திங்கள், 18 மே, 2015

மக்களைச் செயலுறுத்தும் மார்க்சியமும் 
செயலின்மைக்கு இட்டுக் செல்லும் பின்நவீனத்துவமும்! 
(தோழர் துணைத் தளபதி மார்க்கோஸ் அவர்களின் 
முகநூல் பதிவின் கருத்துக்கு மறுப்பு)
--------------------------------------------------------------------------------
மார்க்சிய சிந்தனைப் பயிலகம் 
---------------------------------------------------------------------------------
1) மிஷெல் ஃபூக்கோவின் கருத்துக்கள் உலகம் முழுவதும் 
பரவின; பரப்பப் பட்டன. இவை மார்க்சியத்தைச் சமருக்கு 
அழைத்தன.மார்க்சியமும் சமர் புரிந்தது; எளிதில் வென்றது.  
2) இறைவன் எங்கும் இருக்கிறானோ இல்லையோ,
அதிகாரம் எங்கும் இருக்கிறது என்று கூறினார் ஃபூக்கோ.
ஆனால், எல்லோரிடமும் எல்லா உறவுகளிலும் இருக்கிற 
அதிகாரமானது, ஒரே அளவிலோ ஒரே தரத்திலோ 
ஒரே ஆற்றல் மட்டத்திலோ (same energy level) இல்லை. 
சுருங்கக் கூறின், பேரதிகாரம், நுண்ணதிகாரம் என்று 
அதிகாரத்தை வகைமைப் படுத்திக் கொள்ளலாம்.
**  
3) மார்க்சியமும் அதற்கு முந்திய தத்துவங்களும், சமூக 
வாழ்வில் பிரதானமாகவும் பேராற்றல் கொண்டதாகவும் 
உள்ள அம்சங்களைக் கண்டன. இவற்றின் பார்வையில் 
இருந்து தப்பிய, சிறிய நுட்பமான அம்சங்களைப் 
பின்நவீனத்துவம் கண்டது; புலப்படுத்தியது. இதனாலேயே 
மார்க்சியம் தவறு என்று ஆகிவிடாது; அப்படி ஆகவும் இல்லை.
**
4) நுண் அதிகாரங்கள் எல்லோரிடத்திலும் எல்லா உறவுகளிலும் 
இருக்கின்றன, செயல்படுகின்றன என்பதாலேயே,
பேரதிகாரத்தை எதிர்த்துப் போராடுவதற்கு அது தடை 
ஆகி விடாது; ஆகவும் முடியாது.
**
5) ஒரு எளிய உதாரணத்தைப் பார்ப்போம். ஒரு நாடு 
இன்னொரு நாட்டை அடிமைப் படுத்தி விடுகிறது.
(அமெரிக்கா -வியட்நாம் போல). இப்போது, அடிமைப்பட்ட 
நாடு சுதந்திரத்துக்காகப் போராடுகிறது. அடிமைப்பட்ட 
நாட்டு மக்களிடையே ஆயிரம் பேதங்கள் உள்ளன.
மத, இன, மொழி ரீதியிலான ஆதிக்கங்கள் இருக்கின்றன;
செயல்படுகின்றன. பற்றாக் குறைக்கு ஆணாதிக்கமும் 
செயல்படுகிறது என்று வைத்துக் கொள்வோம்.
**
8) இவ்வளவு பேதங்கள் அடிமை நாட்டில் இருப்பதால்,
அந்த நாடு சுதந்திரத்துக்காகப் போராட முடியாது என்று 
கூறுவதோ, அப்படிப் போராடினால் அந்தப் போராட்டம் 
தோற்றுவிடும் என்று கூறுவதோ எப்படிச் சரியாகும்?
**
9) A என்ற ஊரில் இருந்து B என்ற ஊருக்குப் போக 
வேண்டும். இதற்கு ஒரு சாலை இருக்கிறது. இந்தச் 
சாலை வழியாகப் போகலாம் என்கிறது மார்க்சியம்.
அந்தச் சாலையில் உள்ள நுண்ணிய மேடு பள்ளங்களைச் 
சுட்டிக் காட்டி, இந்தச் சாலை வழியே போகக் கூடாது 
என்கிறது பின்நவீனத்துவம். 
**
10) இவ்வளவுதான் மார்க்சியத்துக்கும் பின்நவீனத்துக்கும் 
உள்ள வித்தியாசம். இதைப் படிக்கும் அறிவார்ந்த  
வாசகர்கள் எது சரி என்று முடிவு செய்யட்டும்!  
***************************************************************
   
    

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக