ஞாயிறு, 7 ஜூன், 2015

மத வெறியர்களுக்கு அஞ்சி வெளிநாட்டில் வாழும்
இந்தியப் பகுத்தறிவாளர்!
------------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம் 
-------------------------------------------------------------------------
தோழர் சனல் இடமருகு கேரளத்தைச் சேர்ந்த 
பகுத்தறிவாளர். இந்தியப் பகுத்தறிவாளர் சங்கத் 
தலைவர். பல்வேறு நூல்களின் ஆசிரியர். 
இந்தியாவில் எங்கெல்லாம் மூடநம்பிக்கைகள்
கொழுந்து விட்டு எரிந்தனவோ, அங்கெல்லாம் சென்று
அவற்றைத் தாக்கித் தகர்த்தவர்.

சோதிடத்தை எதிர்த்தார். அன்னை தெரசாவை 
விமர்சித்தார். விபூதி வரவழைக்கும் பொய்மையைத் 
தோலுரித்தார். ஒரு கிறித்துவக் குடும்பத்தில் பிறந்த 
இவர், கிறித்துவத்தை மறுத்து நாத்திகர் ஆனார். 
உலகின் தலைசிறந்த நாத்திகப்
பிரச்சாரகர்களில் ஒருவராகப் போற்றப் படுகிறார்.

2012 மார்ச் மாதத்தில், மும்பையில் உள்ள அன்னை 
வேளாங்கன்னி தேவாலயத்தில் உள்ள, சிலுவையில்   
தொங்கும் ஏசுவின் பாதங்களில் இருந்து தண்ணீர் 
சொட்டிக் கொண்டே இருக்கிறது என்ற செய்தி 
நாடெங்கும் தீயாய்ப் பரவியது. (பிள்ளையார்
பால் குடித்தார் என்பதைப் போல).இதைத் தொடர்ந்து,
மும்பை சென்ற தோழர் இடமருகு, அந்தச் சிலுவையைப்
பரிசோதித்தார். சிலுவையுடன் இணைக்கப் பட்டிருந்த
தண்ணீர்க் குழாயில் இருந்து நீர்க்கசிவு மூலம், ஏசுவின்
பாதங்களில் இருந்து நீர் சொட்டுகிறது என்று 
உண்மையைக் கண்டறிந்து, ஏசுவின் அருள் என்ற 
மோசடியை அம்பலப் படுத்தினார்.

பாதிரியார்கள் விடுவார்களா? இடமருகு மீது 
மும்பையின் எல்லாக் காவல் நிலையங்களிலும் 
மதநிந்தனை (blasphemy) செய்ததாகக் கூறிப் புகார் 
அளித்தனர். அவரைக் கைது செய்து சிறையில் 
அடைக்கக் கோரினர். ஆட்சியாளர்களுக்குப்
பெரும் நிர்ப்பந்தம் அளித்தனர்.

கிறித்துவம் பெரும் செல்வாக்குடன் இருக்கும் 
மாநிலங்களில் கேரளமும் ஒன்று. இங்கு 
பாதிரியார்களின் அதிகாரம் வரம்பற்றது. தமது 
சொந்த மாநிலத்தில், உயிர் வேட்டையாடும்
கிறித்துவ மத வெறியர்களின் நடுவில் வாழ முடியாத
சூழலில், தோழர் சனல் இடமருகு பின்லாந்து நாட்டில்
தஞ்சம் அடைந்து, அங்கு வாழ்ந்து வருகிறார்.

மதச்சார்பின்மைக் காவலர்களும் பகுத்தறிவுப்
போராளிகளும் நிறைந்திருக்கும் நம் நாட்டில்,
தோழர் இடமருகுவுக்கு ஆதரவாக ஒருவர் கூடக்
குரல் கொடுக்கவில்லை. இவர்களுடைய பாதுகாப்பு
இருக்குமேயானால், தோழர் இடமருகு பின்லாந்து
நாட்டுக்குச் செல்ல வேண்டியது இல்லை.

         
சிறுபான்மை மதங்களின் மூடநம்பிக்கைகள்
புரட்சிகரமானவை என்பதுதான் இந்தியப் 
பகுத்தறிவாளர்கள் பின்பற்றி வரும் கோட்பாடு. 
இத்தகைய முட்டாள்தனமான கயமைத் தனமான 
'கோட்பாடு'கள்  ஆர்.எஸ்.எஸ்.சின்
வளர்ச்சிக்குத்தான் வழி வகுக்கும்.
**********************************************

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக