வெள்ளி, 8 ஜூன், 2018

காலா திரைப்பட விமர்சனம்! 
காலா ஒரு கார்பொரேட், டெம்ப்லேட் படம்!
காலா  என்ற உறையில் ரஜனி என்ற ஒரு கத்தி
மட்டுமே இருக்க முடியும்! இருக்கிறது!!
---------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
--------------------------------------------------------------------------
உலகெங்கும் காலா படம் வெளியாகி விட்டது.
குட்டி முதலாளித்துவம் அவுத்துப் போட்டுக் கொண்டு
ஆடுகிறது. பின்நவீனத்துவம் புளகாங்கிதத்தின்
உச்சம் தொட்டுக் கொண்டு இருக்கிறது.

முன்பெல்லாம் சிவாஜி கணேசனின் புதுப்படம்
ரிலீஸ் ஆகும்போது, சாந்தி கிரௌன், புவனேஸ்வரி
மற்றும் தென்னாடெங்கும் என்று விளம்பரம்
கொடுப்பார்கள். தென்னாடெங்கும் என்று
பெருமையாகச் சொன்னாலும், பிற மாநிலங்களில்
தமிழர்கள் வாழும் நகரங்களான திருவனந்தபுரம்,
பெங்களூரு ஆகிய ஊர்களில் மட்டுமே வெளியாகும்.

இன்றோ ரஜனியின் காலா படம் உலகெங்கும்
ஒரே நேரத்தில் வெளியாகிறது. பல நாடுகளில்
பல நகரங்களில் ஒரே நாளில் வெளியாகிறது.
ஏனெனில் காலா ஒரு கார்ப்பொரேட் படம்.
காலா மட்டுமல்ல, ரஜனியின் அண்மைக்காலப்
படங்கள் அனைத்துமே கார்ப்பொரேட் படங்கள்தான்.

இந்தியாவிலேயே பாலிவுட், கோலிவுட் மற்றும்
தெலுங்குப் பட உலகம் ஆகிய மூன்று மட்டுமே
சினிமா வணிகத்தின் உச்சியில் இருப்பவை.
இம்மூன்றுமே கார்ப்பொரேட் பட உலகங்கள்.

சிவாஜி எம்ஜியார் காலம் கார்ப்பொரேட் காலம் அல்ல.
ஒரு படம் குறைந்தது 100 நாள் ஓடினால் மட்டுமே
தயாரிப்பாளர், விநியோகஸ்தர் உள்ளிட்ட
அனைவரும் லாபம் பார்க்க முடியும். வெள்ளி விழாப்
படங்களில் (25 வாரம்) லாபத்தை அள்ளுவார்கள்.

இன்று ஒரு கார்ப்பொரேட் படம் ரிலீசான முதல்
நாளன்று மட்டும் ஓடினாலே போதும். தயாரிப்பாளர்
போட்ட  முதலை எடுத்து விடுவார். ஒரு வாரம் ஓடினால்
சம்பந்தப்பட்ட அனைவரும் லாபம் பார்த்து
விடுவார்கள்.

இதுதான் ஒரு கார்ப்பொரேட் சினிமாவின்
டைனமிக்ஸ். ஒரு கார்ப்பொரேட் சினிமா
இப்படித்தான் இயங்குகிறது.
இந்த இயக்க விதியைப் புரிந்து கொள்ளாமல்,
சினிமா, கலை, கலை நுணுக்கம் என்றெல்லாம்
உளறிக்கொண்டு இருப்பவர்கள் அடிமூடர்கள்.

கார்ப்பொரேட் படம் மட்டுமல்ல, காலா ஒரு
டெம்ப்ளேட் (TEMPLATE) படமும் ஆகும். Template
என்றால் என்ன பொருள்?

Template = something that is used as a pattern for producing other
similar things. (Cambridge dictionary),

டெம்ப்ளேட் படம் என்றால் ஃபார்முலா படம்
என்று பொருள்.காலா என்பது ரஜனிக்கான
படம். ரஜனிக்கு உரிய, ரஜனி விரும்புகிற ஒரு
சட்டகத்துக்குள் (FRAME) தன்னை அடைத்துக்
கொண்டுள்ள ஒரு படம். ஒரு திரைக்கதையைச்
சுற்றி இயல்பாகப் பின்னப்பட்ட கலைத்தன்மை
மிளிர்கின்ற படம் அல்ல காலா. மாறாக, ரஜனியைச்
சுற்றிப் பின்னப்பட்ட, அவருக்காகவே உருவாக்கப்பட்ட
திரைக்கதை, காட்சிகள், பாத்திரப் படைப்பு,
வசனங்கள், பாடல்கள் என்று தயாரிக்கப்பட்ட
படம் இது.

இயல்பான படம் என்றால் அது திரைக்கதையைச்
சுற்றிப் பின்னப்படும் படமாகும். டெம்ப்ளேட்
படம் என்றால் கார்ப்பொரேட் ஹீரோவைச் சுற்றிப்
பின்னப்பட்ட படமாகும். எனவே காலா ரஜனியின்
டெம்பிளேட் படம். ரஜனிக்கான டெம்ப்ளேட்
படம்.          

படத்தை இயக்கியவர் ரஞ்சித் என்பவர்; இவர் ஓர்
இளம் இயக்குனர். இது ரஞ்சித்தின் படம் என்று
சொல்பவன் சிந்தனைக் குஷ்டரோகி. இது ரஞ்சித்தின்
படம் அல்ல; இது ரஜனியின் படம். ஒரு உறைக்குள்
ஒரு கத்திதான் இருக்க முடியும். காலா என்ற
உறைக்குள் ரஜனி என்ற கத்தி இருக்கும்போது,
ரஞ்சித் அந்த உறையில் இருக்க முடியாது.

ரஜனி ஒன்றும் மார்லன் பிராண்டோ அல்ல;
அது போலவே ரஞ்சித்தும் சத்யஜித் ரே அல்ல.
இருவரும் இன்றைய கார்ப்பொரேட் சினிமா
உலகின் சூட்சுமத்தை நன்கு புரிந்து கொண்டு,
அதில் கோடி கோடியாகக் காசு பார்ப்பவர்கள்.

சமூகத்தைப் பற்றியும் மக்களைப் பற்றியும்
ரஜனிக்கு சொந்தக் கருத்துக்கள் உண்டு;
நிலைபாடுகள் உண்டு. அதே போல்
ரஞ்சித்துக்கும் பல்வேறு விஷயங்களில்
சொந்தக் கருத்துக்கள், நிலைபாடுகள்,
சாய்வுகள் உண்டு.

ஆனால் தங்களின் சொந்தக் கருத்துக்களைப்
பரப்புவதற்காக படம் எடுக்கும் முட்டாள்கள்
அல்ல ரஜனியும் ரஞ்சித்தும். இருவருமே
வணிக ரீதியாக மிகவும் சரியாகவும்
வெற்றிகரமாகவும் சிந்திப்பவர்கள்.சந்தையின்
நாடித்துடிப்பைச் சரியாக உணர்ந்தவர்கள்.
அவர்களின் ஒரே நோக்கம் காலா மூலம்
அள்ளிக் குவிக்கும் கோடிகள்தானே அல்லாமல்
வேறெதுவும் அல்ல.

ரஜனி கோடானு கோடீஸ்வரர். அவர் ஒரு மல்டி
டிரில்லியனர். ரஞ்சித்தும் ஏற்கனவே கோடீஸ்வரர்
ஆகி விட்டவர். மல்டி பில்லியனராக  ஆவதற்கு
வரிசையில் காத்திருப்பவர். கார்ல் மார்க்ஸ்
இன்று இருந்திருந்தால் இவர்களை, சினிமாத்துறை
பூர்ஷ்வாக்கள் (motion picture bourgeois) என்று
வரையறுத்து இருப்பார்.

கோடீஸ்வரர்களான ரஜனியும் ரஞ்சித்தும்
கஞ்சிக்குச் செத்துக் கொண்டிருக்கும்
பாட்டாளிகளுக்காகச் சிந்திக்கக் கூடியவர்கள்
என்று நம்புவதைப் போல் மார்க்சியத்தை
அவமதிக்க எதுவும் இல்லை.

சினிமா என்னும் துறைசார் வியாபார நுட்பம்
நன்கறிந்த பொருளாதார மேதைகள் என்று
வேண்டுமானால், ரஜனியையும் ரஞ்சித்தையும்
கூறலாமே தவிர, அவர்களை மீட்பர்களாக
ரட்சகர்களாக வரித்துக் கொள்வது மனித குல
வரலாற்றிலேயே முன்னுதாரணம் இல்லாத
மடமை ஆகும்.

காலா படத்தில் அரசு எதிர்ப்பு (anti establishment)
வசனங்களும், காட்சிகளும், குறியீடுகளும்
இருப்பதாலேயே, ரஞ்சித் அவற்றை படத்தில்
வைத்திருப்பதாலேயே காலா படத்தை
அரசு எதிர்ப்புப் படம் (anti establishment) என்று கருதுவது
மூளையில் குஷ்டரோகம் பிடித்தவர்களின் செயல்.

காலா படம் ஒரு ஜனரஞ்சகமான, அதாவது
பரப்பியல் தன்மை வாய்ந்த ஒரு பரப்பியல்
படம் (populist movie). சமூகத்தில் மக்கள் மத்தியில்
சமகாலத்தில் என்ன மன உணர்வு மேலோங்கி
இருக்கிறதோ, அதைப் படத்தில் பிரதிபலிப்பது
பரப்பியல் படத்தின் இலக்கணம்.

பரப்பியல் உத்தி என்பது ரஜனி தொடர்ந்து
கடைப்பிடித்து வரும் ஒரு உத்தி ஆகும் .
அவரின் படையப்பா படத்தில், ஜெயலலிதாவை
எதிர்ப்பது போல காட்சிகளும் வசனமும்
இருக்கும். ரம்யா கிருஷ்ணன் என்ற நடிகையை
ஜெயாவைக் குறிப்பது போல அமைத்திருப்பார்.
அப்போது ஜெயா எதிர்ப்பு சென்டிமென்ட்
தமிழகத்தில் மேலோங்கி இருந்த நேரம்.

இந்தப்படம் வெளிவந்த பிறகான கொஞ்ச
காலத்திலேயே, ரஜனி ஜெயாவின் காலில்
விழுந்ததும், இரட்டைஇலைக்கு ஓட்டுப்போட்டேன்
என்று பகிரங்கமாக அறிவித்ததும் நடந்தேறின.

இன்றைய சமூகத்தில் மாவோயிசத்துக்கு ஆதரவு
இருக்குமேயானால், சாரு மஜும்தாராகவே
நடிப்பார் ரஜனி.முற்காலத்திய மும்பை தாதாவாக
நடிப்பதற்குப் பதிலாக, அவர் சாரு மஜும்தாராகவோ
கொண்டப்பள்ளி சீதாராமையா ஆகவோ நடிக்கத்
தயங்க மாட்டார். அப்போது ரஞ்சித்தும் சாரு
மஜூம்தாரின் பிரசித்தி பெற்ற வாசகமான
"Annihilation is the highest form of class struggle" என்ற வாசகத்தை
ஏதேனும் சில காட்சிகளில் .வைக்கக் கூடும்.
சமூகத்தில் ஒரு குறிப்பிட்ட காலக்கட்டத்தில்
மேலோங்கி நிற்கும் மக்களின் எண்ணங்களை
சந்தைப் படுத்தும் ஒரு கார்ப்பொரேட் உத்தியே இது.

நிலம், அதிகாரம், உரிமை என்றெல்லாம் அக்கறை
கொள்ளும் நண்பர்கள் தெலுங்கானா ஆயுதப்
போராட்டத்தை திரைப்படமாக வடித்த மாபூமி
என்னும் தெலுங்குப் படத்தைப் பார்க்கக் கடமைப்
பட்டவர்கள். கார்ப்போரேட் படமான காலா
எளிய மக்களின் நிலம் மற்றும் நிலஉரிமை
பற்றிப் பேசுகிறது என்று நம்புவது மலத்தை
பாதாம் அல்வாவாகக் கருதித் தின்பதாகும்.

1950களில் "நிங்கள் என்னைக் கம்யூனிஸ்ட் ஆக்கி"
என்ற மலையாளப் படம் வெளிவந்தது. பாட்டாளி
வர்க்கச் சிந்தனையுடன் எளிய உழைக்கும்
மக்களின் உரிமையைப் பேசிய படம். மறைந்த
ஈ எம் எஸ் நம்பூதிரிபாட் அவர்கள் இந்தப் படத்தை
மிகவும் சிலாகித்து எழுதியது எனக்கு மங்கலாக
நினைவுக்கு வருகிறது.

தமிழில் 1970களில் துலாபாரம் என்ற படம் வந்தது.
ஏ வி எம் ராஜன், சாரதா நடித்தது. ஒரு தொழிலாளியின்
யதார்த்த வாழ்க்கையை அப்படியே
கலைத்தன்மையுடன் சித்தரித்த படம் அது.
பாட்டாளி வர்க்கப் படங்களுக்கு ஒரு சில
உதாரணங்களைச் சொல்லி  உள்ளேன்.
இலக்கியத்தில் சோஷலிஸ்ட் யதார்த்தவாதம் என்ற
மாக்சிம் கார்க்கியின் கோட்பாட்டைப் பின்பற்றி
எடுக்கப்பட்ட படங்கள் இவை.

கார்ப்பொரேட் படமான காலா எப்படி நிலமற்ற
ஏழைகளுக்காகப் பேசும்? ஹிட்லர் எப்படி
யூதர்களின் நலன் காப்பான்? சொல்லுங்கள்
முட்டாள்களே!

ஆக மொத்தத்தில்,
1) காலா ஒரு கார்ப்பொரேட் படம்.

2) அது லாபத்தை கோடிகளில் குவிப்பதற்காக
எடுக்கப்பட்ட pure commercial cinema.

3) ரஜனிக்கும் ரஞ்சித்துக்கும்  காலாவைப்
பொறுத்து ஒரே கொள்கை, ஒரே .நோக்கம்.
அது பணம், பணம்,பணம் மட்டுமே.

4) காலாவில் ரஞ்சித்தின் டைரக்சனில் புரட்சியைக்
காண்பது மலத்தில் அரிசியைத் காண்பதாகும்.

5) காலா ஒரு TEMPLATE படம். அதாவது ரஜனியின்
பார்முலாப் படம்; ஒரு மசாலாப் படம்.

6) காலா ஒரு பரப்பியல் தன்மை வாய்ந்த populist படம்.
ஒரு குறிப்பிட்ட காலத்தில் சமூகத்தில் எந்த
விஷயத்துக்கு சந்தை மதிப்பு இருக்கிறதோ
அந்த விஷயத்தை சினிமாவில் காட்டி
மக்களை ஏய்க்கிற படம்.

7) கார்ப்போர்ட் வர்த்தகச் சூதாடிகள் ரஜனி, ரஞ்சித்
என்னும் கூட்டுத் திருடர்களை அம்பலப்படுத்தி
முறியடிப்போம்! இவர்கள் மீட்பர்கள் அல்ல!
---------------------------------------------------------------------------------------
பின்குறிப்பு:
மார்க்சிய லெனினிய வெளிச்சத்தில் காலா
படத்தை அறிவியல் வழியில் திறனாய்வு செய்த
ஒரே கட்டுரை இது மட்டுமே.இந்தக் கட்டுரை
தவிர வேறு எதுவும் மார்க்சிய லெனினியம் ஆகாது.

கட்டுரை ஆக்கம்: பி இளங்கோ சுப்பிரமணியன்
பதிப்புரிமை: நியூட்டன் அறிவியல் மன்றம்.
*******************************************************
   

  .


 

     




  
    

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக