செவ்வாய், 4 அக்டோபர், 2016

(11) ரங்கநாயகம்மா கையாண்ட அணுகுமுறை!
ரங்கநாயகம்மா எழுதிய நூலின் திறனாய்வு!
புரட்சிக் கவிஞர் சிவசாகர் மாயாவதியிடம்
சரண் அடைந்தது ஏன்?
---------------------------------------------------------------------------------------
மார்க்சிய சிந்தனைப் பயிலகம்
---------------------------------------------------------------------------------------
மகத்தான அக்டோபர் சோஷலிஸப் புரட்சிக்குப்
பின்னால், மக்கள் கமிஸார் அவைத்தலைவராக
லெனின் பதவி ஏற்கிறார். பதவியேற்ற மறுநாளே,
சோவியத் ஒன்றியத்தில் தனிச்சொத்து உரிமையை
ஒழித்துச் சட்டம் இயற்றுகிறார். நாட்டில் உள்ள
அனைத்து நிலமும் (all lands)  அரசுக்குச் சொந்தம்
என்றும் எந்தத் தனிநபருக்கோ குழுவுக்கோ
நிலம் சொந்தம் அல்ல என்றும் அந்தச் சட்டம் கூறியது.

புரட்சிக்குப் பின்னால், கியூபாவின் அதிபராகப்
பதவியேற்ற பிடல் காஸ்ட்ரோ நாட்டின் எல்லாச்
சொத்துக்களும் அரசுக்குச் சொந்தம் என்று ஆணை
பிறப்பிக்கிறார். இதை காஸ்ட்ரோவின் தாய்
கடுமையாக எதிர்க்கிறார். ஏனெனில், காஸ்ட்ரோவின்
குடும்பத்திற்குச் சொந்தமான, அவரின் தாய் பெயரில்
உள்ள சொத்துக்களையும் காஸ்ட்ரோ அரசுடைமை
ஆக்கி விடுகிறார். அதாவது தமது சொந்தச்
சொத்தையும்  அரசுடைமை ஆக்குகிறார் காஸ்ட்ரோ.

ஆக, மார்க்சியம் தனிச் சொத்துரிமைக்கு எதிரானது.
தனிச் சொத்துரிமை ஒழிப்பு (abolition of private property)
என்பது மார்க்சியத்தின் ஆதாரமான கூறு.

ரங்கநாயகம்மாவின் திறனாய்வு முறைமை!
---------------------------------------------------------------------------------
எவர் ஒருவரையும் அவர் தனிச் சொத்துடைமையின்
ஆதரவாளரா அல்லது எதிர்ப்பாளாரா என்பதைக்
கொண்டுதான் ரங்கநாயகம்மா முடிவு செய்கிறார்.

அம்பேத்கார், காந்தி, புத்தர் உள்ளிட்ட அனைவருமே
(1) தனிச் சொத்தின் (private property) ஆதரவாளர்கள் என்று
கணிக்கிறார். (2) அவர்கள் சொத்துடைமை வர்க்கத்தின்
பக்கம் நிற்கிறார்கள் என்பதைக் கண்டறிகிறார்.
(3) எனவே அவர்கள் வர்க்கப் போராட்டத்தை
ஒருபோதும் ஆதரிக்காதவர்கள் என்று உணர்கிறார்.

இதுதான் ரங்கநாயகம்மா பயன்படுத்தும் அளவுகோல்.
ஒருவரின் அறிவு, ஆற்றல், கல்வி, மேதைமை,
தனிப்பட்ட பண்புநலன்கள், மக்கள் செல்வாக்கு ஆகிய
அம்சங்களைக் கொண்டு ஒருவரைத் தீர்மானிப்பது
நிலப்பிரபுத்துவ மற்றும் முதலாளிய அணுகுமுறை.

மாறாக, தனிச் சொத்துடைமைக்கு ஆதரவா எதிர்ப்பா
என்ற நோக்கில் ஆராய்வது மார்க்சிய அணுகுமுறை.
எனவே ரங்கநாயகம்மாவின் அணுகுமுறை எது
என்பதை வாசகர்களே தீர்மானிக்கலாம்.

நூல் வெளிவந்த காலச் சூழல்:
-----------------------------------------------------
இந்திய அரசியல் அரங்கில் அறிமுகமான
பின்நவீனத்துவம் மெல்ல மெல்ல செல்வாக்குப்
பெறத் தொடங்கி இருந்த காலம். ஏகாதிபத்திய
நிறுவனங்களின் நிதி  கொட்டிக் குவிக்கப்பட்டு
அடையாள அரசியலானது இந்தியா முழுவதும்
ஒவ்வொரு மாநிலங்களிலும் தலையெடுத்திருந்த
காலம்.

தலித் அடையாள அரசியல் கட்சிகள் நாடெங்கும்
உருவாயின. 1980களில் உ.பி.யில் கன்ஷிராம் பகுஜன்
சமாஜ் கட்சியைத் தொடங்கினார். இக்கட்சியின்
தேசியத் தலைவரான மாயாவதி 1995இல் உ.பி.யில்
ஆட்சியைப் பிடித்து முதல்வர் ஆனார்.

சட்டமன்ற அதிகாரத்தைப் பெறுவது என்ற
அம்பேத்காரின் கோட்பாடு மாயாவதியால், அதன்
உச்ச கட்ட அளவில், நடைமுறை சாத்தியம் ஆகியது.
இது நாடெங்கும் தலித் அடையாள அரசியலின்
வெற்றியை முரசறைந்தது.

நாட்டில் உள்ள ஒவ்வொரு அரசியல் இயக்கத்திலும்
இப்போக்கு எதிரொலித்தது. நக்சல்பாரி
இயக்கத்தையும் அது விட்டு வைக்கவில்லை.
ஆந்திரத்தில் மக்கள் யுத்தக்குழுவில் 1991இல் இது
ஒரு பிளவாக வெடித்தது. தோழர் கொண்டபள்ளி
சீத்தாராமையாவுடன் இணைந்து மக்கள் யுத்தக்
கட்சியை உருவாக்கிய அதன் நிறுவனத்
தலைவர்களில் ஒருவரான கே ஜி சத்தியமூர்த்தி
(இவர்தான்  கவிஞர் சிவசாகர் என்று பரவலாக
அறியப் பட்டவர்) அமைப்பில் இருந்து வெளியேறினார்.

அரசு எந்திரத்தின் கடும் அடக்குமுறைக்கு  நடுவே
தலைமறைவாக இயங்க வேண்டிய கடினமான
நிலையில் சலிப்புற்றதாலும்,  நிலவுகிற பூர்ஷ்வா
ஆட்சிமுறையிலேயே மாயாவதியால் ஆட்சியைப்
பிடிக்க முடியும் என்று நிரூபிக்கப் பட்டதால்,
மார்க்சியம் கூறும் கடினமான பாதை எதற்கு
என்ற சுயநலம் மிகுந்த குட்டி முதலாளித்துவ
ஊசலாட்டம் மேலோங்கியதாலும் கட்சியை
விட்டு வெளியேறிய சத்தியமூர்த்தி, கன்ஷிராமைச்
சந்தித்து, ஆசீர்வாதம் பெற்று,பகுஜன்
சமாஜ் கட்சியில் இணைந்தார்.     

இந்தப் பின்னணியில்,  அடையாள அரசியலுக்கு
எதிராக, அதன் மாயையை அம்பலப் படுத்தி,
மார்க்சியத்தைத் தூக்கிப் பிடிக்க வேண்டியதன்
அவசியம் விஸ்வரூபம் எடுத்தது. மார்க்சிய
லெனினியக் கட்சித் தலைமைகள் இதைச் செய்தன.
என்றாலும் அவை பரந்துபட்ட மக்களைச் சென்று
அடையாமல் கட்சி உறுப்பினர்களுக்கான
ஆவணங்களாகவே தங்கி விட்டன.

இந்தச் சூழ்நிலையில்தான், ரங்கநாயகம்மா
1999இல் அடையாள அரசியலுக்கு எதிரான இந்த
நூலை, ஜனரஞ்சகமான தெலுங்கு வார ஏடு
ஒன்றில், ஓராண்டுக்கும் மேலாகத் தொடராக
எழுதினார். அடையாள அரசியலின் குறியீடாகத்
திகழ்கிற, வர்க்கப் போராட்டத்தை ஏற்றுக்
கொள்ளாத அம்பேத்காரின் கோட்பாடுகளையும்
நடைமுறைகளையும் விமர்சிக்க வேண்டிய
அவசியத்தின் மேலீட்டால் எழுதப்பட்ட நூல் இது.

இந்த நூல் ஆந்திரத்தில் சக்தி வாய்ந்த தாக்கத்தை
ஏற்படுத்தியது. பிற்போக்கான அடையாள அரசியலை
முறியடித்து, அதனிடத்தில் மார்க்சியத்தை வைப்பதில்
இந்த நூல் குறிப்பிடத்தக்க (significant) வெற்றியை
ஈட்டியது.
-------------------------------------------------------------------------------------------------------
தொடரும்
*********************************************************************
   
     






.



      

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக