திங்கள், 22 ஜூன், 2015

சனவரி தொடங்கியதும் சரணடைவும் தொடங்கியது!
இறுதிப் போருக்கு முன்னரே தொடங்கிய சரணடைவு!!
-------------------------------------------------------------------------------------------
(11) ஈழ விடுதலைப் போரும் புலிகளின் வீழ்ச்சியும்!
ஒளிவீசும் உண்மைகளின் அணிவகுப்பு!!  
---------------------------------------------------------------------------------
வீரை பி இளஞ்சேட்சென்னி 
----------------------------------------------------------------------------------
நான்காம் கட்ட ஈழப்போருக்கு (2006-2009) முன்னர் 
புலிகளின் அகராதியில் சரணடைதல் என்ற வார்த்தையே 
கிடையாது. 1987 அக்டோபரில், சிங்களப் படையினரிடம் சிக்கிய  புலேந்திரன், குமரப்பா உட்பட 12 புலிகள் சயனைடு 
அருந்தி உயிர் துறந்தது உலகைக் குலுக்கியது. 
**
பின்னர்,புலித்தலைவர் கிட்டு என்கிற சதாசிவம் 
கிருஷ்ணகுமார் உட்பட ஒன்பது புலிகள், 1993 சனவரி 16 
அன்று, யாழ்ப்பாணம் நோக்கிக் கப்பலில் சென்றபோது
பிடிபட்டனர். அப்போது இந்தியக் கடற்படையிடம் 
கைதாவதைத் தவிர்க்க அவர்கள் சயனைடு அருந்தினர். 
**
இத்தகைய நிகழ்வுகள் உலகத் தமிழர்களிடம் 
பசுமரத்தாணி போலப் பதிந்து இருந்தமையால்.
புலிகள் சரண் அடைவது என்பது நினைத்துக் கூடப் 
பார்க்க முடியாத அளவுக்குக் கடினமாக இருந்தது.
ஆனால், 2002-2006 நான்காண்டுகாலப் போர்நிறுத்தத்தின் 
பின், மீண்டும் போர் தொடங்கியபோது, புலிகள் 
அடைந்த தொடர்ச்சியான போர்முனைத் தோல்விகள் 
புலிகளின் சயனைடு உளவியலில் சேதாரத்தை 
ஏற்படுத்தத் தொடங்கின.
**
குறிப்பாக 2009 சனவரியில் புத்தாண்டு தொடங்கியபோதே,
புலிகளின் வரலாற்றில் அதுவரை இல்லாது இருந்த 
சரணடைவு புதிதாகத் தோன்றியது. அது பல்கிப் பெருகி 
வளர்ந்தது. 2009 சனவரி முதல் வாரத்திலேயே, கிளிநொச்சி, 
பரந்தன், விஸ்வமேடு, ஆனையிறவு என ராணுவ 
முக்கியத்துவம் வாய்ந்த முக்கிய இடங்கள் அனைத்தும் 
சிங்களப் படையால் வெல்லப் பட்டன. A-9 சாலை 
முழுவதுமாக சிங்களர் வசமாகிப் புலிகள் A-9 சாலைக்குக் 
கிழக்குப் புறமாக முல்லைத்தீவு மாவட்டத்துக்குள் 
முடக்கப் பட்டனர்.  
**
இவை வெறும் தோல்விகள் மட்டுமல்ல; பேரிழப்புகள்
ஆகும். இவை போரின் போக்கையும் அதன் இறுதி 
முடிவையும் சுவரில் எழுதியது போல் கோடிட்டுக் 
காட்டின. அடுத்து வரும் பேரழிவும் குரூர மரணமும் 
ஒவ்வொரு புலியின் மனக்கண்ணில் காட்சியாக 
விரிந்தன. சரணடைவது மட்டுமே ஒரே வழி என்பது 
ஒவ்வொரு புலிக்கும் புலப்பட்டது. சிங்களப் படைகள் 
முன்னேறவும் புலிப்படைகள் பின்வாங்கவுமான
ஒரு சூழலில், வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொண்டு 
பல்வேறு இடங்களில் சனவரி 2009 முதலே புலிகள் 
சரணடையத் தொடங்கி இருந்தனர்.
**
இவ்வாறு இறுதிப்போர்க் காலத்தில், போருக்கு முன்னும் 
பின்னுமான பல்வேறு சந்தர்ப்பங்களில், சிங்களப் 
படையிடம் சரணடைந்த புலிகளின் எண்ணிக்கை 
12000க்கும் மேல் என்று ஒரு புள்ளிவிவரம் கூறுகிறது.
சர்வதேசப் பத்திரிகையாளர்கள், ஐ.நா அதிகாரிகள் 
மற்றும் தொண்டு நிறுவனங்கள் ஆகியவை இந்தப் 
புள்ளிவிவரம் சரியானதே என்று சான்று கூறுகின்றனர்.
புலிகள் மற்றும் முன்னாள் புலிகள் இந்தப் 
பன்னிரண்டாயிரத்தில் அடங்குவர்.
**
2009 மே 16-17-18 தேதிகளில் புலித்தலைமை கூண்டோடு 
சரணடைவது என்ற முடிவை எடுத்துச் செயல்படுத்தியது.
நடேசன் புலித்தேவன் ஆகியோருடன் தேசியத் தலைவரும் 
சரண் அடைந்தார். 
**
"நடேசன், புலித்தேவனுடன் பிரபாகரனும் சரண் 
அடைந்தார்; அதன் பின்னரே கொல்லப் பட்டார்"
என்று விடுதலைப் புலிகளின் தீவிர ஆதரவாளரான 
ஒரு நண்பர் தம்மிடம் கூறினார் என்று தோழர் 
திருமாவளவன் சூனியர் விகடன் ஏட்டுக்கு அளித்த 
பேட்டியில் கூறியுள்ளார். (பார்க்க: சூனியர் விகடன்,
திசம்பர் 27, 2009)
**
இதுகாறும் கூறியனவற்றால், விடுதலைப் புலிகளிடம் 
1) சரணடைவு சனவரி 2009 முதலே தொடங்கி விட்டது என்பதும்;
2) களநிலைமைகளே இதற்கான ஒரே காரணம் என்பதும்;
3) தேசியத் தலைவர் அவர்களே இந்த முடிவை எடுத்தார் 
என்பதும் எளிதில் விளங்கும்.
**
உண்மை நிலைமை இவ்வாறு இருக்க, கூண்டோடு 
சரணடைவு என்ற முடிவைத் தேசியத் தலைவரே எடுத்த 
பின்னும், மே 18 அன்று சரண் அடைந்த தம் கணவர் 
எழிலன், திருமதி கனிமொழி கூறியதன் பேரிலேயே 
சரண் அடைந்தார் என்று ஆனந்தி சசிதரன் கூறுவது 
இமாலயப்பொய் என்பது தெளிவாகிறது.
*********************************************************************          

   
  
     

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக