திங்கள், 2 ஏப்ரல், 2018

ஆதி சங்கரர் எழுதியதும் எழுதாததும்!
---------------------------------------------------------------------
முன்னூறுக்கும் மேற்பட்ட நூல்கள் ஆதிசங்கரால்
எழுதப்பட்டதாகச் சொல்லப் படுகின்றன. இதில்
உண்மையில்லை.

பிற்காலப் புலவர்கள் தாங்கள் எழுதியதை எல்லாம்
ஆதிசங்கரரின் பெயரில் சேர்த்தனர்.

ஸௌந்தர்ய லஹரி அற்புதமான காவியம். காவியச்
சுவையில் ஈடுஇணையற்றது. இது சமஸ்கிருதத்தில்
எழுதப்பட்டது. என்றாலும் இந்து ஆதிசங்கரர்
எழுதியதல்ல.

ஆதிசங்கரர் தாம் வாழ்ந்த காலத்தில் எழுதிய
விவேக சூடாமணி என்னும் நூலின் மொழிநடைக்கும்
ஸௌந்தர்ய லஹரியின் மொழிநடைக்கும்
 பாரதூரமான வேறுபாடு இருப்பதை சம்ஸ்கிருத
மொழியியல் அறிஞர்கள் தெளிவுபடுத்தி உள்ளனர்.
விவேக சூடாமணியின் மொழிநடை  காளிதாசரின்
நாடகங்களின் சம்ஸ்கிருத நடைக்கு ஒத்திசைவானது.
 ஸௌந்தர்ய லஹரியின் மொழிநடை வெகுவாகப்
பிற்பட்டது. எனவே ஸௌந்தர்ய லஹரியை ஆதிசங்கரர்
எழுதவில்லை என்பது புலப்படுகிறது.

அதே போன்றதுதான் பஜ கோவிந்தம். இது ஆதிசங்கர
எழுதியதே அல்ல இதன் உள்ளடக்கம் நிரூபிக்கிறது.
ஆதிசங்கரரின் அத்வைதத்தில் பக்தி, துதி, வழிபாடு
ஆகியவற்றுக்கு இடமே கிடையாது. பக்தி மார்க்கமான
பூர்வ மீமாம்ஸையை  எதிர்த்தே ஞான மார்க்கத்தைக்
கொண்ட அத்வைதத்தை ஆதிசங்கரர் உபதேசித்தார்.

பஜ கோவிந்தம் என்றால் கோவிந்தன் துதி என்று
பொருள். கோவிந்தனைத் துதிக்கும் முப்பது
சமஸ்கிருத பாசுரங்கள் இந்நூலில் உள்ளன.
உதாரணத்திற்கு ஒன்றைப் பார்ப்போம்!

பஜ கோவிந்தம் பஜ கோவிந்தம்
பஜ கோவிந்தம் மூடமதே
ஸம் ப்ராப்தே  ஸந்நிஹிதே காலே
நஹி நஹி ரட்சதி டுக்ரிஞ் கரணே.

இப்பாடலின் மொழிபெயர்ப்பு!
( மொழிபெயர்ப்பு: இக்கட்டுரை ஆசிரியர்)

கோவிந்தனைத் துதி கோவிந்தனைத் துதி
கோவிந்தனைத் துதி மனமே
காலன் வரும் வேளையிலே
தத்துவப் படிப்பு உனைக் காக்காது!

(குறிப்பு:  டுக்ரிஞ் கரணே என்பது தத்துவ
இலக்கண நூல்.)

இப்பாடல் மட்டுமின்றி நூலின் அத்தனை பாடல்களும்
கோவிந்தன் துதி மட்டுமே. இதை அத்வைதியான
ஆதிசங்கரர் ஒருபோதும் இயற்றி இருக்க
முடியாது. ஆக பஜ கோவிந்தம் ஆதிசங்கரரால்
இயற்றப் பட்டதல்ல.

 அடுத்து மனிஷ பஞ்சகம் பற்றிப் பார்ப்போம்.
இது ஆதிசங்கரரால் இயற்றப் படவே இல்லை.
இந்நூல் குறித்து ஒரு கட்டுக்கதையும் உண்டு.
சங்கரர் காசியில் இருந்தபோது நடந்த ஒரு
நிகழ்வுடன் (இந்நிகழ்வும் ஒரு கட்டுக்கதையே)
முடிச்சுப் போடப்படுகிறது இந்நூல்.

ஆதிசங்கரரின் நூல்களை மூன்று வகையாகப்
பிரிக்கலாம்.
1) உண்மையிலேயே ஆதிசங்கரர் எழுதியவை
(உதாரணம்: பிரம்ம சூத்திர பாஷ்யம். விவேக
சூடாமணி போன்றவை)

2) ஆதிசங்கரரால் எழுதப் படாதவை
(உதாரணம்: பஜ கோவிந்தம், ஸௌந்தர்ய லஹரி,
மனிஷ பஞ்சகம், கனகதாரா ஸ்தோத்திரம் போன்றவை)

3) ஆதிசங்கரர் எழுதினார் என்றோ எழுதவில்லை
என்றோ உறுதிபட இதுவரை கூறப் படாதவை.
(உதாரணம்: லலிதா சஹஸ்கர நாமம்)

அத்வைதத் திறனாய்வு என்பது ஆதிசங்கரர் இயற்றிய
நூல்கள் என்று உறுதி செய்யப்பட்ட நூல்களின்
(authentic text) மீது அமைய வேண்டும்.
**********************************************************

..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக