திங்கள், 1 பிப்ரவரி, 2016

இருவேறு தற்கொலைகள்! இருவேறு உலகத்து இயற்கை!
அடையாள அரசியலை ஒழிப்போம்!
---------------------------------------------------------------------------------------------
வீரை பி இளஞ்சேட்சென்னி
----------------------------------------------------------------------------------------------
விழுப்புரம் எஸ்.வீ.எஸ் கல்லூரி மாணவிகள் மூன்று பேர்
(மோனிஷா, சரண்யா, பிரியங்கா) தற்கொலை செய்து
கொண்டு உள்ளனர்.
ஹைதராபாத் பல்கலை பி.ஹெச்.டி மாணவர் ரோஹித்
வெமுலாவும் தற்கொலை செய்து கொண்டார்.

கல்லூரி பல்கலை வளாகங்களில் மாணவர்கள் தற்கொலை
செய்து கொள்ளுவது இந்த நாட்டின் மிகப் பெரிய சோகம்.
ஒரு தகப்பன் ஸ்தானத்தில் இருந்து  பார்க்கும்போதுதான்
இவர்களின் இறப்பு அவர்தம் பெற்றோர்களுக்கு ஏற்படுத்தும்
பாதிப்பும் இழப்பின் பன்முகப் பரிமாணமும் புரியும்.

இருப்பினும் இந்த நாடும் சமூகமும் இவ்விரு
தற்கொலைகளையும் சமமாகப் பாவிக்கத் தயாராக இல்லை.
தீவிர மண்டல்எதிர்ப்பாளரும் இடஒதுக்கீடு எதிர்ப்புப்
போராட்டங்களை முன்னின்று நடத்தியவருமான அரவிந்த்
கேஜ்ரிவால் ஹைதராபாத்தில் வந்து குதிக்கிறார்.

தம் கட்சியில், கட்சி தொடங்கிய நாள் முதல் இன்று வரை,
கட்சியின் உயர் பதவியான மத்தியக் கமிட்டியில் ஒரு
தலித்துக்குக் கூட இடம் தராத மார்க்சிஸ்ட் கட்சியின்
பொதுச் செயலாளர் எச்சூரி வந்து குதிக்கிறார். தனக்கு
ஓட்டுப் போடுவதற்கு மட்டுமே பிறந்துள்ள ஆட்டு மந்தைகள்
என்பதற்கு மேல், தலித்துக்களைப் பற்றி எந்த ஒரு
பரிவு உணர்வும் இல்லாத ராகுல் காந்தி ஹைதராபாத்
பல்கலையில் வந்து குதிக்கிறார். எல்லோரும் நீலிக் கண்ணீர்
வடிக்கிறார்கள். வாக்குகள் விழும்  என்பதை உறுதி செய்து
கொண்டு புறப்பட்டுச் செல்கிறார்கள்.

ஆனால் எந்த நாயும் விழுப்புரத்துக்கு வரவில்லை. ஏன்
வரவில்லை? வருவதால் அவர்களுக்கு எந்த ஆதாயமும்
இல்லை. உயர்சாதி உயர் வர்க்கத் தலைவர்களான
ராகுல் காந்தி, கேஜ்ரிவால், எச்சூரி ஆகியோரின் வாக்கு
வங்கி உயர்வதற்கான எந்த வாய்ப்பையும் இறந்துபோன
விழுப்புரம் மாணவிகள் தரவில்லையே.

இறந்துபோன மாணவிகளில் ஒருத்தி கூட அடிநிலைச்
சாதியைச் சேர்ந்தவர் இல்லை என்னும்போது, இந்தச்
சாவுகளை வைத்துக் கொண்டு அடையாள அரசியல்
நடத்த முடியாது என்னும்போது எவன் வருவான்?

கல்லூரி உரிமையாளரும் தாளாளரும் தலித் என்னும்
போது, கொடிய ஈவிரக்கமற்ற சர்வாதிகாரியாக
ஏழை எளிய மாணவிகளைக் கசக்கிப் பிழிந்து ரத்தம்
குடிக்கும் சுயநிதிக் கல்லூரியின் முதலாளியே ஒரு
தலித் என்னும்போது, எவன் வருவான்? இந்த விஷயத்தில்
எப்படி ஐயா அடையாள அரசியல் நடத்த முடியும்?

சிம்புவின் கெட்ட வார்த்தைப் பாடலை எதிர்த்து, நாடே
அதிரும் போராட்டங்களை நடத்திய மாதர் சங்க
சிரோன்மணி உ. வாசுகி அம்மையார் இதில்
தலையிடுவதற்கான முகாந்திரம் எதுவும் இல்லையாமே?

சொத்து பத்தை எல்லாம் வித்து, கல்விக் கட்டணம்
அனைத்தும் செலுத்திய பிறகும் கூட, மேலும் ரூபாய்
25000 கட்டச் சொன்ன போது, கட்ட வழி இல்லாமல்
தற்கொலை செய்து கொண்ட அந்த மாணவிகள் ......

மாதம் ரூபாய் 25000 அரசிடம் இருந்து ஸ்காலர்ஷிப் பெறும்
ரோஹித் வெமூலா.........

இருவரும் வெவ்வேறு வர்க்கத்தின் பிரதிநிதிகள்!

சொந்தக் காரணங்களுக்காகத் தற்கொலை செய்து கொண்ட
ரோஹித் வெமூலா.....

நாம் செத்தாலும் பரவாயில்லை, மற்ற மாணவிகளாவது
நிம்மதியாக வாழட்டும் என்ற பொது நோக்குடன் தற்கொலை
செய்து கொண்ட மாணவிகள்....

இருவரும் வெவ்வேறு வர்க்கத்தின் பிரதிநிதிகள்!!

சாதி என்பது பிறப்பால் வருவது! பிறப்பால் வருவது!!
பிறப்பால் தலித் அல்லாத ஒரு மாணவனை தலித் என்று
வலிந்து காட்டுவதற்காக எத்தனை எத்தனை நீதிமன்றத்
தீர்ப்புகள் காட்டப் படுகின்றன! ஏன்? அப்போதுதான் அடையாள
அரசியல் நடத்த முடியும், அதனால்தான்.

ரோஹித்தின் தற்கொலை அரசியல் பகைமையால்
நடந்தது. அதை சாதிப் பிரச்சினையாகக் காட்ட முயற்சி
செய்வது வர்க்க அரசியலைப் பின்னுக்குத் தள்ளி
அடையாள அரசியலை முன்னெடுக்கவே.

மூன்று மாணவிகளின் தற்கொலை சுரண்டும் வர்க்கத்தின்
கொடிய சுரண்டலின் விளைவு. இவ்விரு தற்கொலைகளும் 
சாதியச் சார்பால் விளைந்தவை அல்ல.

ஆனால், பின் நவீனத்துவ சக்திகள் வர்க்க அரசியலை
ஒழித்துக் கட்டி, அதன் இடத்தில் சாதி அரசியல் என்னும்
அடையாள அரசியலை முன் வைக்கின்றன. ரோஹித்தின்
தற்கொலையை வைத்துக் கொண்டு அடையாள அரசியல்
செய்ய முடியும். ஆனால் விழுப்புரம் மாணவிகளின்
தற்கொலையை வைத்துக் கொண்டு அடையாள அரசியல்
செய்ய முடியாது. எனவேதான் ரோஹித்தை முன்னிறுத்தி,
குரைத்த எந்த நாயும் விழுப்புரம் பக்கம் திரும்பியே
பார்க்கவில்லை.

அடையாள அரசியலை ஒழித்து, அந்த இடத்தில் வர்க்க
அரசியலை வைப்பதன் மூலமே விடுதலையை அடைய
முடியும். மார்க்சியமே விடுதலையைப் பெற்றுத் தரவல்ல
ஒரே தத்துவம். வேறு எந்தக் குட்டி முதலாளித்துவத் தத்துவமோ
பின் நவீனத்துவமோ விடுதலையைப் பெற்றுத் தராது. இதை
உணராத வரை ஒருபோதும் விடிவு கிடையாது!
**********************************************************************






கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக