ஞாயிறு, 29 அக்டோபர், 2017

done (12) அத்வைதம் என்னும் தந்தக் கோபுரத் தத்துவம்!
வாசகர்களின் பின்னூட்டங்களுக்கு பதில்!
பாமர மக்களின் உலகியல் பிரச்சினைகளுக்கு
அத்வைதத்தில் தீர்வு இல்லை!
1) அத்வைதம் ஞான மார்க்கத்தை போதித்தது.
மார்க்கம் என்றால் வழி என்று பொருள். அத்வைதம்
கூறும் உன்னத நிலையை ஒருவர் அடைய வேண்டும்
என்றால் அவர் அதற்கான ஞானத்தைப் பெற வேண்டும்.
2) இதற்கு மாறாக, ராமானுஜரின் விசிஷ்டாத்வைதம்
பக்தி மார்க்கத்தைப் போதித்தது. இடைவிடாத பக்தி
மூலம் விசிஷ்டாத்வைதம் கூறும் உன்னத நிலையை
ஒருவர் எய்த முடியும் என்றார் ராமானுஜர்.
3) ஞான மார்க்கம், பக்தி மார்க்கம் ஆகிய இரண்டில்
பக்தி மார்க்கமே எளிதானது; எல்லோராலும்
கடைப்பிடிக்க சுலபமானது. கோடிக்கணக்கான
மக்கள் வறுமையிலும் அறியாமையிலும் உழன்று
கொண்டிருக்கும் ஒரு நாட்டில், ஞான மார்க்கத்தைப்
பின்பற்றி ஞானத்தை அடைவது எப்போது? இதற்கு
எத்தனை பேர் முன்வருவர்?

4) ஆனால் பக்தி மார்க்கம் சுலபமான வழி.இது மக்களால்
எளிதில் பின்பற்ற முடிந்த வழி. ஞானம் தேவையில்லை;
பக்தியே போதும்; பக்தி இருந்தாலே ஞானம் உட்பட
எல்லாவற்றையும் அடையலாம் என்று போதித்தார்
ராமானுஜர். இப்போதனை வெகுமக்களை எளிதில்
கவர்ந்தது. இதனால் அத்வைதத்தை விட
விஷிஷ்டாத்வைதத்தை ஏற்றுக் கொண்டவர்கள்
பெருகினர். இவ்வாறு ராமனுஜர் அத்வைதத்தை
முறியடித்தார்.

5) ராமானுஜர் மறைந்து ஒரு நூற்றாண்டுக்குப் பின்னர்,
13ஆம் நூற்றாண்டில் மத்வர் பிறந்தார். இவர் துவைதம்
என்ற தத்துவத்தைத் தோற்றுவித்தார். ராமானுஜரை விட
சங்கரருடன் இவர் அதிகமாக முரண்பட்டவர். சங்கரின்
தத்துவம் அத்வைதம், அதாவது இரண்டல்ல ஒன்றுதான்
என்பது. மத்வரின் தத்துவம் எல்லாமே இரண்டுதான்
என்பது.எனவே தம் பங்குக்கு சங்கரரை அதிகமாகச்
சாடினார் மத்வர். மேலும் மத்வரும் மக்களால்
எளிதில் பின்பற்ற முடிந்த பக்தி மார்க்கத்தையே
போதித்தார். ஆக, ராமானுஜர், மத்வர் ஆகிய
இருவரின் தாக்குதலில் அத்வைதம் நிலைகுலைந்தது.

6) இவ்வாறு மக்களின் ஆதரவு இல்லாமல் மங்கிப்போன
அத்வைதம் அறிவுஜீவிகளின் ஒரு குறுகிய வட்டத்தில்
மட்டுமே செல்வாக்குடன் இருந்தது. பரந்துபட்ட
மக்களின் ஆதரவு (following) அத்வைதத்திற்கு இல்லை.
அத்வைதம் என்பது அறிவுஜீவிகளின் தத்துவம்
(philosophy of intellectuals). அது ஒரு தந்தக் கோபுரத் தத்துவம்.
அது என்றுமே பாமர மக்களின் தத்துவமாக
இருந்ததில்லை. பாமர மக்களின் உலகியல்
பிரச்சினைகளுக்கு அத்வைதத்தில்
ஒரு தீர்வும் இல்லை.

7) மேற்கூறிய யாவும் வரலாற்று நிகழ்வுகள். இவை
உண்மைகள் (FACTS). இவை உள்ளங்கை நெல்லிக்கனி
போல் தெரிபவை.

8) ஆனால் துரதிருஷ்ட வசமாக, வாசகர்களில்
சிலர் மாற்றுக்கருத்து என்ற பெயரில் மேற்கூறிய
உண்மைகளை (facts) மறுத்துக் கொண்டு
இருக்கின்றனர். இவர்கள் factsக்கும் opinionக்கும்
வித்தியாசம் தெரியாதவர்கள்.

9) Facts are sacred but opinions may differ என்பது ஒரு வாழ்வியல்
உண்மை ஆகும். மகாத்மா காந்தி இறந்து விட்டார்
என்ற வாக்கியம் ஒரு உண்மையை, ஒரு விவரத்தைக்
கூறுவது. அது கருத்து அல்ல. அதை எவரும் சர்ச்சைக்கு
உள்ளாக்க முடியாது. மீறி எவரேனும் சர்ச்சைக்கு
உள்ளாக்கினால் அது பேதைமை ஆகும்.

10) அதுபோலவே, அத்வைதம்  தோற்று விட்டது,
அது பின்பற்றுவோர் இல்லாமல் சுருங்கி விட்டது
என்ற கூற்றுகள் உண்மையான விவரங்கள்
(facts) ஆகும். அதில் சர்ச்சைக்கே இடமில்லை.

11) ராமானுஜர், மத்வர் ஆகிய இருவராலும்
முறியடிக்கப்பட்ட அத்வைதம், மக்கள் மன்றத்தில்
இருந்து அகன்று, அறிவுஜீவிகளின் குறுகிய வட்டத்தில்
வாழ்ந்து வந்தது. பல நூற்றாண்டுகளாக இதே
நிலையில் நீடித்த அத்வைதத்தை, 18-19ஆம்
நூற்றாண்டுகளில் பரமஹம்சரும் விவேகானந்தரும்
வெளியே எடுத்து மீண்டும் மக்கள் மன்றத்துக்குக்
கொண்டு வந்தனர். தத்துவச் செறிவு மிக்கதும்,
பக்தி சடங்குகளுக்கு முக்கியத்துவம் தராததுமான
அத்வைதம், பிரிட்டிஷ் ஆட்சியாளர்களின் கிறிஸ்துவ
மதப் பரப்பலுக்கு எதிரான ஆயுதமாகப் பயன்படும்
என்று பரமஹம்சரும் விவேகானந்தரும்
கண்டறிந்தனர்.

12) பக்தி, சடங்குகள் இல்லாததால்
அத்வைதம் ஒரு பிரபஞ்சத் தன்மையை (universal)
கொண்டிருக்கிறது என்று விவேகானந்தர்
உணர்ந்தார். எனவே மேலை நாடுகளில்
அத்வைதத்தைப் பரப்பினார். முந்திய
வாக்கியத்தில் கூறிய பிரபஞ்சத் தன்மை என்பதை
உள்ளூர்த்தன்மை அற்றது (No localism) என்று
புரிந்து கொள்ள வேண்டும்.

13) இவ்வாறு மங்கி மறைந்து மடிந்து போயிருக்க
வேண்டிய அத்வைதம் ஒரு சிறிய அளவிலான
மறுமலர்ச்சியை பரமஹம்சர் விவேகானந்தரால்
பெற்றது.

14) அத்வைதத்தின் இன்றைய நிலை என்ன? இந்த
2017இல் அத்வைதம் எந்த அளவு இந்திய மக்களிடம்
பரவி உள்ளது? எத்தனை ஆயிரம் பேர் அத்வைதத்தைப்
பின்பற்றுகின்றனர்?  (லட்சம், கோடி என்ற
பேச்சுக்கே இடமில்லை). இதற்கான விடை இதுதான்.

15) அன்று போல் இன்றும் மிகக் குறைவான
அறிவுஜீவிகளின் வட்டார எல்லைக்குள்ளேயே
அத்வைதம் முடங்கிக் கிடக்கிறது. அது
வெகுமக்களின் தத்துவமாக இல்லை. அறிவுஜீவிகளின்
நடுவே கூட, அத்வைதம் பற்றி அறிந்துள்ளோர்தான்
உள்ளனரே தவிர, அத்வைதத்தை வாழ்க்கை
நெறியாக ஏற்றுக்கொண்டு பின்பற்றுவோர்
மிகச் சிலரே.

16) அறிவுஜீவிகளின் நடுவில் அத்வைதத்துக்கு இருந்த
கொஞ்ச நஞ்ச ஆதரவுக்கும் இருபதாம் நூற்றாண்டின்
பிற்பகுதியில் பெண் எழுத்தாளர் அயன் ராண்ட்
மூலமாக ஒரு பேராபத்து ஏற்பட்டது. இவரின்
புறவயவாதம் (objectivism) என்னும் தத்துவமும்,
அத்தத்துவத்தை விளக்கி அவர் எழுதிய நாவல்களும்
இளம் அறிவுஜீவிகளின் சிந்தனையில் சக்தி மிக்க
தாக்கத்தை ஏற்படுத்தின. அயன் ராண்டின்
புறவயவாதம் சங்கரரின் அத்வைதத்தை
மூடத்தனமான தத்துவம் என்று நிரூபித்து
அத்வைதத்தை தூள் தூளாக நொறுக்கி விட்டது.    

17) மேலே கூறிய அனைத்தும் சர்ச்சைக்கு
அப்பாற்பட்ட உண்மைகள் (indisputable facts).
வரலாறு நிரூபித்துள்ள உண்மைகள். இவற்றைச்
சர்ச்சைக்கு உள்ளாக்க முயல்வது பேதைமையுள்
எல்லாம் பேதைமை ஆகும்.
************************************************************
அத்வைதத்தை முதலில் தோற்கடித்தது
விசிஷ்டாத்வைதம். இந்த முதல்
தோல்வியில் இருந்து அத்வைதத்தால் மீண்டெழ
முடியவில்லை. இது வரலாற்று உண்மை. தொடர்ந்து
மத்வரின் துவைதமும் தனது முதல் எதிரியாக
அத்வைதத்தை வைத்து அதைக் கடுமையாக
எதிர்த்தது. இவற்றால் அத்வைதம் தாக்குப்
பிடிக்க முடியாமல் தோற்று ஓடியது. இது
வரலாறு நிரூபித்த உண்மை.
**
அத்வைதம் பற்றி எழுதும்போது அதை வீழ்த்திய
விசிஷ்டாத்வைதம் பற்றி எழுதாமல் இருக்க
முடியாது.நம் சமகாலத்தில் அயன் ராண்டின்
புறவயவாதம் (objectivism) மிச்சம் மீதியிருந்த
அத்வைதத்தின் செல்வாக்கையும் வெட்டி
வீழ்த்தி விட்டது. எனவே அத்வைதம் பற்றிய
கட்டுரையில், அதை வீழ்த்திய அயன் ராண்ட் பற்றி
எழுதாமல் இருக்க முடியாது.
**


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக