செவ்வாய், 2 ஜூன், 2015

ஐ.ஐ.டி என்பது பார்ப்பன மடம் அல்ல!
சூத்திரபஞ்சமனுக்கு அங்கு சமஉரிமை உண்டு!
சூத்திரன் ஐ.ஐ.டி.யில் படிக்க விடாமல் சதி செய்யும் 
போலிகளை முறியடிப்போம்!
----------------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம் 
-----------------------------------------------------------------------------------
ஐ.ஐ.டி என்பது சங்கர மடம் அல்ல. அது அக்கிரஹாரமும் 
அல்ல. அது சூத்திர பஞ்சமனுக்கு சமஉரிமை உள்ள 
ஒரு இடம். ஐ.ஐ.டி.யை பார்ப்பனர்களுக்குத் தாரை 
வார்த்துக் கொடுத்து விட்டு, மாட்டுக் கொட்டகையில் 
படுத்துத் தூங்குவதற்காக சூத்திரன் பிறக்கவில்லை.
**
இந்தியா முழுவதும் 17 ஐ.ஐ.டி நிறுவனங்கள் உள்ளன.
இந்த 17 ஐ.ஐ.டி.களிலும் சேர்த்து மொத்தம் 9885 இடங்கள் 
(B Tech ) உள்ளன. (எம்.டெக், Ph.D இடங்களை இதில் 
சேர்க்கவில்லை).
**
மொத்த இடங்கள் 9885இல், பொதுப்போட்டி இடங்கள் 
4984 ஆகும்.OBC மற்றும் SC/ST மாணவர்களுக்கான இடங்கள் 
4901 ஆகும். இது சற்றேறக் குறைய சரிபாதி என்பதை 
உணர்க. OBC,SC,ST, உடல் ஊனமுற்றோர் என்னும் நான்கு 
பிரிவுகளில் இட ஒதுக்கீடு வழங்கப் படுகிறது.
**
கல்விக் கட்டணம் மிகவும் குறைவே. சென்னை ஐ.ஐ.டி.யில் 
கட்டணம் ரூ.54927/-. இது போக விடுதி மற்றும் உணவுக் 
கட்டணம் விடுதியில் தங்கிப் படிக்கும் மாணவர்களிடம் 
வசூலிக்கப் படும். இக்கட்டணம் வேறு எந்தத் தனியார் 
பொறியியல் கல்லூரி வசூலிக்கும் கட்டணத்தை விட 
மிகவும் குறைவே.
**
ஐ.ஐ.டி. என்பது பார்ப்பன மடம் என்று சொல்லிச் சொல்லி,
அது நமக்கான இடம் அல்ல என்ற உளவியலை சூத்திர 
பஞ்சம மாணவர்களிடம் விதைத்து, சூத்திர பஞ்சம 
மாணவர்கள் ஐ.ஐ.டி.யில் இடம் பெற விடாமல் தடுத்ததில்,
முற்போக்கு வேடதாரிகளுக்குப் பெரும் பங்கு உண்டு.
**
JEE எனப்படும் Joint Entrance Examination எழுதித் தேர்வு 
பெறுவதன் மூலம் ஐ.ஐ.டி.யில் சேர முடியும். சேர்க்கையின் 
இறுதிக் கட்டத்தில்  தரவரிசை (RANK) பின்வருமாறு 
அமைகிறது.
**
குறைந்தபட்ச மதிப்பெண் சதவீதம்:
----------------------------------------------------------
பொதுப்போட்டி: 35
OBC .......................: 31.5
SC............................: 17.5
ST.............................: 17.5
ஊனமுற்றோர்..: 17.5
SC/ST பிரிவில் போதிய மாணவர்கள் சேரவில்லை என்றால் 
மதிப்பெண்கள் மேற்கூறிய 17.5 என்பதில் இருந்து மேலும் 
குறைக்கப்படும். 
குறிப்பு: இக்கட்டுரை முழுவதிலும் உள்ள புள்ளி விவரங்கள் 
2013ஆம் ஆண்டுக்கானவை.
**
நியூட்டன் அறிவியல் மன்றம் கடந்த பத்தாண்டுகளாக, 
மாணவர்கள் மத்தியில் ஐ.ஐ.டி.யில் இடம் பெற வேண்டும் 
என்ற எண்ணத்தை ஆழமாக விதைத்து உள்ளது. இதற்காக 
பல சூத்திர பஞ்சமப் பெற்றோர்களைச் சந்தித்துப் பேசி, 
அவர்களுக்கு விவரங்களைத் தந்து, ஐ.ஐ.டி நமக்கான இடம் 
என்ற உரிமை உணர்வை ஏற்படுத்தி உள்ளது. தேவையான 
ஆலோசனைகளை வழங்கி உள்ளது. பல்வேறு ஐ.ஐ.டி 
மாணவர்கள் நியூட்டன் அறிவியல் மன்றத்தில் 
உறுப்பினர்களாக உள்ளார்கள்.
**
இது குறித்துப் பேசும்போதெல்லாம், விதிவிலக்கின்றி,
ஒவ்வொரு பெற்றோரும் எங்களிடம் கேட்ட கேள்வி 
இதுதான்: ஐ.ஐ.டி.யில் இடஒதுக்கீடு உண்டா என்பதுதான்.
ஐ.ஐ.டி.யில் பாதிக்குப் பாதி நாம்தான் என்பதை அவர்களுக்கு 
உணர்த்தி நம்பிக்கை ஏற்படுத்தினோம்.
**
ஐ.ஐ.டி என்பது பார்ப்பனமடம் என்று சொல்லிச் சொல்லி,
அது நமக்கானது அல்ல என்ற உளவியலைக் கட்டமைத்த 
போலி முற்போக்குகளின் கைங்கரியத்தைப் பாருங்கள்!
சூத்திரன் ஐ.ஐ.டி.யில் படித்து விடக்கூடாது, அவன் படித்து 
அறிவு பெற்று விட்டால், அவனை ஏமாற்றிப் பிழைக்க 
முடியாது என்பதால்தானே, இந்த முற்போக்கு வேடதாரிகள்
சூத்திரனை ஐ.ஐ.டி.யில் சேர விடாமல் தடுத்து வருகிறார்கள்.
**
அதிகமான IQ உடன் போட்டித் தேர்வில் வெற்றி பெற்று,
ஐ.ஐ.டி.யில் சேரும் மாணவர்களின் எதிர்காலம், இந்த 
முற்போக்கு வேடதாரிகளால் பாழாகிறது. எனவே, சூத்திர 
பஞ்சம மாணவர்களும் அவர்தம் பெற்றோர்களும்
விழிப்போடு இருக்குமாறு நியூட்டன் அறிவியல் மன்றம் 
கேட்டுக் கொள்கிறது.
**
சுயநிதிக் கல்லூரிகளில், ஜேப்பியாரின் சாம்ராஜ்யத்தில்,
பங்காரு அடிகளாரின் கல்லூரிகளில், இன்ன பிற 
கல்லூரிகளில் நடைபெறும் கட்டணக் கொள்ளையை 
எதிர்த்தோ, மாணவர்களைக் கொத்தடிமைகள் போல் 
நடத்தும் ஈனத்தனத்தை எதிர்த்தோ, துரும்பையும் 
தூக்கத் தயாராக இல்லாத இந்த முற்போக்கு வேடதாரிகள் 
ஐ.ஐ.டி.யில் மட்டும் புரட்சி வேடம் தரிக்கிறார்கள்.
**
காரணம் என்ன தெரியுமா? ஐ.ஐ.டி.யில் போராட்டம் 
நடத்தினால் போலிஸ் மட்டுமே வரும். காலையில் கைது 
செய்து மாலையில் விட்டு விடுவார்கள்.ஜேப்பியாரின் 
கல்லூரியில் போராட்டம் நடத்தினால், போலிஸ் 
மட்டுமின்றி, ஜேப்பியாரும் ஆள் வைத்து அடிப்பார்.               
குறைந்தது ஒரு வாரம் ஆஸ்பத்திரியில் இருக்க 
வேண்டியது வரும். இதனால்தான் "முற்போக்குகள்"(!!!)
ஜேப்பியார் பக்கமே தலைவைத்துப் படுப்பதில்லை.
**
இறுதியாக ஒன்று. சமூகத்தின் எல்லா இடங்களிலும் 
எந்த அளவு பார்ப்பன ஆதிக்கம் நிலவுகிறதோ, அந்த 
அளவுதான் ஐ.ஐ.டி.யிலும் நிலவுகிறது. அதை 
எதிர்கொள்ளவும் முறியடிக்கவும் அங்குள்ள சூத்திர 
பஞ்சம  மாணவர்கள் ஆற்றல் கொண்டவர்களாகவே 
திகழ்கிறார்கள். அம்பேத்கரியம், பெரியாரியம் மற்றும் 
மார்க்சியம் ஆகிய தத்துவங்களால் அவர்கள் ஆயுதபாணியாக 
இருக்கிறார்கள். வெளியே உள்ள எட்டாங்கிளாஸ் கூடத் 
தேறாத தற்குறிகளும் போலி முற்போக்குகளும் 
உள்ளே வந்துதான் அவர்களைக் காப்பாற்ற வேண்டும் 
என்றெல்லாம் எந்த அவல நிலையும் அங்கு இல்லை.
**
சூத்திர பஞ்சம  மாணவர்களை முட்டாள்கள் என்று 
எடைபோடும் போலி முற்போக்குகள் திருந்த வேண்டும்.
******************************************************************  
        

           

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக