திங்கள், 27 ஜூன், 2016

சமஸ்கிருதத்தின் மண்டையில் ஓங்கி அடித்த
நியூட்டன் அறிவியல் மன்றத்தின் சாதனை!
இதுதாண்டா சமஸ்கிருத எதிர்ப்பு!
மற்ற எல்லாமே போலிகளின் சமஸ்கிருதப் பிழைப்பு!
----------------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
------------------------------------------------------------------------------------
சமஸ்கிருதத்தில் அறிவியல் இருக்கிறது! இது
சமஸ்கிருத அபிமானிகளின் கூற்று!

சமஸ்கிருதத்தில் உள்ள அறிவியல் தமிழில் இல்லை.
இதுவும் அபிமானிகளின் அடுத்த கூற்று.

அறிவியலுக்கு ஏற்ற மொழி சமஸ்கிருதமே!
இதுவும் அடுத்து வரும் கூற்று.

இதற்கு உதாரணமாக, கி.பி. ஆறாம் நூற்றாண்டைச்
சேர்ந்த இந்தியக் கணித நிபுணர் பாஸ்கரர்
எழுதிய "லீலாவதி" என்ற கணிதநூலில் இருந்து
ஒரு மேற்கோளைக் காட்டுகிறார்கள்.

அந்தக் காலத்திலேயே, கி.பி. ஆறாம் நூற்றாண்டிலேயே
மில்லியன் , பில்லியன், டிரில்லியன் போன்ற
பெரிய பெரிய எண்களுக்கு சமஸ்கிருதத்தில்
இடம் இருந்தது. அப்போது ஆங்கிலத்தில் கூட
இவ்வளவு பெரிய எண்கள் இல்லை என்கிறார்கள்
சமஸ்கிருத அபிமானிகள்.(ஆங்கிலத்தில் அன்று
இல்லை என்பது உண்மையே).

அந்த நூலில் பாஸ்கரர் ஏக, தஸ, ஸத, ஸகஸ்ர
என்று அடுக்கிக் கொண்டே போவார் பாஸ்கரர்.
தொடர்ந்து பெரும் பெரும் எண்களைச் சொல்லுவார்.

அற்புதம் = 10 கோடி
அப்ஜம் = 100 கோடி
பத்மம் = லட்சம் கோடி
ஸங்கம் = 10 லட்சம் கோடி
ஜலதி = கோடி கோடி (கோடானுகோடி)

தமிழிலும் பேரெண்கள் இருந்தன. ஆம்பல் என்றும்
வெள்ளம் என்றும் சொற்கள் இருந்தன. ஆனால்
அச்சொற்கள் இறந்து விட்டன. அதாவது வழக்கு
வீழ்ந்தன.

தற்போதைய தமிழன் பெரிய பெரிய எண்களைக்
குறிக்க, லட்சம், கோடி என்ற இரண்டு சொற்களை
மட்டுமே வைத்துள்ளான். இதிலும் லட்சம் என்பது
தமிழ்ச் சொல் அல்ல. சமஸ்கிருதச் சொல்.

சமகாலத்  தமிழில் (contemporary Tamil) பெரிய பெரிய
எண்களைக் குறிக்க, மில்லியன், பில்லியன்,
டிரில்லியன் என்ற எண்களைக் குறிக்க சொற்கள்
இல்லை என்பது ஏற்கத்தக்க உண்மையே.

எனவே இக்குறையை  நீக்க பல்வேறு
காலக்கட்டத்தில் பல்வேறு தமிழறிஞர்கள்
முயற்சி மேற்கொண்டனர். நியூட்டன் அறிவியல்
மன்றமும் இதில் முயற்சிகளை மேற்கொண்டது.

ஓரிரு நாட்களுக்கு முன்பு, தமிழரான அமெரிக்கவாழ்
மென்பொறியாளர் திரு வேல்முருகன் அவர்கள்
நியூட்டன் அறிவியல் மன்றம் முன்மொழிந்த
பெரிய எண்களுக்கான தமிழ்ச் சொற்களை
ஏற்றுக் கொண்டு, அதற்கு  ஒரு மென்பொருள்
நிரல் ( software program) உருவாக்கி உலகிற்கு
அர்ப்பணித்துள்ளார்.

திரு வேல்முருகன் அவர்களின் மென்பொருளானது
உலகம் முழுவதும் வாழ்கின்ற தமிழர்கள் மற்றும்
உலகப்  பல்கலைகளின் தமிழ் ஆராய்ச்சியாளர்கள்
அனைவருக்கும் பயன்பட வல்லது.

இதுகுறித்த எமது பதிவை முன்னரே முகநூலில்
வெளியிட்டு இருந்தோம். ஆனாலும் ஒன்றிரண்டு
பேரைத் தவிர இப்பதிவை எவரும் சீந்தவில்லை.
(இதுதான் சமஸ்கிருத எதிர்ப்பின் லட்சணம்).

நியூட்டன் அறிவியல் மன்றம் உருவாக்கிய, நவீன
காலப் பேரெண்களுக்கு உரிய  தமிழ்ச் சொற்களை
அறிந்த சமஸ்கிருத அபிமானிகள் வாயடைத்துப் போனார்கள்; மூர்ச்சை அடைந்தார்கள். மருத்துவ
மனையில் சேர்க்கப்பட்ட அவர்களுக்கு குளுக்கோஸ்
செலுத்தப் பட்டு வருகிறது.

இங்கு கொடுத்துள்ள இணைப்பைத்  திறந்து
படியுங்கள். உண்மையை உணருங்கள்.
--------------------------------------------------------------------------------------






            

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக