சனி, 24 செப்டம்பர், 2016

சகோதரி கொற்றவை அவர்களுக்கு,
-------------------------------------------------------------------
1) இவ்வாறு விளிப்பதிலும் தங்களுக்கு ஆட்சேபம்
இருக்குமாயின் ஈண்டு உரையாடல் நிகழ இயலாது.
2) விளிப்பு குறித்த தங்களின் வாதம் ஏற்க இயலாதது.
**
3) தங்களின் வாதப்படி பார்த்தால், தோழர் தமிழிசை
என்றும், தோழர் சுஷ்மா ஸ்வராஜ் என்றும் தோழர்
வானதி சீனிவாசன் என்றும் விளித்தல் வேண்டும்.
இன்னும் தோழர் நரேந்திர மோடி என்றும் தோழர்
ஹெச் ராஜா என்றும் விளித்தல் வேண்டும். அது
அபத்தமானது. 
**
திரு வசு மித்ர அவர்கள் ஒரு பதிப்பக உரிமையாளர்
என்ற செய்தி உண்மையிலேயே எனக்குத் தெரியாது. இதை
மிகப்பெரிய அறியாமையாகத் தாங்கள் கருதும்
பட்சத்தில் என்னால் எதுவும் செய்ய இயலாது. நான் இந்த
நூலை மதிப்பீடு செய்து ஒரு கருத்தைத் தெரிவித்தேன்.
அதற்கு பதிப்பாளரைப் பற்றி அறிந்திருக்க வேண்டிய
தேவையில்லை என்றே கருதுகிறேன்.
**
நூலைப் பற்றி நான் நிறையச் சொல்லி இருக்கிறேன்.
அது பற்றித் தாங்கள் எதுவும் சொல்லவில்லை. மாறாக
தங்களுடன்  முன்பின் பழக்கம் இல்லாத, முற்றிலும்
அறிமுகம் இல்லாத, இந்த நூல் காரணமாகவே தங்களோடு
தொடர்பு கொள்ள முற்பட்ட, ஒரு மூன்றாம் மனிதனாகிய
நான்,  தங்களை மரியாதையுடன் திருமதி கொற்றவை என்று குறிப்பிட்டதில் தவறு காண்பது பேதைமையன்றி
வேறு யாது?
**
அடுத்து, "தோழர்" என்ற அடைமொழியானது மார்க்சியக்
கட்சி சார்ந்தும், அதன் வெகுஜன அமைப்புகள் சார்ந்தும்
இயங்கியோர், இயங்குவோர் தங்களுக்குள்
ஒருவரையொருவர் விளிக்கவும் சுட்டவும் உண்டான சொல்.
Tom, Dick and Harry ஆகியோரை விளிப்பதற்கான சொல் அல்ல அது.
தங்களை "தோழர்" என்றுதான் விளிக்க வேண்டும்
என்று தாங்கள் என்னை நிர்பந்திப்பது அறிவுடைமை ஆகுமா?
**
இறுதியாக, இந்த நூல் குறித்த எங்கள் மதிப்பீடு பற்றிய
தங்கள் கருத்து என்ன? இந்த நூல் பற்றி மட்டுமே
நாங்கள் விவாதிக்க விரும்புகிறோம். மூலநூலாசிரியர்,
மொழிபெயர்ப்பாளர், பதிப்பாளர் ஆகியோரைப்
பற்றிய செய்திகள், தகவல்கள் ஆகியவற்றில் எமக்கு
அக்கறை இல்லை. கருத்தியல் சாராத விஷயங்களில்
அக்கறை செலுத்துவதும், கருத்தியலைப் புறக்கணிப்பதும்
பேதைமை ஆகும்.
**
பேதைமை என்பதொன்று யாதெனின் ஏதங்கொண்டு
ஊதியம் போக விடல்.
**
தோழமையுள்ள,
பி இளங்கோ சுப்பிரமணியன்
தலைவர், மார்க்சிய சிந்தனைப் பயிலகம்.
----------------------------------------------------------------------------------------------
இந்த நூல் பற்றிய மதிப்பீடு என்னுடைய தனிப்பட்ட
கருத்து அல்ல. இந்த நூல் பேசப்படத் தொடங்கியதுமே,
புதுமைப் பதிப்பகத்துக்குச் சென்று அந்த நூலை
நாங்கள் எல்லோரும் வாங்கிப் படித்து, விவாதித்து,
அதன் பிறகு செய்யப்பட்ட மதிப்பீடு இது. மேலும் இந்த
நூல் குறித்த மதிப்பீட்டை ஒரு சிறு வெளியீடாகவும்
கொண்டுவர உத்தேசித்துள்ளோம். எனவே அமைப்பின்
கருத்தை நான் என்னுடைய தனிப்பட்ட கருத்தாக
உரிமை கொண்டாட முடியாது. இது குறித்து
அனைவருக்கும் சுற்றறிக்கையும் அனுப்பி உள்ளோம்.
தங்களின் அஞ்சல் முகவரி இல்லாததால் தங்களுக்கு அனுப்ப இயலவில்லை.

நூல் பற்றிய முழுமையான மதிப்பீடு ஒரு சிறு நூலாக
வெளிவர இருக்கிறது. அந்த மதிப்பீட்டின் சாரம்
இரண்டு குறுங் கட்டுரைகளாக என்னால் பின்னூட்டம்
இடப்பட்டுள்ளது. 1) அடையாள அரசியலுக்கு எதிராக
மார்க்சியத்தைத் தூக்கிப் பிடிக்கும் நூல் 2) பூனைக்கு
மணி கட்டிய அம்மையார் ஆகிய எமது இரண்டு பின்னூட்டங்களையும்  படித்துப் பார்க்குமாறு வேண்டுகிறோம்.
 


 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக