வியாழன், 17 ஆகஸ்ட், 2023

எம்ஜியார் நடித்த ஆயிரத்தில் ஒருவன் படம் 
தமிழகத்தில் அடிமைமுறை இருந்ததற்குச் சான்றா?
-------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம் 
----------------------------------------------------------------
மானுட வரலாற்றில் ஐரோப்பாவில் நிலவிய அடிமைச் 
சமூகம் குறித்து மிகப் பெருமளவுக்கு ஆதாரங்கள் 
உள்ளன. எனினும் அடிமை முறையின் தோற்றம் 
(origin) எப்போது என்பதைப்பொறுத்த நினைவுகள்  
மானுட வரலாற்றில் இல்லை.

ஏதன்ஸ், ரோம் ஆகிய இடங்களில் பெருமளவு 
அடிமைகள் இருந்தமைக்கு சான்றுகள் 
அபரிமிதமாக உள்ளன.

அடிமை என்பவன் கண்டிப்பாக ஒரு எஜமானனுக்குச் 
சொந்தமாக இருக்க வேண்டும். ஒரு அடிமை என்பவன் 
ஒரு ஆண்டையின் உடைமை. ஸ்கூட்டர், கார் 
போன்றவை ஒருவருக்குச் சொந்தமாக இருப்பது போல 
அடிமையும் ஒருவரின் உடைமையாக இருக்க வேண்டும்.
எவர் ஒருவருக்கும் சொந்தமாக இல்லாமல் 
இருப்பவன் சுதந்திர மனிதன். ஆனால் அடிமை 
சுதந்திரம் அற்றவன்.அவன் எவருக்கேனும்
சொந்தமான ஒரு பொருளாக இருந்தே தீர வேண்டும்.   
இதுதான் அடிமையின் இலக்கணம்.   

ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் அடிமைகள் 
நிறைந்து இருந்தனர். கிமு முதல் நூற்றாண்டில்
ரோமாபுரியை எதிர்த்து அடிமைகள் பெருங்கலகத்தில் 
ஈடுபட்டனர். கிளாடியேட்டரான ஸ்பார்ட்டகஸ் என்பவர் 
அடிமைகளின் கிளர்ச்சிக்குத் தலைமை தாங்கினார் 
என்பதெல்லாம் ஐரோப்பாவின் ஏடறிந்த வரலாறு.

தமிழ்நாட்டில் அடிமைமுறை இருந்ததாகச் சிலர் 
சொல்லிக்கொண்டு திரிகிறார்கள். எம்ஜியார் 
நடித்த ஆயிரத்தில் ஒருவன் படத்தை மீண்டும் 
மீண்டும் பார்க்கும் பழக்கமுடைய இவர்கள், அதில் 
அடிமைகள் இருப்பது பற்றிய காட்சிகளைப்
பார்த்து விட்டு தமிழகத்தில் அடிமை முறை 
இருந்ததாக முடிவுக்கு வருகிறார்கள். மேலும்  
அதே எம்ஜிஆர் நடித்த அடிமைப்பெண் படத்தை
கூடுதல் சான்றாகக் காட்டுகிறார்கள்.

அவர்களைச் சொல்லிக் குற்றமில்லை. அவர்களால் 
அவர்களின் அறிவு வளர்ச்சிக்கு ஏற்றவாறுதான் 
சிந்திக்க இயலும். 

ஐரோப்பாவில் அடிமை முறை இருந்ததால் 
தமிழ்நாட்டிலும் அடிமை முறை இருந்திருக்க 
வேண்டும் என்று சொல்லும் இவர்கள்
ஐரோப்பாவில் ஸ்பார்ட்டகஸ் தலைமையில் 
அடிமைகள் கிளர்ச்சி செய்தார்களே, அது போல் 
தமிழகத்தில் யார் தலைமையில் அடிமைகள் 
கிளர்ச்சி செய்தனர் என்றும் சொல்ல வேண்டும் 
அல்லவா! சொல்ல மாட்டார்கள்! சொல்ல இயலாது!
காரணம் இங்கு அடிமைமுறை இல்லை. அடிமைமுறை 
ஒரு உற்பத்தி முறையாக இல்லை. இங்கு அடிமைச் 
சமூகம் இருந்திருக்கவில்லை.
*********************************************  
   



       

  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக