வெள்ளி, 6 ஜூலை, 2018

மண்ணுக்கேற்ற மார்க்சியம் என்பது
இளம்பருவக் கோளாறு!
பேராசிரியர் எஸ் என் நாகராஜன், ஞானி
இருவரின் கருத்துக்களுக்கு மறுப்பு!
------------------------------------------------------------------------------
பி இளங்கோ சுப்பிரமணியன்
--------------------------------------------------------------------------
இந்தியக் கம்யூனிச இயக்கம் நூற்றாண்டை நெருங்கிக் கொண்டிருக்கிறது. 1925ல்  கான்பூரில்
சிங்காரவேலர் தலைமையில் நடந்த மாநாட்டில்
உதயமான கம்யூனிசம் இந்திய மக்களைப்
பற்றிக்கொண்டு ஒரு மாபெரும் பௌதிக சக்தியாக
மாறவில்லை.

இந்தியாவில் மண்ணுக்கேற்ற மார்க்சியத்தை
நடைமுறைப் படுத்தத் தவறியதே மார்க்சியத்தின்
செல்வாக்கின்மைக்குக் காரணம் என மார்க்சிய
விமர்சகர்கள் தொடர்ந்து கூறி வருகின்றனர்..
அண்மையில் வெளிவந்த மார்க்சிய அறிஞர்கள்
பேராசிரியர் எஸ் என் நாகராஜன், ஞானி ஆகியோரின்
நேர்காணலிலும் (தமிழ் இந்து ஜூன் 2018) இக்கருத்து
துலக்கமாக வெளிப்பட்டது. இக்கருத்தைத் தர்க்க ரீதியாக
விஸ்தரித்தால், மார்க்சியமே இந்த மண்ணுக்கு
ஏற்றதல்ல என்ற முடிவுக்கு இட்டுச் செல்லும்.
மண்ணுக்கேற்ற மார்க்சியம் கோரிய பலரும்
இயல்பாகவே இந்த இடத்துக்கு வந்து சேர்ந்து,
பின்னர் மார்க்சியத்தில் இருந்து வெளியேறி
உள்ளனர் என்பது வரலாறு.

மண்ணுக்கேற்ற மார்க்சியத்தின் தோற்றுவாய்!
-----------------------------------------------------------------------------------
1967 தேர்தலில் இந்தியாவின் பல மாநிலங்களில்
மாநிலக் கட்சிகள் ஆட்சியைப் .பிடித்தன.
தேசியக் கட்சியான காங்கிரஸ் மாநில மக்களின்
மொழி பண்பாடு சார்ந்த உணர்வுகளை மதிப்பதில்லை
என்ற அதிருப்தி எழுந்தது. மண்ணின் மைந்தர்
முழக்கமும் மேலெழுந்தது. தொடர்ந்து பல்வேறு
மாநிலக் கட்சிகள் முளைத்தன. மொத்தப் புறச்சூழலும்
தேசிய இனங்களின் அபிலாஷைகளை முன்னிறுத்தியது.

கம்யூனிஸ்ட் கட்சிகளுக்குள்ளும் இந்தப் புறச்சூழல்
தாக்கத்தை ஏற்படுத்தியது. இதன் விளைவாக
மண்ணுக்கேற்ற மார்க்சியம் என்ற குரல் அங்கும் எழுந்தது.
தொடக்கத்தில் இது மெலிந்த குரலாகவே இருந்தது.

1980களில் இந்திய அரசியல் அரங்கில்
பின்நவீனத்துவம் தன இருப்பை அறுதியிட்டது.
மண்ணுக்கேற்ற மார்க்சியம் என்ற முழக்கத்தின்
மூலம் மார்க்சியத்திற்குச் சேதாரம் ஏற்படுத்த
விரும்பிய பின்நவீனத்துவம், ஒரு கிரியா ஊக்கியாகச்
செயல்பட்டு, பெரும் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த
முழக்கமாக இதை மாற்றியது.

கம்யூனிஸ்ட் கட்சிகளின் அறிவாளிப் பிரிவினரில்
ஒரு சிலர் இம்முழக்கத்தை முன்வைத்து
தத்தம் கட்சிகளில் நடத்திய உட்கட்சிப் போராட்டம்
தோல்வி அடைந்ததை ஒட்டி அமைப்பை விட்டு
வெளியேறினர். (மார்க்சிஸ்ட் கட்சியில் இருந்து
மணியரசன்,கவிஞர் தணிகைச் செல்வன் போன்றோர்
வெளியேறியதை இங்கு நினைவு கூரலாம்).
அநேகமாக எல்லாக் கம்யூனிஸ்ட் கட்சிகளிலும்
இத்தகைய வெளியேற்றம் சிறியதும் பெரியதுமாக
இருந்த போதிலும் அது அமைப்பை பெரிய அளவில்
பாதிக்கவில்லை என்பதையும் நாம் கணக்கில்
கொள்ள வேண்டும். 
.
போலியான கோட்பாடு!
------------------------------------------
மண்ணுக்கேற்ற மார்க்சியம் என்பது  ஒரு
போலியான கோட்பாடு. பார்க்கும்போது
மெய் போல் தோற்றம் தரும் இக்கோட்பாடு
உண்மையில் போலியானதாகும் (fallacy).
இதை உணர, இதற்கு எதிர்நிலையில் நின்றுகொண்டு
மண்ணுக்கேற்ற முதலாளித்துவம் உண்டா என்ற
கேள்வியைக் கேட்டுப் பார்க்க வேண்டும்.

நாடுகளின் செல்வாதாரங்களைக் கொள்ளையடிப்பதும்
உபரிமதிப்பை ஒட்டச் சுரண்டுவதுமே உலகம்
முழுவதும் உள்ள மூலதனத்தின் சர்வாம்சப்
பொதுப்பண்பாக (universal character)  உள்ளது. இது
நாட்டுக்கு நாடு மாறுவதில்லை.
நாடுகளின் செல்வம் பற்றிய விசாரணை
(An inquiry into the nature and causes of wealth of Nations) என்ற
ஆடம் ஸ்மித்தின் நூல் இதனை உணர்த்துகிறது.
மார்க்ஸ் மிகவும் மதித்த நூல் இது.

1848ல் மார்க்சும் எங்கல்சும் இணைந்து எழுதிய
கம்யூனிஸ்ட் அறிக்கையானது உலகம் முழுமைக்கும்
பொதுவானது. உலகின் ஒவ்வொரு நாட்டின்
கம்யூனிஸ்ட் கட்சிக்கும் பொருந்தும்
பொதுவேலைத்திட்டம் இது. மூலதனமும் மார்க்சியமும்
நாட்டுக்கு நாடு வேறுபடுவதில்லை என்று உணர்த்தியது கம்யூனிஸ்ட் அறிக்கை. எனவேதான் உலகத்
தொழிலாளர்களே ஒன்றுபடுங்கள் என்ற உலகம்
முழுமைக்கும் பொதுவான முழக்கத்தை மார்க்ஸ்
எழுப்பினார். மண்ணுக்கேற்ற மார்க்சியம் போன்ற
மூலதனத்தின் சர்வாம்சப் பொதுத்தன்மையை
மறுக்கிற  போலி முழக்கங்களை மார்க்சின்
கம்யூனிஸ்ட் அறிக்கை அங்கீகரிக்கவில்லை.
 
மார்க்சின் காலத்தில் ஏகாதிபத்தியம் இல்லை.
அதாவது முதலாளித்துவம் வளர்ச்சி அடைந்து
ஏகாதிபத்தியமாக மாறியிருக்கவில்லை.
ஏகாதிபத்தியத்தை வரையறுத்த லெனின் அதை
முதலாளித்துவத்தின் உச்ச கட்டமாகக் கணித்தார்.

இன்று ஏகாதிபத்தியம் மேலும் வளர்ந்து அதன்
உச்ச கட்டமான உலக மயத்தை (globalisation)
அடைந்துள்ளது. இதன் மூலம் எந்த ஒரு நாட்டின்
உள்நாட்டுச் சந்தையையும் ஏகாதிபத்தியம்
சாத்தியமான அளவு கைப்பற்ற முடியும். உலகப்போர்
என்பதே சந்தையை மறுபங்கீடு செய்யும் முயற்சிதான்
என்கிறது மார்க்சியம்.

தற்போது ஒரு உலகப்போர் இல்லாமலேயே
சந்தையை மறுபங்கீடு செய்ய உலகமயம் உதவுகிறது.
ஆக உலகமயம் என்பது முதலாளித்துவத்தின்
சர்வாம்சப் பொதுப்பண்பை மேலும் உறுதி செய்கிறது.
இந்நிலையில் நாட்டுக்கு நாடு வேறுபடுகின்ற
மண்ணுக்கேற்ற மார்க்சியம் போன்ற கோட்பாடுகள்
செல்லுபடி ஆகுமா? இந்தக் கோட்பாட்டைக் கொண்டு
உலகமயத்தை எதிர்க்க முடியுமா?

மார்க்சியம் என்பது செயலுக்கான வழிகாட்டியே
தவிர, கணிதச் சூத்திரமல்ல. பைனாமியல்
தேற்றமானது n என்னும் எண்ணுக்கு எந்த மதிப்பு
அளித்தாலும் பொருந்துவது போல, மார்க்சியத்தைப்
பயன்படுத்த .இயலாது. ( ஒரு ஈருறுப்புக் கோவையை
எந்த அடுக்கிற்கும் விரிவுபடுத்துவதே பைனாமியல்
தேற்றம்; (x+a) whole raised to n என்பதன்  விரிவு)

எனவே மார்க்சியத்தைப் பிரயோகிக்கும்போது,
குறிப்பிட்ட நாட்டின் தனித்தன்மை வாய்ந்த
நிலைமைகளைப் பரிசீலித்து அதற்கேற்பவே
மார்க்சியத்தைப் பிரயோகிக்க வேண்டும்
என்கிறார் லெனின். லெனினின் இந்தக் கூற்று
கட்டளைத்தன்மை (canonical status) வாய்ந்த மார்க்சியப்
பிரயோகத்திற்கான விதி ஆகும். லெனினின் இந்த
விதியே மண்ணுக்கேற்ற மார்க்சியத்தை உறுதி
செய்து விடுகிறது.இதற்கு மேலும் மண்ணுக்கேற்ற
மார்க்சியம் என்று பேசுவது மழை பெய்து
கொண்டிருக்கும்போது செடிகளுக்குத் தண்ணீர்
ஊற்றச் சொல்வது போன்றது.   

பிரயோகமே முக்கியம்!
---------------------------------------------
தனியொரு நாட்டில் சோசலிஷப் புரட்சி சாத்தியமில்லை
என்பதே மார்க்சின் கருத்து. தொழில் வளர்ச்சி
அடைந்த எல்லா நாடுகளிலும்  ஒரே நேரத்தில்
சோஷலிஷப் புரட்சியை நடத்தினால் மட்டுமே
புரட்சி வெற்றி பெறும் என்று மார்க்ஸ் கருதினார்.
மார்க்சின் இந்தக் கருத்தை லெனின் ஏற்கவில்லை.
தனியொரு நாட்டில் சோஷலிஸப் புரட்சி சாத்தியம்
என்றார் லெனின். தொழில் வளர்ச்சி அடைந்த
ஐரோப்பிய நாடுகளில் எங்குமே புரட்சி நடக்காதபோது,
சோவியத் ரஷ்யாவில் நவம்பர் புரட்சியை நடத்திக்
காட்டினார் லெனின். இது மார்க்சின் போதனையை
மீறி நடந்த புரட்சி. இதனால்தான் "லெனின் செய்ததை
எல்லாம் மார்க்ஸ் அறிய நேர்ந்தால், அவர் தம்
கல்லறையில் நெளிவார்" என்றார் மிஷெல் ஃபூக்கோ. 

இது எதை உணர்த்துகிறது? மார்க்சின் போதனையை
எல்லாச் சூழலுக்கும் பொருந்தும் ஒரு சர்வரோக
நிவாரணியாகக் கருதாமல், சோவியத் ரஷ்யாவின்
தனித்துவமான நிலைமைகளுக்கு ஏற்ப மார்க்சியத்தைப் பிரயோகித்தார்  லெனின் என்பதைத்தானே!

சீனாவில் மாவோ செய்ததும் இதுதான். ஆலைப்பாட்டாளி
வர்க்கமே புரட்சிகரமான வர்க்கம் என்றும்
அதுவே புரட்சிக்குத் தலைமை தாங்க வேண்டும்
என்றும் மார்க்ஸ் வரையறுத்தார்.இந்த வரையறையை
மாவோ ஏற்கவில்லை. தொழில் வளர்ச்சியே அறியாத
சீனாவில் மார்க்ஸ் கூறிய ஆலைப்பாட்டாளி வர்க்கமே
கிடையாது. இருப்பினும் மாபெரும் உழவர் புரட்சியை
நடத்தி சீனாவை விடுதலை செய்தார் மாவோ.

இந்த வெற்றிக்குக் காரணம் என்ன? மார்க்சின்
போதனையைக் கண்மூடித்தனமாகப் பின்பற்றாமல்,
அதை ஒரு வழிகாட்டியாக மட்டும் ஏற்றுக் கொண்டு,
சீனாவின் குறிப்பான நிலைமைகளுக்கு ஏற்ப
மார்க்சியத்தைப் பிரயோகித்ததுதானே!

மார்க்சியத்தைப் பொறுத்த மட்டில் அதன் குறிப்பான
பிரயோகமே முக்கியம் என்பதைத்தான் .
ரஷ்ய சீன உதாரணங்கள் காட்டுகின்றன.
பருண்மையான நிலைமைகளின் பருண்மையான
பகுப்பாய்வுக்குப் (concrete analysis of the concrete conditions)
பின்னரே மார்க்சியத்தைப் பிரயோகிக்க வேண்டும்
என்று வரையறுத்தார் லெனின்.இத்தகைய பிர்யோகம்தான் மண்ணுக்கேற்ற மார்க்சியம் ஆகும்.
இதற்கு அப்பாலும் மண்ணுக்கேற்ற மார்க்சியம் என்று
பேசுவது வெறும் சொற்காமுகம் (phrase mongering) ஆகும்.

பொருத்தமற்ற பாகுபாடு!
---------------------------------------------
மேலை மார்க்சியம் கீழை மார்க்சியம் போன்ற
பாகுபாடுகள் மிகவும் மேம்போக்கானவை. அவை
ஆழ்ந்த அக்கறைக்கு உரியன அல்ல (non serious).
மேற்கு கிழக்கில் நிலவும் பண்பாட்டு வேறுபாடுகளை
பூதாகாரமாகப் பெரிதாக்கியே கீழை மார்க்சியம்
என்ற கோட்பாடு உருவாக்கப் பட்டது.

பண்பாடல்ல பொருளியலே ஒரு சமூகத்தின்
அடித்தளம் ஆகும். இந்தக் கோட்பாட்டின் மீதுதான்
மார்க்சியமே எழுந்துள்ளது. பொருளியல் என்பது
வீடு என்றால், பண்பாடு என்பது அந்த வீட்டின்  
மாடி ஆகும். முதலாளித்துவப் பொருளியல் என்னும்
அடித்தளத்தை மாற்றும்போது, அதன் மீதான
மேல்கட்டுமானம் என்னும் பண்பாடும்
மாறிவிடும். இதுதான் மார்க்சிய போதனை.

இதை மறுத்து, அடித்தளமான வீட்டைப் புறக்கணித்து
மாடியை முன்னிறுத்தி உருவாக்கப்பட்டதே
கீழை மார்க்சியம் என்னும் கோட்பாடு. இது ஒரு
இளம்பருவக் கோளாறு, (an infantile disorder) அவ்வளவே!

கடவுளும் மதமும்!
---------------------------------
கடவுளுக்கும் மதத்துக்கும் உள்ள நியாயத்தைப்
புறக்கணிக்க முடியாது என்றும், கற்பனையாகவே
இருந்தாலும் கடவுள் தேவை.என்றும், மதம் நாம்
நினைக்கிற அளவுக்கு வெறுக்கத் தக்கதல்ல என்றும்
நாகராஜன், ஞானி இருவரும் கூறியுள்ளனர்.

இவர்கள் இந்த நூற்றாண்டில் சொல்லும்
இக்கருத்துக்கள் மார்க்சிய முகாமைச் சேர்ந்த
சில அறிஞர்களால் பத்தொன்பதாம் நூற்றாண்டிலும்
சொல்லப்பட்டன. ரஷ்யப் புரட்சி 1917ல் நடந்தது.
அதற்கு முன்பு வரை மார்க்சியம் வெற்றி பெறும்
என்ற நம்பிக்கை ஐரோப்பாவில் ஏற்பட்டிருக்கவில்லை.
மார்க்ஸ் 1883லும் எங்கல்ஸ் 1895லும் மறைந்தனர்.
அப்போது லெனின் மிகவும் இளைஞர் என்பதால்
மார்க்சியத் தலைமையில் இல்லை.

இக்காலக்கட்டம் முழுவதிலும் மார்க்ஸ் கூறியபடி
புரட்சி வெற்றி பெறும் என்றோ, சோஷலிசம்
கைகூடும் என்றோ எந்த ஒரு நம்பிக்கையின்
கீற்றும் .வெளிப்படவில்லை. ரஷ்யப் புரட்சி மட்டும்
நடக்காமல் இருந்திருந்தால், மார்க்சியம்
வெறும் பகல் கனவாகவே முடிந்திருக்கும்.

நம்பிக்கை வறட்சி நிலவிய அக்காலக் கட்டத்தில்,
மக்களுக்கு விடுதலையைப் பெற்றுத்தர, ஒரு புதிய
கடவுளும் புதிய மதமும் வேண்டும் என்ற கருத்து
ரஷ்யாவில் மட்டுமல்ல, ஐரோப்பாவிலும் செல்வாக்குப்
பெற்றிருந்தது. ரஷ்ய மார்க்சிய எழுத்தாளர்
மாக்சிம் கார்க்கி தமது "ஒப்புதல் வாக்குமூலம்"
(A Confession) என்ற நாவலில் புதிய கடவுளுக்காகவும்
புதிய மதத்துக்காகவும் வாதாடினார்.
மார்க்சின் ஆசான் லுத்விக் பாயர்பாக்
அன்பை அடிப்படையாகக் கொண்ட ஒரு மதம்
தேவை என்ற கருத்தை வலியுறுத்தி நூல் எழுதினார்.

நாகராஜன் ஞானி ஆகியோரின் கருத்துக்களில்
பாயர்பாக், கார்க்கி ஆகியோரின் செல்வாக்கைக்
காண முடிகிறது. ஆயினும் இக்கருத்துக்கள்
இந்த 21ஆம் நூற்றாண்டில் பொருத்தமற்றவை.
உலகெங்கும் கடவுள் மீதான நம்பிக்கை குறைந்து
கொண்டே வருகிறது. கடவுள் மறுப்பாளர்கள்
எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே போகிறது.
நவீன அறிவியலின் வளர்ச்சி பல்வேறு மாயைகளில்
இருந்து மானுடத்தை விடுதலை செய்துள்ளது.

முதலாளித்துவமும் தந்திரபூர்வமாக மக்கள் நல
அரசுகள் என்ற கோட்பாட்டைச் செயல்படுத்தி,
சுரண்டலின் தீவிரத்தைக் குறைத்து மக்களின்
துயரங்களை ஓரளவு தணித்துள்ளது. மாறிய இந்தச்
சூழ்நிலைகளைக் கருத்தில் கொள்ளாமல்,
பத்தொன்பதாம் நூற்றாண்டிலும் ரஷ்யப்
புரட்சிக்கு முன்பும் சொல்லப்பட்ட காலாவதி
ஆகிப் போன கருத்துக்களை மதிப்புக்குரிய
நாகராஜன் ஞானி இருவரும் தூக்கிச் சுமக்க
வேண்டியதில்லை.
*******************************************************       







  









கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக