வியாழன், 14 ஜூலை, 2016

தத்துவத்திற்கு அறம் வேண்டும். அறிவியலுக்கு அறம்
இல்லை; தேவையும் இல்லை. எந்த நிலையிலும்
முக்கோணத்தின் மூன்று கோணங்களின்
மொத்தம் 180 பாகை என்னும் கூற்றில் அறம் எங்ஙனம்
செயல்பட இயலும்? மார்க்சியம் என்பது ஒரு தத்துவம்.
இத்தத்துவத்திற்கு அறம் வேண்டும். ஆனால்
இயற்பியலுக்கும் கணிதத்திற்கும் அறம் தேவை
என்று உரைப்பது ஏற்கவியலாதது. அறம்
இல்லாமையால் அறிவியல் குன்றப் போவதில்லை.

அடுத்து பிரபஞ்சத்தை இயக்குவது எது?
உறுதியுடன் கூறலாம் கடவுள் இயக்கவில்லை என்று.
மேலும் எந்த ஒரு தத்துவமும் (philosophy) பிரபஞ்சத்தை
இயக்கவில்லை; இயக்கவும் இயலாது.
**
ஆயின்,பிரபஞ்சம் எவ்வாறு இயங்குகிறது?
இயற்பியல் விதிகளுக்குக்  கட்டுப்பட்டே
பிரபஞ்சம் இயங்குகிறது. இயற்பியல் விதிகளே
பிரபஞ்சத்தை இயக்குகின்றன.

ஏற்கவில்லை; ஏற்க இயலவில்லை. மனிதனே
கடவுளைப் படைத்தான். அதுபோல மனிதனே
இயற்பியல் விதிகளையும் "படைத்தான்". எனினும்
இரண்டுக்கும் இடையில் பாரிய வேறுபாடு உண்டு.
**
இயற்கை என்பது கற்பனை அல்ல. உண்மையில்
இருப்பது. அது இயங்குகிறது. மனிதன் அந்த
விதிகளைக் கண்டறிந்தான். அறிவும் அறிதலும்
வளர வளர, மேலும் மேலும் துல்லியமாக
இயற்கையின் இயக்க விதிகளை அறிந்து கொண்டே
வருகிறான். இங்கு கற்பனைக்கு இடமில்லை.
**
ஆனால் கடவுளை பொறுத்த மட்டில், அப்படி ஒருவர்
எங்கும் இல்லை. இவன் தன்னுடைய கற்பனையில்
கடவுளை உருவாக்கினான். படைத்தான். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக