சனி, 28 மார்ச், 2015

பாரதியைத் தாக்குவது பாரதிதாசனைத் 
தாக்குவதற்குச் சமம்!
---------------------------------------------------------------------
பி இளங்கோ சுப்பிரமணியன் 
-----------------------------------------------------------------------------
"பெரியாரிஸ்ட்" என்று அறியப்படும் திரு வே மதிமாறன் அவர்கள் 

பாரதியாரை இழிவு செய்தல் வேண்டும் என்னும் நோக்கில் 
ஒரு குறும்பதிவை எழுதி உள்ளார். (பார்க்க: 22.03.2015, 10.13 a.m)
அப்பதிவு அவரையே மிகவும் இழிவு செய்கிறது; பாரதியாரை அன்று.
அப்பதிவினைக்  கீழே காண்க!
-------------------------------------------------------------------------------------------    
திரு மதிமாறனின் பதிவு:

------------------------------------
"ஜாதிகள் இல்லையடி பாப்பா குல
தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாபம் - பாரதியார்.
அதான் ‘ஜாதிகள் இல்லை’ ன்னு சொல்லியாச்சியில்ல... அப்புறம் இல்லாததில்.. குல தாழ்ச்சி உயர்ச்சி எப்படி சொல்ல முடியும்?
-------------------------------------------------------------------------------
ஊக்கமது கைவிடேல் என்று அவ்வையார் கூறியதற்கு,
ஊக்கத்தைத் தருகின்ற மது அருந்துதலைக் கைவிடாதீர்கள்
என்று பொருள் கொள்கிறவன் பிறழ்ந்த மனநிலை உடையவன்.
அது போன்றதே திரு மதிமாறனின் பதிவும். ஆழம் எதுவும்
இன்றி, மிகுந்த சிறுபிள்ளைத் தனத்துடன் எழுதப்பட்ட இப்பதிவு,
கோமாளித்தனமான (clownish) பதிவாகவே உணரப்படும்.
***
பாரதியார் ஒரு கலகக்காரர். தம் காலச் சமூகத்தை எதிர்த்தும்,
அச்சமூகத்தை அடிமைப் படுத்தி ஆண்ட பிரிட்டிஷ்
ஏகாதிபத்தியத்தை எதிர்த்தும் பெருங்கலகம் விளைத்தவர்
பாரதியார். தமது சொந்த சாதியினரால் பிரஷ்டம் செய்யப்
பட்டவர். அவரின் இறுதி ஊர்வலத்தில் அவரது சாதியினர்
பங்கேற்கவில்லை.
**
பாரதியாரிடம் பல போதாமைகள் இருக்கலாம். அவற்றில்
பல அவரின் காலம் சார்ந்தவை. 1882இல் பிறந்து 1921இல்
மறைந்த பாரதியார் 39 ஆண்டுகளே வாழ்ந்தார்.   
இன்றைக்கு  நூறு ஆண்டுகளுக்கு முன்பு, 1921இல், 
தமிழ்ச் சமூகம் எவ்வளவு இழிவானதாக,
அறியாமை-மூடநம்பிக்கை-வறுமை-கல்வியின்மை 
நிறைந்ததாக இருந்திருக்கும் என்பதை எண்ணிப் பார்க்கும் 
போதுதான், பாரதியாரின் கலகம் எவ்வளவு ஆற்றல் 
வாய்ந்தது என்பதைப் புரிந்து கொள்ள முடியும்.
***
தந்தை பெரியார் 1925இல் சுயமரியாதை இயக்கத்தைத் 
தோற்றுவிக்கிறார். அதற்கு நாலு ஆண்டுகளுக்கு முன்பே 
பாரதியார் இறந்து விடுகிறார். பாரதியாரின் புரட்சிக் 
கருத்துக்கள் பெரியாரின் சுயமரியாதை இயக்கச் 
செயல்பாடுகளுக்கு நிகரானவை.
***
சுயமரியாதை இயக்கத்துக்காக குடியரசு என்ற பத்திரிகையைத் 
தொடங்குகிறார் தந்தை பெரியார்.  குடியரசு இதழ் 
02.05.1925 முதல் வெளிவரத் தொடங்குகிறது. அந்த இதழில் 
இந்தப் பத்திரிகை வெற்றிகரமாக நடக்க,
"இறைவன் திருவடிகளை இறைஞ்சுகிறோம்" என்று 
தந்தை பெரியார் எழுதினார்.
அதிர்ச்சியாக இருந்தாலும் இதுதான் உண்மை. மேலும்,
குடியரசு பத்திரிகை திறப்பு விழாவை நடத்தி வைக்க 
இந்து மதச் சாமியார் ஒருவரைத்தான் அழைத்து, விழாவை 
நடத்தினார் பெரியார்.
***
இதனால் எல்லாம் பெரியார் ஆர்.எஸ்.எஸ் ஆதரவாளர் 
என்று கூறி விட முடியுமா? ஒரு நாத்திகரைக் கூப்பிட்டு 
திறப்பு விழா நடத்தக் கூடாதா என்று வரலாறு தெரியாத 
ஒரு விடலை கேட்கலாம்.இந்த நிகழ்வுகள் நடந்த 
காலம் 1925. அன்று ஒரு நாத்திகர் கூடக் கிடையாது 
தமிழ்நாட்டில். நாத்திகர்தான் திறந்து வைக்க வேண்டும் 
என்றால், ஜவஹர்லால் நேருவைத்தான் போய்க் 
கூப்பிட வேண்டும். அது சாத்தியமற்றது.
***
இவற்றை எல்லாம் பெரியாரின் குறைகளாகச் சுட்டிக் 
காட்டுபவன் மூடன். அந்தக் காலக் கட்டத்தின் சமூக 
நிர்ப்பந்தங்கள் குறித்து எவ்வித அறிவும் அற்றவனே 
பெரியாரைக் குறை கூற முடியும். அது போலவே 
பாரதியாரின் குறைகளாகச் சொல்லப் படுபவை 
பாரதியாரின் குறைகள் அல்ல. அவை அக்காலத்தின் 
சமூக நிர்ப்பந்தங்கள்.
***
பாரதியார் மீது  தாக்குதல் நிகழ்ந்த போதெல்லாம்,
கேடயமாக இருந்து அவரைக் காத்தவர் பாவேந்தர் 
பாரதிதாசன். பாரதியார் மீது தாக்குதல் தொடுப்பவன் 
பாவேந்தர் மீதும் தாக்குதல் தொடுக்கிறான் என்பது 
தான் உண்மை.
-------------------------------------------------------------------------------------
****************************************************    
     

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக