வெள்ளி, 20 மே, 2016

ஆடத் தெரியாத நாட்டியக்காரி
தெருக்கோணல் என்றாளாம்!
----------------------------------------------------------------
தேர்தலில் தோற்றுப்போனவர்கள் வழக்கமாக
வைக்கும் ஒப்பாரிதான் "பணநாயகம் வென்றது;
ஜனநாயகம் தோற்றது" என்பது.

இது முட்டாள்தனமான கூற்று. இதில் உண்மை
இல்லை; நேர்மையும் இல்லை.

வறுமையும் அறியாமையும் நிரம்பிய ஒரு நாட்டில்
அன்றாடங்காய்ச்சிகளும் நடைபாதைவாசிகளும்
நிரம்பிய ஒரு நாட்டில், அடுத்த வேளை உணவுக்கு
வழியில்லாமல் இருக்கும் மக்களையும் தேர்தல்
நடைமுறையில் ஈடுபடுத்தும் பொருட்டு, பிரதான
அரசியல் கட்சிகள் அன்றையச் செலவுக்குப் பணம்
கொடுக்கின்றன. இதெல்லாம் லஞ்சம் என்ற
வகைமையில் வராது.

இந்தியாவில் எப்போது வயது வந்தோர் வாக்குரிமை
(adult franchise) வந்ததோ, அதாவது 1952இன் முதல்
பொதுத் தேர்தலில் இருந்தே இவ்வாறு ஏழை எளிய
மக்களுக்குச் செலவுக்குப் பணம் கொடுப்பது என்ற
நடைமுறை வந்தது.

தமிழகத்தில் இவ்வாறு ஏழை மக்களின் செலவுக்குப்
பணம் கொடுப்பது என்ற நடைமுறையை  பகிரங்கமாகத்
தொடங்கி வைத்தவர் ஏழை பங்காளர் என்று
போற்றப்பட்ட காமராசர். அவர் அதை ரகசியமாகச்
செய்யவில்லை.

அதற்கு முன்பு, 1947க்கு முன் பணம் உள்ளவனுக்கும்
படித்தவனுக்கும் மட்டுமே வாக்குரிமை இருந்தது.
நமக்கென்று ஒரு அரசமைப்புச் சட்டம் இயற்றப்பட்டு
அனைவருக்கும் வாக்குரிமை (சர்வஜன  ஓட்டுரிமை)
வந்தபோது, தாங்களும் வாக்களிக்கலாம் என்றே
அறியாத ஏழை எளிய மக்களையும் வாக்களிக்க
வைக்கும் பொருட்டு தலைக்கு ஒரு ரூபாய் நாணயம்
கொடுத்து இந்த நடைமுறையைத் தொடங்கி
வைத்தார் காமராசர். அவர் செய்ததில் எவ்விதத்
தவறும் இல்லை. இதன் மூலம் ஏழை எளிய
மக்களை அவர் வாக்களிக்க வைத்தார்.

அந்தப் பழக்கம் சற்று அதிகரித்த அளவில் இன்றும்
தொடர்கிறது. வட இந்தியாவில் லல்லு பிரசாத் யாதவ்
தாமே முன்னின்று ஏழை மக்களுக்குப் பணம்
வழங்கும் காட்சிகலின் வீடியோக்கள் ஆயிரக்
கணக்கில் உள்ளன.

தற்போது தேர்தல் ஆணையத்தின் கெடுபிடியால்,
இவ்வாறு பணம் வழங்கும் செயல்கள் ரகசியமாக
நடக்கின்றன. அவ்வளவே,

தேர்தலில் தோல்வி அடைந்தவர்கள் தங்கள்
தோல்விக்கான மெய்யான காரணத்தைக் கண்டறிய
முயல வேண்டும். அதை விட்டு, பணம்தான் காரணம்
என்று கூறுவது ஆடத் தெரியாத நாட்டியக்காரி
தெருக்கோணல் என்று கூறுவது போலத்தான் ஆகும்.
**********************************************************************
  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக