சனி, 2 ஆகஸ்ட், 2014

வழுவமைதி

-------------------------------- ------------------- ------------------------

வீரை பி இளஞ்சேட்சென்னி
---------------------------------------------------------------------------- 
பிம்பங்கள் திரையிட்டு மறைக்கும்
என் அந்தரங்கத்துள்
உன் தொடுகை குறித்த வேட்கை
இன்னும் உயிர்ப்புடன் இருக்கிறது.

ஜலதரங்கம் வெட்க
நடத்தலின் பொற்கணங்களில்
உன் கொலுசுகள் சிந்திய மகரந்தம்
என் உயிரின் பாத்திகளில்
வசந்தத்தைத் துளிர்விக்கிறது.

நிசப்தத்தை ஆராதிக்கும்
பின் ஜாமப் பொழுதுகளில்
உன்னை அடையப் பெறாத
இழப்பின் பிரும்மாண்டம்
மலையாய்க் கனக்கிறது.

தோழி
நமக்குள் மெல்லென அரும்பி நிற்கும்
புது உறவு
சாத்திரத்தை மீறியது
என்றா எண்ணுகிறாய்?

போஜராஜனின் கைத்தலம் பற்றிய மீரா
கண்ணனிடம் தன்னை இழந்ததில்
அத்துமீறல் எதையும்
அறிவிக்கவில்லையே  சாத்திரம்!

நித்திய கல்யாணியாய்
தன்னைப்  புதுப்பிக்கும் சமூகத்தின்
பரிணாம மலர்ச்சியில்  
புதிய வகை உறவுகள்
வாழ்வுரிமை பெறும்.

ஆதலினால் தோழி, 
தேர்ச்சிகொள்
ஊமை வெயில் விலகட்டும்.

**********************************************************
பின்குறிப்பு:
----------------- 
தமிழ் இலக்கணத்தில் வழுவமைதி என்று ஒன்று உண்டு.
வழு என்பது குற்றம்; வழு அமைதி என்பது குற்றத்தைப் 
பொறுத்து ஏற்றுக் கொள்வது என்று பொருள் தரும்.
"சீக்கிரம் வா" என்று அம்மா அழைக்கும்போது,
'இதோ, வந்துவிட்டேன், அம்மா" என்று குழந்தை 
பதில் தரும். இலக்கணப்படி, இது வழு (குற்றம்).
"வந்து விடுவேன்" என்று எதிர்காலத்தில் கூற 
வேண்டும்.அதுதான் சரி. ஆனாலும், 'வந்து விட்டேன்"
என்று இறந்த காலத்தில் கூறுவதை வழு அமைதி யாகக் கொண்டு அனுமதிக்கிறது தமிழ் இலக்கணம்.

********************************************************************** 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக