ஞாயிறு, 25 நவம்பர், 2018

BHEL நிறுவனத்தில் தொழிற்சங்கங்கள் மிகவும்
வலுவாக இருக்கின்றன.குறைந்த  அளவு
தொழிலாளர்களின் ஆதரவு பெற்ற HMKP
சங்கத்திற்கும் கூட நிர்வாகம் அங்கீகாரம்
அளித்துள்ளது. அதன் தமிழகத் தலைவராகவும்
மற்றும் அகில இந்தியப் பொறுப்பிலும் நக்சல்பாரித்
தோழர் ஒருவர் நீண்ட காலம் இருந்து வந்தார்.

மத்திய அரசு மற்றும் மத்தியப் பொதுத்துறை
நிறுவனங்களில் தொழிற்சங்கம் (UNION) மற்றும்
SC/ST/OBC நலச் சங்கம் (Welfare Association) இரண்டுக்கும்
அங்கீகாரம் உண்டு. இவை ஒன்றையொன்று இட்டு
நிரப்பிக் கொள்பவை (complementary). ஊதிய உயர்வு
உள்ளிட்ட சகல விஷயங்களிலும் நிர்வாகத்துடன்
ஒப்பந்தம் போடும் அதிகாரம் தொழிற்சங்கத்துக்கு
மட்டுமே உண்டு. நலச்சங்கத்திற்கு இல்லை.

நீண்ட போராட்டத்தின் விளைவாக மத்திய அரசு
மற்றும் மத்திய பொதுத்துறை நிறுவனங்களில்
சாதி அடிப்படையிலான நலச்சங்கங்கள்
அமைப்பதற்கான உரிமையைப் பெற்றோம்.
நலச்சங்கங்கள் தொழிற்சங்கத்துக்கு
எதிரானவை அல்ல.          
----------------------------------------------------------------------------
முற்றிலும் தன்னார்வக் குழுக்களால் (NGOs)
ஆட்கொள்ளப்பட்ட லிபரேஷன் குழுவானது
தன்னார்வக் குழுக்களின் செயல்பாட்டுக்கு
ஒத்திசைவான ஒரு கருத்தியலை முன்வைக்க
வேண்டிய அவசியத்தில் இருந்தது. அதற்கு
உகந்ததாக இருந்தது சாதி வெல்லற்கரியது
என்ற பின்நவீனத்துவம் கட்டியமைத்த
பிம்பமே. எனவே சாதியை அடித்தளத்தில்
வைத்து ஒரு முன்மொழிதலைச் செய்தார்
தோழர் வி எம்.

மார்க்சிஸ்ட் காட்சியைப் பொறுத்த மட்டில்
அதன் வாக்கு வங்கி அரசியலுக்குப்  பயன்படுவது
சாதியம் பற்றிய பின்நவீனத்துவம் உருவாக்கிய
மிகைமதிப்பீட்டு பிம்பமே. எனவே அதை
எடுத்துக் கொண்டார் யெச்சூரி.

தோழர் வி எம், தோழர் யெச்சூரி ஆகியோரின்    
செயல்பாடுகள் அரசியல் பிழைப்புவாதம் அல்லது
சந்தர்ப்பவாதம் என்ற வகைமையில் வரக்கூடும்.
அவர்களை பின்நவீனத்துவர்கள் என்று நான்
கூறவில்லை; கூற முற்படவும் இல்லை.

சாதி அடிப்படையிலான நலச்சங்கங்கள்
வேண்டும் என்று போராடிப் பெற்றது
சாதி வெறியர்கள் அல்ல.மாறாக தொழிற்சங்கமே.
ஒரே கம்யூனிஸ்ட் சங்கம் போதும்தான்.
ஒரு வேலைப்பிரிவினையை
முன்னிட்டே நலச்சங்கங்களைக்
கோரிப்பெற்றோம். மார்க்ஸ்  கூறுகிற
எந்திரப்பாட்டாளி (industrial proletariat) வர்க்கத்தைப்
பெருமளவில் கொண்டுள்ள பெருந்தொழில்
நிறுவனங்களில் தொழிலாளர்கள் வர்க்கமாகத்
திரளவோ வேலைநிறுத்தங்கள்  செய்யவோ
சாதி ஒரு தடையாக இல்லை; இல்லவே இல்லை.
தொழிலாளர்களின் கூட்டுபேர சக்தியை விட
சாதி உணர்வுக்கு வெகுவாக ஆற்றல் குறைவு.

சாதி அங்கிங்கெனாதபடி எங்கும் பிரகாசமாய்
நீக்கமற நிறைந்து ஆதிக்கம் செலுத்துகிறது
என்ற கருத்துத்தான் நான் கூறிய சாதி பற்றிய
மிகை மதிப்பீடு. முதலாளித்துவ உற்பத்தி
உறவுகள் முற்றிலுமாகச்  செயல்படும் பெருந்
தொழில் நிறுவனங்களில் சாதியை உடைத்து
நொறுக்கிக் காட்டியுள்ளது இந்தியப் பாட்டாளி
வர்க்கமும் மார்க்சியமும்.    
-------------------------------------------
பின்நவீனத்துவம் அமைப்பாதலை (அமைப்பாக
ஒன்று சேர்வதை) எதிர்க்கும் ஒரு தத்துவம்.
எனவே சாதி பற்றிய ஒரு கருத்தை எந்தப்
பின்நவீனத்துவவாதி  சொன்னார் என்ற கேள்வி
பொருளற்றதாகி விடுகிறது. மார்க்சிஸ்ட் தலைவர்கள்
அல்லது பூர்ஷ்வா கட்சிகளின் தலைவர்கள் தத்தம்
அமைப்புகள் (கட்சிகள்)  வாயிலாக தங்களின்
கருத்தைத் தெரிவிப்பதால், இடஞ்சுட்டிப்
பொருள் விளக்குவது .சுலபம்.

ஆனால் பின்நவீனத்துக்கு என்று இந்தியாவில்
ஒரு கட்சியோ அமைப்போ கிடையாது.
Communist Party of India என்பது போல,
Post Modernist Party of India என்று எதுவும் கிடையாது.
எனவே இதுதான் பின்நவீனத்துவத்தின்
அங்கீகரிக்கப்பட்ட அமைப்பின் கருத்து
என்று உறுதிப்படச் சொல்ல இயலாது.

ஹெச் ஜி வெல்ஸ் எழுதிய
அறிவியல் புனைவான The Invisible Man நாவலில்
வருகிற invisible man போலச் செயல்படுவதுதான்
பின்நவீனத்துவம். எனவே என் மீது குறை
காண முயல வேண்டாம். அது
பின்நவீனத்துவத்தின் குறை.            


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக