ஞாயிறு, 2 அக்டோபர், 2016

வேதகாலத்தில் தீண்டாமை இல்லை!
மநுவின் காலத்திலும் தீண்டாமை இல்லை!
அம்பேத்காரின் ஆணித்தரமான வாதம்!
ரங்கநாயகம்மாவின் நூல் திறனாய்வு!
--------------------------------------------------------------------------
மார்க்சிய சிந்தனைப் பயிலகம்
----------------------------------------------------------------------------
சாதி பற்றிய ஆய்வில் முக்கியமான கேள்வி எது?
தீண்டாமை எப்போது தோன்றியது என்ற கேள்விதான்.
வேதகாலத்தில் தீண்டாமை இல்லை என்று
உறுதிபடக் கூறுகிறார் அம்பேத்கார்.

"இவ்வாறு வேத காலத்தில் தீண்டாமை கடைப்பிடிக்கப்
படவில்லை."
(அம்பேத்கார் எழுத்தும் பேச்சும், தொகுதி-14, பக்-212)
(ரங்கநாயகம்மா  நூல், பக்-95)

கி.மு 1500 முதல் கி.மு 500 வரையிலான காலமே
வேதகாலம் என்பது பொதுவான ஒரு கருத்து. இந்த
ஆயிரம் ஆண்டுகளில் தீண்டாமை இல்லவே இல்லை
என்று அடித்துக் கூறுகிறார் அம்பேத்கார். இதன் பொருள்
ஆரியர்களிடம்  தீண்டாமை கிடையாது என்பதாகும்.
இவ்வாறு ஆரியர்களுக்குப் புகழ்மாலை சூட்டுகிறார்
அம்பேத்கார்.

அம்பேத்காரின் இந்தக் கருத்துக்கள் தங்களை
ஆரியர்களின் வழித்தோன்றல்களாகக் கருதும்
பிராமணர்களுக்கு மகிழ்ச்சியைத் தருவதில்
வியப்பில்லை. எனவேதான் இந்துத்துவர்கள்
அம்பேத்காரைக் கொண்டாடுகின்றனர். அதன்
விளைவே "இந்துத்துவ அம்பேத்கார்" என்ற புத்தகம்.

மநுவின் காலத்திலும் தீண்டாமை இல்லை!
----------------------------------------------------------------------------------
மநுவின் காலம் எது என்பதில் ஆய்வாளர்களிடம்
கருத்து வேறுபாடுகள் உள்ளன. கி.மு இரண்டாம்
நூற்றாண்டு முதல் கி.பி. மூன்றாம் நூறாண்டு
வரையிலான காலத்தில் அது எழுதப் பட்டு
இருக்கலாம் என்று பொதுவாகக் கருதப்
பட்டது. தற்போது புதிய ஆய்வுகளின் வெளிச்சத்தில்
மனு சாஸ்திரம் எழுதப்பட்ட காலம் கி.பி இரண்டாம்
நூற்றாண்டு என்று கருதப் படுகிறது.

மனுவின் காலத்திலும் தீண்டாமை இல்லை என்கிறார்
அம்பேத்கார். "சண்டாளன்" என்று மனு ஸ்மிருதியில்
கூறப்படும் சொல் தீண்டத்தகாதவர்களைக்
குறிக்காது என்கிறார் அம்பேத்கார். அப்படியானால்
சண்டாளன் என்பதன் பொருள் என்ன?

கலப்புத் திருமணத்தில் பிறந்த குழந்தைகளே
(வருணக் கலப்பால் பிறந்தவர்கள்) சண்டாளர்கள்
ஆவர் என்கிறார் அம்பேத்கார்.

"முதலாவதாக மநுவின் காலத்தில் தீண்டாமை
இருக்கவில்லை."
( அம்பேத்கார் எழுத்தும் பேச்சும், தொகுதி-14, பக்-214)
(ரங்கநாயகம்மா நூல், பக்-98)

பாஹியான் என்ற வெளிநாட்டுப் பயணி குப்தர்
காலத்தில், கி.பி 400இல் இந்தியா வந்தார். அவர்
தமது நூலில் இந்தியாவில் தீண்டாமை நிலவியதாக
ஆதாரங்களுடன் எழுதி உள்ளார்.

ஆனால் அம்பேத்கார் இதை மறுக்கிறார். பாஹியான்
காலத்தில் நிலவியது தீண்டாமையை அல்ல
என்று வாதம் செய்கிறார்.

"எனவே, பாஹியான் விவரித்துள்ள நிலைமைகள்
தீண்டாமைக்கு நெருக்கமானவையாக
இருக்கலாமே அன்றி, உண்மையிலேயே தீண்டாமை
நிலவியதற்குச் சான்றாக அவற்றை எடுத்துக்
கொள்ளவே  முடியாது."
(அம்பேத்கார் எழுத்தும் பேச்சும், தொகுதி-14, பக்-225)
( ரங்கநாயகம்மா நூல் பக்-99)

பாஹியானுக்கு அடுத்து, யுவான் சுவாங் என்ற சீனப்
பயணி கி.பி 629இல் இந்தியாவுக்கு வந்தார். இவரும்
தமது நூலில், இந்தியாவில் தீண்டாமை நிலவியதைப்
பதிவு செய்துள்ளார். இதை அம்பேத்கார் ஏற்றுக்
கொள்கிறார். எனவே அம்பேத்காரின் கருத்துப்படி,
தீண்டாமை கி.பி ஆறாம் நூற்றாண்டிலோ அல்லது
அதற்கு முந்திய நூற்றாண்டிலோ தான் தோன்றியது.

"... கி.பி 200இல் இந்தியாவில் தீண்டாமை
கடைப்பிடிக்கப் படவில்லை. கி.பி 600ஆம் ஆண்டு
வாக்கில்தான் அது தோன்றிற்று என்று நாம் முடிவுக்கு
வர முடியும்".
( அம்பேத்கார் எழுத்தும் பேச்சும், தொகுதி-14, பக்-226)
( ரங்கநாயகம்மா நூல், பக்-100)

இடச்சுருக்கம் கருதி மேற்கோள்கள் முழுமையாகக்
கொடுக்கப் படவில்லை. ரங்கநாயகம்மா அவர்களின்
நூலையோ அல்லது அம்பேத்காரின்
தொகுதிகளையோ வாசகர்கள் நன்கு படிக்குமாறு
கோருகிறோம்.

அம்பேத்காரின் இந்துத்துவக் கருத்துக்களை
-----------------------------------------------------------------------------------
மறுக்கும் ரங்கநாயகம்மா!
-----------------------------------------------     
 வேத காலத்திலும், பின்னர் மநுவின் காலத்திலும்
தீண்டாமை நிலவவில்லை என்ற அம்பேத்காரின்
கருத்துக்களை வன்மையாக மறுக்கிறார்
ரங்கநாயகம்மா. பாஹியான் காலத்தில் கூட
தீண்டாமை நிலவவில்லை என்ற அம்பேத்காரின்
கருத்துக்களை யார்தான் ஏற்க முடியும்?

மேலும் நால்வருணக் கோட்பாட்டையும் அம்பேத்கார்
ஏற்கவில்லை. மூன்று வர்ணங்கள் மட்டுமே
இருந்தன; பின்னர்தான் நான்காம் வர்ணம் தோன்றியது
என்கிறார் அம்பேத்கார். மேலும் சூத்திரர்கள்
என்பவர்களும் ஆரியர்களே என்கிறார் அம்பேத்கார்.
சூத்திரர்கள் அரச வம்சத்தைச் சேர்ந்தவர்கள்
என்றும் கூறுகிறார்.

அம்பேத்கார் கூறுகிறார்: "1) சூத்திரர்களும் ஆரியர்களே.
2) சூத்திரர்கள் சத்திரிய வம்சத்தைச் சேர்ந்தவர்களாக
இருந்தனர்"
(அம்பேத்கார் எழுத்தும் பேச்சும், தொகுதி-13, பக்-183)
(ரங்கநாயகம்மா நூல் பக்-44)

அம்பேத்காரின் ஆய்வுகள், அவர் வந்தடைந்த
முடிவுகள், அவற்றின் முரண்பாடுகள், அபத்தங்கள்
ஆகியவற்றை ரங்கநாயகம்மா அம்பலப் படுத்துகிறார்.
அவற்றின் மீது கேள்வி எழுப்புகிறார். அவற்றின்
ஆளும் வர்க்கச் சார்பை வாசகர்களுக்கு
உணர்த்துகிறார். அம்பேத்கார் குறித்து நிலவும்
புகைமூட்டத்தை இந்நூல் அகற்றி விடுகிறது.
ஆகவே சிறந்த விமர்சன நூலாக இந்நூல் திகழ்கிறது.
-------------------------------------------------------------------------------------------------
தொடரும்
-----------------------------------------------------------------------------------------------   

     

      
  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக