செவ்வாய், 8 ஜூலை, 2014

மூலதன வகுப்புகளும்
பித்துக்குளி முருகதாசுகளும்!
------------------------------------------------------------------------------------------
பி. இளங்கோ சுப்பிரமணியன்
---------------------------------------------------------------------------------------
முன்குறிப்பு: 1) சுமார் 150 ஆண்டுகளுக்கு முன்பு,
                           காரல் மார்க்ஸ் ஆக்கிய
                           தாஸ் காப்பிடல் என்ற நூலே
                           மூலதனம் என்று இங்கு
                           குறிப்பிடப் படுகிறது  

முன்குறிப்பு: 2) பித்துக்குளி முருகதாஸ் என்பவர்
                           1960களில் தமிழ்நாட்டில் பிரபலமாக
                            இருந்த முருக பக்திப் பாடகர்.

சென்னை நகரில் கடந்த சில ஆண்டுகளாக
மூலதன வகுப்புகள் நடைபெற்று வருகின்றன.
இருபதாம் நூற்றாண்டையே தலைகீழாகப்
புரட்டிப் போட்ட மூலதனம் நூலை, தமிழ் வாசகர்கள்
கற்பதற்கு உதவியாக இத்தகைய வகுப்புகள்
நடைபெற்று வருகின்றன.

கார் ஓட்டத் தெரிந்தவர்கள்,
ஓட்டத் தெரியாதவர்களுக்குக்  
கற்றுக் கொடுப்பது போல,
மூலதனத்தைக் கற்றவர்கள்
மற்றவர்களுக்குச் சொல்லிக்கொடுக்கும்
முயற்சியாகவே இவ்வகுப்புகள் அமைகின்றன.
கார் ஓட்டக் கற்றுக் கொடுப்பது என்ற உவமை
ஆகச் சிறந்த உவமையாகும். ஏனெனில்,
கற்றுக் கொடுப்பவர் என்னதான் சிறப்பாகக்
கற்றுக் கொடுத்தாலும், கற்றுக் கொண்டவர்தான்
காரை ஓட்ட வேண்டும்; சுயமாக ஓட்ட வேண்டும்.
அதுபோல, மூலதனத்தை வாசிப்பது எப்படி என்று
கற்றுக் கொடுக்கிறார்கள் இவ்வகுப்புகளில்.
கற்றுக்  கொள்பவர்கள்தாம் மூலதனத்தை
வாசிக்க வேண்டும்.ஒருவர் தாமே சுயமாக
மூலதனத்தை வாசிக்க, புரிந்துகொள்ள
வழி வகுப்பவை இவ்வகுப்புகள்.

கற்றலும் கற்பித்தலும்   உயர்ந்த செயல்பாடுகள்.
எனவே அந்த அடிப்படையில் (கற்றல்-கற்பித்தல் என்ற 
அடிப்படையில் ) இவ்வகுப்புகள்
வரவேற்கத் தகுந்தவை.

மூலதன வகுப்புகள் தொடக்கப் பள்ளி வகுப்புகள் அல்ல.
அவை முனைவர் பட்ட வகுப்புகள். அடிப்படை
மார்க்சியம், பொருளாதாரம் ஆகியவற்றில்
நன்கு தேர்ச்சி பெற்ற பிறகுதான் மூலதனத்தைக்
கற்க இயலும். மேலும் மூலதனம் ஒரு
இலக்கியமும் ஆகும்.மூலதனக் கல்வி
ஆங்கில ஐரோப்பிய இலக்கியங்களில்
ஒரு குறிப்பிட்ட அளவு தேர்ச்சியைக் கோருவது ஆகும்.

மார்க்ஸ் மிகச் சிறந்த இலக்கியச் சுவைஞர்
மட்டுமல்லர்; அவர் மிகச் சிறந்த
படைப்பிலக்கியவாதியும் ஆவார்.
மார்க்சின் மூலதனத்தில் சேக்ஸ்பியர்
வெகுவாக இடம் பெறுவார். ஜெர்மானியக் கவிஞர்
கதே, இத்தாலியக் கவிஞர் தாந்தே ஆகியோரின்
மேற்கோள்களும் மூலதனத்தில் வெகுவாக
இடம் பெற்றுள்ளன. தாந்தேயின்
"DIVINE COMEDY "யின் கவிதை வரிகள்
மூலதனத்தில் இடம் பெற்றுள்ளன.
மூலதனத்தைச் சிறப்பாகப் புரிந்து கொள்ளவும்
அதன் வாசிப்பு இன்பத்தை ( TEXTUAL PLEASURE )
நுகரவும் இலக்கியப் பயிற்சி அவசியம், குறிப்பாக
மறுமலர்ச்சிக் கால இலக்கியங்களில்.

மூலதனமும் தொல்காப்பியமும் 
---------------------------------------------- 
மூலதனத்தைத்  தொல்காப்பியத்துடன் 
ஒப்பிட முடியும்.இந்த வரியைப் படித்தவுடன் 
நுனிப்புல் வாசகர்கள்  துள்ளிக் குதிக்கலாம்.
தமிழ் இலக்கணம் கூறும் வடிவ உவமை, 
வண்ண உவமை, தொழில் உவமை, பண்பு உவமை 
ஆகியவற்றை அவர்களுக்குப் பரிந்துரைக்கிறேன்.

கற்றல், கற்பித்தல் மட்டுமின்றி,
தற்கால நடப்புடன் பொருந்துதல் 
என்பதிலும் மூலதனத்தையும் 
தொல்காப்பியத்தையும் ஒப்பிட முடியும்.
வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ் 
கூறும் நல்லுலகில் தொல்காப்பியம் கற்றவர்கள் 
வெகு சிலரே.தமிழ் அறிஞர்கள், ஆய்வு மாணவர்கள்,
தமிழ் இலக்கியத்தில் முதுகலை பயின்றவர்கள் 
என்று தொல்காப்பியம் பயின்ற  வட்டம் 
மிகவும் சுருங்கிய ஒன்று . தமிழ் நாட்டுப் பல்கலைக் 
கழகங்களில் முதுகலை வகுப்புகளின் 
பாடத்திட்டத்தில்தான் தொல்காப்பியம்   
இடம் பெற்றுள்ளது.இளங்கலை வகுப்பு வரை 
நன்னூல்தான்.( நன்னூல் என்பது பவணந்தி முனிவர் 
இயற்றிய இலக்கண நூல்).

சில ஆண்டுகளுக்கு முன் நடைபெற்ற கலைஞரின் 
தொல்காப்பியப் பூங்கா நூல் வெளியீட்டுக்கு 
நான் சென்றிருந்தேன்."ரோமாபுரிப் பாண்டியன்"
போன்றோ திருக்குறளுக்கான கலைஞர் உரை 
போன்றோ இருக்கும் என்று நம்பிப் பலரும் 
தொல்காப்பியப் பூங்கா நூலை வாங்கினர்.
அஃது ஓர் இலக்கண நூல் என்று அறிந்து 
அதை வாசிக்க இயலாமல் 
ஏமாற்றம் அடைந்தனர்.எனது தி.மு.க நண்பர்கள் 
சிலர் தாங்கள் வாங்கிய நூலை என்னிடம் 
ஒப்படைத்து விட்டனர்.ஒரு கட்டத்தில் என்னிடம்  
இப்படிப் பத்து நூல்கள் சேர்ந்து விட்டன.
    
நான் இளம்பூரணம், சேனாவரையம் 
வாயிலாகத் தொல்காப்பியம் கற்றவன்.
எனவே "கலைஞம்" எனக்குப் பெரிதாகப் 
பயன்படவில்லை. ( சேனாவரையரின் உரை   
சேனாவரையம் என்பதுபோல், கலைஞரின் 
உரை  கலைஞம் எனப்படும்.).முந்திய 
வாக்கியத்தின் மூலம் நான் எவ்விதத்திலும் 
கலைஞரின் மாண்பைக் குறைத்து விடவில்லை 
என்பதைப் பதிவு செய்கிறேன்.

"மியா இக மோ மதி இகும் சின்" என்னும் 
ஆவயின் ஆறும் முன்னிலை அசைச்சொல்"    
   (தொல், இடையியல், நூற்பா:759)
என்கிறது தொல்காப்பியம்.

"மியா இக மோ மதி அத்தை இத்தை 
வாழிய மாள   ஈயாள  முன்னிலை அசை"
என்கிறது நன்னூல். மொழி தொடர்ந்து 
இயங்கிக் கொண்டிருப்பது.எனவேதான் 
காப்பியமும் நன்னூலும் வேறுபடுகின்றன.
எனினும் இவை இரண்டும் கூறும் முன்னிலை 
அசைகள் எவையும் இன்று வழக்கில் இல்லை.
("காமம் செப்பாது கண்டது மொழிமோ" 
என்பதில் வரும் மோ என்பது முன்னிலை அசை) 

தமிழ் கற்ற அனைவரும் ஓரளவு 
நன்னூல் கற்றிருப்பது இயற்கை.ஆனால் 
தொல்காப்பியத்தின் நிலை அவ்வாறு அன்று.

"படை இயங்கு அரவம் பாக்கத்து விரிச்சி 
புடை கெடப் போகிய செலவே புடைகெட 
ஒற்றின் ஆகிய வேயே வேய்ப்புறம் 
முற்றின் ஆகிய புரத்திறை முற்றிய" 
...........................................................................
............................................................................
     (தொல் புறம் நூற்பா: 1007) 
என்றவாறு பதினான்கு துறைகளைக் கொண்ட 
வெட்சித்திணைக்குத் தொல்காப்பியம் கூறும் 
இலக்கணம் இன்று பொருந்துவது இல்லை.
(பகைவரின் பசுக்கூட்டங்களைக் கைப்பற்றும் 
செயல் குறித்துக் கூறுவது வெட்சித் திணை)

பெயரெச்சம் என்றால் என்ன?,
வினையெச்சம் என்றால் என்ன?,
ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சத்துக்குச்  
சான்று தருக என்றெல்லாம் தமிழ்நாட்டுப் 
படிப்பாளிகளைக் கேட்டால்  99 விழுக்காட்டினர் 
கால் வழியே கழிந்து விடுவர் என்பதை 
அனைவரும் அறிவோம்.இத்தகைய சூழலில் 
தொல்காப்பியத்தைக்  கற்பிப்பது என்பது 
பகீரதப் பிரயத்தனம் ( HERCULIAN  TASK )
அன்றி வேறென்ன?

இது போன்றதுதான் மூலதனத்தைக் 
கற்பிப்பதும். மூலதனத்தைக் கற்பிப்பதற்கும் 
கற்பதற்கும் பெரு முயற்சியும்  
கடும் உழைப்பும் தேவை.

அதேபோழ்து, மூலதனம் கற்றல்-கற்பித்தல் 
என்ற நிகழ்வின் ஊடாக ஒரு கேள்வி எழுகிறது;
அது பேருருவம் (விசுவரூபம்) கொள்கிறது 
150 ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்ட 
மூலதனம் இன்றைய சூழலுக்கு எவ்வாறு 
பொருந்தும்? என்பதே அக்கேள்வி.
HOW FAR IT IS RELEVANT TODAY? என்கிற கேள்வி 
எங்கும் வியாபித்து நிற்கிறது.

மூலதனம் என்பது முதலாளித்துவ சமூக 
அமைப்பின் தோற்றம், வளர்ச்சி,இயக்கம் 
ஆகியவற்றின் விதிகளைக் கூறும் நூல். 
அவ்வளவே! (JUST THAT'S ALL!) 
மூலதனத்தில் கூறியவண்ணம் இன்று 
உலகில் எந்த நாட்டிலும் முதலாளித்துவம் 
தோன்றி வளரப் போவதில்லை. ஏனெனில் 
முதலாளித்துவம் என்பது ஏகாதிபத்தியமாக 
மாறி விட்டது, வளர்ந்து விட்டது. இதைத் தொடர்ந்து 
இந்த யுகம் ஏகாதிபத்திய யுகம் என்று 
அழைக்கப் படுகிறது. இந்த யுகத்துக்குப் 
பொருத்தமான மார்க்சியமாக லெனினியம் 
பரிந்துரைக்கப் படுகிறது (PRESCRIBED).  

இச்சூழலில்  மூலதனத்தைக் கற்பது என்பது 
வெறுமனே ஒரு கல்வியியல் ஆர்வமாகச் 
(ACADEMIC INTEREST)  சுருங்கி விடுகிறது. 
ஆகவே மூலதனத்தைக் கற்பிப்பதும் கற்பதும் 
செயலூக்கமிக்க ஒரு பெருத்த மார்க்சியச் 
செயல்பாட்டுக்கு வித்திடும் என்று கருதுவது 
பேதைமையாகவே முடியும்.

மார்க்சியக் கல்வியைப் பொறுத்த மட்டில் 
முன்னுரிமை அளிக்க வேண்டிய விஷயங்கள் 
ஆயிரம் இருக்கின்றன.முருக பக்தர்களைப் 
போல் மார்க்சியர்கள் நடந்துகொள்ள முடியாது. 
மார்க்சின் புகழ் பாடுவது மட்டுமே மார்க்சியம் அல்ல.

"கிடக்கிற வேலை கிடக்கட்டும்,
கிழவியைத் தூக்கி மணையில் வை"
என்ற கதையாக மூலதன போதனை 
முக்கியத்துவம் பெறுவது ஏன்?   
இதற்கான சமூக அவசியம் என்ன?
அழுத்தமாக முன்வைக்கப்படும் இக்கேவிகள் 
நியாயமான பதிலைக் கோருகின்றன.

இந்நிலையில் மார்க்சியக் கல்வி குறித்து 
மூத்த மார்க்சிய அறிஞர் திரு. கோவை ஞானி 
கூறுவதைப் பார்ப்பது இங்கு .மிகவும் பொருத்தமானது.

"மார்க்சியம் கற்போம்: தேடலோடும் 
திறனாய்வோடும்"  என்ற கட்டுரையில் 
அவர் கூறுவதாவது:-
(மார்க்சியத்துக்கு  அழிவில்லை என்ற நூல்,
புதுப்புனல் வெளியீடு; டிசம்பர் 2001)

"மார்க்சியம் கற்பதற்கு எளிய வழி என 
ஒன்று இல்லை. தேடலோடும் திறனாய்வோடும்தான் 
மார்க்சியத்தைக் கற்க முடியும்; செரித்துக் 
கொள்ள முடியும்.மார்க்சியம் கற்பதற்கு 
எளிய முறையில் எழுதப்பட்ட பாடநூல்கள் 
பயன்பட முடியாது.பன்முகப் பரிமாணங்களை 
உடைய மார்க்சியத்தை ஒற்றைப் பரிமாணமாகக் 
குறைத்துச் சுருக்கித் தருகிற பாடநூல் கல்வி 
ஆபத்தாகவும் முடியும்.சுருக்கமாக வகுப்பறைகளில் 
மார்க்சியத்தைக் கற்கவும் முடியாது."

திரு ஞானி தொடர்ந்து கூறுகிறார்: 
" நமக்கான மார்க்சியத்தை நாம் தேடித் 
திறனாய்வோடு கற்பதற்கு நாம் 
சீரிய முயற்சி மேற்கொள்ள வேண்டும்."

திரு ஞானி கூறுவதில் இரண்டு விஷயங்கள் 
முக்கியமானவை.

ஒன்று: தேடல்.நமக்குப் பொருத்தமான  
மார்க்சியத்தை நாம் தேடிப்  பிடித்துப் படிப்பது.
(இந்தியச் சூழலில் மாவோவை ஆழ்ந்து கற்பது 
என்பது இதன் பொருள்).

இரண்டு; திறனாய்வோடு கற்பது.
பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் 
பற்றிப் படிக்கும்போது, பல்வேறு 
நாடுகளின் கம்யூனிஸ்ட் கட்சிகள் 
இக்கோட்பாட்டை நிராகரிப்பது ஏன் என்ற 
கேள்விக்கான  விடையுடன் படிப்பது.
சோஷலிசம் பற்றிப் படிக்கும்போது,
ரஷ்யாவில் லெனினும் ஸ்டாலினும் 
கட்டியது சோஷலிசம் அல்ல, 
முதலாளித்துவமே என்ற கணிப்பின் 
மெய்மையை ஆராயும் நோக்குடன் படிப்பது.

"ஆராய்ந்து அமைவுடைய கற்கவே"
என்கிறது தமிழ் நீதிநூல். இதைத்தான்
திரு ஞானியும் கூறுகிறார். நானும் அதை 
வழிமொழிகிறேன்.

பின்குறிப்பு:
---------------------- 
இக்கட்டுரை பெருமுயற்சி எடுத்து     
மூலதனத்தைக் கற்பிக்கும் 
தோழர்களுக்கு எவ்விதத்திலும் 
பங்கமாக அமைந்து விடக்கூடாது 
என்ற கவனத்துடன் எழுதப் பட்டது.
போதகர்கள், ஆசிரியர்கள், கற்பிப்பவர்கள் 
ஆகியோர் மீது பெருமதிப்புக் கொண்டிருப்பது 
என்பது என்னுடைய மரபணுக்களிலேயே 
அமைந்த ஒன்று. எனவே, மூலதனம் 
கற்பிக்கும் ஆசிரியர்கள் அனைவரும் 
இக்கட்டுரை அவர்களுக்குப் பங்கம் 
சேர்க்கவில்லை என்று தெளிவார்கள் 
என்று நம்புகிறேன்.

******************************************************  

  



வியாழன், 3 ஜூலை, 2014

ஸ்டாலின் காலத்தில் 
ரஷ்யாவில் நிகழ்ந்த படுகொலைகள் பற்றிக் கூறுகிறார் மூத்த கம்யூனிஸ்ட் எழுத்தாளர்!
----------------------------------------------------------------------  

----------------------------------------------------------------------------------------------
"ஒரு தத்துவத்தைப் பரிசீலிக்கும்போது 
அதன்மீது குறைந்தபட்சப் பரிவு 
கொண்டிருந்தால்தான், அதன் நல்ல 
அம்சங்கள் புலப்படும்"  என்கிறார் அறிஞர் 
பெர்ட்ரண்ட்  ரஸ்ஸல்.

ரஷ்ய அதிபர் மறைந்த ஸ்டாலின் குறித்து 
எதிர்மறையான பல்வேறு விமர்சனங்கள் 
எழுந்துள்ளன. இவற்றுள் பல கம்யூனிச எதிர்ப்பு 
எழுத்தாளர்கள் கூறியவை.இவற்றை இகழ்ச்சியுடன் 
நிராகரித்து விட்டு, கம்யூனிசத்தின்பால் 
பரிவு கொண்ட எழுத்தாளர்களின் கருத்துகளை 
மட்டும் பரிசீலிப்போம்.

தமிழ் வாசகர்களுக்கு நன்கு அறிமுகமான 
மூத்த பத்திரிகையாளரும், மார்க்சியக் கம்யூனிஸ்ட் 
கட்சியில் முழுநேர ஊழியராகச் சிலகாலம் 
பணியாற்றியவரும், பழமைப்பிடிப்புள்ள
(கன்சேர்வேட்டிவ்) மார்க்சியவாதியாக 
இன்றும் இருப்பவராகவும் உள்ள 
திரு. இரா. ஜவஹர் ஒரு முக்கியமான நூல் 
எழுதிஉள்ளார்.

"கம்யூனிசம்: நேற்று, இன்று, நாளை"  என்ற 
அந்நூல்( முதல் பதிப்பு)  டிசம்பர் 2003 இல் 
நக்கீரன் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.
448 பக்கங்களைக் கொண்டது அந்நூல்.
இந்நூலில் பகுதி ஒன்றில்,ரஷ்யாவில் 
நடந்தது என்ன என்ற தலைப்பிலான 
எட்டாவது அத்தியாயத்தில்,
"ஸ்டாலின் நல்லவரா கெட்டவரா"
என்ற கட்டுரையில் இருந்து 
நூலாசிரியர் திரு இரா ஜவஹர் அவர்களின்  
ஸ்டாலின் குறித்த கணிப்பைக் கீழே 
படியுங்கள்: (பக்கங்கள்: 160, 161).

"ஆனால் ஸ்டாலினோ, 
மக்கள் மீது அரசின் சர்வாதிகாரம்,
அரசின் மீது கட்சியின் சர்வாதிகாரம்,
கட்சி மீது தலைமையின் சர்வாதிகாரம்,
தலைமை மீது தனிநபருடைய (ஸ்டாலினின்)
சர்வாதிகாரம்  என்ற விபரீத நிலையை 
உருவாக்கி விட்டார்.

மாற்றுக் கருத்துச் சொன்னவர்களும்,
மாற்றுக் கருத்தை வைத்திருப்பவர்கள் என்று 
சந்தேகிக்கப் பட்டவர்களும் கூட 
ஏராளமானோர் கொல்லப்பட்டார்கள்;
சிறையிடப்பட்டார்கள்; சித்திரவதை 
செய்யப்பட்டார்கள்.

கட்சியின் மாநாடு 1934ஆம் ஆண்டில் 
நடந்தபோது, அதில் தேர்ந்தெடுக்கப்பட்ட 
மத்தியக்குழு உறுப்பினர்கள் மொத்தம் 139 பேர்.
இதில் 98 பேர் (அதாவது எழுபது சதவீதம் பேர்)
உளவாளி, துரோகி, மக்கள் விரோதி என்றெல்லாம் பட்டம் சூட்டப்பட்டு, 
"விசாரணை" நடத்தப்பட்டு 
சுட்டுக் கொல்லப்பட்டார்கள்.

அதேபோல் இந்த மாநாட்டில் பிரதிநிதிகளாகக் 
கலந்து கொண்ட 1966 பேரில் 1108 பேர் 
கைது செய்யப்பட்டுப் பெரும்பாலோர் 
கொல்லப்பட்டார்கள்.இந்தச் சர்வாதிகார 
ஒடுக்குமுறை அனைத்து மட்டங்களுக்கும் 
பரவியது."

"மாமன் அடிச்சானோ மல்லிகைப் பூச்செண்டாலே"
என்பதுபோல் மிக மிக மென்மையாக 
நூலாசிரியர் ஸ்டாலினைக் கண்டித்த போதிலும்,
அவர் தந்திருக்கும் விவரங்களில் 
எத்தகைய மென்மையும் இல்லை.


ஸ்டாலின் நடத்திய  படுகொலைகளின் 
அழுத்தமான சாட்சியங்களாக 
இரா ஜவஹரின் எழுத்துக்கள் அமைந்துள்ளன.
கடிது ஓச்சி மெல்ல எறிவதை 
நாம் கண்டு இருக்கிறோம்.
ஆனால் திரு ஜவஹரோ,
மெல்ல ஓச்சிக் கடிது எறிந்துள்ளார்.    

உண்மைகள் சுடுகின்றன.
"WORSHIPPING THE FALSE GODS" 
என்ற மயக்கம் என்று நீங்கும்?         

**************************************************************

வெள்ளி, 6 ஜூன், 2014

மார்க்சிய வாசகர்களுக்காக!
--------------------------------------------------- 

        கருத்துக்களால் கனம் பெற்றதும்

                 மொழிநடையால் வளம் பெற்றதும்

                        இயங்கியல் தத்துவத்தைத்
                                     
                                 திறனாய்வு செய்வதுமான 

                                       இக்கட்டுரை 

                                                உண்மையில் ஒரு கட்டுரை                                                           அன்று !

                                                               கருத்தாயுதம்!

பின்னூட்டங்கள் 
வரவேற்கப் படுகின்றன!


********************** பதிப்பாசிரியர்*****************************
அறிவியலுக்கு எதிரானது இயக்கவியல்
என்பதற்கான நிரூபணம்.
--------------------------------------------------------
 DIELECTICS is UNSCIENTIFIC AND WRONG:
HERE is THE PROOF!
--------------------------------------------------------
பி.இளங்கோ சுப்பிரமணியன்
--------------------------------------------------------
இயக்கவியல் (அல்லது இயங்கியல் ,
ஆங்கிலத்தில் DIELECTICS )என்பது தத்துவ ஞானத்தின்
ஒரு கூறு. எனினும், இயங்கியல் என்பது தத்துவம் அல்ல.
இயங்கியல் என்பது உண்மையைக் கண்டறியும் ஒரு முறை.
வாதம், எதிர்வாதம் இவற்றின் அடிப்படையில்
உண்மையைக் கண்டறியும் முறையே இயங்கியல்.

பண்டைய கிரேக்க அறிஞர்கள் உண்மையைக் கண்டறிவதற்காக
உருவாக்கிய ஒரு முறைதான் இயங்கியல்.
வேறுபட்ட  பல கருத்துகளை ஒன்றோடு ஒன்று முட்டி
மோத விட்டு, அவற்றின் மீது வாதமும் எதிர்வாதமும்
புரிந்தால் இறுதியில் உண்மை கிடைக்கும் என்பது
கிரேக்க அறிஞர்களின் கொள்கை; நடைமுறை.

ஆக இயங்கியலின் பிறப்பு பண்டைய கிரேக்க .அறிஞர்களுடன்
தொடர்புடையது. மேலும் இயங்கியல் என்பது தொன்மையானது.
அது நவீன அறிவியலின் முறை அல்ல.

மார்க்சியத் தத்துவம் முழுவதுமே இயங்கியலை
அடிப்படையாகக் கொண்டது. மார்க்சியத்தின் தத்துவஞானப்
பகுதியான பொருள்முதல்வாதம் இயங்கியலை
அடிப்படையாகக் கொண்டு, இயங்கியல் பொருள்முதல்வாதம்
என்று பெயர் பெறுகிறது.

இந்தக் கட்டுரையானது இயங்கியல் என்பது  தவறானது,
அறிவியலுக்கு எதிரானது என்ற பொருளில் அமைந்தது.
பொருள்முதல்வாதம் தவறானது என்றோ
மார்க்சியம் தவறானது என்றோ இக்கட்டுரை கூறவில்லை
என்பதை வாசகர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

பொருள் முதல்வாதம்  சரியானது என்று நிரூபிக்கப்பட்டு
பல்லாயிரம் ஆண்டுகள் ஆகிவிட்டன.இதில் மாற்றுக்
கருத்துக்கு இடமே இல்லை.

இயங்கியல் பொருள்முதல்வாதம் என்பதில்,
இயங்கியல் என்பது தவறானது;
பொருள்முதல்வாதம் என்பது சரியானது.
எனவே, பொருள்முதல்வாதமானது
இயங்கியலைக் கைவிட்டு விட்டு அறிவியலை
கைக்கொள்ள வேண்டும். அப்போது, இயங்கியல்
பொருள்முதல்வாதம் என்பது
அறிவியல் பொருள்முதல்வாதமாக மாறும்.

இயங்கியல் தவறானது என்பதால் மார்க்சியவாதிகள்
யாரும் பதற வேண்டியதில்லை. ஏனெனில், இயங்கியல்
என்பது மார்க்ஸ்-எங்கல்ஸ் உருவாக்கிய முறை அல்ல.
மார்க்சும் எங்கல்சும் தம் சொந்த சிந்தனையில்
இயங்கியலை உருவாக்கவில்லை. இரண்டாயிரம்
ஆண்டுகளுக்கு முன்பு கிரேக்கத்தில் தோன்றி,
சாக்ரட்டீஸ் முதலான அறிஞர்களால் வளர்க்கப்பட்டு
ஹெக்கல்  என்ற ஜெர்மன் தத்துவ அறிஞரால்
செம்மைப்படுத்தப் பட்ட இயங்கியலை மார்க்சும் எங்கல்சும்
அப்படியே எடுத்து பொருள்முதல்வாதத்துக்குப் பயன்படுத்தினர்.

கருத்துமுதல்வாதத்தை விளக்க ஹெக்கல்
இயங்கியலைப் பயன்படுத்தினார்.
பொருள்முதல்வாதத்தை விளக்க மார்க்சும் எங்கல்சும் இயங்கியலைப் பயன்படுத்தினர். இயங்கியல் ஒன்றுதான்;
பயன்பாட்டில்தான் வேறுபாடு.

ஹெக்கல் அவர்களின் இயங்கியலானது
கருத்துமுதல்வாதத்தை விளக்க முற்படும்
ஒரு கருவி அல்லது முறை.
சிந்தனை எவ்வாறு தோன்றியது, எவ்வாறு வளர்ந்தது,
எவ்வாறு இயங்குகிறது என்பதை விளக்கப்
பயன்பட்ட ஒரு முறை.இந்த முறையை மார்க்சும்
எங்கல்சும் தவறாகப் பயன்படுத்தினர்( MISUSED).
பொருள் எவ்வாறு தோன்றியது, எவ்வாறு வளர்ந்தது,
எவ்வாறு இயங்குகிறது என்பதை விளக்க மார்க்சும்
எங்கல்சும் இயங்கியலைப் பயன்படுத்தினர்.பொருளின்
இயக்கத்தை விளக்க இயங்கியல் பயன்படாது.
அதற்கு அறிவியல் மட்டுமே பயன்படும். எனவே,
பொருள்முதல்வாதத்தில் உள்ள இயங்கியலை
அகற்றிவிட்டு, அதனிடத்தில் அறிவியலை வைக்க வேண்டும்.

இயங்கியல் தவறு என்பதால், பொருள்முதல்வாதம் தவறு
என்று பொருள்படாது.பொருள்முதல்வாதத்தின் சரித்தன்மை
அனந்த கோடி முறை நிரூபிக்கப்பட்ட ஒன்று.

மேலும் ஒன்று.இயங்கியலுக்கு எதிரானது
மாறாநிலைத்தத்துவம்  அல்லது இயங்காநிலைத்
தத்துவம் ( METAPHYSICAL ). இயங்கியல் தவறானது
என்பதால், இயங்காநிலைத் தத்துவம் சரியானது  
என்று பொருள் அல்ல.இயங்காநிலைத் தத்துவம்
முற்றிலும் தவறானது, முட்டாள்தனமானது என்பது
infinity times நிரூபிக்கப்பட்ட ஒன்று.

சொல்ல வந்த விஷயத்தை நேரடியாகச் சொல்வது
என்பது தமிழ் வாசக உலகில் இயலாத ஒன்று.
குறிப்பாக, மார்க்சியவாதிகள் என்போரில்
மார்க்சியத்தைக் குருட்டுப் பாடமாகக் "கற்றவர்களும்"
நுனிப்புல் மேய்ந்தவர்களும் மட்டுமே அதிகம்;
மிக மிக அதிகம். தங்களின் மூளையில் தடைகளை
ஏற்படுத்தி வைத்திருக்கும் இவர்களிடம் ஒரு புதிய
விஷயத்தை, சரியான விஷயத்தை எளிதில் சொல்லி
விட முடியாது.ஆகவே, பீடிகைகள் தேவைப் படுகின்றன.

ஆக, தொடர்புடைய அனைத்திலும், இக்கட்டுரை
இயங்கியலை மட்டுமே ஆராய்கிறது. இயங்கியல்
தவறானது என்பதை நிரூபிக்கிறது. எவ்வாறு என்பதை
விளக்கமாகப் பார்ப்போம்.


இயங்கியலின் விதிகள்:
------------------------------------------  
ஹெக்கலின் இயங்கியலானது, 
"கருத்து-எதிர்க்கருத்து-புதுக்கருத்து"
(  THESIS -ANTITHESIS-SYNTHESIS ) என்னும் 
சாராம்சத்தைக் கொண்டது.
ஹெக்கலின்  இயங்கியல் மூன்று விதிகளைக் கொண்டது.
1) எதிர்மறைகளின்  ஒற்றுமையும் போராட்டமும் 
2) அளவு மாற்றம் பண்பு மாற்றமாக ஆவது 
3) நிலைமறுப்பின் நிலைமறுப்பு .

THE LAWS OF HEGELIAN DIELECTICS:
----------------------------------------------------------  
1)THE LAW OF THE INTERPENETRATION OF OPPOSITES
2)THE LAW OF TRANSFORMATION OF QUANTITY INTO QUALITY
3)THE LAW OF NEGATION OF NEGATION.

ஹெக்கலின் இந்த மூன்று விதிகளையும் 
மார்க்சும் எங்கல்சும் அப்படியே எடுத்துக் கொண்டனர்.
( நுனிப்புல் வாசகர்கள் கருதுவது போல, இந்த 
விதிகள் மார்க்ஸ்-எங்கல்சின் கண்டுபிடிப்பு அல்ல.) 
ஹெக்கல் மட்டுமின்றி, பண்டைய கிரேக்கத் தத்துவஞானி 
ஹெராக்ளிடஸ் என்பவரின் கருத்துககளையும் மார்க்சியம் எடுத்தாண்டுள்ளது.ஹீராக்ளிடசின் கருத்துக்களைப் 
பற்றி   " இயக்கவியல் பொருள்முதல்வாதத்தின் 
மூல அம்சங்களைப் பற்றிய ஒரு அருமையான 
விரிவுரை இது" என்று லெனின் குறிப்பிட்டுள்ளார்.
( பார்க்க: தத்துவத்தைப் பற்றிய குறிப்புப் புத்தகங்கள்).

லெனின் கூறுகிறார்:
"சரியான பொருளில் கூற வேண்டுமென்றால்,
இயக்கவியல் எனப்படுவது பொருட்களின் உள்ளே 
இருக்கும் சாராம்சத்தில் பொதிந்துள்ள முரண்பாடுகளை 
ஆராய்வதுதான்."
(பார்க்க: தத்துவத்தைப் பற்றிய குறிப்புப் புத்தகங்கள்)

லெனின் மேலும் கூறுகிறார்:
" வளர்ச்சி என்பது எதிர்மறைகளிடையே நடக்கும் 
போராட்டத்தையே குறிக்கிறது."

ஆக, சாக்ரட்டீஸ் காலம் தொடங்கி ஹெக்கல் காலம் வரை 
இயங்கியல் தொடர்ந்து வளர்ச்சி அடைந்துள்ளது. 
இதன் உச்சகட்ட வளர்ச்சி ஹெக்கல் காலத்தில் ஏற்பட்டது.
ஹெக்கலைத் தொடர்ந்து மார்க்சும் எங்கல்சும் 
இயங்கியலை மேலும் மெருகேற்றினர்.

ஹெக்கலின் இயங்கியல் ஒரு சாதாரணக் கூழாங்கல் 
என்றால், மார்க்ஸ்-எங்கல்சின் இயங்கியல் 
பளபளப்பான மெருகேறிய கல் ஆகும்.

இயங்கியல் என்பது தவறானது: எப்படி?
---------------------------------------------------------------   
இயங்கியல் என்பது மனித குலத்தின் அறிவியல் அறிவு 
மழலைப் பருவத்தில் இருந்த போது உருவான தத்துவம்.
(அதாவது, உண்மையைக் கண்டறியும் முறை).
பரிசோதனை அறிவியல் (EXPERIMENTAL SCIENCE )
என்பதே தோன்றாத காலத்தில் நடைமுறையில் 
இருந்த ஒரு தத்துவம்.இதன் சாராம்சம் தர்க்கம் (LOGIC ).
வாதம், எதிர்வாதம், விவாதம், தர்க்கம் ஆகியவற்றின் 
வழியாக ஒரு கருத்தைச் சரி என்று நிறுவும் முறைதான் 
இயங்கியல். அந்தக் காலத்தில் இதுவே உயர்ந்தது 
என்பதில் ஐயமில்லை. ஆனால், பரிசோதனை அறிவியல் 
என்ற ஒன்று வந்த பின்னால், இயங்கியலின் சாயம் 
வெளுத்து விட்டது.

உண்மையைக் கண்டறியும் முறையாக இயங்கியலைப் 
பயன்படுத்துவது சரியல்ல என்பதை அறிவியல் 
நிரூபித்துள்ளது
" பரிசோதனை-கூர்நோக்காய்வு- அனுமானம்"   
( EXPERIMENT - OBSERVATION-INFERENCE) என்ற 
நவீன அறிவியலின் நடைமுறை வழியாகவே 
உண்மையைக் கண்டறிய முடியும் என்பதை 
அறிவியல் ஐயம் திரிபு இன்றி நிரூபித்துள்ளது.
ஒரு கொள்கையை நடைமுறையில் சோதித்துப் பார்த்த 
பின்னரே ஏற்றுக் கொள்வது என்பதுதான் அறிவியல் 
கடைப்பிடிக்கும் அணுகுமுறை.மயிர் பிளக்கும் 
வாதங்களையும் குருட்டுத் தர்க்கங்களையும் 
அறிவியல் இகழ்ச்சியுடன் நிராகரிக்கிறது.

பண்டைக்காலத் தத்துவஞானிகள் , பூமி தட்டையானது 
என்று கருதினர். பூமி உருண்டையானது என்று 
அறிவியல் நிரூபித்தது.மையத்தில் இருக்கும் பூமியை 
சூரியன் சுற்றி வருகிறது என்று (இக்கொள்கையின் பெயர் 
GEO-CENTRIC   THEORY) அரிஸ்டாட்டில் உள்பட 
கிரேக்க இயங்கியல் அறிஞர்கள் கருதினர். ஆனால் 
சூரியனைத்தான் பூமி சுற்றி வருகிறது என்று அறிவியல் 
நிரூபித்தது. இக்கொள்கையின் பெயர்: HELIO-CENTRIC
THEORY.  பொருட்கள் பஞ்ச பூதங்களால் ஆனவை 
என்று பண்டையத் தத்துவஞானிகள் கருதினர்.
இது தவறு என்று, டால்டனின் அணுக்கொள்கை மூலம் 
அறிவியல் நிரூபித்தது.இத்தகைய தவறான  கருத்துகள்
மேலோங்கி இருந்த  இந்தக் காலத்தில்தான் 
இயங்கியலும் உருவானது. 
அறிவியல் வளர்ச்சி அடையாத காலத்தின், குறையறிவு 
படைத்த மனிதகுலம் உருவாக்கிய தவறான
தத்துவம்தான் இயங்கியல்.

நவீன அறிவியலானது  இயங்கியலை முற்றிலுமாக
நிராகரிக்கிறது.அறிவியலின் எந்தக் கோட்பாட்டையும் 
விளக்க இயங்கியல் தேவைப் படவில்லை. இயங்கியலால் 
நவீன அறிவியலை விளக்கவும் இயலாது.

அறிவியலுக்கு எதிரான இயங்கியல்: எப்படி?
------------------------------------------------------------------------------------------------------------------  
மிகச் சுருக்கமாகச் சிலவற்றைப் பார்க்கலாம்.
1) இயங்கியல் என்பது ஒரு 'பைனரி மோகம்'
( BINARY MANIA ) பிடித்த தத்துவம். எல்லாப் பொருளிலும் 
எல்லா விஷயத்திலும் ஜோடிகளைத் தேடுகிற 
தத்துவம். ஈர்ப்பு விசை (GRAVITATIONAL FORCE )
நம் பூமியிலும் இந்தப் பிரபஞ்சம் முழுவதும் 
பரவி இருக்கிற விசை.இது கவர்ச்சித் தன்மை உடையது.
(ATTRACTIVE).இதற்கு எதிரான, விலக்கல் தன்மை  
( REPULSIVE )உடைய ஒரு விசையைத் தேடித் தேடிச் 
சலித்தார் எங்கல்ஸ். கிடைக்காமல் சோர்ந்தார்.
எல்லாமே பைனரியாக இருக்கும் என்ற இயங்கியல் விதி 
தவிடுபொடியானது.எனவே, எதிர்மறைகளின் 
ஒற்றுமையும் போராட்டமும் 
(  UNITY AND STRUGGLE OF OPPOSITES) என்கிற 
இயங்கியல் விதி சரியல்ல என்பது இதன் மூலம் 
நிரூபணம் ஆகிறது.

2) எதிர்மறைகளின் ஒற்றுமையும் போராட்டமும் 
என்பதற்கு, மார்க்சிய மூல ஆசான்களின் எழுத்துக்களிலும் 
சரி, மார்க்சியப் பாடப்புத்தகங்களிலும் சரி,   
பின்வரும் உதாரணம் பெருமளவில் காணப்படும்:

"காந்தத்தின் வட துருவமும் தென் துருவமும்
எதிர்மறைகள்; இவை ஒற்றுமையாகவும் போராடிக் 
கொண்டும் இருக்கின்றன".

காந்தத்தின் வட  தென் துருவங்கள் எதிர்மறையானவை 
அல்ல; அவற்றுக்கிடையே எந்த விதமான முரண்பாடும் 
கிடையாது ( DIELECTICALLY CONFLICTING RELATIONSHIP)
என்பது குறைந்தபட்ச அறிவியல் அறிவு  உடைய 
பாமரனுக்கும் கூடப் புரியும்.

3) அளவு மாறுபாடு பண்பு மாறுபாட்டுக்கு இட்டுச் செல்லும் 
என்பதெல்லாம் இயங்கியலின் மூட நம்பிக்கைகள்.
பூனை குறுக்கே வந்தால் நல்ல சகுனம் அல்ல 
என்பது போன்ற மூடநம்பிக்கைதான் இந்த விதி.
ஹெக்கல் முதல் மார்க்ஸ்-எங்கல்ஸ் வரை 
பயன்படுத்தும் உதாராணமான, 'தண்ணீர் நீராவி ஆவதும் 
பனிக்கட்டி ஆவதுமான" நிகழ்வில்  எந்தப் பண்பு 
மாற்றமும் நிகழ்ந்து விடவில்லை. IT IS JUST A PHASE 
TRANSTITION என்கிறது இயற்பியல்.

4) நிலைமறுப்பின் நிலைமறுப்பு  என்பதெல்லாம் 
பெருமளவுக்குச் சிரிப்பு மூட்டுகிற விஷயங்கள்.
விதை-செடி உதாரணம் எல்லாம் பொருத்தமற்றவை.
WHAT ABOUT 'AFFIRMATION OF AFFIRMATION '?
அதில் வளர்ச்சி இல்லாமல் போய் விடுமா?

இப்போதைக்கு இத்துடன் நிறுத்திக் கொள்வோம்.
விரைவில் மீண்டும் தொடர்வோம்.
-----------------------------------------------------------------------------




வியாழன், 5 ஜூன், 2014

வரலாற்றின் பக்கங்களில் இருந்து 
---------------------------------------------------------
தியனான்மென் படுகொலைகள்:
உயிர் நீத்தவர்களின் 
இருபத்தைந்தாம் ஆண்டு நினைவாஞ்சலி!
ஜூன் 4, 2014
------------------------------------------------------------------------------------------------------------ 
                     பி. இளங்கோ சுப்பிரமணியன் 
---------------------------------------------------------------------------------------------------------
"சுட்டேன், சுட்டேன், குண்டுகள் தீரும் வரை சுட்டேன்" 
என்றான் ஜெனெரல் டயர். பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில்
பஞ்சாப்பில் உள்ள ஜாலியன்வாலாபாக் என்ற இடத்தில்
ஆயிரக்கணக்கான இந்திய மக்களைச் சுட்டு வெறி தீர்ந்தான்
கொடியவன் டயர்.

இதை விடவும் மோசமான கொடிய நிகழ்வு அண்மைக்கால
வரலாற்றில் நடைபெற்றது. சீனாவில் பெய்ஜிங் நகரில்,
(பழைய பெயர் பீகிங்) 1989 ஜூன் 4-ஆம் நாளில்
தியனான்மென் சதுக்கத்தில் பத்தாயிரத்துக்கும் அதிகமான
மாணவர்களும் பொதுமக்களும் சுட்டுக் கொல்லப் பட்டார்கள்.

பத்தாயிரம் உயிர்களை வெறி அடங்கும் வரை சுட்டுக் கொன்ற  
இந்த சோக  நிகழ்வின்போது உயிர்நீத்தவர்களின் 
இருபத்தைந்தாம் ஆண்டு நினைவாஞ்சலி 
உலகெங்கும் ஜூன் 4, 2014 அன்று அனுசரிக்கப் படுகிறது.

இந்தப் படுகொலைகளை நிகழ்த்தியவன் கொடியவன்
டெங் சியோ பிங் . மார்க்சிய லெனினிய மாவோ சிந்தனையின்
பெயரால் இந்தக் கொடிய படுகொலைகள் நடைபெற்றன.

லஞ்ச ஊழலை எதிர்த்தும், ஜனநாயக உரிமைகள் கோரியும்
மாணவர்களும் பொதுமக்களும் போராட்டத்தில்   ஈடுபட்டபோது
டெங் சியோ பிங்  ராணுவத்தை அனுப்பிப் போராட்டத்தை ஒடுக்கினான்.
சுட்டுக் கொல்லப் பட்டவர்களின் உண்மையான எண்ணிக்கையை
மறைத்து, சில நூறு பேர்களே இறந்து போனதாகக் கணக்குக் காட்டி
உலகை ஏமாற்ற முயன்றான். ஆனால் உண்மை வெளிப்பட்டபோது,
மாணவர்களின் போராட்டம் என்பது சீனாவின் சோஷலிச
அமைப்புக்கு எதிரான சதி என்றான்; தியனான்மென் போராட்டம் ஒரு எதிர்ப்புரட்சி ( counter revolution ) என்றான் கொடியவன் டெங்.

ஆனால் உலகம் இதை ஏற்றுக் கொள்ளவில்லை. உண்மைகள் டெங்கின் முகத்தில் காரி உமிழப் பட்டன.

லட்சக் கணக்கான மக்களைப் படுகொலை செய்த ஹிட்லர்
தற்கொலை செய்து கொண்டு செத்தான். ஹிட்லரின் கூட்டாளி
முசோலினி தூக்கிலிடப் பட்டுச் செத்தான்.உப்பைத் தின்ற
இக்கொடியவர்கள் தண்ணீர் குடித்தார்கள். ஆனால் இவர்களை விட
மோசமான கொடியவன் டெங் சியோ பிங் எந்தத் தண்டனையும் பெறாமல்
வயது மூப்பின் காரணமாகச் செத்துப்போனான்.

தியனான்மென் தியாகிகளுக்கு அஞ்சலி!
கொடியவன் டெங் சியோ பிங்கின் உருவப் படங்களில்
காறித் துப்புவோம்.  
*********************************************************************************

செவ்வாய், 3 ஜூன், 2014

பாரதீய ஜனதாவின் வெற்றி கிட்டியது எப்படி?
---------------------------------------------------------------- 
பாஜக 282 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.
காங்கிரஸ் 44 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.
பாஜக 31 சதம் வாக்குகளையும், காங்கிரஸ் 19.3 சதம் வாக்குகளையும் 
பெற்றுள்ளன.

அங்கீகரிக்கப்பட்ட எதிர்க்கட்சி அந்தஸ்தைப் பெற 54 இடங்கள் வேண்டும். அதாவது, மொத்த இடங்களான 543-இல் 10 சதம் வேண்டும்.
காங்கிரசால் அதைக்கூடப் பெற முடியவில்லை.

கம்யூனிஸ்ட் கட்சி ஒரே ஒரு இடத்தில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.
(543-இல் ஒன்று).
மார்க்சியக் கட்சி 9 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.
இவை இரண்டும் ஒற்றை இலக்கக் கட்சிகளாக மாறி விட்டன.
அங்கீகாரத்தையும் இழக்கின்றன.

போலி மதச்சார்பின்மைக் கட்சிகளான 
மாயாவதியின் பகுஜன் கட்சி, முலாயம்மின் சமாஜ்வாதிக் கட்சி,
பீகாரில் லாலுவின் ராஷ்டிரிய  ஜனதா தளம், நிதிஷ் குமாரின் 
ஐக்கிய ஜனதாதளம், திமுக ஆகிய அனைத்துக் கட்சிகளும் 
துடைத்து எறியப் பட்டுள்ளன. 

பாஜகவின் வெற்றியும், காங்கிரஸ் , இடதுசாரிகள் உள்ளிட்ட அனைத்து விதமான போலி மதச்சார்பின்மைக் கட்சிகளின் தோல்வியும் ஒரே 
நாணயத்தின் இரு பக்கங்கள்.

பாஜகவின் வெற்றிக்கும் மேற்கூறிய கட்சிகளின் தோல்விக்குமான 
காரணம் என்ன?

காய்தல் உவத்தல் அகற்றிச் சிந்தித்தால் கிடைக்கும் விடை இதுதான்.
இசுலாமிய அடிப்படைவாதிகளின் அதிகரித்து வரும்
மதவெறிச் செயல்பாடுகளால் வரவிருக்கும் ஆபத்தைத் தடுக்க மோடியால் மட்டுமே முடியும் என்று நடுத்தர வர்க்கம், புதிய வாக்காளர்கள், 
நகர்ப்புற மக்கள் ஆகியோர் கருதியதே பாஜகவின் வெற்றிக்குக் காரணம்.
-----------------------------------------------------------------------------------------------------    


இரண்டு கவிதைகள் 
-------------------------------- 

அழகு 
-------
முன்பு 
இந்த ஒற்றையடித் தடங்களும் 
மலைகளின் வளைவுகளும் 
அதற்குப் பின்னே மறையும் சூரியனும் 
அழகாய்த்தான் இருந்தன.

ஆனால்,
ஒரு மிகப் பெரிய யுத்தம் 
இந்த மலையில் நடந்த பின்பு 
இந்தக் கிராமத்தின் சுவர்களைக்
குண்டுகள் துளைத்த பின்பு......  

அவைகள் 
இந்தச் சுவர்களை மட்டுமின்றி 
இந்த மலைகளையும் 
முன்பு இருந்ததை விட 
எவ்வளவு அழகாய்
மாற்றி இருக்கின்றன.

......................மாவோ............................
---------------------------------------------------------------------------------


ரத்த சாட்சிகள் 
---------------------
ரத்த சாட்சிகளே 
உங்களுக்கு வாழ்த்துகள்!

உண்மைக்காக  உயிர்ப்பலி தந்த நீங்கள் 
வெற்றி பெற்று விட்டீர்கள்.

உங்களைப் பாலூட்டி வளர்த்த 
தாய்மார்களும் வெற்றி பெற்று விட்டார்கள்.

ரத்த சாட்சிகளின் மகுடத்தை 
தலையில் சூடிக்கொண்ட 
உங்களுக்கு வாழ்த்துகள்.

மரணத் தருவாயிலும் 
துடிக்கும் உதடுகளால் 
புரட்சி முழக்கங்களை 
உச்சரித்துக் கொண்டிருந்த 
உங்களுக்கு வாழ்த்துகள்.

எங்கள் தலைக்கு மேல் வீசிப் பறந்து 
பழி வாங்குங்கள்
என்று எங்கள்  செவிகளில் 
ஓதிக்கொண்டிருக்கும் 
உங்கள் ஆத்மாக்களுக்கு வாழ்த்துகள்.

................................ ஸ்டாலின்..................................

----------------------------------------------------------------------------------------