புதன், 16 ஜூலை, 2014

வேலையற்ற மாமியார்களும்
சிந்தனைக் குள்ளர்களும்!
----------------------------------------------------------------------------------------
(மோடி அரசின் முதல் பட்ஜெட்-அருண் ஜெட்லி- திறனாய்வு)
----------------------------------------------------------- -----------------------------
பி இளங்கோ சுப்பிரமணியன்
-------------------------------------------------------------- ----------------------------
எனது முந்திய கட்டுரை குறித்து வாசகர்கள் சில
கருத்துக்களைத் தெரிவித்து இருந்தனர்.
"புஷ்பராகம் பதித்த மூக்குத்தியும் அந்தாதித் தொடையும்"
என்ற கட்டுரையைத் தான் குறிப்பிடுகிறேன்.
அக்கட்டுரை அ) பட்ஜெட்டை மேலெழுந்தவாரியாக
அணுகுகிறது; ஆ)பாஜக மீது கூர்மையான விமர்சனம்
இல்லை ஆகிய கருத்துக்கள் தெரிவிக்கப் பட்டன. இவை
குறித்த எனது எதிர்வினையே இக்கட்டுரை.

பட்ஜெட் என்பது எல்லையற்றது அல்ல; வரம்புக்கு உட்பட்டது.
அதுபோலவே பட்ஜெட் மீதான விமர்சனமும் எல்லையற்றது
அல்ல; வரம்புக்கு உட்பட்டது.ஒரு பட்ஜெட்டின் வாழ்நாள்
365 நாட்கள் மட்டுமே.சிதம்பரம் சமர்ப்பித்த இடைக்கால
பட்ஜெட்டின் தொடர்ச்சியான ஜேட்லியின் பட்ஜெட்டின்
வாழ்நாள் 365 நாட்களுக்கும் குறைவு. விரலுக்கு ஏற்ற வீக்கம்
என்பது போல விமர்சனத்தின் தன்மையும் அந்த அளவே
இருக்கும்.

இந்திய அரசமைப்புச் சட்டத்தை விமர்சிப்பது போல
பட்ஜெட்டை விமர்சிக்க வேண்டிய அவசியம் இல்லை.
அரசமைப்புச் சட்டம் என்றும் நின்று நிலவுவது;
பட்ஜெட் 365 நாட்களுடன் முடிந்த போவது.ஒரு
ஒர்க் ஷாப்பில், எந்திரத்தை பாகம் பாகமாகக் கழற்றிப்
போட்டு, பின் அவை அனைத்தையும் ஒன்று சேர்ப்பது
போல இந்த பட்ஜெட்டின் உள்ளும் புறமும் புகுந்து
புறப்பட்டு, பின் வெளிவந்து விஷேசங்களை வெளிப்படுத்த
( REVELATION ) வேண்டிய தேவை இல்லை.

போலி கம்யூனிஸ்ட்கள், போலி மார்க்சிஸ்ட்கள்,
போலி   லெனினிஸ்ட்கள் ...இன்ன பிற
சிந்தனைக் குள்ளர்களுக்கு அத்தகைய தேவை
இருக்கலாம்.  அந்த வேலையற்ற மாமியார்கள்
அருண் ஜேட்லியின் கழுதையைச் சிங்காரித்துக்
கொண்டு இருக்கட்டும். 

சுருங்கச் சொல்லல் விளங்க வைத்தல் என்ற உத்தியைக்
கையாண்டு அக்கட்டுரை எழுதப் பட்டு இருந்தது.
      " பலசொல்லக் காமுறுவர் மன்ற மாசற்ற
        சிலசொல்லல் தேற்றா தவர் "
என்ற வள்ளுவரின் கண்டனத்தை பெற யான் விரும்பவில்லை.

புள்ளி வைத்தவர் அவர்!
கோலம் போட்டவர் இவர்!!
---------------------------------------
ஒரு புள்ளி விவரத்தைப் பார்ப்போம்:
சிதம்பரத்தின் இடைக்கால பட்ஜெட்டிலும்
அருண் ஜேட்லியின் புதிய பட்ஜெட்டிலும்
அரசின் பல்வேறு துறைகளுக்கு எவ்வளவு நிதி
ஒதுக்கப் பட்டு உள்ளது என்று பார்ப்போம்.

துறை         சிதம்பரத்தின் பட்ஜெட்     ஜேட்லியின் பட்ஜெட்
                                           ( கோடி ரூபாய்கள் )
--------------------------------------------------------------------------------
வேளாண்மை                21951.75                                  22651.75
கிராமப்புற வளர்ச்சி    78408.80                                  79999.80
உணவு (PDS )                   115656.84                                115656.84
நகர்ப்புறவளர்ச்சி         19143.46                                   19989.46
சிறுபான்மை நலம்      3724.01                                      3724.01
சமூகநீதி                          6204.49                                       6204.49
சுற்றுலா                           1356.71                                      1948.71

குறிப்பு::
----------
உணவு ( PDS ), சிறுபான்மை நலம், சமூகநீதி ஆகிய
மூன்று துறைகளிலும் சிதம்பரம் ஒதுக்கிய அதே
தொகையைத்தான் அப்படியே ஒதுக்கி உள்ளார் ஜேட்லி.

ஆதாரம்:  THE HINDU's  CALCULATIONS;
                      HINDU  ஆங்கில ஏடு , ஜூலை 12, 2014  

ஆக அவரேதான் இவர்! இவரேதான் அவர்!!
சிதம்பரத்தின் பட்ஜெட்டில் சிறிது பூச்சு வேலை
( TINKERING WORK ) செய்துள்ளார்.அவ்வளவே!

இடைக்கால பட்ஜெட்டின் தொடர்ச்சியாக
ஜேட்லியின் பட்ஜெட் அமைந்தபடியால்,
முழு சுதந்திரத்துடன் ஜெட்லி இந்த பட்ஜெட்டைத்
தயாரிக்கவில்லை என்பதே  உண்மை! ஒன்றுமே
எழுதப்படாத சிலேட்டில் ஜேட்லி எழுதவில்லை.
மாறாக சிதம்பரத்தின் எழுத்துக்கள் உள்ள சிலேட்டில்
ஜேட்லி எழுதி உள்ளார் ( OVER WRITING ) என்பதே
யதார்த்தம். சிதம்பரத்தின் பட்ஜெட்டுகள் முழுக்க
நனைந்தவை! அவை  எப்படி இருக்கும் என்பது
குறைந்தபட்ச பொருளாதார அறிவு உடைய
எவருக்கும்  தெரிந்ததுதான்.

எனவே  சிதம்பரம்- ஜேட்லி
கூட்டுத் தயாரிப்பான  இந்த பட்ஜெட் குறித்து
அகல்விரிவானதும் ஆழமானதுமான பகுப்பாய்வு
தேவையற்றது என்பது எனது நிலை.
WHY THE HELL SHOULD I BEAT ABOUT THE BUSH? 

நிற்க. சிதம்பரம் பொருளாதார நிபுணராக அறியப் 
பட்டவர். ஜேட்லி சட்ட நிபுணராக அறியப் பட்டவர்.
ஆனால், ஆளும் கலை ( ART  OF GOVERNANCE )
என்பதில் ஜேட்லி சிதம்பரத்தை விடச் சிறந்து 
விளங்குகிறார் என்பதற்கு இந்த பட்ஜெட் ஒரு 
சிறந்த உதாரணம். கடந்த பத்தாண்டுகளின் 
பட்ஜெட்டுகளில்,  ஜேட்லியைப் போல் 
எந்த நிதி அமைச்சரும் இந்த அளவுக்கு வரிக்குறைப்பு 
செய்ததில்லை. வரிகுறைப்பு மாமன்னராக 
ஜேட்லி திகழ்கிறார் இந்த பட்ஜெட்டின் மூலம்.
தங்களுக்கு வாக்களித்த நடுத்தர வர்க்கத்துக்கு 
எதிர்பார்த்ததை விட அதிகமாகவே செய்துள்ளார் ஜெட்லி.
இந்த அம்சத்தில் சிதம்பரத்தை அவர் வெகுவாக 
முறியடித்து உள்ளார்.

தீவிர வலதுசாரிக் கொள்கைகளைச் சொல்லிக் 
கொண்டிருந்த பாஜக இந்த பட்ஜெட்டில் 
அவற்றுக்கான பிள்ளையார் சுழியைப் போடவில்லை.
இந்திய அரசின் பொருளாதாரக் கொள்கைகளில் 
ஒரு அடிப்படை மாற்றம் (PARADIGM SHIFT ) வருமா,
வலதுசாரிச் சாய்வு வருமா என்பன போன்ற 
கேள்விகளுக்கு இந்த பட்ஜெட்டில் விடை இல்லை.
விரைவில் தெரிய வரும்.

ஆக, ஜேட்லியின் பட்ஜெட் குறித்துச் 
சொல்வதற்கு இதற்கு மேல் ஒன்றும் இல்லை.   
இதில் நிறைவு அடையாதவர்கள்,
முன்பத்திகளில் குறிப்பிட்ட வேலையற்ற 
மாமியார்களை அணுகவும்.

இறுதியாக ஒன்று!கம்யூனிஸ்ட் சீனாவில் 
தலைவர்   மாவோ, "மாபெரும் முன்னோக்கிய 
பாய்ச்சல்"  (GREAT LEAP FORWARD) என்ற ஒரு 
திட்டத்தை 1958-1961 காலக் கட்டத்தில் 
செயல்படுத்தினார். சீனப் பொருளாதாரத்தை 
வெகுவாக உயர்த்தவும் , சீனத்தில் தொழில் 
வளர்ச்சியை உச்சத்துக்குக் கொண்டு செல்லவும் 
இந்த மாபெரும் பாய்ச்சல் உதவும் என்று கருதி 
இதை வெகு  தீவிரமாகச் செயல்படுத்தினார் மாவோ.
ஆனால், விளைவு தலைகீழானது.முட்டாள்தனமான 
இந்த மாபெரும் பாய்ச்சல் திட்டம் சீனாவில் 
மாபெரும் பஞ்சத்தை உண்டாக்கி விட்டது.இந்தப் 
பஞ்சத்தில் ஐந்து   கோடி சீன மக்கள் இறந்து 
போனார்கள் என்பது வரலாறு.

அருண்  ஜெட்லியின் பட்ஜெட்  மகா மோசமான 
பட்ஜெட்டாக இருந்து விட்டுப் போகட்டும்!
ஆனால் ஐந்து கோடி மக்களை பஞ்சத்தில் 
சாகடித்த மாவோவின் பட்ஜெட் போல 
இது நிச்சயம் இருக்காது என்பது உறுதி!

**************************************************************     






                     

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக