சனி, 3 ஜனவரி, 2015

சாதியம் குறித்த இந்திய மார்க்சியர்களின்
தவறான புரிதல்
--------------------------------------------------------------------------
பி இளங்கோ சுப்பிரமணியன்
--------------------------------------------------------------------------

     ( "மார்க்சியத்தில் சாதியைப் பற்றி எந்தக் குறிப்பும்
        இல்லை " என்ற கட்டுரையின் இரண்டாம் பகுதி )
-----------------------------------------------------------------------------------------------
(1) இந்தியக் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் சுருக்கமான வரலாறு 
----------------------------------------------------------------------------------------------- 

உலகில் மார்க்சியம்  எப்போது தோன்றியது? 
உலக மார்க்சியத்தின் வயது என்ன? 
மார்க்ஸ் தம் இளம் வயதிலேயே தம் கருத்துகளை 
உலகறியச் செய்தார். எனினும், "கம்யூனிஸ்ட் அறிக்கை"
என்று எழுதப் பட்டதோ அதையே மார்க்சியத்தின் 
தொடக்கமாகக் கருதலாம் என்று லெனின் கூறுகிறார்.
இதன்படி, கம்யூனிஸ்ட் அறிக்கை பிரசுரிக்கப் பட்ட 
1848ஆம் ஆண்டையே மார்க்சியத்தின் தோற்றமாகக் 
கருதலாம். எனவே  மார்க்சியத்தின் இன்றைய வயது 165. 

கம்யூனிஸ்ட் அறிக்கை வெளியிடப்பட்ட உடன், ஐரோப்பாக் 
கண்டமே குலுங்கியது; பூகம்பம் வெடித்தது போல் ஆனது.
ஐரோப்பாவில் எல்லா நாடுகளின் அரசுகளும் நடுங்கின.
ஆனால், இந்தியாவில் இது எந்த அசைவையும் ஏற்படுத்தவில்லை.
கம்யூனிஸ்ட் அறிக்கை இந்தியாவில் உணரப்படவே இல்லை.
நிலப்பிரபுத்துவ ஏகாதிபத்திய நுகத்தடியின் கீழ் 
இந்தியா கழுத்து நெரிபட்டும் காது பஞ்சடைத்தும் கிடந்தது.

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி உதயம் 
-------------------------------------------------------------  1917 நவம்பரில், ரஷ்யாவில், லெனின் தலைமையில்,
மகத்தான சோஷலிசப் புரட்சி ஏற்பட்டது.இது உலகம் 
முழுவதும் சக்திமிக்க தாக்கத்தை ஏற்படுத்தியது.இதற்கு 
இந்தியாவும் தப்பவில்லை. இந்தியாவிலும் கம்யூனிஸ்ட் 
கட்சியைத் தோற்றுவிக்க வேண்டும் என்று கம்யூனிசம் 
கற்ற சில அறிவாளிகள் கருதினார்கள். ஆனால் அதற்கேற்ற 
சூழல் இந்தியாவில் இல்லாததால், ரஷ்யாவின்  தாஷ்கன்ட் 
நகரில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியை 1920இல் 
தோற்றுவித்தார்கள். எம்.என்.ராய், அபனி முகர்ஜி உள்ளிட்ட 
சில முன்னோடிக் கம்யூனிஸ்ட் அறிவாளிகள் இவ்வாறு
கம்யூனிஸ்ட் கட்சியைத் தொடங்கியவர்கள் ஆவர்.
இந்த 1920ஆம் ஆண்டையே, இந்தியக் கம்யூனிஸ்ட் 
கட்சியின் தொடக்கமாக மார்க்சிஸ்ட் கட்சி ஏற்றுக் 
கொள்கிறது.

ஐந்து ஆண்டுகள் கழித்து, இந்தியாவில், கான்பூரில்,
1925 டிசம்பர் 25 அன்று, சிங்காரவேலர் தலைமையில் 
முதல் கம்யூனிஸ்ட் மாநாடு நடைபெற்றது. அம்மாநாட்டில் 
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி தொடங்கப் பட்டது. இந்த 
1925ஆம் ஆண்டையே, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் 
தொடக்கமாக, கம்யூனிஸ்ட் கட்சி ( CPI ) ஏற்றுக் கொள்கிறது.
1920இல் தொடங்கியது என்ற கருத்தை கம்யூனிஸ்ட் கட்சி 
( CPI ) ஏற்றுக் கொள்ளவில்லை.

1920ஆ,1925ஆ, எது சரி என்பது இக்கட்டுரையின் 
மையப்பொருள் அல்ல.
     
 தொடக்கத்திலேயே அடக்குமுறை 
---------------------------------------------------------------   
ஆக, இந்தியாவில் கம்யூனிஸ்ட் இயக்கத்துக்கு
சற்றேறக் குறைய நூறு வயது ஆகிறது.
சுதந்திர இந்தியாவில் அல்ல, அடிமை இந்தியாவில்,
பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் கம்யூனிஸ்ட் கட்சி
ஆரம்பிக்கப் பட்டது என்பதை மறந்து விடக் கூடாது.

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி தொடக்கத்திலேயே பிரிட்டிஷ்
அரசின் கடும் அடக்குமுறையைச் சந்தித்தது.
கம்யூனிஸ்ட் நடவடிக்கைகள் தடை செய்யப் பட்டன.
கட்சி தலைமறைவாக இயங்கியது. 1920-1930 காலக்கட்டத்தில் 
பல்வேறு சதி வழக்குகள் போடப்பட்டன. பெஷாவர் சதிவழக்கு,
கான்பூர் சதிவழக்கு, மீரத் சதிவழக்கு ஆகியவை 
அவற்றுள் முக்கியமானவை.  இச் சதிவழக்குகள் 
முன்னணித் தலைவர்கள் சிங்காரவேலர், எஸ்.ஏ.டாங்கே,
எம்.என்.ராய் உள்ளிட்ட  அநேகர் மீது போடப்பட்டன.
பிரிட்டிஷ் இந்தியச் சிறைகளை கம்யூனிஸ்ட் தலைவர்கள்
நிரப்பினர்.

இரண்டாம் உலகப் போரின்போது, இங்கிலாந்து, ரஷ்யா
கூட்டணி ஏற்பட்ட நிலையில், இந்தியக் கம்யூனிஸ்ட்
கட்சி ஏகாதிபத்திய பிரிட்டிஷ் அரசை ஆதரித்தது.
அரசின் அரவணைப்பைப் பெற்றது. அரசு கம்யூனிஸ்ட்களுக்கு
ஆயுதப் பயிற்சி அளித்தது.

நாடு விடுதலை அடைந்த பிறகு, பி.டி. ரணதிவே, கட்சியின் பொதுச்செயலாளராக இருந்தபோது, தெலுங்கானா
உள்ளிட்ட சில பகுதிகளில் கட்சி ஆயுதப் போராட்டத்தை
நடத்தியது. இப்போராட்டம் கடுமையாக ஒடுக்கப் பட்டது.
தமிழ்நாட்டில், ராஜாஜி ஆட்சிக் காலத்தில்,சேலம் சிறையில் கம்யூனிஸ்ட்டுகள்  படுகொலை செய்யப் பட்டனர்.    

1952 முதல் நடைபெற்ற பொதுத்தேர்தல்களில் கட்சி
பங்கேற்றது. அதுமுதல், நாடாளுமன்றப் பாதையைத்
தொடர்ந்து பின்பற்றி வருகிறது. 1957இல் கேரளத்தில்
ஆட்சி அமைத்தது. நம்பூதிரிபாட் முதல்வர் ஆனார்.
பின்னர் நேரு இந்த ஆட்சியைக் கலைத்தார்.

(இன்று, 2014இல் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில்,
மொத்தமுள்ள 543 இடங்களில், கம்யூனிஸ்ட் கட்சி
ஒரே ஒரே இடத்தையும், மார்க்சிஸ்ட் கட்சி ஒன்பது
இடங்களையும் மட்டும் பெற்று வீழ்ச்சியின் விளிம்பில்
நிற்கின்றன.)


கட்சி பிளவுபட்டது 
-----------------------------------   1962இல் நடைபெற்ற இந்திய-சீனப் போரை அடுத்து,
ஒன்றுபட்ட கம்யூனிஸ்ட் கட்சி பிளவு பட்டது.
1964இல் மார்க்சிஸ்ட் கட்சி உருவானது. 1969இல்
நடைபெற்ற நக்சல்பாரி ஆயுத எழுச்சியைத் தொடர்ந்து
மார்க்சிஸ்ட் கட்சி பிளவுபட்டு, சாரு  மஜும்தார்
தலைமையில் மார்க்சிய-லெனினியக் கட்சி தோன்றியது.
இந்திரா அரசால் இக்கட்சி கடுமையாக ஒடுக்கப்பட்டு
பல்வேறு குழுக்களாகப் பிரிந்தது.இவற்றுள், மாவோயிஸ்ட்
கட்சி மட்டுமே தொடர்ந்து ஆயுதப் போராட்டத்தில் 
ஈடுபட்டு வருகிறது.

இதுதான் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின்
நூறாண்டுகால மிகச்  சுருக்கமான வரலாறு. சாதியம்
குறித்த இந்தியக் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் புரிதல் என்ன என்று
அறிந்து கொள்ள உதவியாகவே, இச்சுருக்கமான
வரலாறு இங்கு தரப் படுகிறது


வர்க்கப் போராட்டம் அல்ல ; வெறும் பொருளாதார வாதமே!
----------------------------------------------------------------------------------------------- 
1) தொழிலாளர்களைத் திரட்டி தொழிற்சங்கம் கட்டுவது,
கூலி உயர்வுக்காகப் போராடுவது,
2) விவசாயிகளைத் திரட்டி விவசாயச் சங்கம் கட்டுவது,
கூலி உயர்வுக்காகப் போராடுவது
ஆகிய இரண்டும்தான், மிக நீண்ட காலத்துக்கு
கட்சியின் செயல்பட்டுகளாக இருந்தன.
கலை,இலக்கியம், பண்பாடு, தத்துவம் ,உள்ளிட்ட வாழ்வின்
அனைத்துத் துறைகளிலும் வர்க்கப் போராட்டத்தை
நடத்தவில்லை; நடத்த இயலவில்லை.


இதற்குப் பல காரணங்கள் உண்டு. ஏகாதிபத்திய பிரிட்டிஷ் அரசின் அடக்குமுறை, சுதந்திர இந்தியாவில் நேரு-பட்டேல் அரசின் 
அடக்குமுறை ஆகியவற்றுடன், மொழியாலும் பண்பாட்டாலும் 
வேறுபட்டுக்கிடந்த இந்தியத் துணைக்கண்டத்தில், பல்வேறு 
மாநிலங்களையும் ஒன்றிணைத்து, தேசம் தழுவியதும் 
ஒருங்கு இணைந்ததுமான  ஒரு  கட்சியைக் கட்டுவதில்
உள்ள நடைமுறைச் சிக்கல்களும் காரணமாய் அமைந்தன.

இதன் விளைவாக, பன்முகத் தன்மை வாய்ந்ததும், அனைத்தும் 
தழுவியதுமான மார்க்சியம் வெறும் பொருளாதாரவாதமாகக்
குறைக்கப் பட்டு விட்டது. (MARXISM WHICH IS VERSATILE AND 
UNIVERSAL WAS REDUCED INTO A MERE ECONOMISM).தத்துவார்த்த 
மொழியில் சொல்வதானால், இது பொருளாதாரக் குறைப்பு 
வாதம் ( ECONOMIC REDUCTIONISM ) ஆகும். பாமர மக்களின் 
மொழியில் சொல்வதானால், கம்யூனிசம் என்பது  
கூலிப் போராட்டம் ஆகும்.

ஆரம்பகாலக் கம்யூனிஸ்ட் தலைவர்களைக்  குறை 
கூறுவதற்காக இப்பத்திகள் எழுதப்படவில்லை என்பதை 
குட்டிமுதலாளித்துவத் தன்மையற்ற வாசகர்கள் எளிதில் 
உணரமுடியும்.

விடிவெள்ளியாக நக்சல்பாரி எழுச்சி!
--------------------------------------------------------------- 
வசந்தத்தின் இடிமுழக்கமாக, நக்சல்பாரி ஆயுத எழுச்சி
சாரு  மஜும்தார் தலைமையில் இந்திய அரசியல் வானில்
நிகழ்ந்ததும், அதைத் தொடர்ந்து,1969இல்   
மார்க்சிய லெனினியக் கட்சியின்  ( CPI ML ) உதயமும் 
இந்திய கம்யூனிச வரலாற்றில் ஒரு மாபெரும் 
திருப்புமுனையை ஏற்படுத்தின. புரட்சித்தீயில் திருத்தல்வாதம் 
( REVISIONISM ) சுட்டுப் பொசுக்கப் பட்டது. 

சாரு  மஜும்தாரின் அறைகூவலை ஏற்று, நாடே அவர் 
பின்னால் திரண்டது. இந்தியத் துணைக்கண்டத்தின் 
புரட்சிகர சக்திகளும், புரட்சியை நேசிக்கும் மக்களும் 
சாரு  மஜும் தாரின் பின்னால் அணி திரண்டனர். திரிபுவாத 
CPI, CPM கட்சிகள் கிழிந்து கந்தல் கந்தல் ஆயின. கட்சி 
தொடங்கிய ஒன்றிரண்டு ஆண்டுக்குள், நாடு முழுவதும் 
CPI ML கட்சி அமைப்புகள் பல்கிப் பெருகின. மதம் இனம்,
மொழி, தேசிய இனம் ஆகிய எல்லைகள் உடைத்து எறியப்பட்டு
CPI ML  கட்சியின் தலைமையில் மக்கள் அணிதிரண்டனர்.
கல்லூரியில் படித்துக் கொண்டு இருந்த மாணவர்கள் 
படிப்பைத் துறந்து புரட்சியில் குதித்தனர். இந்திய வரலாற்றில், 
மகாத்மா காந்திக்குப் பின்னர், நாடு முழுவதையும் 
அணி திரட்டியவர் சாரு மஜும்தார் மட்டுமே.

நக்சல்பாரி ஆயுத எழுச்சியை, "வசந்தத்தின் இடிமுழக்கம்"  
( SPRING THUNDER ) என்று சீனக் கம்யூனிஸ்ட் கட்சி வர்ணித்தது.
சாரு  மஜும்தாரை "புரட்சியின் சுடரொளி" என்று பாராட்டியது.
இவை பீகிங் ( இன்றைய பெய்ஜிங் ) வானொலியில் ஒலிபரப்பப் 
பட்டன. 

இதுவரை பொருளாதார வாதத்தில் மூழ்கிக் கிடந்த 
இந்தியக் கம்யூனிஸ்ட் இயக்கம் தளைகளை அறுத்துக் கொண்டு,
வர்க்கப் போரில் குதித்தது. வர்க்கப் போராட்டத்தை,
அதன் மெய்யான பொருளில் CPI ML கட்சி நடத்தியது.
கலை இலக்கியம் பண்பாடு தத்துவம் ஆகிய அனைத்துத் 
துறைகளில் வர்க்கப் போராட்டம் நடைபெற்றது.            


தத்துவார்த்தச் சிக்கல்கள் பெரும் கவனிப்பைப் பெற்றன.
இந்தியக் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் வரலாற்றில், முதல் முதலாக  
தத்துவார்த்த விவாதம் அகல்விரிவாகவும் ஆழமாகவும் நடைபெற்றது.   
மத்தியக் கமிட்டி முதல் கிராமப்புறக் கிளைகள் வரை 
செறிவான தத்துவார்த்த விவாதங்கள் நடைபெற்றன. இத்தகைய 
விவாதங்களால் மார்க்சியத்தின்பால் லட்சக் கணக்கில்  இளைஞர்களும் 
இளம்பெண்களும் ஈர்க்கப் பட்டனர். இது இந்தியக் கம்யூனிச 
வரலாற்றில் இதுவரை இல்லாத ஒன்று என்பது 
குறிப்பிடத் தக்கது.

இதுகாறும் CPI, CPM கட்சிகளால் புறக்கணிக்கப் பட்ட, முக்கியமான 
தத்துவப் பிரச்சினைகள் மார்க்சிய லெனினிய வெளிச்சத்தில் 
ஆராயப் பட்டன. சாதியமும் அவற்றுள் ஒன்று.

1) சாதி என்பது அடித்தளமா, மேற்கட்டுமானமா?
2) சாதி என்பது வர்க்கத்துக்குள் அடங்கியதா அல்லது 
    தனித்த ஒரு சமூகக் கூறா?
3) சாதி என்பதை, ஒரு தத்துவார்த்த வகையினமாக
    ( PHILOSOPHICAL CATEGORY ) கருத இயலுமா?
இன்ன பிற சிக்கல்கள் விவாதிக்கப் பட்டன. தீர்வுக்கான 
பெருவெளியின் கதவுகள் அகலமாகத் திறந்தன. அவை 
குறித்து அடுத்த கட்டுரையில் ஆழமாகக் காண்போம்.

*******************************************************************
      
  



   
   
  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக