ஞாயிறு, 5 மார்ச், 2017

மனப்பாடம் செய்வது நல்லது!
மனப்பாடக் கல்வி என்பது வேறு!
--------------------------------------------------------------
பி இளங்கோ சுப்பிரமணியன்
நியூட்டன் அறிவியல் மன்றம்
--------------------------------------------------------------
பாடப்புத்தகத்தில் இல்லாத ஒன்றை நான் முதன்
முதலில் மனப்பாடம் செய்தது என்னுடைய 10 வயதில்.
அந்நிகழ்வு இன்னும் பசுமையாக நினைவு இருக்கிறது.
அசுவனி, பரணி, கார்த்திகை, ரோகிணி என்று
வரும் 27 நட்சத்திரங்களையும் மனப்பாடம் செய்தேன்.
தமிழ் மாதங்கள் 12ஐயும் மனப்பாடம் செய்யும்
தேவை பாடப்புத்தகத்திலேயே இருந்தது.

தொடர்ந்து மனப்பாடப் பகுதி அல்லாத பாடல்களையும்
(தமிழ், ஆங்கிலம்) மனனம் செய்தேன். ஆண்டாளின்
திருப்பாவை 30 பாசுரங்கள், கம்ப ராமாயண விருத்தங்கள்,
பாரதி. பாரதிதாசன் பாடல்கள், திருக்குறள் என்று
மனனம் தொடர்ந்தது. ஆங்கிலக் கவிதைகளையும்
மனனம் செய்யத் தொடங்கினேன்.

வேர்ட்ஸ் ஒர்த்தின் (Wordsworth) 'The Daffodils", "The solitary reaper" ,
சரோஜினி நாயுடுவின் "The palanquin bearers" போன்ற
பாடல்களும் மனனம் ஆயின. இதன் விளைவாக,
நான் SSLC முடிக்கும்போது ஆயிரத்திற்கும் மேற்பட்ட
பாடல்கள் மனதில் பதிந்து, அவற்றை அடி பிறழாமலும்
யாப்பமைதி குன்றாமலும் எழுத முடிந்தது.

PUC படித்தபோது, ஒருநாள் வேதியியல் ஆய்வகத்தில்,
ஆசிரியர் காரீயத்தின் (Lead) அணுஎண் என்ன என்று
கேட்டபோது பலருக்கும் பதில் தெரியவில்லை.
அப்போது எல்லோரும் சிறியதொரு சோதனைக்
குழாயில், Lead Nitrate என்னும் உப்பை  இரண்டு சிட்டிகை
எடுத்து உள்ளே போட்டு புன்சன் பர்னரின் சுவாலையில்
காட்டி, வரும் வெடிச்சத்தத்தை கேட்டுக் கொண்டு
இருந்தோம். தனிம அட்டவணையில் (periodic table)
உள்ள 100 தனிமங்களையும் படித்து விட்டு
வராவிட்டால், நாளை ஆய்வகத்திற்குள் நுழைய
விடமாட்டேன் என்று எச்சரித்தார் வேதியியல்
ஆசிரியர் திரு மிருத்தி உஞ்சயன் அவர்கள்.

அன்று இரவே 100 தனிமங்களை மனப்பாடம்
செய்யத் தொடங்கினேன். Hydrogen, Helium, Lithium, Beryllium,
Boron, Carbon, Nitrogen, Oxygen, Fluorine, Neon என்று தொடங்கும்
100 தனிமங்களும் மனதில் பதிந்தன.

சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்னால், கலைஞர்
கருணாநிதி அவர்கள் ஒரு கூட்டத்தில் பேசினார்.
அது ஒரு அரங்கக் கூட்டம். அக்கூட்டத்தில்
பேசுகையில் கலைஞர் அவர்கள் தமிழ் ஆண்டுகளாக
அறியப்படும் 60 ஆண்டுகளையும் (பிரபவ விபவ
சுக்கில பிரமோதூத பிரஜோத்பதி ஆங்கிரஸ
ஸ்ரீமுக பாவ யுவ தாது ஈஸ்வர வெகுதான்ய ......
குரோதன, அட்சய) மனப்பாடமாக ஒப்பித்தார்.
மொத்தக்க கூட்டமும் அசந்து போய் நின்றது.
இச்செய்தி மறுநாள் தினமணியில் வெளிவந்தது.
அதைப்படித்த நான் அந்த நிமிடமே 60 ஆண்டுகளையும்
மனப்பாடம் செய்ய விரும்பினேன்.

60 ஆண்டுகளின் பட்டியல் வேண்டுமே! அதற்கு
எங்கே போவது? இன்றுபோல் கூகிளில் தட்டி
தகவல்களைப்  பெறுவது அப்போது (90களில்)
பிரபலம் ஆகவில்லை. மேலும் தமிழ் ஆண்டுகளை
எந்த கூகிளிலும் விக்கிப்பீடியாவிலும் தட்டிப்
பெற முடியாது.

எனவே என் வீட்டில் இருந்த பஞ்சாங்கத்தை எடுத்தேன்.
திருநெல்வேலி வாக்கியப் பஞ்சாங்கம் அது. அதில்
60 ஆண்டுகளும் இருந்தன. பின் என்ன, மனனம்
முடிந்தது. கலைஞர் அறிந்ததை நானும் அறிந்து
கொண்டேன்.

பஞ்சாங்கம் என்பது collection of astronomical data என்ற
அறிவியல் உண்மையை அறியாதவர்கள் தற்கொலை
செய்து கொண்டோ தண்டவாளத்தில் தலையைக்
கொடுத்தோ செத்துப் போகலாம்.

நான் SSLC படித்தபோது, ஆங்கிலப் பாடத்தில்
ஆபிரஹாம் லிங்கன் பற்றி ஒரு பாடம் இருந்தது.
வழக்கறிஞரான லிங்கன் ஒரு வழக்கில் வாதாடி
வெற்றி பெற்ற கதை அது. ஒரு குறிப்பிட்ட நாளில்
சூரிய உதயம் எப்போது நிகழ்ந்தது என்பது
அந்த வழக்கில் வெற்றி தோல்வியைத் தீர்மானிக்கிற
விஷயம். ஆபிரஹாம் லிங்கன் ஒரு பஞ்சாங்கத்தை
(almanac) நீதிமன்றத்தில் சமர்ப்பித்து வெற்றி காண்பார்.

இந்தப் பாடத்தை நடத்திய எங்கள் ஆங்கில ஆசிரியர்
திரு மு பிச்சாண்டி அவர்கள் (என் தந்தையார்)
பஞ்சாங்கம் என்றால் என்ன, அதன் தேவை பயன்கள்
என்ன என்று விளக்கிக் கூறினார். கலைஞரால்
உந்தப்பட்ட நான் தமிழ் ஆண்டுகளைத் தேடியபோது,
அவை பஞ்சாங்கத்தில் இருக்க வேண்டும் என்று
என் மூளையில் உறைத்தது. இதற்கு காரணம்
நான் படித்த லிங்கன் பற்றிய பாடமே.

மனப்பாடக் கல்வி என்ற தொடர் சமூகத்தில்
வழங்கி வருகிறது. புரியாமல் படிப்பதை
அது குறிப்பிடுகிறது. திருநெல்வேலியில் இதை
"மொண்ணை உரு" என்பார்கள். புரிந்து படித்து
மனப்பாடம் செய்வது கல்வி முறையின் ஒரு கூறு.
எனவே மனப்பாடத்தைத் தவிர்க்க வேண்டாம்.
*************************************************************                

  


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக