன்றம் எழுதிய கட்டுரைகளை 
எனது டைம்லைனில் சென்று படிக்கவும்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக