புதன், 11 அக்டோபர், 2017

அத்வைதம் என்றால் என்ன?
மார்க்சியப் பார்வையில் அத்வைதம்:
ஓர் எளிய அறிமுகம்!
-------------------------------------------------------------------
1) கி.பி  எட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த, காலடி ஆதி
சங்கரர் உருவாக்கி வளர்த்தெடுத்த ஒரு தத்துவமே
அத்வைதம். அத்வைதம் என்றால் இரண்டற்றது
(no dualism) என்று பொருள். 

2) மானுட வாழ்க்கையில் பெருமளவுக்கு இருமைகள்
வந்து போகின்றன. பிறப்பு-இறப்பு, வாழ்வு-சாவு,
நன்மை-தீமை, உண்மை-பொய், சரி-தவறு என்பவை
போன்ற இருமைகள் (binaries) மானுட  வாழ்வில் அன்றாடம்
உணரப் படுபவை.

3) ஆதிசங்கரரின் தத்துவம் இருமையை நிராகரித்து
ஒருமையை, மூல ஒருமையை முன்வைக்கும்
தத்துவம் ஆகும் (monoism).

4) இந்தியத் தத்துவ ஞானத்தின் ஒரு பகுதியாக அத்வைதம்
உள்ளது. அத்வைதம் குறித்த விளக்க நூல்கள்
யாவும் அன்று சம்ஸ்கிருத  மொழியில் இருந்தன.
ஆதிசங்கரரின் காலத்தில் தத்துவ அரங்கில் மிகப்
பெரிதும் விவாதிக்கப்பட்ட ஒரு தத்துவமாக அத்வைதம்
இருந்தது.

5)  பிற்காலத்தில் மேனாட்டார் அத்வைதம் குறித்து
அறிய நேர்ந்ததும், அத்வைத விளக்க நூல்கள்
ஆங்கிலத்தில் எழுதப்பட்டன. இன்றைய இணைய
உலகில் அத்வைதம் குறித்து பல்வேறு விளக்கங்கள்
ஆங்கிலத்தில் எளிதில் கிடைக்கின்றன.

6) என்றாலும் அத்வைதம் குறித்து தமிழில் எழுதப்பட்ட
நூற்கள் மிகவும் அற்ப சொற்பமே. எனவே தமிழ் மட்டுமே
அறிந்துள்ள வாசகர்களால் அத்வைதம் குறித்து
ஒரு மிக எளிய அடிப்படைப் புரிதலைக் கூடப்
பெற வழியில்லாத சூழல் நிலவுகிறது.

7) ஆங்கிலம் அறிந்தால் மட்டுமே அத்வைதத்தை
அறிய முடியும் என்ற நிலையிலேயே தமிழ் வாசகர்கள்
இருத்தப் பட்டுள்ளார்கள். இது அத்வைதம் பற்றி
அறிவதை கடினமான ஒன்றாக ஆக்கியுள்ளது.

8) நமது முந்தைய தலைமுறைகளில் ஒரு குறிப்பிட்ட
விழுக்காட்டினர் சம்ஸ்கிருத அறிவு பெற்றுத்
திகழ்ந்தனர். யாரினும் கூடுதலான சமஸ்கிருதப்
புலமை பெற்றுத் திகழ்ந்தவர் மறைமலை அடிகள்.
காளிதாசனின் சாகுந்தலம் என்னும் சம்ஸ்கிருத
நாடகத்தை தமிழில் மொழிபெயர்த்தவர் மறைமலை
அடிகள். சமகாலத் தலைமுறையில் சமஸ்கிருதம்
கற்றோர், ஒப்பீட்டளவில், நமது முந்தைய
தலைமுறைகளை விட மிகவும் குறைவு.

9) அத்வைதம் இந்த மண்ணில் தோன்றிய தத்துவம்.
என்றாலும் சமகாலத்தில்,இந்த மண்ணில்தான் இது
குறைவாக அறியப்பட்டு இருக்கிறது என்ற
உண்மையை நாம் எதிர்கொள்ள வேண்டும்.

10) இருபெரும் முகாம்களாக இந்த உலகத்தையே
இரண்டாக்கிய பொருள்முதல்வாதம், கருத்து முதல்வாதம்
ஆகிய தத்துவங்களை அலசி ஆராய்ந்து, கருத்து
முதல்வாதத்தை வீழ்த்தி பொருள் முதல்வாதத்தை
அரியணையில் ஏற்றிய மார்க்சிய மூல ஆசான்கள்
காரல் மார்க்ஸும் ஏங்கல்சும் அத்வைதம் பற்றி
அறிந்திருக்கவில்லை.

11) இந்தியாவைப் பற்றி அறிய விரும்பிய மார்க்சுக்கு
பிரிட்டிஷ் ஏகாதிபத்தியவாதிகள் எழுதிய ஒருபக்கச்
சார்பான ஆங்கில நூல்களே கிடைத்தன. அவற்றை
வெறுத்து ஒதுக்கிய மார்க்ஸ், இந்தியாவைப் பற்றி
இந்தியர்களால் எழுதப்பட்ட நூற்களைக் கற்க
விரும்பினார். அத்தகைய நூற்கள் எல்லாம்
சமஸ்கிருதத்தில் இருந்தன. அவற்றைக் கற்கும்
பொருட்டு தம் அந்திம காலத்தில் மார்க்ஸ்
சமஸ்கிருதம்  கற்றுக்கொள்ள விரும்பினார். ஆனால்
சமஸ்கிருதம் கற்று முடிப்பதற்குள் மார்க்ஸ்
மறைந்து விட்டார். எனவேதான் மார்க்ஸும்
ஏங்கல்சும் அத்வைதம் குறித்து எதுவும் கூறவில்லை.

12) பின்னர் வந்த மூல ஆசான்களான லெனின், ஸ்டாலின்,
மாவோ ஆகியோரும் அத்வைதம் குறித்து  எதையும்
அறிந்திருக்கவும் இல்லை; கருத்துக் கூறவும் இல்லை.
அதற்கான தேவை அவர்களுக்கு இல்லை. அவர்களின்
முன்னுரிமைகள் வேறு.

13) விவேகானந்தரின் சிக்காகோ பேருரையும்
(1893 செப்டம்பர்), அவரின் அமெரிக்கச் சுற்றுப்பயணமும்
அத்வைதத்திற்கு ஒரு அறிமுகத்தை தத்துவத்
தளத்தில் வலுவாக ஏற்படுத்தின. தொடர்ந்து
மேனாட்டவரால் அத்வைதம் அலசி ஆராயப் பட்டது.
என்றாலும் இவை அனைத்தும் ஆங்கிலத்தில் மட்டுமே
உள்ளன.

14) ஒட்டு மொத்தத்தில் தமிழ் மட்டுமே அறிந்த ஒரு
தமிழ் வாசகன் அத்வைதத்திற்கு முற்றிலும்
அந்நியமானவன் என்ற நிலையே இப்போது வரை
நீடிக்கிறது.இதற்கு ஒரு நிவாரணமாக, அத்வைதம்
குறித்த தமிழ்நூலை எழுதி வெளியிடுவது என்று
மார்க்சிய சிந்தனைப் பயிலகம் முடிவு செய்துள்ளது.

15) உழைக்கும் வர்க்கத்து மக்களுக்கானதாக, எளிய
நடையில், அத்வைத சாரத்தை எவராலும் எளிதில்
புரிந்து கொள்ளத் தக்கதாக. மார்க்சியப் பார்வையில்
அத்வைதம் என்னும் சிறியதொரு நூல் இது/

**************************************************************

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக