செவ்வாய், 12 ஜூலை, 2016

பெருமாள் முருகனின் குறுக்குவெட்டுத் தோற்றம்!
நீங்கள் யார் பக்கம்?
-----------------------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
-----------------------------------------------------------------------------------------
கலை கலைக்காகவே (art for art's sake) என்று கோட்பாடு.
கலை மக்களுக்காகவே (art for people's sake) என்று ஒரு
கோட்பாடு. இக்கோட்பாடுகள் உலகாளாவியவை.
கலை இலக்கியம் குறித்த மொத்த மானுடத்தின்
பார்வை எதுவாயினும் அதை இவ்விரு
கோட்பாடுகளுக்கும் அடக்கி விடலாம்.

பெருமாள் முருகன் போன்றவர்கள் கலை
கலைக்காகவே என்ற கோட்பாட்டைப் பற்றி
நிற்பவர்கள். 'கலைக்கு ஒரு சமூக நோக்கம் இருக்க
வேண்டும், சமூகப் பயன்பாடு இருக்க வேண்டும்"
என்பதை ஏற்காதவர் பெருமாள் முருகன்.

"வேறுள குழுவை எல்லாம் மானுடம் வென்றதம்மா"
என்றான் கம்பன். இதில்  மானுட வீறு பாடுகிறான்
கம்பன். மானுடத்தின் பலவீனங்களை
கலையாக்குவதைத்  தவிர்த்து, மானுடத்தை மேன்மைப்
படுத்தும் நோக்கத்துடன் எழுதுவதே கலை.

பின்நவீனத்துவம் மேற்கூறிய கோட்பாடுகளை
எள்ளி நகையாடுகிறது.கலைக்கு முன் மானுடம்
துச்சம் என்கிறது. பெருமாள் முருகனின்
மாதொருபாகன் நாவல் இந்தக் கோட்பாட்டின்
வெளிப்பாடுதான்.

அரசை எதிர்த்தோ, ஏகாதிபத்தியச்  சுரண்டலை
எதிர்த்தோ, மத நிறுவனங்களை எதிர்த்தோ,
இலக்கியம் படைக்கக் கூடியவர் அல்லர்
பெருமாள் முருகன். எனவே அவர் "நிறுவன எதிர்ப்பு"
(anti establishment) எழுத்தாளர் அல்லர். அவரின்
எழுத்துக்களில் அரசை எதிர்ப்பது (challenging the state)
என்ற அம்சம் மருந்துக்குக் கூடக் கிடையாது.

சமகால சமூகச் சிக்கல்களை தமது படைப்புகளின்
கதைக்கருவாக ஆக்கியவர் அல்லர் பெருமாள்
முருகன். காலத்துக்குப் பின் சென்று இலக்கியம்
படைப்பவர் அவர். இது ஒருவித நழுவல்வாதம்
(escapism) ஆகும்.

ஓர் எழுத்தாளன் எத்தகைய கதைக்கருவைத்
தேர்ந்தெடுக்கிறான் என்பதே அவனின் சமூக
நோக்கைத் தீர்மானிக்கிற அம்சம். கருப்பொருள்
தேர்வு அவனை அடையாளம் காட்டி விடும்.

சங்ககாலம் பற்றி ஆராய்ச்சி மேற்கொள்ளும் ஓர்
ஆராய்ச்சியாளர் "சங்ககாலப் பெண்களின்
உள்பாவாடைகள்" என்ற பொருளில் ஆராய்ச்சி
செய்வாரேயானால், அதற்கான சமூக அவசியம்
என்ன என்ற கேள்வி எழுவது தவிர்க்க இயலாதது.

அதே போல, திருச்செங்கோட்டைச் சுற்றியுள்ள
கிராமத்து  மக்கள், நூறாண்டுகளுக்கு முன்பு
பிள்ளையில்லாக் குறையைத் தீர்க்க என்ன
செய்தார்கள் என்ற ஆய்வு எந்த விதமான சமூக
அவசியமும் அற்றது.

சமகாலப் பிரச்சினைகளைப் புறந்தள்ளி விட்டு,
காலத்துக்குப் பின்னால் போய் நின்று கொண்டு
"உள்பாவாடை ஆய்வு"களை மேற்கொள்ள வேண்டிய
சமூக அவசியமோ நிர்ப்பந்தமோ பெருமாள்
முருகனுக்கு ஏதேனும் இருந்ததா என்றால் எதுவும்
இல்லை என்பதே உண்மை.

திருச்செங்கோடு மக்கள் குறித்த ஆய்வு எதையேனும் 
அவர்  மேற்கொண்டிருந்தால், அந்த ஆய்வடங்கலை
(thesis) உரிய தரவுகள் மற்றும் மேற்கொண்ட ஆய்வு
முறைமை (modus operandi) ஆகிய விவரங்களுடன்
மக்கள் முன் அல்லது கல்வியியல் ஆராய்ச்சியாளர்கள்
(academic researchers) முன் சமர்ப்பிக்க வேண்டிய
பொறுப்பும் கடமையும் பெருமாள் முருகனுக்கு
இருக்கிறது. அதிலிருந்து அவர் தப்பிக்க முடியாது.

நாவலின் முன்னுரையில் "ஆய்வு முடிவை"யே
தாம் நாவலாக எழுதியிருப்பதாகக் கூறிய
பெருமாள் முருகன் தமது ஆய்வைச் சமர்ப்பிக்க
வேண்டிய தேவை எழுந்தபோது, தான் ஆய்வே மேற்கொள்ளவில்லை என்றும் தமது நாவல்
வெறும் புனைவே (fiction) என்றும் கூறினார்.
இதுதான் உண்மை. எந்தவித ஆய்வையும் அவர் மேற்கொள்ளவில்லை என்பதுதான் உண்மை.

குட்டிமுதலாளித்துவ வர்க்கத்துக்கே உரிய
இரண்டகமும் பித்தலாட்டமும் பெருமாள்
முருகனின் நடத்தையில் பளிச்சிடுகின்றன.

தமிழ் மரபு என்பது குட்டிமுதலாளித்துவ மரபு
அல்ல. அது சொன்ன சொல் தவறாத விழுமியங்களை
உள்ளடக்கியது. தமிழ்ப் பேராசிரியரான பெருமாள்
முருகன் இதை நன்கறிவார்.

"கற்றைவார் சடையான் நெற்றிக்
கண்ணினைச் சிறிதே காட்டப்
பற்றுவான் இன்னும் அஞ்சான்
உம்பரார் பதிபோல் ஆகம்
முற்றுநீர் கண்ணானாலும்
மொழிந்த நும் பாடல் குற்றம்
குற்றமே என்றான் தன்பால்
ஆகிய குற்றம் தேரான்"   
(பரஞ்சோதி திருவிளையாடல்)

இறைவனையே எதிர்த்து நின்ற புலவன் நக்கீரனே
தமிழ் மரபினன்.

ஆனால் பெருமாள் முருகனோ அரசை
எதிர்க்கவில்லை. மத நிறுவனங்களை
எதிர்க்கவில்லை. மாறாக மக்களை எதிர்த்தார்.
எளிய மக்களை உழைக்கும் மக்களை
அவதூறு செய்து காசு பார்த்தார்.

மக்களிடம் இருந்து கற்றுக் கொள்வதும்
மக்களுக்குக் கற்றுக் கொடுப்பதுமே
மார்க்சியம். மக்களை அவதூறு செய்வதல்ல
மார்க்சியம்.

உயர்நீதிமன்றத் தீர்ப்பு பெருமாள் முருகனுக்கு
ஆதரவாக வந்திருக்கலாம். ஆனாலும் மீண்டும்
அவர் சொந்த ஊருக்குத் திரும்பிச் சென்று
வாழ்வது என்பது இயலாத ஒன்று. ஊருடன்
பகைக்கின் வேருடன் கெடும் என்பதற்கு
எடுத்துக் காட்டாக ஆனார் பெருமாள் முருகன்.

ஆக, பெருமாள் முருகன் விவகாரத்தில்
முழுமையான சித்திரம் இப்போது கிட்டி விட்டது.
உழைக்கும்  மக்கள் ஒரு புறம்; பெருமாள் முருகன்
மறுபுறம். நாங்கள் மக்கள் பக்கம் நிற்கிறோம்.
நீங்கள்???
------------------------------------------------------------------------------------------------
தொடரும்
-----------------------------------------------------------------------------------------------   
           

       

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக