சனி, 1 அக்டோபர், 2016

மார்க்சியப் பார்வையில் ஆளும் வர்க்கத்
தலைவர்களை மதிப்பிடுதல்!
------------------------------------------------------------------------
இந்தப் பதிவு ( கட்டுரை-6) மகாத்மா காந்தியைப்
பற்றிய மதிப்பீடு அல்ல. ஸ்டாலினும் மாவோவும்
காந்தியை மதிப்பிடவில்லை. காந்தியை மதிப்பிடுவதில்
அவரின் ஏகாதிபத்திய எதிர்ப்புப் பாத்திரத்தைக்
கணக்கில் கொள்ள வலியுறுத்தினர்.
பெருந்தொழில்களுக்கு எதிரான காந்தியின்
பொருளாதாரக் கொள்கை பற்றிக் கேள்வியுற்ற
மாவோ, அந்த அம்சத்தை வரவேற்றார்.
**
இப்பதிவு வலியுறுத்துவது ஒரே ஒரு அம்சத்தை
மட்டுமே. தீண்டாமை ஒழிப்பு, சாதி ஒழிப்பு ஆகிய
தமது சமூக சீர்திருத்த இலக்குகள் அனைத்தையும்,
காந்தி தமது ஏகாதிபத்திய எதிர்ப்பு என்னும்
லட்சியத்திற்குக் கீழ்ப்படுத்தினார் என்பதே.
அதாவது, ஏகாதிபத்திய எதிர்ப்புக்கு
உள்ளடங்கியதாகவே தமது சமூக சீர்திருத்த
வேலைத்திட்டங்களை வகுத்து இருந்தார்.
**
இந்தப் புரிதல் இல்லாமல் காந்தியை மதிப்பிடுவது
சரியான இடத்திற்குக் கொண்டு சேர்க்காது. ஆனால்
ரங்கநாயகம்மா காந்தி குறித்து எழுதியுள்ள  மூன்று
அத்தியாயங்களிலும், அவருக்கு இந்தப் புரிதல்
இருந்ததற்கான தடயங்கள் எதுவும் இல்லை.
**
மாபெரும் ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராளியான
காந்தியை, அவரின் முன்னுரிமை வாய்ந்த ஏகாதிபத்திய
எதிர்ப்பு நிகழ்ச்சி நிரலில் இருந்து துண்டித்து எடுத்து,
(compartmentalised) பிற எவற்றோடும் தொடர்பற்ற நிலையில்
வைத்து மதிப்பிடுவது மார்க்சிய வழியிலான மதிப்பீடு
அல்ல என்பதையே இப்பதிவு யாப்புறுத்துகிறது.
**
காந்தி இந்திய ஆளும் வர்க்கத்தின் தலைவர் என்பதில்
சிறு குழந்தைகளுக்கு கூட, சந்தேகம் இருக்க முடியாது.
ஆளும் வர்க்கத்துத்  தலைவர்களை எவ்வாறு
மதிப்பிடுவது என்பதில் மார்க்சியம் செழுமையான
வழிகாட்டுதல்களைக் கொண்டிருக்கிறது. உதாரணம்:
கியூபாவின் தலைவர் ஜோஸ் மார்த்தியை, காஸ்ட்ரோ
எப்படி மதிப்பிட்டார் என்பது.
**
நிற்க. எனினும் இந்த நூலைப் பொறுத்த மட்டில்,
இதன் மைய நீரோட்டத்தில் காந்தி இல்லை. எனவே
காந்தி பற்றிய  நூலாசிரியரின் மதிப்பீட்டின்
சரி-தவறுகள் நூலின் முதன்மை நோக்கத்திற்கு
எவ்விதத்திலும் ஊறு விளைவிக்கவில்லை.
----------------------------------------------------------------------------------------------------
அடுத்து, அச்சம் என்பதை, பேய் பிசாசுக்கு பயப்படுவது
போல, அகராதிப் பொருளில் (literary sense) எடுத்துக்
கொள்வது எப்படிச் சரியாகும்? அதே போல, சமரசம்
என்பதை சுயநலத்திற்காகவும் ஆதாயத்திற்காகவும்
செய்து கொண்ட சமரசம் என்று கருதுவது எப்படிச்
சரியாகும்?
**
நிலவுகிற சமுதாய அமைப்பில், ஒவ்வொரு எழுத்தாளரின்
மீதும் சமூக நிர்ப்பந்தம் வெவ்வேறு வடிவில், வெவ்வேறு
அளவில் இருந்து கொண்டுதான் இருக்கிறது. வாசகர்களின்
அறியாமையும், அவர்களின் சார்புகளும், முன்முடிவுகளும்
எழுத்தாளர்களின் எழுத்துக்கள் மீது மௌனமானதும்
வெளிப்படையானதுமான செல்வாக்கைச் செலுத்திக்
கொண்டுதான் உள்ளன.
**
இந்தச் சூழலில், தமது கருத்துக்களை மக்களிடம்
கொண்டு சேர்க்கும் பொறுப்புடைய எழுத்தாளர்கள்
வாசகர்களின் மனநிலையைக் கருத்தில் கொள்ளாமல்
எழுத முடியாது. வாசகர்களை ஆத்திரமூட்டாமல்,
அவர்களை ஏற்றுக் கொள்ளச் செய்யும் நோக்குடன்
எழுதும் எவர் ஒருவரும், இந்தக் காரணிகளைக்
கணக்கில் கொள்ளாமல் எழுத இயலாது.
**
வள்ளுவர் காலம் தொட்டு இன்று வரை இதுதான்
நிலைமை. எனவேதான் "அவை அஞ்சாமை" என்ற
அதிகாரத்தை எழுதிய வள்ளுவர், "அவையறிதல்"
என்ற அதிகாரத்தையும் எழுதினார்.
**
மேலும், ஒரு நூலை எழுதி, பதிப்பகத்தின் வாயிலாக
வெளியிடுவதற்கும், ஒரு நூலை ஜனரஞ்சக ஏடு
ஒன்றில் ஓராண்டுக்காலம் தொடராக எழுதி
வெளியிடுவதற்கும் இடையிலான நடைமுறைச்
சிக்கல்களை அனுசரிக்காமல், கண்ணை மூடிக்
கொண்டு ரங்கநாயகம்மா  இந்த நூலை எழுதினார் 
என்று எவராலும் கூற இயலாது.
**
இந்தப் பதிவில் நாம் கூறியிருப்பது, ரங்கநாயகம்மா
அவை அறிந்து எழுதினர் என்பதே. "அவையறிதல்"
என்பது நிச்சயமாக சில சமரசங்களை, தேவையான
நியாயமான சில சமரசங்களை உள்ளடக்கியதே.
இதில் தெளிவு பெற குறளில் உள்ள, அவையறிதல்,
அவையஞ்சாமை ஆகிய இரு அதிகாரங்களையும்
படிக்கலாம்.
**
புல்லவையுள் பொச்சாந்தும் சொல்லற்க  நல்லவையுள்
நன்கு செலச் சொல்லுவார்.
-------------------------------------------------------------------------------------------------  
 
    

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக