திங்கள், 24 ஆகஸ்ட், 2015

திருவிழாவில் குழந்தையைத் தொலைத்த தாய்
நாலாண்டு கழித்து குழந்தை கிடைக்கப் பெற்றது போல 
மீளக் கிடைத்த அண்ணா நூற்றாண்டு நூலகம்!
பன்றிகளுக்கு முன் முத்தைச் சிந்திய கலைஞர்!!
-----------------------------------------------------------------------------------
வீரை பி இளஞ்சேட்சென்னி 
-------------------------------------------------------------------------------------
அண்ணா நூற்றாண்டு நூலகம் தமிழ் மக்களுக்கு
மீண்டும் கிடைத்து இருக்கிறது சென்னை உயர்நீதிமன்றத் 
தீர்ப்பு மூலம். இது இழந்த சொர்க்கத்தை மீண்டும் பெற்றது 
போல (paradise regained). நல்லதொரு தீர்ப்பை வழங்கிய 
நீதியரசர்களின் காலில் விழுந்து வணங்குகிறேன்.  
**
வாசிப்புப் பழக்கம் மிக மிகக் குறைவாகவும், சினிமா 
பார்த்து நாசமாய்ப் போகும் பழக்கம் மிக மிக அதிகமாகவும் 
இருக்கும் தமிழ்நாட்டில், இழந்து விட்ட ஒரு நூலகம் 
மீண்டும் கிடைத்த விஷயமானது கொண்டாடத் தக்கதாக
இருக்க முடியாது. கழுதைகளுக்குத் தெரிவதில்லை கற்பூர 
வாசனை.
**
 கற்றாரைக் கற்றாரே காமுறுவர் என்பது போல, அண்ணா 
நூலக மீட்சியில் ஒரு சிறு சாராரே மகிழ்வு கொள்ள முடியும்.
**
அன்று போனது சமச்சீர் கல்வி. குப்பனுக்கும் சுப்பனுக்கும் 
அது ஒரு வரப் பிரசாதம். ஆனாலும் இழந்த சொர்க்கத்தை 
மீட்க, குப்பனும் சுப்பனும் போராடவில்லை. அன்றும் 
நீதிமன்றம்தான் தலையிட்டு சமச்சீர் கல்வியை மீட்டுத் 
தந்தது.இன்றும் அண்ணா நூலகத்தை நீதிமன்றம்தான் 
மீட்டுத் தந்துள்ளது.
**
வாழையடி வாழையாக, தலைமுறை தலைமுறையாகப் 
பயன் தருபவை சமச்சீர் கல்வியும் அண்ணா நூலகமும்.
ஆனாலும், பறிக்கப் பட்ட தங்களின் வாழ்வாதாரத்தை 
மீட்டெடுக்க தமிழ் மக்கள் போராடவில்லை. மக்களின் 
போராட்டத்தால் மீட்டெடுக்கப் பட்டு இருக்க வேண்டியவை 
நீதிமன்றத் தீர்ப்பால் மீண்டுள்ளன. இது ஒரு சோம்பேறிப்  
பயலுக்கு லாட்டரியில் லட்ச ரூபாய் விழுவது போன்றது.
**
தமிழ் மக்கள் மயக்கத்தில் ஆழ்ந்துள்ளனர் என்பதையே 
இது காட்டுகிறது. இதை மறுப்பவர்கள் ஒட்டு மொத்தத் 
தமிழ் இனமும் மானங்கெட்ட கூட்டம் என்பதை ஒத்துக் 
கொள்ளத்தான்  வேண்டும்.
**
இலங்கையில் தமிழர்களின் யாழ் நூலகத்தைச் சிங்களன் 
எரித்தான் என்பதற்காக இங்கே போராட்டம் நடத்திய 
நெடுமாறன் உள்ளிட்ட தமிழ் தேசியப் போலிகள், அண்ணா 
நூலகம் மூடப்பட்டபோது, அமைதி காத்தார்களே, அது எதைக் 
காட்டுகிறது?
**
தமிழன் போதையில் ஆழ்ந்தவன், மூடன், மானங்கெட்டவன் 
என்பதற்கான சான்றுகள் தாமே இவையெல்லாம்!
**
சமச்சீர் கல்வி வழங்கியதன் மூலமும் அண்ணா  நூலகம் 
கட்டியதன் மூலமும் கலைஞர் இமாலயத் தவறுகளையே 
புரிந்துள்ளார் என்பதுதான் சமூகவியல்-மானுடவியல் 
அறிஞர்களின் கருத்து. முப்பதாயிரம் ரூபாய் மதிப்புள்ள 
ஸ்மார்ட் ஃபோனை, எல்.கே.ஜி சிறுவனுக்கு வாங்கிக் 
கொடுத்தது போன்ற முட்டாள்தனம்தான் கலைஞர் 
செய்தவை.
**
தன்னிடம் கொடுக்கப்பட்ட விலை உயர்ந்த ஒரு பொருளை 
பாதுகாக்கத் தெரியாத ஒருவனிடம், அப்பொருளைக் 
கொடுப்பது முட்டாள்தனமே.
**
பன்றிகளுக்கு முன் முத்தைச் சிந்தாதே என்கிறது பைபிள்.
ஆனால், கலைஞரோ பன்றிகளுக்கு முன் முத்தைச் சிந்தி 
வருகிறார், அதுவும் தொடர்ந்து.
**************************************************************     


   


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக