சனி, 12 ஆகஸ்ட், 2017

சாதியின் தோற்றமும் வளர்ச்சியும்!
சாதி அடித்தளமா மேற்கட்டுமானமா?
----------------------------------------------------------------
மார்க்சிய சிந்தனைப் பயிலகம்
----------------------------------------------------------------------
சமூகத்தின் பொருள் உற்பத்தியின்போது சில
குறிப்பிட்ட வேலைகளில் நிபுணத்துவம் (specialization)
தேவைப்பட்டது. இத்தேவையானது காலப்போக்கில்
சமூகத்தில் ஒரு வேலைப்பிரிவினையை (division of labour)
உருவாக்கியது. சமூகத்தின் தொடர்ச்சியான
இயக்கப்போக்கில் இந்த வேலைப்பிரிவினை
உறுதிப்பட்டது.

இவ்வாறு வேலைப்பிரிவினைக்கு ஆட்பட்டவர்கள்
(இவர்கள் தத்தம் வேலைகளில் தனித்திறன்
பெற்றவர்கள் specialists) காலப்போக்கில் தங்களுக்குள்
அகமண முறையைப் பின்பற்றத் தொடங்கினர்.
அகமண முறையின் மூலம் தங்களின் தனித்திறனைத்
தக்க வைத்துக் கொண்டனர்.

இவையெல்லாம் தமிழ்ச் சமூகத்தில் சங்க காலத்தில்
நிகழ்ந்தன. சங்க காலம் என்பது மிகப்பெரிதும்
இனக்குழுச் சமூக வாழ்க்கையின் காலம். பெரும்
பேரரசுகள் உருவாகி இராத காலம். 2000  ஆண்டுகளுக்கு
முற்பட்ட காலம்.

ஐரோப்பிய சமூகத்தைப் போன்று  பொதுவாக இந்திய
சமூகத்திலும் குறிப்பாக தமிழ்ச் சமூகத்திலும்
ஆண்டான் அடிமை சமூக அமைப்பு முறை
நிலவவில்லை. அடிமைச் சமுதாயம் (slavery society)
தமிழ்நாட்டில் இல்லை. இனக்குழுச் சமூகமாக
ஐந்திணைகளிலும் தமிழ் மக்கள் வாழ்ந்து கொண்டு
இருந்தனர். இனக்குழுச் சமூக வாழ்க்கையில்
அதற்கே உரிய வர்க்க வேறுபாடுகள் இருந்தனவே
தவிர, அடிமை முறை இல்லை.

பின்னர் இனக்குழுக்கள் முறியடிக்கப்பட்டு பெரும்
பேரரசுகள் உருவானதைத் தொடர்ந்து சமூகம்
நிலப்பிரபுத்துவ முறைக்கு மாறியது.

இனக்குழுச் சமூகக் கட்டத்தில் தனித்திறன் பெற்றிருந்த
குழுவினர் நிலப்பிரபுத்துவ சமூக காலத்தின் பொருள்
உற்பத்திக்கும் தேவைப்பட்டனர். எனவே அவர்கள்
அவ்வாறே தக்க வைத்துக் கொள்ளப்பட்டனர்.
காலப்போக்கில் இத்தகைய தனித்திறன் பெற்றிருந்த
குழுவினர் தனித்தனிச் சாதியினராக சமூகத்தில்
நிலை பெற்றனர். ஆக இவ்வாறுதான் சாதி
தோன்றியது.

1) நிபுணத்துவம் அல்லது தனித்திறன் (specialization)
2) வேலைப்பிரிவினை 3) அகமண முறை 4) சாதி
என்ற நான்கு கட்டங்களின் பரிணாம வளர்ச்சியாக
சாதியைக் காண வேண்டும். சாதி தோன்றியபோது
அது சமூகத்தின் இயல்பான விளைபொருளாக
இருந்தது என்பதைக் கருத்தில் கொள்ள வேண்டும்.
அதாவது யார் எவராலும் சாதியானது செயற்கையாக
வலிந்து திணிக்கப் பட்டதல்ல அல்லது வலிந்து
புனையப் பட்டதல்ல. எனவே சாதியின் தோற்றத்தின்
போது, அதற்கு சமூகத்தின் ஏற்புடைமை (acceptance)
இருந்தது என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும்.

காலப்போக்கில் பல்வேறு எதிர்மறை அம்சங்கள்
சாதியுடன் பிணைந்து கொண்டன. ஒரு கொடிய
சுரண்டலுக்கு சாதி முறை வழி வகுத்தது. சாதியின்
ஒரு கட்டத்தில் தீண்டாமை சாதியுடன் இணைக்கப்
பட்டது. இவை குறித்து பின்னர் பார்ப்போம்.

இந்திய சமூகம் அரை நிலப்பிரபுத்துவ சமூகமாக
மாறிய பின்பும் சாதி நீடிக்கிறது. முதலாளிய
சமூகத்திலும் பல்வேறு மாற்றங்களுடன் சாதி
நீடிக்கும். சோஷலிச சமூக அமைப்பு கட்டப்பட்ட
பின்பும் சாதி முற்றிலுமாக அழித்து ஒழிக்கப்பட்டு
விடாது. ஆனால் சோஷலிச அமைப்பில் சாதியின்
நச்சுப் பற்கள் அனைத்தும் பிடுங்கப்பட்டு விடும்.
என்றாலும், ஒரு வரலாற்று அடையாளமாக சாதி
நீடிக்கவே செய்யும். ஏனெனில் சாதிக்கு ஒரு
துணை தேசிய இனத்தின் (sub nationality) பண்புகள்
உண்டு.

பின்குறிப்பு: சாதி என்பது அடித்தளமா மேற்கட்டுமானமா
என்பது குறித்து எடுத்துக் காண்போம்.
****************************************************************         

 


       

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக