சனி, 24 ஜனவரி, 2015

குருமூர்த்தி அய்யரும் தயாநிதி மாறனும்!
---------------------------------------------------------------- 
பி இளங்கோ சுப்பிரமணியன் 
----------------------------------------------------------------- 

ஜல்லிக்கட்டில் காளையை அடக்கும் வீராவேசம் 
தெரிகிறது குருமூர்த்தி அய்யரிடம்! தம் வீட்டின், 
மன்னிக்கவும், ஆத்தின் வரவேற்பறையில் இருந்த 
வண்ணம் ஊடகங்களுக்கு நேர்காணல் வழங்குகிறார் 
அய்யர். வரவேற்பறைச் சுவர்களை சங்கரராமன் கொலை 
புகழ் ஜெயேந்திரரின் திருவுருவப் படம் அலங்கரிக்கிறது.
ஜெயேந்திரரின் திருவுருவப் படத்தைத் தரிசித்த கண்கள்,
அடுத்து ஆட்டோ சங்கரின் படத்தைத் தேடுகின்றன. ஒருவேளை 
புழக்கடையில் இருக்கக் கூடும், சூத்திரன் என்பதால்!

ஜெயேந்திரர், ஆட்டோ சங்கர் இருவரையும் ஒரே 
வினையால் அணையும் பெயரால் சுட்டலாம். வினையால் 
அணையும் பெயர் என்றால், செய்த செய்கையால் ஏற்படும் பெயர் 
என்று பொருள். மேலும் விளக்கம் பெற விரும்புவோர், எட்டாம் 
வகுப்பு தமிழ் இலக்கணப் புத்தகத்தை நாடலாம்.

எனினும் இவ்விருவருக்கும் ஒரு வேறுபாடும் உண்டு. 
முன்னவருக்கு "பிரம்ம  ஹத்தி" தோஷம் உண்டு.
பின்னவருக்கு தோஷம் எதுவும் கிடையாது. சூத்திர ஹத்தி 
ஒரு தோஷம் இல்லையே, மனு சாஸ்திரப்படி!

( சமஸ்கிருதம் தெரியாத சூத்திர அபிஷ்டுகளுக்காக ஒரு விளக்கம்:
 பிரம்ம ஹத்தி என்றால் பிராமணனைக் கொல்வது என்று 
பொருள். சூத்திர ஹத்தி என்றால், சூத்திரனைக் கொல்வது 
என்று பொருள்.)

 கி.பி 2007இல் சன் டிவி அலுவலகத்தில் நிறுவப்பட்ட,
கள்ளத்தனமான  ஒரு தொலைபேசி இணைப்பகத்தைத் 
தம் ஞான திருஷ்டியால் அறிந்து கொண்ட அய்யர், உடனேயே 
அதுபற்றி எதுவும் பிரஸ்தாபிக்கவில்லை. நான்கு ஆண்டு காலத் 
தத்துவ விசாரத்தின் பின், கி.பி 2011இல் திருவாய் மலர்ந்து 
அருளுகிறார். அவரது அருள்வாக்கை தினமணி வைத்தியநாத 
அய்யர் பிரசுரிக்கிறார். 

CBI என்பது அரசு எந்திரத்தின் பிரிக்க முடியாத ஒரு பகுதி
(AN INSEPERABLE PART OF THE STATE MACHINERY) என்கிற 
மார்க்சிய பாலபாடத்தை அறிந்தவர்களுக்கு, CBI என்றும் 
என்றென்றும் ஆளுவோரின் கைக்கருவிதான் என்பது புரியும்.
எனவே தயாநிதி மாறன் மீதான CBIயின் பாய்ச்சல், மாறன் 
சகோதரர்களைச் சிறையில் தள்ளுவது என்ற அற்ப 
நோக்கத்தைக் கொண்டதல்ல என்பதும் புரியும்.

தமிழகத்தில் காலூன்றத் துடிக்கும் ஆர்.எஸ்.எஸ் குழுமத்துக்குப் 
பெருஞ்சவாலாக இருப்பது பெரியாரிய, திராவிட இயல் 
சித்தாந்தங்களே. கண்டிப்பாக மார்க்சியம் அல்ல. அது தமிழ் 
மண்ணில் வேர் பிடிக்கவில்லை.  பெரியாரிய, திராவிட இயல் 
சித்தாந்தங்களை இன்றும் நடைமுறைப் படுத்தும் இயக்கமாக 
இருப்பது திமுகதான் ( இவர்கள் நடைமுறைப் படுத்துவதில் 
ஆயிரம் குறைகள் இருந்தபோதிலும் ).

திமுகவின் பலவீனங்களும் தவறுகளும் இன்று மேலோங்கி 
நிற்கின்றன. என்றாலும், இக்காரணம் பற்றி திமுகவை ஏற்க 
மறுக்கும் எவரும் ஆர்.எஸ்.எஸ் குழுமத்தை ஆதரிக்கப் 
போவதில்லை. மாறாக, திமுகவைவிட ஆயிரம் மடங்கு 
தீவிரத்துடன் ஆர்.எஸ்.எஸ் ஐ எதிர்ப்பார்கள்; எதிர்க்கிறார்கள்.

சுருங்கக் கூறின், தத்துவார்த்த அரங்கில், (IDEOLOGICAL FRONT )
பெரியாரியத்தை வெற்றி கொள்ளாமல், ஆர்.எஸ்.எஸ்  தமிழ் 
மண்ணில் காலூன்றவே முடியாது என்பதுதான் நிதரிசனம்.
இந்தப் புரிதலுக்கு வந்துவிட்ட ஆர்.எஸ்.எஸ் சித்தாந்தவாதிகள் 
( குருமூர்த்தி, துக்ளக் சோ போன்றோர்) திமுகவை 
வீழ்த்துவதன் மூலம் பெரியாரியத்தைக் கடப்பது  என்கிற ஓரம்சத் திட்டத்துடன் களத்தில் இறங்கி உள்ளனர்.

இந்த ஓரங்க நாடகத்தின் முதல் காட்சிதான் ( OPENING SCENE )
சன் டி.வி அதிகாரிகளின் கைதும் சிறையும். 

மாறன் சகோதரர்கள் சிறை செல்வார்களா என்றால், அதற்கான 
வாய்ப்பு குறைவாகவே உள்ளது. இவர்களைக் கைது செய்து  
சிறைக்கு அனுப்புவதை விட, வழக்கை ஆண்டுக் கணக்கில் 
இழுத்தடித்து, வழக்கு சார்ந்த ஊழல் விவகாரங்களைப் 
பிரச்சாரம் செய்வதன் மூலம், திமுகவுக்கு அவப்பெயர் 
ஏற்படுத்துவது ஒன்றே ஆர்.எஸ்.எஸ்.சின் குறிக்கோள்.
தேவையான அளவு பிரச்சார மதிப்பு (PROPAGANDA VALUE )
கிட்டி விடுமேயானால், இவர்களைச் சிறைக்கு அனுப்புவதில் 
ஆர்.எஸ்.எஸ் ஆர்வம் காட்டாது.

இக்கட்டுரை மாறனுக்கு வக்காலத்து வாங்குவதற்காக 
எழுதப் பட்டது அல்ல. மாறன் குழுமம் உங்களுடைய 
அல்லது என்னுடைய வக்காலத்தை நம்பி இல்லை.
ஆசியாவின் மிகப்பெரிய தொழில் அதிபரான கலாநிதி மாறனை 
இந்திய முதலாளித்துவம் காப்பாற்றும். யார் ஆண்டாலும், 
இந்தியாவின் மத்திய அரசு என்பது பெருமுதலாளிகளின் 
அரசே. "அரசாங்கம் என்பது முதலாளிகளின் காரியக் 
கமிட்டியே " என்னும் மார்க்சிய போதனையை இங்கு 
நினைவு கூரவும்.

நிலைமை கைமீறிப் போகுமானால், சன்  குழுமம்
ஆர்.எஸ்.எஸ்சில் சங்கமம் ஆகவும் தயங்காது என்று 
நாம் கூறும் உண்மை சிந்தனைக் குள்ளர்களின் மண்டையில் 
வேண்டுமானால் ஏறாமல் இருக்கலாம். ஆனால் அது 
புறக்கணிக்க முடியாத உண்மை.

எனவே, இந்த ஒட்டுமொத்த விவகாரத்தில், ஆர்.எஸ்.எஸ்சின் 
கை ஓங்கி விடாமல் பார்த்துக் கொள்வது ஒன்றுதான் புரட்சியாளர்களின் 
பிறழ முடியாத கடமை.

******************************************************************88888   
  
   



             




    

    


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக