சனி, 20 ஆகஸ்ட், 2016

-------அத்தியாயம்-3--------
--------------------------
ஒத்திசைவான உலகங்கள்
-------------------------------------------------
பறவைகள் என்ன நோக்கம் கருதிப்  பாடுகின்றன என்று நாம்
கேட்பதில்லை. ஏனெனில் பாடுவதன்  மூலம் அவைகள்
மகிழ்ச்சியில் திளைக்கின்றன; மேலும் பாடுவதற்கென்றே
அவை படைக்கப்பட்டு உள்ளன. அதுபோலவே விண்ணுலகின்
ரகசியங்களின் ஆழத்தை அறிந்து கொள்ள வேண்டுமென்று
ஏன் மனிதர்கள் முயற்சி செய்கிறார்கள் என்றும் நாம் கேட்கக்
கூடாது.  இயற்கை நிகழ்வுகள் மாபெரும் பன்முகத்தன்மை
உடையவை. அவை வளம் செறிந்த பொக்கிஷமாய்
விண்ணுலகில் மறைந்து கிடக்கின்றன. ஒவ்வொரு முறையும்
அதைத் தேடித் தேடி அடைவதில் உள்ள புதுமைக்  கவர்ச்சி
மனித குலத்திற்கு என்றுமே குறைவதில்லை.
------ஜோஹன்னஸ் கெப்ளர், பிரபஞ்சவியல் புதிர்கள் என்னும் நூலில்........
---------------------------------------------------------------------------------------------------

எதுவுமே மாறாத ஒரு உலகத்தில் நாம் வாழ்ந்தோம் என்றால்
அங்கு செய்வதற்கு ஒன்றுமே இல்லை. எதையும் விளக்க
வேண்டிய அவசியம் இல்லை. அங்கு அறிவியலுக்கு எந்த
வேலையும்  இல்லை. அதுபோலவே என்ன நடக்கும் என்று
தீர்மானிக்க முடியாத ஒரு உலகில் நாம் வாழ்ந்தோம் என்றால்,
அங்கும்  எதைப்பற்றியும் நாம் விளக்க வேண்டிய அவசியம்
இல்லை. அங்கு நிகழ்வுகள் தாறுமாறாகவும் மிகவும்
சிக்கலான வழிகளிலும் நிகழும். மேலும் அங்கு அறிவியல் என்ற
ஒன்றே இருக்காது.

ஆனால் நாம் வாழும் உலகம் இந்த இரண்டுக்கும் இடைப்பட்டது.
இங்கே விஷயங்கள் மாறுகின்றன, ஆனால் ஒரு ஒழுங்கிற்கு உட்பட்டு; சில விதிகளுக்கு உட்பட்டு. இவற்றை நாம் இயற்கையின்
விதிகள் என்று கூறுகிறோம். ஒரு கல்லை வீசி எறிந்தால்,
அது தரையில் விழுகிறது. சூரியன் மேற்கே மறைந்தால்
மறுநாள் காலை அது கிழக்கே உதிக்கிறது. எனவே
நிகழ்வுகளை நம்மால் விளக்க முடிகிறது. அறிவியலைக்
கையாள முடிகிறது. அதன் மூலம் மானுட வாழ்வை
முன்னேற்ற முடிகிறது.

மனிதர்களால் உலகைப் புரிந்து கொள்ள முடிகிறது.
இதுவரை எவ்வளவோ புரிந்து கொண்டுள்ளோம்.
நெருப்பை உண்டாக்கியது முதல்  கணினி விளையாட்டுக்கள்
வரை நம்மால் நிறையச் செய்ய முடிந்தது. இதற்குக் காரணம்
நம்மால் நிறைய நிகழ்வுகளை விளக்க முடிந்ததுதான்.
தொலைக்காட்சிக்கு முன்னதாக, திரைப்படங்களுக்கு
முன்னதாக, வானொலிக்கு முன்னதாக, ஏன் புத்தகங்களுக்கும்
முன்னதாக ஒரு காலம் இருந்தது. அந்தக் காலத்தில்தான்
மனிதகுலம் தன் பெரும்பகுதியைக் கழித்து இருந்தது.
நிலவு இல்லாத இரவில் குளிரை விரட்டத் தீ வளர்த்துக்
கொண்டு நாம் நட்சத்திரங்களை உற்று நோக்கிக் கொண்டிருந்தோம்.

இரவு வானம் மிகவும் ஆர்வமூட்டுவது. குறிப்பிட்ட பல
ஒழுங்குகள் அதில் உண்டு. நட்சத்திரக் கூட்டங்களைப்
பார்த்து சில சித்திரங்களை நம்மால் கற்பனை செய்ய முடியும்.
உதாரணமாக, வடக்கு வானத்தில் கரடி போலத் தோன்றும்
ஒரு நட்சத்திரக் கூட்டம் தெரியும். சில பிரதேசத்து மக்கள்
இதைப் பெருங்கரடி (great bear) என்று அழைக்கிறார்கள்.
வேறு பகுதி மக்களோ முற்றிலும் வேறான ஒரு சித்திரத்தைப்
பார்க்கிறார்கள். இரவு வானத்தில் இந்தச் சித்திரங்கள் உண்மையிலேயே இருக்கின்றனவா என்றால் இல்லை
என்பதே உண்மை. அவை நமது கற்பனையே. நாம் வேட்டைச்
சமூகமாக இருந்தோம். நாம் பார்த்தெல்லாம் நம்மைப்
போன்ற வேட்டைக் காரர்கள், நாய்கள், கரடிகள்
ஆகியவற்றைத்தான். எனவே இவற்றின் பெயர்களையே நட்சத்திரக் கூட்டங்களுக்குச் சூட்டினோம். பதினேழாம் நூற்றாண்டின் ஐரோப்பிய மாலுமிகள் முதன்முதலில் தெற்குவானத்தைப் பார்த்து இருந்தால்,அவர்கள்பதினேழாம்நூற்றாண்டின்பொருட்களின்
பெயர்களையே நட்சத்திரக் கூட்டங்களுக்குச் சூட்டி இருப்பார்கள்.
மூக்கு நீண்ட  பறவைகள்-மயில்கள், தொலைநோக்கிகள்- நுண்ணோக்கிகள், மாலுமிக் காம்பஸ்கள்-வளைந்த வில் போன்ற கப்பலின் பின்புறங்கள் இத்தியாதிப் பொருட்களின் பெயர்கள்
சூட்டப்பட்டிருக்கும். இருபதாம் நூற்றாண்டில் பெயர் சூட்டப்
படுமேயானால், சைக்கிள், ஃபிரிட்ஜ் ஆகியவற்றின் பெயர் சூட்டப் பட்டிருக்கும். ஏன்,  நடனமாடும் ஆண்பெண் முதல் காளான்
வடிவிலான மேகங்கள் வரை சமகால மனிதர்களின்
நம்பிக்கை பயம் ஆகியவற்றின் அடிப்படையில் நட்சத்திரக்
கூட்டங்களின் பெயர்கள் இருந்திருக்கும்.

எப்போதேனும் நமது முன்னோர்கள் வாலுடன் கூடிய
மிகுந்த பிரகாசத்துடன் கீழே விழும் ஒரு நட்சத்திரத்தைப் பார்த்திருக்கக் கூடும். இந்தக் காட்சி ஒரு நொடிக்கும் குறைவான
நேரம் மட்டுமே தோன்றிப்பின் மறைந்திருக்கும். இதை
எரிநட்சத்திரம் என்று நமது முன்னோர்கள் அழைத்தார்கள்.
இது சரியான பெயர் அல்ல. சில நட்சத்திரங்கள் இப்படி
விழுந்தாலும், வயதான பல நட்சத்திரங்கள் இன்னும் வாழ்ந்து
கொண்டுதான் இருக்கின்றன. பருவகால  மாற்றத்தின்போது,
சில பருவங்களில் அதிகமான நட்சத்திரங்கள் வீழ்கின்றன.
சில பருவங்களில் வீழ்வது குறைவாக இருக்கிறது. இதிலும்
ஒரு ஒழுங்கு காணப்படுகிறது.

சூரியனையும் சந்திரனையும் போல, நட்சத்திரங்களும்
கிழக்கில் உதித்து மேற்கில் மறைகின்றன. நம் தலைக்கு
மேலே சென்று வானத்தைக் கடப்பதற்கு அவை முழு
இரவையும் எடுத்துக் கொள்கின்றன. வெவ்வேறு பருவங்களில்
வெவ்வேறு நட்சத்திரக் கூட்டங்கள் தோன்றும். அதே நட்சத்திரக்
கூட்டங்கள் எப்போதும் அதே நேரத்தில்தான் தோன்றும். உதாரணமாக இலையுதிர் காலத்தில்
தோன்றும் நட்சத்திரக் கூட்டங்கள் எப்போதும் இலையுதிர்
காலத்தில்தான் தோன்றும். திடீரென்று கிழக்கு வானில்
புதிதாக ஒரு நட்சத்திரக் கூட்டம் தோன்றுவது என்பது
ஒருபோதுமே நிகழாது. நட்சத்திரங்களைப் பொறுத்த மட்டில்,
ஒரு ஒழுங்கு, ஒரு முன்கணிப்பு, ஒரு நிரந்தரம்
ஆகியவை  எப்போதும் உண்டு. ஒருவிதத்தில் அவைகள்
மிகவும் சௌகரியமானவை.

சில நட்சத்திரங்கள் சூரிய உதயத்திற்குச் சற்று முன்பு
உதிக்கின்றன; சூரியன் மறைந்ததற்குச் சற்றுப் பின்னர்
மறைகின்றன. இவை தோன்றும் இடங்களும் தோன்றும்
நேரங்களும் பருவங்களைப் பொறுத்து மாறும்.
நட்சத்திரங்களைக் கூர்ந்து  கவந்த்தித்து வந்து, நாம்
கவனித்தவற்றை ஆண்டுக் கணக்கில் பதிவு செய்து
வந்தோம் என்றால் நம்மால் பருவ காலங்களை
முன்கணிக்க இயலும். ஒவ்வொரு நாளும் அடிவானத்தில்
சூரியன் எங்கே உதித்தது என்பதைக் குறித்து வைத்துக்
கொண்டால், நம்மால் ஆண்டு முழுவதற்குமான
கால விவரங்களை அளக்க முடியும். வானம் ஒரு மிகப்பெரிய
காலண்டர் ஆகும். இது ஒவ்வொருவருக்கும் கிட்டுவது.
தேவையெல்லாம் ஈடுபாடும், திறனும், ஆவணங்களைப்
பராமரிக்கும் வழிவகைகளும்தான்.  

----------------------------------------------------------------------------------------------------------



       .

   

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக