ஞாயிறு, 29 ஜூலை, 2018

புரட்சி என்பது மாலைநேரத்து விருந்து அல்ல!
நடைமுறை இல்லாமல் எவராலும்
மார்க்சியத்தைப் புரிந்து கொள்ள முடியாது!
முழுநேரப் புரட்சியாளர் என்ற
லெனினியக் கோட்பாடு!
----------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
-----------------------------------------------------------
"நாளைக்கு பி ஆர் காம்ரேடு வருவார்.
அவர் வந்ததும் நீங்கள் அனைவரும் முறைப்படி
கட்சியில் சேர்த்துக் கொள்ளப் படுவீர்கள்.
இனிமேல் நான் உங்களுடன் தொடர்பில்
இருக்க மாட்டேன்" என்று கூறி விடை பெற்றுக்
கொண்டார் அந்தத் தோழர்.

நாளைக்கு பி ஆர் காம்ரேடைச் சந்திக்கப்
போகிறோம் என்ற நினைப்பு காதலியைச்
சந்திக்கப் போவதை விட அதிகமான
போதையைத் தந்தது.ஆயுதம் தாங்கிய புரட்சியை
நடத்தும் இந்தியாவின் புரட்சிகரக் கட்சியில்
நாளைக்குச் சேரப் போகிறோம் என்ற உணர்வும்
பெருமிதம் தந்தது.

முந்திய வாக்கியத்தில் உள்ள பி ஆர் காம்ரேடு
என்பதில் PR என்பது Professional Revolutionary என்று
பொருள்படும்.தொழில்முறைப் புரட்சியாளர்
(முழுநேரப் புரட்சியாளர்) என்று பொருள்.
Professional Revolutionary என்ற கருத்தாக்கம் உலகக்
கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு லெனின்
வழங்கிய கொடையாகும்.

எனக்கோ அல்லது என்னுடன் நாளைக்கு
புரட்சிகரக் கட்சியில் சேரப்போகும் மற்றத்
தோழர்களுக்கோ மார்க்சியம் புதிய விஷயம்
அல்ல.ஏற்கனவே மார்க்சிஸ்ட் கட்சியில் (CPM)
இருந்து கொண்டுதான் இருக்கிறோம். அதில்
இருந்து முறித்துக் கொள்வது மட்டும்தான்
பாக்கி. விலகும் நேரத்தில் நாங்கள் எல்லோருமே
CPM கட்சிக்கு ஏகப்பட்ட லெவி பாக்கி
வைத்திருந்தோம். கட்சி மீது ஏற்பட்ட கடும்
அதிருப்தி காரணமாக லெவிகொடுக்காமல்
நிறுத்தி வைத்திருந்தோம்.

நாங்கள் சேர இருக்கும் புரட்சிகரக் கட்சியின்
வேலைத்திட்டம் (programme) ஏற்கனவே
எங்களுக்குத் தரப்பட்டு இருந்தது. அதை நாங்கள்
படித்தும் எங்களுக்குள்  பலமுறை விவாதித்தும்
ஏற்றுக் கொண்டிருந்தோம். இதன் மூலம்
கட்சியில் சேர்க்கப் படுவதற்கான முக்கிய
நிபந்தனையைப் பூர்த்தி செய்திருந்தோம்.

மறுநாள் திட்டமிட்டபடி பி ஆர் தோழர் வந்தார்.
அவரும் இளைஞரே. எங்களை விட ஒன்றிரண்டு
வயதுதான் அதிகமாக இருக்கும்.பரஸ்பர அறிமுகம்
கேள்விகள் முடிந்ததும், நாங்கள் ஐந்து .பேரும்
கட்சியில் சேர்க்கப் பட்டோம். எங்களைக் கொண்டு
கட்சி யூனிட் ஆரம்பிக்கப்பட்டது. எங்களின்
வேலைகள், கட்சியைப் பொறுத்த எங்களின்
ரகசியப் பெயர்கள் அனைத்தும் இறுதி
செய்யப் பட்டன.

லெவி நிர்ணயம் செய்யப்பட்டது.
லெவி நிர்ணயித்த அந்த நொடியிலேயே
நாங்கள் அனைவரும் ஒரே பாய்ச்சலாகப் பாய்ந்து
லெவியைக் கொடுத்தோம். எங்களின் அதீத
ஆர்வத்தில் ஒரு abnormality தெரிந்தது பி ஆர்
தோழருக்கு. "ஏற்கனவே CPMல் வருஷக்
கணக்கில் லெவி பாக்கி வைத்திருக்கிறோம்;
எங்குமே லெவி செலுத்தாமல் இருப்பது
எங்களை அமைப்புத் தொடர்பற்ற
அனாதைகளைப் போல் உணரச் செய்கிறது;
இந்த உணர்வில் இருந்து விடுபடவே இப்போது
உடனடியாக லெவியைச் செலுத்துகிறோம்"
என்று நான் விளக்கினேன்.

"இதுதான் தோழர், அமைப்பின் பலம்; அமைப்பு
என்பது எந்த ஒரு தனிமனிதனை விடவும்
பெரியது" என்று அமைப்பின் முக்கியத்துவம்
பற்றி விளக்கினார் பி ஆர் தோழர்.

பின்னர் ஒரு தலைமறைவுக் கட்சியில்
எப்படி இயங்க வேண்டும் என்று விரிவாகப்
போதித்தார் பி ஆர் தோழர்.

அந்தக் காலக் கட்டத்தில் (பின் எழுபதுகளில்)
தமிழகத்தில் மேனனின் ஆட்சி நடந்து
கொண்டிருந்தது. (மேனன்= எம்ஜியார்).
மேனன், மோகன்தாஸ், வால்டர் தேவாரம்
ஆகியோரின் முக்கூட்டில் நக்சல்பாரிகள்
நரவேட்டை ஆடப்பட்ட காலம் அது. ஒரு
camouflage தேவைப்பட்டால் ஏற்பாடு செய்து
கொள்ளுங்கள் என்று பி ஆர் தோழர்
கூறியிருந்தார். (camouflage = மூடுதிரை).

அதன்படி மேனனின் படத்தை வாங்கி வீட்டில்
மாட்டினார் எங்களில் ஒருவர்.கலைஞரின் படத்தை
வாங்கி வீட்டில் மாட்டினார் இன்னொரு தோழர்.
மேனன், கலைஞர் படங்களைக் காட்டி
கியூ பிராஞ்சு நாய்களைக் கொஞ்ச காலம்
தள்ளி நிற்க வைக்கலாம் அல்லவா!

கூட்டம் முடிந்ததும் பி ஆர் தோழர் என்னுடன்
வந்தார். என்னுடைய இருப்பிடத்தை அவர்
அறிய வேண்டுமல்லவா? நான் அப்போது
பேச்சிலர் இளைஞன். எனவே நான் தங்கியிருந்த
விடுதியில் (monthly rental lodge) என்னுடைய அறைக்கு
தோழரை அழைத்துச் சென்றேன். அன்று
முழுவதும் கட்சி குறித்தும் புரட்சி குறித்தும்
annihilation குறித்தும் மணிக்கணக்கில் பி ஆர்
தோழர் விளக்கினார்.
(annihilation = annihilation of class enemies, வர்க்க எதிரிகளை
அழித்தொழிக்கும் சாரு மஜூம்தாரின் கோட்பாடு)

பி ஆர் தோழர் மிகச்சிறந்த அறிவுஜீவி என்று
அறிந்தேன். அவரின் அறிவின் எல்லை மிகவும்
விரிந்து பரந்திருந்தது. அது என்னை மிகவும் கவர்ந்தது.

என்னுடைய மொத்த வாழ்நாளில் மிகச்சிறந்த
அறிவுஜீவிகளை ML இயக்கத்தில் மட்டுமே
சந்தித்துள்ளேன். அக்காலக் கட்டத்தில்,
1970-80களில் தமிழ்நாட்டின் மிகச்சிறந்த
அறிவுஜீவிகளை மார்க்சிய லெனினிய
இயக்கம் மட்டுமே ஈர்த்து இருந்தது என்று
என்னால் உறுதியாகச் சொல்ல இயலும்.

எனது நட்பு-தொடர்பு-பழக்கத்தின் வாயிலாக
பல்வேறு துறைகளையும் சார்ந்த அறிவாளிகளுடன்
உறவாடியுள்ளேன். அந்த அடிப்படையில்
"யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல்
இனிதாவது எங்கும் காணோம்" என்று பாரதி
கூறியதைப்போல, அதிக அளவில்
அறிவுஜீவிகளைக் கொண்டிருந்த இயக்கம்
மா-லெ இயக்கமே என்று என்னால்
நிரூபிக்க இயலும். இவர்கள் சாதாரண
அறிவுஜீவிகள் அல்ல; புரட்சிகர அறிவுஜீவிகள்
(Revolutionary intellectuals) ஆவர்.

லெனினிய பாணியில் கட்சி கட்டுதல் என்பதை
இந்தியா முழுவதும் நக்சல்பாரி இயக்கம் மிக
அற்புதமாக நடைமுறைப் படுத்திக் காட்டியது.
லெனினியக் கட்சி கட்டுதலின் ஒவ்வொரு
அம்சமும் நக்சல்பாரிக் கட்சி  கட்டுதலில்
கடைபிடிக்கப் பட்டன. கட்சியின் மத்தியக்
கமிட்டி என்பது எவ்வளவு முக்கியத்துவமும்
அதிகாரமும் படைத்த அமைப்பு என்பதை
நக்சல்பாரி இயக்கம் உணர்த்தியது.

தத்துவம் நடைமுறை  என்ற (theory and practice)
இரண்டு அம்சங்களின் ஒருங்கிணைப்பே
மார்க்சியம் ஆகும். தத்துவமும் நடைமுறையும்
ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்கள் போன்றவை.

ஏதோ ஒரு கட்டுரையைப் படித்து விட்டோ
அல்லது ஏதோ ஒரு புத்தகத்தைப் படித்து விட்டோ
மார்க்சியத்தைக் கற்றுக் கொண்டு விட்டதாக
எவரும் உரிமை கோர இயலாது. அப்படி உரிமை
கூறுபவன் ஒரு கோமாளியாகத்தான் இருக்க
முடியுமே தவிர ஒரு மார்க்சிஸ்ட்டாக இருக்க
முடியாது.

முந்திய கட்டுரைகளில், கட்சி கட்டுதல் பற்றிய
லெனினியக் கோட்பாடுகளை விளக்கி இருந்தேன்.
அது தியரி சார்ந்த பகுதி. இந்தக் கட்டுரையானது
லெனினியக் கட்சி கட்டுதலின் நடைமுறை சார்ந்த
அனுபவங்களை விளக்குகிறது. இது நடைமுறை
சார்ந்த பகுதி (practice part).

பிசிக்ஸ், கெமிஸ்ட்ரி போன்ற பாடங்களை
வகுப்பறையில் மட்டும் கற்றுக் கொள்ள முடியாது.
ஆய்வுக் கூடத்திலும் கற்க வேண்டும். ஆய்வுக்கூடக்
கருவிகளை பயன்படுத்தி பரிசோதனை செய்துதான்
அறிவியலைக் கற்க முடியும். மார்க்சியமும்
அப்படித்தான். நடைமுறை இல்லாமல்,
மார்க்சியத்தை எவரும் கற்க முடியாது.

ஒரு தொழிற்சங்கத்திலோ விவசாய சங்கத்திலோ
வேலை செய்ய வேண்டும். இவை வர்க்க
அமைப்புகள் (class organisations). பிற வெகுஜன
அமைப்புகளிலோ அல்லது கட்சியால் வழங்கப்படும்
பொறுப்பை ஏற்றோ செயல்பட வேண்டும்.
நடைமுறை இல்லாமல் எவரும்
மார்க்சியவாதி ஆக இயலாது.

மார்க்சியவாதி என்று உரிமை கோரும் எவர்
ஒருவரையும் " உங்களின் மார்க்சிய நடைமுறை
என்ன?" என்று சட்டையைப் பிடித்துக் கேட்கும்
உரிமை ஒவ்வொருவருக்கும் உள்ளது. ஏனெனில்
நடைமுறையில் இல்லாத ஒருவரால் ஒருபோதும்
மார்க்சியத்தைப் புரிந்து கொள்ள முடியாது.

முழுநேரப் புரட்சியாளர் என்ற கோட்பாட்டை
ஒரு கட்டுரையைப் படிப்பதால் மட்டும்
எவராவது புரிந்து கொள்ள முடியுமா? ஒரு
முழுநேரப் புரட்சியாளரின் வழிகாட்டுதலின்
கீழ் வேலை செய்யும்போதுதான் அதைப்
புரிந்து கொள்ள முடியும்.

புற நிலைமைகள் கனிந்த புரட்சிகர சூழல்
1970களில் நிலவியதாக மாலெ தலைமை
கருதியது. 70ன் பத்தாண்டுகளை விடுதலையின்
பத்தாண்டுகளாக மாற்றுவோம் என்று
அறைகூவல் விடுத்திருந்தார் சாரு மஜூம்தார்.
இந்திய வரலாற்றில் மகாத்மா காந்திக்குப்
பிறகு, சாரு மஜூம்தாரின் அறைகூவலை
ஏற்றுத்தான் பெருமளவில் இளைஞர்களும்
மாணவர்களும் நக்சல்பாரி  இயக்கத்தில்
அணி .திரண்டனர். கல்லூரிகளில் படித்துக்
கொண்டிருந்த இளைஞர்கள் படிப்பைத் துறந்து
சாருவின் பின்னால் அணி திரண்டனர்.

இந்தக் கட்டுரையாளர் சாருவின் அறைகூவலை
ஏற்று, விடுதலையை நோக்கிய நீண்ட பயணத்தில்
முதல் அடி எடுத்து வைத்த அந்த இனிய அனுபவத்தை
இக்கட்டுரை சொல்கிறது.
*****************************************************
     
.ரோசா லக்ஸம்பெர்க் லெனினைப் போல
 ஒரு தத்துவஞானி மற்றும்  நடைமுறையாளர் ஆவார்.
அவர் முழுமுற்றான மார்க்சியவாதி.
பிராங்க்பர்ட் பள்ளி என்பது மார்க்சியத்தின்
போதாமையை அறிவிக்கும் பள்ளி.
மார்க்சியத்தின் போதாமை என்ற கருத்துக்கும்
ரோஸாவுக்கும் சம்பந்தம் கிடையாது.

பிராங்க்பர்ட் பள்ளி என்பது மார்க்ஸ் ஏங்கல்ஸ்
லெனின் ஆகியவர்களுடன் இமானுவேல் கான்ட்
போன்ற பிற தத்துவஞானிகளின் கொள்கையைச்
சேர்த்து மார்க்சியத்தின் போதாமையை ஈடு
செய்வது என்ற நோக்கம் கொண்டது.

ரோசா எப்படிப்பட்டவர் என்றால், அவர் இமானுவேல்
கான்ட்டை அடித்துக் கொல்பவர். மேலும்
பிராங்க்பர்ட் பள்ளி, இருத்தலியல், பின்நவீனம்
ஆகிய அனைத்துமே  இரண்டாம் உலகப்
போருக்குப் பிறகு .பிறந்தவை. ரோசா 1919லேயே
இறந்து விட்டார்.

     


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக