ஞாயிறு, 11 மே, 2014

மார்க்சிய வகுப்புகளும்
பா பா பிளாக் ஷீப்பும்!
------------------------------------------------------------------------------------------------------------
                        பி. இளங்கோ சுப்பிரமணியன் 
------------------------------------------------------------------------------------------------------------
சில நாட்களுக்கு முன் என்னைச் சந்தித்த
சில   இளைஞர்கள் மார்க்சியம் கற்றுக் கொள்ள
விரும்புவதாகத் தெரிவித்தனர். அவர்கள்  மார்க்சியம் கற்றுக் கொண்டு வருபவர்கள் என்பதை  நான் அறிவேன். மார்க்சிய வகுப்புகள் எங்கு நடைபெறுகின்றன, யார் நடத்துகிறார்கள் என்றெல்லாம்
வினவினர். அவர்களை ஆற்றுப்படுத்திய நான்,
கம்யூனிஸ்ட் கட்சிகளில்   ஏதேனும் ஒன்றில் சேர்ந்து
மார்க்சியம் கற்றுக் கொள்வதுதான் எளிது என்று கூறினேன்.

காலம் காலமாகச்  சொல்லப்படும் பதிலைத்தான் நான் சொன்னேன்.
ஆனால் வந்த இளைஞர்களுக்கு   என் பதில் நிறைவு தரவில்லை.
இது போன்ற பத்தாம்பசலித்தனமான பதில்களைக் கேட்டுக் கேட்டு 
காதுகள் புளித்து விட்டன என்றனர்.போதிய புரிதல் இல்லாத இளைஞர்கள்   என்று கருதி, மார்க்சியம் பயில்வது எப்படி என்றும்,
நாங்களெல்லாம் எப்படிமார்க்சியம் படித்தோம் என்றும்  
அவர்களுக்கு விளக்க முற்பட்டேன்..   

படித்தல்
சிந்தித்தல்
விவாதித்தல்
என்ற இயக்கப் போக்கின் வழியாகத்தான்
மார்க்சியத்தைக் கற்றுக் கொள்ள முடியும்.
இவற்றுள் படித்தலும் சிந்தித்தலும்
தனிமனித நிகழ்வுகள். ஆனால் விவாதித்தல் என்பது குழு நிகழ்வு. குறைந்தபட்சம் நாலைந்து பேர் இருந்தால்தான்
விவாதித்தல் என்பது சாத்தியப்படும்.
இதனால்தான் கட்சி சார்ந்தோ அல்லது அமைப்பு
சார்ந்தோதான் மார்க்சியத்தைக் கற்க முடியும் 
என்ற நிலை ஏற்படுகிறது என்று விளக்கினேன்.
தமிழகச் சூழலில் இதுதான் நிலைமை என்றும் தெளிவு படுத்தினேன்.
(மேலை ஐரோப்பியச் சூழலில் இந்நிலை இல்லை என்பது இதன் பெறுபேறு).

எனது  விளக்கங்களை புளிப்பேறிப் போனவையாக அவர்கள் கருதுகிறார்கள் என்பது புலப்பட்டது.  

படித்தல், சிந்தித்தல், விவாதித்தல் என்ற முறையான வழிகளைப் 
பின்பற்றினாலும் கூட, நடைமுறையோடு   இணைத்துக்
கற்கும்போதுதான் மார்க்சியத்தைக் கற்பது எளிதாகும். ஏனெனில்
மார்க்சியம் என்பது வெறும் வகுப்பறைப் பாடம் அல்ல.

மாணவர் சங்கம், இளைஞர் சங்கம், தொழிற்சங்கம், விவசாயச் சங்கம்
போன்ற  வெகுமக்கள் அமைப்புகளில் இயங்கிக் கொண்டோ
அல்லது கட்சியில் இயங்கிக்கொண்டோ மார்க்சியத்தைக் கற்பதுதான் எளிதாகும். இதுதான் நடைமுறையோடு இணைத்துக் கற்பது என்பதன் பொருளாகும்.

தொழிற்சங்கத்தில் ஒரு கம்யூனிஸ்ட் எவ்வாறு 
வேலை செய்ய வேண்டும்என்பதை விளக்கிக் கூறும் நூல் 
லெனின் எழுதிய " என்ன செய்ய வேண்டும்?"
என்ற நூல். தொழிற்சங்க அரங்குகளில் வேலை செய்வோரால்
இந்நூலை எளிதில் கற்க முடியும்.ஏனெனில் அவர்களின் நடைமுறை
கற்பதை எளிதாக்குகிறது.

உரையாடலின் போக்கில் நான் தெரிவித்த கருத்துக்கள் எதுவும் அவர்களை அசைக்கவில்லை என்பது தெரிந்தது.

படிப்பை முடித்த மாணவனுக்குப் பட்டத்தை வழங்குவதுடன்
பல்கலைகழகத்தின் வேலை முடிந்து விடும். ஆனால் மார்க்சியக் கல்வியை வழங்கிவிட்டு ஒதுங்கிக் கொள்வதற்கு, கம்யூனிஸ்ட் கட்சிகள்
பல்கலைக்கழகங்கள் அல்ல. கம்யூனிஸ்ட் கட்சிகள் மக்களுக்கு
மார்க்சியக் கல்வி அளிப்பதன் நோக்கமே அவர்களை மார்க்சியர்கள் ஆக்குவதற்குத்தான்.

மார்க்சியம் பயில்வதே அதைப்  பிரயோகிப்பதற்குத்தான்.
பிரயோகிக்க விரும்பாதவன் மார்க்சியம் பயில்வதற்கான உரிமையற்றவன் ஆகிறான்.மருத்துவப் படிப்பு முடித்த ஒருவன் மக்களுக்கு மருத்துவம் செய்ய வேண்டும்; மருத்துவம் செய்ய விரும்பாதவனுக்கு மருத்துவப் படிப்பு ஏன்?

மார்க்சியம் என்பது சமூகத்தை முற்றிலுமாக மாற்றி அமைப்பதற்கான தத்துவம். எனவே சமூகத்தை மாற்றி அமைக்க விரும்பும் எவர் ஒருவரும் மார்க்சியத்தைப் பயின்றாக  வேண்டும் என்பதும், அதுபோலவே மார்க்சியத்தைப் பயின்ற எவர் ஒருவரும் சமூக மாற்றத்துக்குத் தன்னை அர்ப்பணிக்க வேண்டும் என்பதும் தெளிவு. 
வேறு சொற்களில் கூறுவதாயின்,
வெறும் கல்வி சார்ந்த நோக்கில் மட்டும் (purely on academic interest )
மார்க்சியத்தைப் பயில்வதும் பயிற்றுவிப்பதும் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு ஏற்புடைத்தனவாக இல்லை.

இதுதான் இந்தியச் சூழலில் மார்க்சியக் கல்வி பெறுதலின் நிலை.
ஆனால் மேலை ஐரோப்பியச் சூழலில் இத்தகைய தடைகள் எதுவும் இல்லை.
விரும்பும் எவரும் மார்க்சியத்தை எளிதில் கற்க முடியும். கம்யூனிஸ்ட் கட்சிகளைச் சார்ந்து இராமலேயே எவர் ஒருவரும் அங்கு மார்க்சியத்தைக் கற்க முடியும். கற்பதற்கான தடைகள் ஏதுமற்ற சமூகச் சூழல் அங்கு  மார்க்ஸ் எங்கல்ஸ் காலம் தொட்டு இயல்பாகவே நிலவுகிறது . மார்க்சியம் பிறந்ததே ஐரோப்பாவில்தான்  என்பதையும் இங்கு நினைவு கூர  வேண்டும்.

தொடர்ந்து நான் அளித்த விளக்கங்கள் அவர்களை சலனப் படுத்தவில்லை.
இணைய உலகம் என்று ஒன்று இருப்பதையே நான் மறந்து விட்டுப் பேசுவதாக அவர்கள் என் மீது ஆதங்கப் பட்டனர். எனவே எனது பதிலின்  சரித்தன்மை குறித்தும், காலச் சூழலோடு என் பதில் பொருந்தி நிற்கிறதா என்பது குறித்தும் ஆராயத் தலைப் பட்டேன்.

ஆராய்ந்து பார்க்கும்போது புதிய வெளிச்சம் தெரிந்தது.
இளைஞர்களின் ஆதங்கம் நியாயமானதே என்று தெரிய வந்தது. 
வரலாற்றை கி.மு , கி.பி என்று பிரிப்பதைப்போல்,
இ.மு, இ.பி (இணையத்துக்கு முன், இணையத்துக்குப் பின்)
என்றும் பிரிக்க வேண்டும் என்பது புலனாகியது. 


சமகாலத் தமிழ்ச் சூழலும் இன்று தலைகீழாக மாறிப் போயிருக்கிறது  
என்பது வெளிப்படை.காரணம் இணையம்.  ஒரு சராசரி வாசகன் மார்க்சியத்தைக் கற்றுக் கொள்வதற்கு இருந்த தடைகள் யாவும் இன்று 
தகர்ந்து விட்டன.

உற்பத்திக் கருவிகளின் வளர்ச்சியின் போக்கில், இன்டர்நெட் எனப்படும் இணையத்தின் வருகை மூடப்பட்டிருந்த எல்லாக் கதவுகளையும் திறந்து விட்டது. வலைப்பூக்கள் ( BLOGS ),  முகநூல்கள் என்று விரியும் இணையத்தின் வளர்ச்சி எட்டாக்கனியாக இருந்த மார்க்சியக் கல்வியை
கைத்தல நிறைகனியாக ஆக்கி விட்டது.

பத்து ரூபாய் செலவில் இணையதள வசதிகள் தமிழ் வாசகனுக்கு 
இன்று கிட்டுகின்றன. 
காட்டாங்கொளத்தூரில் தன வீட்டில் இருந்தபடியே,
இணையம் மூலம் பிரான்சு நாட்டின் மார்க்சியப் பேராசிரியருடன் 
உள்ளூர் மாணவன் விவாதிக்க இயலும்.
"ஸ்கைப்" மூலம் குறைந்த செலவில் மணிக்கணக்காக வெளிநாட்டு மார்க்சியருடன் உரையாட முடியும்.
படித்தல்-சிந்தித்தல்- விவாதித்தல் என்ற முறைமையில், விவாதித்தலுக்கான வாய்ப்புகளை  இணையம் அமுதசுரபியாய் அள்ளித் தருகிறது.மார்க்சிய விவாதக் குழுக்கள் இன்று இணையம் எங்கணும் நிறைந்துள்ளன.

மார்க்சிய ஆசான்களின் மூலநூல்கள் முதல் , அனைத்து நாடுகளின் கம்யூனிஸ்ட் கட்சிகளின் அரிய ஆவணங்கள் வரை இணையத்தில் எளிதில் கிடைக்கின்றன.
மேலும் இயங்கியல் பொருள்முதல்வாதம் என்னும் 
மார்க்சியத்தின் தத்துவஞானம் ( philosophy ) பலராலும் பயிலப்படுகிறது.
மார்க்சியர் அல்லாத நாத்திகர் பலரும் இதுவே மிகச் சிறந்த "கடவுள் மறுப்புத்தத்துவம்" என்று உணர்ந்து அதைப் பயில்கின்றனர்.
இதன் விளைவாக 
மார்க்சியருக்கு மட்டுமே மார்க்சியக் கல்வி என்ற நிலை மாறி, 
அது அனைவருக்குமானதாக விரிந்து வருகிறது.
  
ஒரு காலத்தில் கணினிகளை மூர்க்கத் தனமாக எதிர்த்த 
"இடதுசாரி" முழுமூடர்கள் அனைவரும், இன்று வேறு எவரையும் விட கணினியைப் பயன்படுத்துவதில்  முன்னணியில்  உள்ளனர்.
இணைய தளங்களில் அமைப்பு நடத்திக் கொண்டும், 
அமைப்பின் பிரச்சாரத்துக்கு இணையத்தை மட்டுமே நம்பிக் கொண்டும் 
இருக்கும் "இடதுசாரி"கள் இன்று தமிழ்நாட்டில் ஏராளம்.

"எங்கள் கட்டுரைக்கு நூறு பின்னூட்டங்கள் வருகின்றன" என்றும்
"எங்களின் இணைய தளத்தைப் பின்பற்றுவோர் ஆயிரக் கணக்கில்" என்றும் குட்டி முதலாளித்துவப் பெருமிதம் கொள்ளும் "இடதுசாரிகளை" நாளும் நாம் சந்தித்து வருகிறோம்.

புற்றீசல் போல் பெருகும் வலைப்பதிவர்கள் ( blog writers ),
எழுதப்பட்ட எந்த ஒன்றுக்கும் பின்னூட்டம் இடுவதையே குலத்தொழிலாகக் கொண்டு, 
பல்வேறு போலிப் பெயர்களிலும் போலி மின்னஞ்சல் 
முகவரிகளிலும் தங்களின் முகத்தை மறைத்து கொண்டு 
முக்காட்டுடன் திரியும் பின்னூட்டக்காரர்கள் இன்ன பிறர் 
இணையத்தில் போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்துகிறார்கள். 

மாற்றம் ஒன்றே மாறாததாய், அனைத்தும் மாறி வரும் இச்சூழலில்,
          " எங்கள் அமைப்பில் முழுநேர  ஊழியர்கள் மட்டுமே 
            மார்க்சிய வகுப்பு எடுப்பார்கள்; மற்றவர்களை 
            வகுப்பெடுக்க நாங்கள் அனுமதிப்பதில்லை"
என்றார் பெருமிதம் பொங்க  ஒரு கற்கால இடதுசாரி. 


மார்க்சியம் என்பது தங்களின் முந்தியில் முடிந்து வைத்திருக்கும் 
காரச்சேவு என்று கருதுகிறார்கள் இந்தக் கோமாளிகள். ஓதப்படும் 
வேதம் சூத்திரனின் காதில் விழுந்து விடக்கூடாது என்று 
வேதத்தை மறைத்து வைத்த பார்ப்பனப் புரோகிதர்களின் வாரிசுகள் 
இவர்கள். 

முழுநேர ஊழியர்களோ மற்றவர்களோ எவர் வகுப்பு எடுத்தாலும்,
அவர்கள் சொல்லித்தரும் மார்க்சியத்தின் தரம் 
நர்சரி வகுப்புகளின் "பா பா பிளாக் ஷீப், ஹாவ் யூ எனி  உல்?"
என்பதற்கு மேல் துளியும் இல்லை என்பதே யதார்த்தம்.   
"மார்க்சியம் எங்களின் தனியுடைமை",  "அதைக் கற்றுக் கொடுப்பது 
எங்களின் பிறப்புரிமை" என்று பிதற்றித் திரியும் இந்த மார்க்சியப்  புரோகிதர்களைப்  புறந்த்தள்ளி விட்டு, மார்க்சிய ஆர்வலர்கள் நாளும் கற்றுக் கொண்டுதான் இருக்கிறார்கள் 
மார்க்சியத்தை இணையத்தின் வழியாக!

***********************************************************************************


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக