சனி, 5 செப்டம்பர், 2015

கற்பிதங்களுக்கு எதிராக விசும்பல்கள்!
நெருக்கடிகளின் விளிம்பில் மோர்க்குழம்பு!
---------------------------------------------------------------------
கவிஞர் மனுஷ்ய புத்திரன் 
----------------------------------------------------------------------
அந்த ஒற்றைக் கவிதையின் மூலம் மொத்தத் தமிழ் இலக்கிய 
உலகையும் திரும்பிப் பார்க்க வைத்து விட்டார் கவிஞர் 
ஜமுனா பிரமீளன். நிச்சயமின்மையின் நெருக்கடிகள் சமகால 
உலகின்  மனிதகுலத்தையே விலங்கிட்டு வைத்திருக்கின்றன 
என்பதை எளிய சொற்களில் நுட்பமான கவிநயத்துடன் 
சித்தரித்துள்ளார் ஜமுனா.
**
நேற்று சாம்பார், இன்று ரசம் என்பது எப்படியோ உறுதியாகி விட்ட 
நிலையில், நாளையதினத்தின் மோர்க்குழம்பு மீது 
நிச்சயமின்மையின் நெருக்கடி கவிந்துள்ளது. 
தன் படுக்கையறைக்குள் யாரோ ஒளிந்து இருக்கிறார்கள் என்பது 
போன்ற ஒரு நெருக்கடியின் துயரத்தை ஜமுனாவின் கவிதை 
பதிவு செய்திருக்கிறது. 
**
ஒரு அந்நிய நிலத்தின் பெண் சாம்பார், ரசம்,
மோர்க்குழம்பு என்று வரிசைப் படுத்த முயலும்போது 
அது  ஒரு இயல்பான விருப்பம் என்பதையே அங்கீகரிக்க 
மறுக்கும் நாவறட்சி பீடித்த சமூகத்தை அவள் நொந்து 
கொள்கிறாள்.
**
இரண்டாயிரம்  வருடங்களுக்கு முன்னால்  ஹீப்ரு மொழி
பேசிய ஒரு பெண்ணும், குப்தர்களின் பொற்காலத்தில்  
வாழ்ந்த ஒரு பெண்ணும் கூட, இவ்வாறு  சாம்பாரும் ரசமும் 
வைக்க முடியாமல் அடைந்த துயரத்தை, இந்தச் சமூகம் 
யுக யுகாந்திரமாக நாவறட்சியால் பீடிக்கப் பட்டே 
வந்திருக்கிறது  என்ற உண்மையை ஜமுனா பிரமீளன் 
'கனவுகளின் விசும்பலில் காட்டுத்தீ'யாய்க் காட்ட முனைகிறார்/  
**
பாலைவனத்தில் ஒட்டகத்தோடு தோழமை பூண்ட 
ஒரு பெண், தன்  கனவுகளில் தவறாமல் வரும் 
ஒரு குளிர்ந்த நீர் ஊற்றில் இருந்து ஒருகை நீர் அள்ளிப் 
பருகுகிறாள். அந்தக் கைப்பள்ளத்து நீர் போல 
ஜமுனாவின் கவிதை ஒரு உண்மையை உரத்துச் 
சொல்கிறது.
**
கலங்கலாக எனினும் ஒரு மோர்க்குழம்பு வைத்து விட 
வேண்டும் என்ற வேட்கை அந்தப் பெண்ணின் 
நினைவுகளில் எப்போதும் வாழும் கோடையாக இருக்கிறது.
அதற்காக விரிகிறது அவளின் யோனி.
**
காலம் எப்போதும் பள்ளத்தாக்குகளில் அல்ல சிகரங்களிலேயே 
உறைகிறது. காடுகளை முகக்கும் முகைப் பூக்களாக 
ஜமுனா பிரமீளனின் கவிதைகள், கற்பிதங்களுக்கு எதிராக, 
விசும்பல்களையே முன்வைக்கின்றன.
**********************************************************************
  மனுஷ்ய புத்திரன் திறனாய்வு செய்தது கவிஞ்சர் ஜமுனா 
பிரமீளனின் இந்தக் கவிதைதான்!
---------------------------------------------------------------------------------------------  
   
கனவுகளின் விசும்பலில் காட்டுத்தீ!
-----------------------------------------------------
நேற்று சாம்பார் வைத்தாய்
இன்று ரசம் வைக்கிறாய்
நாளை மோர்க்குழம்பு வைப்பாயோ

ஸ்வப்னங்களின் விகசிப்பில்
மௌனங்கள் சிறகடிக்கும்
நிசப்தங்களின் அலறலில்
இந்த யுகத்தின் விடிவு
ஹீப்ரு மொழியில்
எழுதப் பட்டு இருக்கிறது
என்பதைத்தானே
குழம்புகளை மாற்றும்
உன் ரஸவாதம்
குப்தர் காலத்து அறிஞர்களுக்கு
கூறாமல் கூறிப்
பொற்காலத்தை மலர்வித்தது.
*******************************************************

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக