திங்கள், 7 செப்டம்பர், 2020

கரக்பூர் ஐஐடி பேராசிரியர் ஆனந்த் தெல்தும்ப்டே
ஆறு மாதமாய் சிறையில் அடைக்கப்பட்டு இருப்பது ஏன்?
அறிவாளிகளின் கைதும்
காலணி வைரஸ் தாக்கி
இறந்து போன நீதியும் !
.............................................
மூத்த வழக்கறிஞர் தி.லஜபதிராய்
-------------------------------------
ஆனந்த் தெல்தும்ப்டே .!
முதுகெலும்பற்ற மெல்லுடலிகள் அதிகார மையங்களாக உலவும் இந்தியாவில் வாழும் மெய்யான அறிவாற்றல் கொண்ட மனிதர். கரக்பூர் ஐஐடி பேராசிரியர்,
அறிஞர்கள் இந்தியாவைப் படிக்க , அறிய பெரிதும் நம்பும் எகானமிக் அண்ட் பொலிலிடிக்கல் வீக்லி என்ற இதழ் உலக அளவில் வெளிவரும் 951 சமூக அறிவியல் இதழ்களில் ஏழாவது இடமும், ஆசிய அளவில் வெளியாகும் 197 இதழ்களில் இரண்டாவது இடமும், இந்தியாவில் வெளியாகும் 37 இதழ்களில் முதலிடத்தையும் பெறுவது வேடிக்கையல்ல.
இந்தியாவின் தலை சிறந்த அறிஞர்கள் ரொமிலா தாப்பர், அண்ரே பெடெய்ல், தீபக் நய்யர் போன்ற 200 பேருக்கும் மேற்பட்டோர் தங்களது கட்டுரைகளை பதிவிடும் இதழ்.
எகானமிக் அண்ட் பொலிடிக்கல் வீக்லி இதழில் தெல்தும்ப்டேயின் மார்ஜின் ஸ்பீக் அல்லது விளிம்புநிலை மக்களின் குரல் என்ற அவரது பக்கங்கள் மிகப் பிரபலம்.
எகானமிக்கல் அண்ட் பொலிடிக்கல் வீக்லி இதழில் அவரது 20.10.2018 கட்டுரையில் காங்கிரஸ் தலைமையிலான முற்போக்கு கூட்டணி அரசின் 23 திட்டங்களை திருவாளர் மோடி பெயர் மாற்றம் செய்து தனது திட்டங்களாக்கியதை அம்பலப்படுத்தினார்.14.04.2018 அன்று வன்கொடுமை சட்டத்தை நீர்த்து போகும் தீர்ப்பை வழங்கிய உச்ச நீதிமன்றத்தை கண்டித்து ஜூடிசியல் அட்ராசிட்டி Judicial Atrocity என்ற கட்டுரையை எழுதினார். 30.06.2018 அன்று அர்பன் மாவோயிஸ்ட்ஸ் மற்றும் 04.08.2018 அன்று அவரது நியூ நார்மல் இன் மோடி’ஸ் நியூ இந்தியா
New normal in Modi’s new India ஆகிய கட்டுரைகள் அறிஞர்கள் மத்தியில் புகழ்பெற்றவை. எதிர்கட்சித் தலைவர்களுக்கு எதிராகவும் எழுதியுள்ளார் .
ஹிந்துத்வா அண்ட் தலித்ஸ்,
Hindutva and dalits
தி ரேடிக்கல் இன் அம்பேத்கர்,
The radical in Ambedkar
ரிபப்ளிக் ஆப் கேஸ்ட்,
Republic of caste
தலித்ஸ் பாஸ்ட் ப்ரசன்ட் ஆன்ட் ஃபியூச்சர்,
Dalits past present and future
‘மஹத்’தி மேக்கிங் ஆப் ஃபஸ்ட் தலித் ரிவோல்ட்
‘Mahad’ The making of first dalit revolt
போன்ற மேற்சொன்ன நூல்கள் உள்ளிட்ட 26 புகழ் பெற்ற நூல்களை எழுதியவர் தொகுத்தவர்.
டாக்டர் அம்பேத்கரின்
அனிகிலேஸன் ஆப் காஸ்ட்
Annihilation of caste என்ற
சாதியை அழித்தொழித்தல் என்ற இந்தியப் பேரறிஞர் அம்பேத்கரின் புகழ்பெற்ற உரையை நூலாக மாற்றி
அறிமுகம் செய்யும்போது கம்யூனிஸ்ட் பேரறிக்கை communist manifesto முதலாளித்துவ உலகிற்கு என்னவாக இருந்ததோ அதைப் போன்றே சாதீய இந்தியாவுக்கு ‘சாதியை அழித்தொழித்தல்’ நூலும் எனத் திறம்படக் கூறியவர்.
சாம்ஸ்க்கி உட்பட 600 உலகளாவிய அறிஞர்கள் அவரது கைதுக்கு எதிராக வேண்டுகோள் விடுத்திருந்தார்கள்.ஆனால் வரலாற்றுக் காலத்திற்கு முந்தைய அறிவு படைத்தோருக்கு அவ்வேண்டுகோளைப் புரிந்து கொள்வது கடினம்.
டாக்டர் அம்பேத்கரின் பேத்தி ரமாவை திருமணம் செய்ததாலோ, அல்லது அம்பேத்கரைப் படித்ததாலோ பாபாசகேப்பை போலவே சமூக விடுதலைக்கு அறிவாயுதத்தை நம்புபவர், அணு ஆயுதங்களையோ ஆயுத போராட்டங்களையோ நம்பாதவர்.
01.01.1818 ஆம் நாள் 800 பட்டியல் சாதி மஹர்களைக் கொண்ட படை 20000 பேஷ்வா படையினரை வெற்றி கொண்ட நிகழ்வுக்கு எழுப்பப்பட்ட நினைவுத் தூண் அமைந்த பீமா கொரேகாவ்னில் கூடும் 200 ஆவது ஆண்டு கொண்டாட்ட நிகழ்வில் புகழ்பெற்ற உச்ச நீதிமன்ற முன்னாள்
நீதிபதி பி ஃபி சாவந்த் கலந்து கொண்ட விழாவில் பட்டியல் சாதியினரும், மராத்தாக்களும் , இஸ்லாமியரும் ஒருங்கிணைந்து இருபது இலட்சம் பேர் கலந்து கொண்டதைத் சீர்குலைக்க அரசின் உதவியோடு திட்டமிட்ட வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டது. போலிஸ் தடியடி நடத்தப்பட்டதில். பட்டியல் சாதியைச் சேர்ந்த 16 வயது சிறுவன் காயமடைந்து இறந்தான். ஆனால் பழி என்னவோ நிகழ்ச்சி ஒருங்கிணைப்பளர்கள் மீது.
அவரது செல்பேசி ஒற்றறிய பயன்படும்
இஸ்ரேலிய மென் பொருளான பெகாசஸ் மூலம் சிதைக்கப்பட்டு அவரது பதிவுகள் போலியாக மறு உருவாக்கம் செய்யப்பட்டதை அவர் மாணவர்கள் கண்டுபிடித்து கூறியதை தனது கைதுக்கு பல மாதங்கள் முன்னரே குறிப்பிட்டுள்ளார்.
29.08.2018 ஆம் நாள் நீதிபதி டி ஒய் சந்திரசூட் உச்சநீதிமன்றத்தில் கோரேகாவ்ன் வழக்கின் புலனாய்வு ஒரு சார்புடையதாக உள்ளதாக கூறினார்.
பிரதமர் திருவாளர் மோடி அவர்களை கொலை செய்ய தெல்தும்ப்டே சதி செய்தார் என கூறுவதற்கு, காக்காவைப் பாட வைத்து வடையைப் பறித்த நரியின் கதையை உண்மை என்று நம்பும் இரண்டாம் வகுப்பு குழந்தையின் அறிவை விட சற்றுக் குறைவாகவே இருக்க வேண்டும்.
ஆனந்த் தெல்தும்ப்டேவைப் போன்றே கவுதம் நவ்லக்கா அவர் 01.09.2012 ஆம் ஆண்டு பஸ்தரில் மாவோயிஸ்ட்களின் கிராமங்களில் பயணம் செய்து டேஸ் அண்ட் நைட் இன் தி ஹார்ட் ஆப் ரெபல்லியன் Days and night in the heart of rebellion என்ற நூலை எழுதியவர் எகானமிகல் அண்ட் பொலிடிக்கல் வீக்லி ஆசிரியக்குழு ஆலோசகர்களில் ஒருவர்.
கொரானோ ஊரடங்கின்போது 08.04.2020 அன்று அவர்களது பிணை மனுவை தள்ளுபடி செய்த உச்சநீதி மன்ற நீதிபதி அருண்மிஸ்ராவுக்கு இருவரின் கல்வி பின்புலமும் அவர்கள் நிரபராதிகள் என்பதும் தெரியாததல்ல.
அரசுக்கும் உச்ச நீதிமன்றத்திற்கும் இடையே ஒரு மெல்லிய கோடு அளவிலான இடைவெளி இருக்கும் அது அவ்வப்போது தென்படும் அப்போதெல்லாம் மக்களுக்கு நீதியமைப்பின் மீது நம்பிக்கை பிறக்கும். ஜூடிசியல் லாட்டரி போன்ற தீர்ப்புகள் ஆயிரத்தில் ஒன்றே. ஆனால் 08.04.2020 அன்று உச்ச நீதிமன்றம் தங்களது அரசியலமைப்பு சட்ட முகமூடிகளை கழற்றி விட்டு அரசு ஊழியர் மெய் முகத்தை முழுமையாக வெளிக்காட்டிய நாள் அன்றே அரசுக்கும் நீதித்துறைக்கும் இடையேயான கோடு அளவு இடைவெளி முற்றிலுமாக மறைந்து விட்டது.
24.03.2020 அன்றே ‘வாஷிங்டன் போஸ்ட்’ இதழ் இந்தியாவின் சுதந்திரமான நீதித்துறையின் அழிவு முழுமையடைந்து விட்டது என எழுதியது. அது சற்று தாமதமான செய்தி.
அதென்னவோ தெரியவில்லை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி போப்டே தலைமையிலான அமர்வு 28.01.2020 அன்று குஜராத்தில் சர்தார்புரா படுகொலை என்ற இரத்தத்தை சில்லிட வைக்கும் முறையில் கொடூரமாக மின்சாரம் பாய்ச்சியும் , அமிலத்தை வீசியும் ஒரு வீட்டில் அடைக்கலம் புகுந்த 31 இஸ்லாமியரில் 29 பேர்களை படு கொலை செய்து விசாரணை நீதிமன்றத்திலும் உயர் நீதிமன்றத்திலும் தண்டனை உறுதி செய்யப்பட்ட 17 குற்றவாளிகளுக்கு பிணை வழங்கி அவர்களை மத்திய பிரதேசத்தில் சமூக சேவை செய்யச் சொல்லியது.அவ்வாறே ஒடே என்ற கிராமத்தில் 26 இஸ்லாமியர் எரித்து கொல்லப்பட்ட வழக்கிலும் 14 குற்றவாளிகளுக்கு பிணை வழங்கியது.2008 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தால் சிறப்பு புலனாய்வு விசாரணைக்கு உத்தரவிடப்பட்ட வழக்குகளில் இவ்விரண்டு வழக்குகளும் அடங்கும்.
குற்றமற்ற அறிவாளிகளுக்கு பிணை மறுக்கும் உச்ச நீதிமன்றம் இரு நீதிமன்றங்களால் தண்டனை உறுதி செய்யப்பட்ட குற்றவாளிகளுக்கு பிணை வழங்கியதில் ஆச்சரியம் இல்லை எதிர்காலத்தில் மத்திய பிரதேசத்தில் உச்ச நீதிமன்றத்தின்
வேண்டுகோளுக்கிணங்கி சமூக சேவை செய்யப்போகும் அவர்களது ஒளிப்படங்கள் நாடாளுமன்ற மைய அரங்கில் இடம் பெறாவிட்டால்தான் ஆச்சரியம்.
எமர்ஜென்சி காலகட்டத்தில் ஜூன் மாதம் 1975 ஆம் ஆண்டு புகழ்பெற்ற பத்திரிகையாளர் குல்தீப் நய்யார் 103 பத்திரிகையாளர்களை அழைத்து பத்திரிகையாளர் சந்திப்பை நிகழ்த்தி அவசர நிலை அறிவிப்பிற்கு எதிராக குரல் கொடுத்தார், பின்னர் கைதாகி மூன்று மாதம் சிறைக்குச் சென்றார்.
அந்த கால கட்டத்தில் ஊடக முதலாளிகள் பெரும்பாலோனோர் மண்புழுக்களைப் போல் ஊர்ந்து திரிகின்றார்கள் எனக் கூறியது திருவாளர் எல் . கே. அத்வானி , இன்று அவருக்கே அதே நிலைதான்.
கொரானோவை விடக் கொடிய காலணி வைரஸ் ஒன்று உண்டு அது பெரும் அதிகாரம் கொண்டவர்களின் ஷூக்களின் மேல் தூசியாக படர்ந்திருக்கும் , கொரானோவைப் போன்றே சமூக விலகல் இல்லாமல் தொடுவதன் மூலமும் நாக்கின் மூலமும் பரவி முதுகெலும்பைத் தாக்கும் அந்த வைரஸ் மனித குலத்திற்கே எதிரானது.
@ மூத்த வழக்கறிஞர்
தி.லஜபதி ராய்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக