வியாழன், 7 ஆகஸ்ட், 2014

சமஸ்கிருததத்தை எதிர்ப்பவர்கள் 
தமிழில் சமஸ்கிருதச் சொற்களைக் 
கலந்து பேசலாமா? எழுதலாமா?
என்ற கேள்விக்கான விடை!
---------------------------------------------------------
உயிருள்ள எல்லா மொழிகளும் தொடர்ந்து இயங்கிக்கொண்டே 
இருக்கின்றன.அந்த இயக்கப் போக்கில் மாறிக் கொண்டே 
இருக்கின்றன. செத்துப் போன சமஸ்கிருதம் இயங்குவதும்
இல்லை; மாறுவதும் இல்லை.

மொழிகள் தொடர்ந்து இயங்கும்போது மற்ற மொழிகளுடன்
உறவு கொள்கின்றன;மொழிகளுக்கு இடையில் 
கொடுக்கல் வாங்கல் நிகழ்கிறது.இதன் விளைவாக ஒரு 
மொழியின் சொற்கள் வேறு ஒரு மொழியில் கலக்கின்றன;
இது தவிர்க்க முடியாதது மட்டுமின்றி இயல்பானதும் 
ஆகும்.

எந்த ஒரு மொழியும் தனக்குச் சொந்தமான தனக்கு மட்டுமே 
உரித்தான சொற்களைக் கொண்டு மட்டும் இயங்குவதில்லை.
பிற மொழிகளின் சொற்களையும் ஏற்றுக் கொண்டுதான் 
ஒரு மொழி இயங்குகிறது.இதற்கு விதிவிலக்கே இல்லை.

ஆங்கில மொழியானது உலகின் பல்வேறு மொழிகளிலும் 
உள்ள சொற்களைத் தன்னுள் ஏற்றுக் கொண்டுள்ளது. சமகாலத் தமிழில் ஆங்கிலச் சொற்கள் மிகுதியும் விரவி உள்ளன.
மொழி என்பது உற்பத்தி சார்ந்து இயங்குவது என்ற
மார்க்சியப் புரிதல் இருந்தால், உற்பத்தி சார்ந்து உருவாகும் 
புதிய சொற்கள் எல்லா மொழிகளிலும் இடம் பெறுவது 
இயற்கையே என்பதைப் புரிந்து கொள்ள இயலும்.

நிலவுடைமைச் சமூக அமைப்பு நிலவிய காலத்தில் 
சமஸ்கிருதச் சொற்கள் தமிழில் விரவின. இவ்வாறு விரவிய சொற்களைத் தொல்காப்பியம் ஏற்றுக் கொள்கிறது.
மொழி குறித்த மார்க்சியப் புரிதல் தொல்காப்பியருக்கு 
இருந்தது.இங்கு மார்க்சியப் புரிதல் என்பது அறிவியல் 
புரிதல் ஆகும்.

தமிழில் உள்ள சொற்கள் யாவை என்ற வினாவுக்கு 
விடையளிக்கிறார் தொல்காப்பியர்.
     "இயற்சொல் திரிசொல் திசைச்சொல் வடசொல் என்று 
      அனைத்தே செய்யுள் ஈட்டச் சொல்லே"
          ---- சொல்லதிகாரம், எச்சவியல், நூற்பா:880.....
தமிழில் உள்ள சொற்கள் நான்கு வகை என்கிறார் 
தொல்காப்பியர்.
1) இயற்சொல் (எளிய சொல்) எ.கா: மண், மரம், மலை, 
    செடி, கோடி.
2)திரிசொல் (கற்றவர்க்கு விளங்கும் சொல் ) எ.கா: தத்தை,
    கிள்ளை (கிளி என்று பொருள் படுவன இவை) 
3) திசைச்சொல்  (பல்வேறு திசைகளில் இருந்தும் வரும் 
    சொல். எ.கா: சைக்கிள்.
4) வடசொல் ( சமஸ்கிருதச் சொல் ).
     எ.கா: கமலம், காரியம் 
    கமலம் என்பது தாமரை ஆகும். 
    காரியம் என்பது செயல் ஆகும்.

ஆக, இயற்சொல்,திரிசொல் ஆகியன தமிழுக்கே உரிய 
சொற்கள்.திசைச்சொல்லும் வடசொல்லும் பிறமொழிச் 
சொற்கள். இந்த நான்கு வகையும் கொண்டதே தமிழ்.

எனவே, தமிழில் கலந்த சமஸ்கிருதச் சொற்களைப் 
பேச்சிலும் எழுத்திலும் பயன்படுத்துவதற்கு 
தொல்காப்பியம் அனுமதிக்கிறது. ஒரு மொழியின் 
சொற்களஞ்சியத்தில் பிறமொழிச் சொற்கள் இருந்தே தீரும்.
இது தமிழுக்கு மட்டுமன்று, எல்லா மொழிகளுக்கும் 
பொருந்தும் கோட்பாடு ஆகும். 

தொல்காப்பியம் அறிவியல் வழியில் மொழிக்கு இலக்கணம் 
கூறிய நூல். உலகில் வேறு எந்த மொழியிலும் இதுபோல 
அறிவியல் வழியிலான இலக்கணம் இல்லை; இல்லவே 
இல்லை. தற்கால மொழியியல் அறிஞர்கள் 
தொல்காப்பியத்தைப் படித்து வியந்து போகின்றனர். 
தமிழுக்கு மட்டுமே அறிவியல் வழியிலான இலக்கணம் 
அமைந்து இருக்கிறது என்பதை அட்டியின்றி ஏற்கின்றனர்.

இன்னும் நிறைய விவரங்களைக் கூற இயலும்.
எனினும் வாசகர்களின் புரிதல் மட்டத்தையும் 
கணக்கில் கொண்டு இத்துடன் நிறுத்திக் கொள்கிறேன்.     

எனவே, தமிழர்கள் மட்டுமின்றி, தமிழ் பேசும் எழுதும் 
அனைவரும் தமிழில் வந்து கலந்துள்ள சமஸ்கிருதச் 
சொற்களைப் பயன்படுத்துவது குறை அன்று.
இது எவ்விதத்திலும் சம்ஸ்கிருத எதிர்ப்புக்கு 
அருகதை அற்றவர்களாக அவர்களை ஆக்கி விடாது.
அவ்வாறு கருதுவது பேதைமை ஆகும்.

ஒரு மொழியின் சொற்களைப் பயன்படுத்துவது 
என்பது வேறு. அந்த மொழியின் ஆதிக்கத்த்க்கு 
உடன்படுவது என்பது வேறு.

யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் 
இனிதாவது எங்கும் காணோம்.
      ...........பாரதி...............    

****************************************************************

    

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக