சனி, 18 ஜூன், 2016

இது எவ்விதத்திலும் திணிப்பு பற்றிய
கட்டுரை அல்ல. இது ஒரு Academic piece of writing.
எனவே இக்கட்டுரை குறித்த விமரிசனம் எழுதுவோர்
கண்டிப்பாக சமஸ்கிருதம் அறிந்திருக்க வேண்டும்.
**
சமஸ்கிருதம் பற்றி ஒரு கட்டுரை எழுதினாலே, அது
சமஸ்கிருதத் திணிப்பு என்று முன்முடிவு கட்டினால்
எம்மால் அதை ஏற்க இயலாது. ஏனெனில் அது உண்மை
அல்ல.
**
மேலும் மறைமலை அடிகளின் தமிழ்த்தாய்
கட்டுரையின் கருத்துக்களும் அறிந்து இருந்தால்
மட்டுமே இக்கட்டுரையைப் புரிய முடியும்.
புரியாத நிலையில் கருத்துச்  சொல்வது
ஏற்புடைத்து ஆகாது. 

எமது பதிவில் யாம் குறிப்பிடும் மறைமலை அடிகளின்
கட்டுரை பத்தோடு பதினொன்றாக ஆன ஒரு
சாதாரணக் கட்டுரை அல்ல. அக்கட்டுரை குறித்து
தமிழகச் சட்ட மன்றத்தில் பெரும் விவாதம்
எழுந்தது. அந்தக் கட்டுரையை நீக்க வேண்டும் என்று
சில குரல்கள் சட்ட மன்றத்தில் எழுந்தன. பள்ளி மாணவர்கள்
ஆசிரியர்கள் நடுவிலும் அக்கட்டுரை குறித்துப்
பெரும் விவாதங்கள் நடைபெற்றன. அக்கட்டுரையின்
முக்கியத்துவம் கருதியே அதை இங்கு குறிப்பிடுகிறேன்.
அது வெறும் கட்டுரை மட்டுமல்ல. வரலாறு.


எமது கட்டுரையில் மிக மிக எளிய ஒரு சமஸ்கிருத
சுலோகத்தையே மேற்கோள் காட்டி உள்ளோம்.
ஸௌந்தர்ய லஹரியில் இருந்து மேற்கோள்
காட்டவில்லை (அது கடினம் என்பதால்).
கொடுத்துள்ள சுலோகம் கடினமாக இருக்கிறது
என்றால், இதோ, அதை விட எளிய இந்த சுலோகத்திற்குப்
பொருள் கூறலாம்.
**
பஜ கோவிந்தம் பஜ கோவிந்தம்
பஜ கோவிந்தம் மூடமதே
ஸம் ப்ராப்தே  ஸந் நிகிதே காலே
நஹி நஹி ரட்சதி டுக்ரிஞ் கரணே.  

சமஸ்கிருதம் பற்றிய எமது கருத்துக்கள் மறைமலை
அடிகள் தமது தமிழ்த்தாய் என்ற கட்டுரையில்
குறிப்பிட்ட கருத்துக்களே. அந்தக் கட்டுரையைப்
பாடமாகப் படித்தவர்கள் கருத்துக் சொல்வார்கள்
என்று எதிர்பார்க்கிறோம்.


எமது கட்டுரை இந்தி பற்றியது அன்று. சமஸ்கிருதம்
பற்றியது. பொன்னார் பங்கேற்ற கருத்தரங்கில்
பேச்சாளர்கள் சமஸ்கிருதச்  செய்யுட்களை மேற்கோள்
காட்டினர். இவருக்குப் புரியவில்லை. இவர் ஒருவருக்குப்
புரியவில்லை என்பதற்காக பேச்சாளர்கள் மீது
தவறு காண இயலாது.
**
குவான்டம் கோட்பாட்டை விளக்கி எத்தனையோ
கூட்டங்களில் பேசினேன். அவையோரில்
பலருக்குப் புரியவில்லை. அதற்காக, இணரூழ்த்தும்
நாறா  மலர் ஆகி விடுவோமா நாங்கள்?


சமஸ்கிருதத்தைப் பழிப்பதாக இருந்தால், அவ்வாறு
பழிப்பவர்களுக்கு சமஸ்கிருதம் தெரிந்திருக்க
வேண்டும் என்ற உங்களின் கருத்து சரியானது. எமக்கு
உடன்பாடானது. தமிழ்நாட்டில் எல்லாமே,
அரங்கின்றி வட்டாடும் கதைதான்.
**
அரங்கின்றி வட்டாடி யற்றே நிரம்பிய
நூலின்றிக் கொட்டி கொளல்.  

எமது பின்குறிப்பு இதையே மிகத்  தெளிவாகச் சொல்கிறது.
எதிர்மறை விமர்சனம் (பழிப்பது) செய்பவர்களுக்கு
சமஸ்கிருதம் தெரிந்திருக்க வேண்டும் என்று சொல்கிறோம்.
தாங்கள் பழிக்க முன்வரவில்லை. அப்படியாயின்
உங்களுக்கு அந்த நிபந்தனை பொருந்தாது.

இக்கட்டுரை பொன்னார் பற்றியது அல்ல. கட்டுரையில்
அவரும் வந்து போகிறார், அவ்வளவே. சாராம்சத்தில்
இக்கட்டுரை சமஸ்கிருதம் அறிந்த மறைமலை அடிகள்
பற்றியது. சமஸ்கிருதம் அறிந்த, அதில் பெரும்புலமை
உடைய மறைமலை அடிகள் சமஸ்கிருதம் பற்றி
என்ன சொன்னார் என்று உணர்த்துவதே இக்கட்டுரையின்
நோக்கம்.

செய்யுட்களில் பயன்படுத்தும் வேற்றுப்பொருள்
வைப்பணி போன்ற ஓர் அணியை  இதில் பயன்படுத்தி இருக்கிறோம். மூத்த தோழர்கள் தங்கள் கருத்துக்களைக்
கூறிய பின், அனைவரும் புரிந்து கொள்ள முடியும்
என்று எண்ணுகிறோம்.

பொன்னார் நாணித் தலைகுனிந்து விட்டார்.
ஆனால் நாண வேண்டிய பலர் நாண மாட்டார்.
அவர்தம் நாணாமையை உணர்த்தவே இங்கு
பொன்னார் எமக்குப் பயன்பட்டார்.  மற்றப்படி,
எமது கட்டுரை பொன்னார் என்னும் தனிமனிதர்
பற்றியது அன்று. மறைமலை அடிகள் என்னும்
மாமனிதர் பற்றியது.
 **
பிறர்நாணத் தக்கது தான்நாணான் ஆயின்
அறம்நாணத் தக்க(து) உடைத்து. 

இக்கட்டுரையைத் திறக்கும் திறவுகோல் மறைமலை
அடிகளின் தமிழ்த்தாய் பற்றிய கட்டுரையே. இங்கு
இதுதான் திறவுகோல் என்று கூறியுள்ளோம்.
திறவுகோலை அம்பலத்தில் வைக்கவில்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக