வெள்ளி, 1 ஆகஸ்ட், 2014

கனவுகளின் நீர்க்கோலம்
---------------------------------------------

வீரை பி இளஞ்சேட்சென்னி
------------------------------------------------
------------------------------------------
என் கரம் பற்றி நடக்கிறாய்
கடைத்தெரு எங்கும்.

உரிமையுடன்
கடிந்து கொள்கிறாய். 

அவ்வப்போது என் தோளில்
பூங்கரம் பதிக்கிறாய்.

கட்டளை இடுகிறாய்
எனது சேவகத்தில்
பெருமிதம் பொங்குகிறாய்.

பிச்சிப்பூ இரண்டு முழம்
வாங்க எத்தனிக்கையில்
பைத்தியமா உங்களுக்கு
ஒரு முழம் போதும் என்கிறாய்.

கச்சு
விளிம்புகளில் வெளித்தெரியக் கண்டு
ரவிக்கையை
கீழே இழுத்து விடுமாறு
கிட்டத்தில் வந்து கிசுகிசுக்கிறாய்.

பிற ஆடவரின் பொறாமை
என் மீது படர
தூக்கலான அந்நியோன்னியத்துடன்
தொழிற்படுகிறாய்.

இவ்வளவு கொடுத்து வைத்தவனா நான்!                 
வியக்கிறேன்.

ஒரு மின்னல் பொழுதில்
குரூரமான யதார்த்தம்
யாவற்றையும் துடைத்தெறிய
கனவு கலைகிறேன்.

***************************************
**************  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக