ஞாயிறு, 26 ஜூன், 2016

புதிய கலைச்சொற்களை உருவாக்கும்போது,
இயன்றவரையில் அடைகளை (adjective) பயன்படுத்தக்
கூடாது என்பது நான் பின்பற்றும் ஒரு கோட்பாடு.
இந்தக் கருத்தை நான் தோழர் தியாகு அவர்களிடம்
( தமிழ் தேசிய இயக்கத் தலைவர், காரல் மார்க்சின்
மூலதனம் நூலைத் தமிழில் மொழிபெயர்த்தவர்)
இருந்து பெற்றேன். இவ்வாறு அவசரத் தேவைக்காக
அடைகளைப் பயன்படுத்துவது பிற்பாடு பெரிய
இடர்களைத் தருகிறது.
**
எனவேதான் இருமடியாயிரம், மும்மடியாயிரம்
ஆகிய சொற்களைப் பயன்படுத்த நான் விரும்பவில்லை.   
--------------------------------------------------------------------------------------------------------
ஐயா, தங்களின் நூலில் தங்கள் ஆயிரம் என்பதை
அடிப்படையாகக் கொண்டு, மில்லியன் பில்லியனுக்கு
முறையே இருமடியாயிரம், மும்மடியாயிரம் என்று
பெயர்களைத் தந்துள்ளீர்கள். நான் மில்லியன்
என்பதற்கு அடைமொழி ஏதுமற்ற "எண்ணம்" என்ற
சொல்லை வழங்கியுள்ளேன். அதைத்தொடர்ந்து,
இரட்டம் (பில்லியன்), மூவகம் (டிரில்லியன்) என்று
சொற்களைத் தொடர்கிறேன். அடைமொழியை
இயன்றவரை தவிர்ப்பதே இங்கு நோக்கம்.
**
இருமடியாயிரம் , மும்மடியாயிரம் ,நான்மடியாயிரம் ,
ஆகிய சொற்களில், ஆயிரம் என்ற சொல்லுக்கு
இரண்டு அடைகள் உள்ளன. அதுபோல
பத்தொன்பதுமடியாயிரம் என்ற சொல்லில்
மூன்று அடைகள் (பத்து, ஒன்பது, மடி) உள்ளன.
இவ்வளவு அதிகமான எண்ணிக்கையில் வரும்
அடைகளைத் தவிர்க்க வேண்டும் என்ற நோக்கிலேயே
மில்லியன் என்ற சொல்லுக்கு எண்ணம் என்ற அடையற்ற
சொல்லைப்  பெய்தேன்.
**
மூவகம்  நாவகம் என்ற சொற்களில் அடைகள்
எவையும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
சுருங்கக்  கூறின், மூன்று கனிகள் என்று சொல்வது
தங்களின் சொல்லாக்கமாகவும், முக்கனி என்று
சொல்வது போன்று என்னுடைய சொல்லாக்கமும்
உள்ளன. முக்கனி என்பது எளிதானது.
**
ஐயா, நான் பழுது சொல்வதற்காக இதைக் கூறவில்லை.
தங்களின் உழைப்பிலும் ஈடுபாட்டிலும் தினையளவு
கூட நான் மேற்கொள்ளவில்லை. இவையெல்லாம்
நான்  15, 20 ஆண்டுகளுக்கு முன்பே உருவாக்கியவை.
ஆங்கிலத்தில் உள்ளது தமிழில் இல்லை என்ற
கண்டனங்களைக் களைவதற்காக, வீம்பிலும்,
தமிழன்டா என்ற செருக்கிலும் உண்டாக்கியவை
இந்தச் சொற்கள். நிற்க.
**
கலைச்சொல்லாக்கத்தில் அடைமொழிகளை
(adjectives) தவிர்க்க வேண்டும் என்ற கொள்கையில்
ஊன்றி நிற்கிறேன். அதில் மாற்றமில்லை.        






      



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக