திங்கள், 28 ஆகஸ்ட், 2017

அரசுப் பள்ளிகளிலிருந்து கடந்த 10 ஆண்டுகளில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்துள்ள மாணவர்கள், வெறும் 314 பேர் மட்டுமே. தனியார் மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்துள்ள அரசுப் பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை 74. எனில், தமிழகத்தில் மொத்தம் 388 பேர் மட்டுமே கடந்த 10 ஆண்டுகளில் அரசுப் பள்ளிகளில் இருந்து மருத்துவப் படிப்பில் சேர்ந்துள்ளார்கள். ஒவ்வோர் ஆண்டும் பல ஆயிரம் கோடி ரூபாயைக் கல்விக்காகச் செலவு செய்து, விரல் விட்டு எண்ண முடிகிற ஒரு சிலரை மட்டுமே நம் அரசுப் பள்ளிகள், மருத்துவக் கல்லூரிகளுக்கு அனுப்பிக் கொண்டிருக்கின்றன.
ஏன் இந்தப் புள்ளிவிவரங்கள் 2007-ம் ஆண்டிலிருந்து எடுக்கப்பட்டுள்ளன என்பதை முக்கியமாகக் கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும். மருத்துவம், பொறியியல் போன்ற படிப்புகளுக்காக மாநில அளவில் நடத்தப் பட்டுவந்த நுழைவுத் தேர்வு 2007-ம் ஆண்டு முதல் ரத்து செய்யப்பட்டது. ‘பன்னிரண்டாம் வகுப்பில் பெறும் மதிப்பெண்களின் அடிப்படையிலேயே சேர்க்கை நடைபெறும்’ என்று மாநில அரசு அறிவித்தது. ஏன் இந்த நுழைவுத் தேர்வு ரத்து செய்யப்பட்டது? கிராமப்புற ஏழை மாணவர்கள் நுழைவுத் தேர்வுக்கான பயிற்சி வகுப்புகளுக்குச் செல்ல இயலாது; மருத்துவம் உள்ளிட்ட உயர்கல்விகளில் நகர்ப்புற மாணவர்களுக்கு இணையாகப் போட்டிப் போட இயலாது; நகர்ப்புற மாணவர்களுக்குக் கிடைக்கும் கல்வி வாய்ப்புகள் கிராமப்புற மாணவர்களுக்குக் கிடைப்பதில்லை. இதெல்லாம்தான் நுழைவுத் தேர்வை ரத்து செய்யும் சட்டத்துக்கான காரணங்களாகச் சொல்லப்பட்டன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக