திங்கள், 17 அக்டோபர், 2016

மார்க்சிஸ்ட் கட்சியின் உயர் பதவிகளில்
தலித்துகளுக்கு இடம் இல்லை. ஏன்?
------------------------------------------------------------------------
மார்க்சிஸ்ட் கட்சியில் (CPM) அகில இந்திய அளவிலான
உயர் மட்டக் குழு மத்தியக் கமிட்டி (central committee)
ஆகும். கட்சியில் சர்வ வல்லமை வாய்ந்த அமைப்பு
மத்தியக் கமிட்டிதான். இதில் தலித்துகளுக்கு
இடமில்லை என்ற குற்றச்சாட்டு மார்க்சிஸ்ட் கட்சி மீது
தொடர்ந்து வைக்கப் படுகிறது. ஒரு காலத்தில்
மத்தியக் கமிட்டி உறுப்பினர்களின் எண்ணிக்கை 49
என்று இருந்தது. இன்று 100க்கும் மேல் மத்தியக்
கமிட்டி உறுப்பினர்கள் உள்ளனர். இருப்பினும்
அவர்களில் ஒருவர் கூட தலித் இல்லை.

இதற்கு மாறாக, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி, தனது
தேசியக் கவுன்சில் செயலாளராக தோழர் டி ராஜா
அவர்களை வைத்திருக்கிறது. இவர் ஓர் தலித் ஆவார்.

மார்க்சிய லெனினியக் கட்சிகளைப் பொறுத்த மட்டில்,
அக்கட்சிகள் தொடக்கம் முதலே தலைமைப் பதவியில்
தலித்துகள் பழங்குடியினரைக் கொண்டிருந்தன.
இக்கட்சிகள் தலைமறைவாக இயங்கியதன் விளைவாக
கட்சித்தலைவர் யார் என்று மக்களுக்குத் தெரியாமல்
இருந்தது. நக்சல்பாரி இயக்கத்தை சாரு மஜூம்தார்
தொடங்கியபோது, அவருடன் ஜங்கல் சந்தால்
போன்ற பழங்குடித் தலைவர்கள் தலைமையில்
இருந்தனர்.

எனவே, மார்க்சிஸ்ட் கட்சி மட்டுமே தலைமையில்
தலித்துகளுக்கு இடமளிக்கவில்லை என்பது தெரிய
வருகிறது.   என்றாலும் மக்களை பொறுத்த மட்டில்,
மார்க்சிஸ்ட் கட்சி என்றோ, எம்.எல் கட்சி என்றோ
பிரித்துப் பார்ப்பதில்லை. அவர்கள் மார்க்சிஸ்ட்
கட்சியின் குறைபாட்டை, ஒட்டு மொத்த மார்க்சிய
இயக்கத்தின் குறைபாடாகவே பார்க்கின்றனர்.
இதனால், பூணூல் கம்யூனிசம் போன்ற சொற்கள்
சமூகத்தில் புழக்கத்திற்கு வந்து விட்டன.

தற்போது, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த
தோழர் டாக்டர் ஜி ஆர் ரவீந்திரநாத், தமது அமைப்பு
வாயிலாக, "சாதியும் வர்க்கமும்" என்ற பொருளில்
சென்னையில் ஒரு கருத்தரங்கை நடத்தினார். அதில்
பங்கேற்ற கல்வியாளர் வசந்திதேவி அவர்கள்,
மார்க்சிஸ்ட் கட்சியின் உயர் பதவிகளில்
தலித்துகளுக்கு இடமில்லை என்பதைச் சுட்டிக்
காட்டிக் கண்டித்தார். இச்செய்தி எல்லா ஏடுகளிலும்
வந்துள்ளது.

தமிழ்நாட்டில் முதல் முறையாக "சாதியும் வர்க்கமும்"
என்ற பொருளில் கருத்தரங்கம் நடத்தியது புரட்சிப்
பண்பாட்டு இயக்கம் என்ற அமைப்பே. மறைந்த
தோழர் இல கோவிந்தசாமி (மக்கள் யுத்தக்க கட்சி)
இதற்கான ஏற்பாடுகளை முன்னிருந்து செய்தார்.
கருத்தரங்கப் பேச்சுக்கள் கட்டுரைகள் ஆக்கப்பட்டு
நூல் வடிவம் பெற்றன. தமிழ்ச் சூழலில் முதன்
முறையாக சாதி, வர்க்கம் குறித்த மார்க்சிய
லெனினியப் புரிதல் பொதுவெளியில் முன்வைக்கப்
பட்டது.

இப்போது, தோழர் டாக்டர் ஜி ஆர் ரவீந்திரநாத்,
சாதியும் வர்க்கமும் என்ற பொருளில் கருத்தரங்கம்
நடத்தி இருப்பது வரவேற்கத் தக்கது.

இந்திய வரலாற்றில், வேறு எந்தக் கட்சியையும் விட,
தலித்துகளுக்கு நெருக்கமாக இருந்த கட்சிகள்
கம்யூனிஸ்ட் கட்சிகளே. இந்த வரலாற்றைக் கூட
மக்களுக்கு கம்யூனிஸ்ட் இயக்கம் விளங்க
வைக்கவில்லை என்பது வருந்தத் தக்கது.

அடுத்த ஆண்டு (2017) அக்டோபர் புரட்சியின்
நூற்றாண்டு ஆகும். கம்யூனிஸ்ட் இயக்கம்
சுய விமர்சனம் செய்து கொண்டு, தவறுகளைக்
களைந்து முன்னேற இந்த நூற்றாண்டு உதவட்டும்.
*******************************************************************      

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக